Sunday 5 May 2013

இந்திய எல்லைக்குள் சீன ஆக்கிரமிப்பின் சதிக்கோட்பாடு

இந்த நூற்றாண்டில் இரு நாடுகளிடையான உறவிலும் பார்க்க அவற்றினடையான வர்த்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தந்திரோபாய நிலைப்பாடு பன்னாட்டு உறவின் ஓர் அம்சமாகிவிட்டது. முன்பெல்லாம் ஆ..ஊ என்றால் அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கொண்டுவரும். பின்னர் அமெரிக்க வியாபாரிகள் கள்ளத்தனமாக அரச தடைகளை மீறிய வர்த்தகம் செய்து பெரும் இலாபமீட்டும்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இந்திய சீனாவிடையிலான வர்த்தகம் 2011இல் எழுபது பில்லியன்களாக உயர்ந்தது. இரு நாடுகளிடையான வர்த்தகத்தை மேலும் வளர்ப்பதற்கு அவை உறுதி பூண்டுள்ளன. ஆனால் இரு நாடுகளிடையான உறவு சென்ற நூற்றாண்டு இருந்ததிலும் பார்க்க இப்போது மோசமடைந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசமும் காஷ்மீரில் சில பகுதிகளும் தன்னுடைய பிரதேசம் என சீனா சொல்லி வருகிறது.

இரு பிரதான பிரதேசங்களான காஷ்மீரிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் முறுகல் நிலை இருக்கிறது. 10-10-1962இற்கும் 21-11-1962இற்கும் இடையில் நடந்த இந்திய சீனப் போரில் இந்தியா அக்சாய் சின் என்னும் பிரதேசத்தில் சுவிற்சலாந்து தேசத்தின் நிலப்பரப்பு கொண்ட இடத்தையும் (அதாவது 38,000சதுர கிலோ மீட்டர்) அருணாசலப் பிரதேசத்தில் ஒஸ்ரியா நாட்டின் நிலப்பரவளவு இடத்தையும் (90,000சதுர கிலோ மீட்டர்)சீனாவிடம் பரிதாபகரமகப் பறிகொடுத்தது.

2008-ஆம் ஆண்டு சீனா சிக்கிம்மை இந்தியாவிடமிருந்து பிடுங்கி விடுமா என்ற நிலை இருந்தது. இரண்டு மாதங்களாக இருதரப்பும் என்னேரமும் போர் வெடிக்கலாம் என்ற பதட்ட நிலையில் இருந்தன. 

இந்திய சீன எல்லையில் மிக நீண்ட தூரம் பிரச்சனைக்கு உரியதாக இருக்கிறது. இப்பகுதியில் சீனா 2012இல் நானூற்றிற்கு மேற்பட்ட தடவை ஊடுருவல்களை மேற்கொண்டது. பல இடங்களில் இருந்து சீனா ஊடுருவிய பின்னர் விலகிச் சென்றாலும் சில இடங்களில் சீனா தனது படை முகாம்களை நிறுவி நிரந்தரமாகத் தங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது 50,000இற்கும் 60,000இற்கும் இடைப்பட்ட துருப்புக்களைக் கொண்ட இரு பெரும் படையணிகளை அருணாச்சலப் பிரதேரத்திற்கு நகர்த்தியது. இதற்கு சீனா தனது எச்சரிக்கையை 2010 ஜூன் மாதம் ஆறாம் திகதி இப்படி வெளியிட்டது: India’s current course can only lead to a rivalry between the two countries. India needs to consider whether or not it can afford the consequences of a potential confrontation with China.” இந்தியாவின் செயல்கள் இரு நாடுகளிடையான முரண்பாட்டை வளர்க்கும். இதன் விளைவுகளை இந்தியாவால் எதிர் கொள்ள முடியுமா என்பதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும். அருணாச்சலப் பிரதேசம் என்பது சுவிஸ்ற்லாந்து நாட்டிலும் பார்க்க மூன்று மடங்கு நிலப்பரப்பைக் கொண்டது.

2013 ஏப்ரல் நடுப்பகுதியில் சீனப்படையினர்  காஷ்மீர்  மாநிலம் லடாக் பகுதியில்  டேப்சாங் பள்ளத்தாக்கில்   19 கிலோ மீட்டர் தூரம்ஊடுருவி முகாம் அமைத்துள்ளனர்.  ஒரு நாள் கழித்தே இது இந்தியப்படையினருக்குத் தெரிய வந்தது. புது டில்லியில் உள்ள சீனத் தூதுவரை அழைத்து இந்தியா தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. அதற்குச் சீன கொடுத்த பதில் மேலும் இரண்டு முகாம்களை அங்கு அமைத்தமையே. அத்துடன் இது நம்ம ஏரியா உள்ளே வராதே என ஆகிலத்தில் ஒரு அறிவிப்புப் பலகையையும் நிறுவியது. அந்த அறிவிப்புப் பலகை இந்தியப் படைகளிற்கு “You are in Chinese side.”  எனச் சொன்னது. இரு நாடுகளிடையான மூன்று சுற்றுப் பேச்சு வார்த்தைகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. சீனா இந்தியப் படையினர் இந்திய நிலப்பரப்பில் இருந்து விலக வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர். மேலும் இந்தியா தனது எல்லைக்குள் அமைத்த காப்பரண்களை உடைத்து அழிக்க வேண்டும் என்றும் இந்தியாவை நிர்ப்பந்திக்கிறது. அத்துடன் சீனப்படைகள் தமது எல்லைக்குள்ளேயே நிலை கொண்டிருக்கின்றன என்று சீன வெளிநாட்டமைச்சர் அறிவித்துள்ளார்.

 சில முக்கிய கேள்விகள்
 கடும் குளிரில் கள்ளத்தனமாக நள்ளிரவின்உள்வந்த 30 பேர் கொண்ட சீனக் காலாட் படையை சுற்றி வளைத்து வெளியேறு அல்லது சரணடை என்று சொல்ல வேண்டிய இந்தியா ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது? கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா உலகச் சந்தையில் உலகிலேயே ஆகக் கூடிய அளவு பணம் செலவழித்து படைக் கலன்களைக் கொள்வனவு செய்த இந்தியா சீனாவைச் சமாளிக்கக் கூடிய நிலையை இன்னும் அடையவில்லையா?19 கிலோ மீட்டர் உள் வந்தது வெறும் எல்லைப் பிரச்சனையா அல்லது ஆக்கிரமிப்பா?
சீனத் தலைமை அமைச்சர் லீ கெப்பியோங் விரைவில் புதி டில்லிக்குப் பயணம் செய்ய விருக்கும் நிலையி இப்படி ஒரு நகர்வு ஏன்?
தென் சீனக் கடலும் கிழக்குச் சீனக் கடலும் கொதிக்கும் நிலையிலும் வட கொரியா குதிக்கும் நிலையிலும் வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் சீனா இந்தியாவுடன் மோதுவதற்கான இன்னும் ஒரு களமுனையைத் திறந்தது ஏன்? ஐக்கிய அமெரிக்கா ