Tuesday 13 August 2013

இந்தியாவின் விமானம் தாங்கிக் கப்பல் விக்ராந்த் சீனாவை மிரட்டுமா?

இந்தியா தனது விமானம் தாங்கிக் கப்பலான விக்ராந்தை 12-8-2013 திங்கட் கிழமை கடலில் இறக்கி ஓடவிட்டுள்ளது. இது ஒரு முழுமையான போர்க்கப்பலாகச் செயற்பட இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம். 2016 கட்டுமான வேலைகள் பூர்த்தியாகும். 2018இல் போர் புரியக் கூடியதாகும்.

அரிகாந்த் என்னும் உள் நாட்டில் உருவாகிய நீர்மூழ்கிக் கப்பலை வெள்ளோட்டம் விட்ட இரண்டு நாட்களில் விக்ராந்த் கடலில் மிதக்க விடப்பட்டுள்ளது.

12-8-2013 திங்கட் கிழமை இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் எலிசபெத் அண்டனி தேங்காய் உடைத்து விக்ராந்தை கொச்சி துறைமுகத்தில் இருந்து கடலில் ஓடவிட்டார்.  இது உள்ளூர்த் தாயரிப்பு எனச் சொல்லப்பட்ட போதும் இரசியாவின் பழுதடைந்த ஒரு போர்க்கப்பலை வாங்கியே இந்தியா பல திருத்த வேலைகளைச் செய்து விக்ராந்தை உருவாக்கியது. 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கிய விக்ராந்த் 37,000 தொன்கள் எடையும் 260 மீட்டரும் கொண்டது. ஆரம்பத்தில் 500மில்லியன் டொலர்கள் செலவில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ரைம்ஸ் ஒஃப் இண்டியா விக்ராந்த் 2020இல்தான் போருக்குத் தயாராகும் என்கிறது.

சீன விமானம்தாங்கி லயோனிங்

சீனா 2012 செப்டம்பரில் தனது விமானம் தாங்கிக் கப்பலை முதலில் ஓடவிட்டது. இது உக்ரேய்ன் நாட்டில் இருந்து வாங்கிய விமானம் தாங்கிக் கப்பலை புதுப்பித்ததாகும். இதனால் இந்தியா அமெரிக்க்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வரிசையில் உள் நாட்டில் விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கும் ஒரு நாடாக இணைந்துள்ளது என சொல்லிக் கொள்கிறது. ஆனால் இரசியா நிறைய தொழில்நுட்ப உதவிகளைச் செய்திருக்கிறது.

சில இந்திய ஆய்வாளர்கள் இந்தியக் கடற்படை சீனக் கடற்படையிலும் வலியது என்கின்றனர். ஆனால் ஒரு தீபகற்பம் என்ற வகையில் இந்திய மிக நீண்ட கடல் எல்லையைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளது. அரபுக் கடல், இந்து மாகடல், வங்கக் கடல் ஆகியவற்றை இந்தியா கண்காணிக்க வேண்டிய நிலையில் உள்ளது. 




சீனாவா இந்தியாவா?
இந்தியா தனது நீண்ட கடற்பரப்பை பாதுகாக்க வேண்டிய நிலையிலும் சீனா தனது ஏற்றுமதி சார் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை வலிமையை அதிகரிக்கின்றன. சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல் லயோனிங் 55,000தொன் எடையும் விக்ராந்த் 37,000 தொன் எடையும் கொண்டது. அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் 100,000தொன்களிலும் அதிகமானது. சினாவின் லயோனிங்கில் 24  விமானங்களும் 26 உழங்கு வானூரிதிகளும் தாங்கிச் செல்லக் கூடியது. இந்தியாவின் விக்ராந்த் மொத்தம் முப்பது வானூர்திகளைத் தாங்கக் கூடியது.

விக்ராந்தில் ஒரு சோடி இரட்டைக் குழல் 40மில்லி மீட்டர் துப்பாக்கிகளும் 16-cell Barak SAM system விமான எதிர்ப்பு முறைமையும் இருக்கின்றன. லயோனிங்கில் சீனத் தயாரிப்பு விமான எதிர்ப்பு முறைமையான  TY-90 இருக்கிறது.

