Tuesday 17 September 2013

அமெரிக்காவிற்கு எதிராக இரசியாவின் அடுத்த இராசதந்திர அதிரடி நடவடிக்கை

சிரியாமீது மட்டுப்படுத்த தாக்குதல் என்று பெரிதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பெரிய "பில்ட் அப்" கொடுத்துக் கொண்டிருக்கும் போது இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீன் சிரிய வேதியியல் படைக்கலன்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக தன் முன்மொழிவை முன்வைத்து ஒபாமாவைத் திணறடித்தார்.

எல்லா இராசதந்திர நடவடிக்கைகளும் சரிவராமல் போனதால் தான் மட்டுப்படுத்தப் பட்ட தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்கப் பாராளமன்றமான காங்கிரசிடம் அனுமதி கேட்பதாகச் சொன்ன பராக் ஒபாமாவிற்கு இரசிய அதிபர் புட்டீனின் முன்மொழிவைக் கருத்தில் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அமெரிக்க அரசத் துறைச்செயலர் ஜோன் F கெரியும் இரசிய வெளிநாட்டமைச்சர் சேர்கி லவ்ரொவும் (Sergei Lavrov)  ஜெனிவாவில் சந்தித்து சிரிய வேதியியல் குண்டுகள் தொடர்பாக ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இதைத் தொடர்ந்து சிரியாமீதான தாக்குதலை ஒபாமா ஒத்தி வைத்தார்.  இந்த ஒத்தி வைப்பு சிரியாமீது தாக்குதல் நடாத்தி சிரிய உள்நாட்டுப் போரின் படைத்துறைச் சமநிலையை கிளர்ச்சிக்காரர்களுக்கு சாதகமாக்க நினைத்திருந்த ஒபாமாவிற்கு ஒரு இராசதந்திரத் தோல்வி எனப் பலதரப்புக்களில் இருந்து கருத்து வெளியிடப்பட்டது.

இரசிய அதிபர் புட்டீனின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக அவர் ஈரானிற்கு ஒரு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதன் நோக்கம் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி நடவடிக்கைகளை பாதுகாப்பதே. இரசிய அதிபரின் இந்த முடிவு இரசியாவும் சீனாவும் முக்கிய உறுப்பினர்களாக இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது. ஈரானும் சிரியாவும் இரசியாவின் நெருங்கிய நட்புறவு நாடுகள் என்பதுடன் இரண்டும் இரசியாவில் இருந்து பெருமளவு படைக்கலங்களை இறக்குமதி செய்கின்றன. சிரியாமீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தி சிரியாவை கிளர்ச்சிக்காரர்கள் வசமாக்கினால் அமெரிக்காவின் அடுத்த இலக்கு ஈரானின் யூரேனியம் பதனிடும் நிலையங்கள் மீதாகத்தான் இருக்கும் என்று அஞ்சிக் கொண்டிருந்த ஈரானிற்கு சிரியாவில் அமேரிக்கத் தாக்குதலை நிறுத்தியதும் புட்டீன் ஈரானிற்குப் பயணம் மேற்கொள்வதும் பெரும் ஆறுதலாக அமைகிறது.

ஈரானிற்குப் பயணம் செய்யும் புட்டீன் இன்னும் ஒரு அணு உலையை அமைப்பதற்கு ஈரானிற்கு இரசியா உதவி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரசியா, சீனா,கஜக்ஸ்தான், தஜிகிஸ்த்தான், உஸ்பெகிஸ்த்தான், கிர்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சிரியாவிற்கும் ஈரானிற்கும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

சிரியாமீது அமெரிக்கா தாக்குதல் நடாத்தினால் ஈரானுக்கு விமான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான எஸ்-300 எனப்படும் தரை-வான்  ஏவுகணை முறைமையை (surface-to-air missile system) விற்பனை செய்வேன் என இரசியா அமெரிக்காவை மிரட்டியும் இருந்தது. ஏற்கனவே இரசியா ஈரானிற்கு இந்த எஸ்-300 முறைமையை விற்பனை செய்ய உடன்படிக்கை கைச்சாத்திட்டிருந்தது. அமெரிக்கா, இஸ்ரேல், நாடுகள் சபை போன்றவற்றின் எதிர்ப்பால் அதை இரசியா கைவிட்டிருந்தது.

1991இல் சோவித் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மத்திய கிழக்கில் இரசியாவின் ஆதிக்கம் குறைந்து கொண்டு சென்றது. இரசியாவில் ஏற்பட்டிருந்த நிதி நெருக்கடி காரணமாக அங்கு படைத்துறைச் செலவுகள் குறைக்கப்பட்டன. படையினருக்கு ஊதியம் வழங்கவே பணம் இல்லாத நிலை இருந்தது. இரசியா தனது பல படைத்தளங்களைக் கைவிட்டது. படையினருக்கான பயிற்ச்சிகள் கூட ஒழுங்காக நடைபெறவில்லை. ஆனால் 2000இல் இரசிய அதிபரான விளாடிமீர் புட்டீன் இரசியப் படைத்துறைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினார். இரசியாவின் எரிவாயு உற்பத்தி அதிகரிப்பும் உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பும் இரசியப் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவின. தற்போது இரசியாவின் பாதுகாப்புச் செலவு 90பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. சீனாவுடன் இணைந்தால் உலக ஆதிக்கத்தில் இரசியாவால் அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக மீண்டும் மாற முடியும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...