இந்தியாவிற்கு கோவாவை மீட்ட போர், பங்களா தேசத்தை பிரித்த போர் ஆகியவற்றில் கடற்போர் அனுபவத்தைப் பெற்றுள்ளது. பங்களா தேசத்துடனான போரில் மதராஸ் படையணி முதலில் சிட்ட கொங் துறைமுகத்தைக் கைப்பற்றியது. அத்துடன் தமிழர்களை அழிக்கப் போன இந்திய அமைதிப்படை நடவடிக்கையில் கடல் வழியாகப் பெரும் படை நகர்வு செய்த அனுபவம் உண்டு. ஆனால் சீனாவிற்கு கடற் போர் அனுபவம் இல்லை. இந்தியா சீனாவையும் பாக்கிஸ்த்தானையும் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளது. சீனா இந்தியா வெகு நாட்களாக எதிரி நாடாகக் கொண்டுள்ளது. ஆனால் சீனா தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் தனது ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் முனைப்பின் இறங்கியதில் இருந்து வியட்னாம், பிலிப்பைன்ஸ், இந்தோனோசியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் முரண்படும் நிலையில் உள்ளது. தென் கொரியக் கடற்படை ஆசியாவிலேயே வலிமை மிக்க கடற்படை என படைத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகிலேயே அதிக அளவில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சீர்வேக ஏவுகணைகளையும் (ballistic and cruise missiles) உற்பத்தி செய்யும் நாடாக சீனா தற்போது இருக்கிறது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக் கூடிய JL-2 எனப்படும் ஏவுகணைகள் 14,000 கிமீ (8,699மைல்கள்) பாய்ந்து தாக்கக் கூடியவை. சீனா தனது படைத்துறையில் செலுத்தும் கவனம் பல நாடுகளை மிரள வைத்துள்ளது.  விமானம் தாங்கிக் கப்பல்கள் வைத்திருக்கும் நாடுகள்:-

இந்தியாவின் கடற்படை வலிமையையும் அனுபவத்தையும் சீனா இலேசாக எடுத்துக் கொள்வதில்லை. இந்தியாவைச் சமாளிக்க இலங்கையிலும் சிசிஸிலும் தனது துறைமுகங்களை அமைத்துள்ளது. இவை தற்போது வர்த்தகத் துறைமுகங்களாக இருந்தாலும் தேவை ஏற்படின் கடைற்படைத் தளங்களாக மாற்றப் படக் கூடியன. இவற்றுடன் முத்து மாலை என்னும் பெயரில் பாக்கிஸ்தானில் குவாடர், பங்களாதேசத்தில் சிட்டகொங், பர்மாவில் சிட்வே ஆகிய துறைமுகங்களை அபிவிருத்தி செய்து தனதாக்கிக் கொண்டுள்ளது. இந்தியக் கடற்படை வலிமை மிக்கதானால் இந்தியாவால் மலாக்க நீரிணையில் வைத்து சீனாவிற்கான எரிபொருள் விநியோகத்தை தடுக்க முடியும். 


இந்தியாவின் விக்கிரமாதித்தியா என்னும் விமானம் தாங்கிக் கப்பல் பற்றிய பதிவைப் பார்க்க இன்கு சொடுக்கவும்: விக்கிரமாதித்தியா


இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் பற்றி பார்க்க இங்கு சொடுக்கவும்: இந்திய நீர்மூழ்கி

சீனாவின் பாதுகாப்புச் செலவு இந்தியாவிலும் பார்க்க மூன்று மடங்காகும். தரைப்படை, விமானப் படை ஆகியவற்றின் வலிமையும் இந்தியாவிலும் பார்க்க சீனாவினது மூன்று மடங்காகும். வேறு நாடுகளுடன் இணைந்தே இந்தியாவால் சீனாவைச் சமாளிக்க முடியும். அத்துடன் தீபெத்தில் குவிக்கப்பட்டிருக்கும் சீனப்படை இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாகும். கிழக்குச் சீனக் கடலில் உள்ள நாடுகளையும் ஜப்பானையும் தென் கொரியாவையும் இணைந்து ஒரு பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்கினால் அமெரிக்காவின் உதவியுடன் சீனா அடக்கப்படலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...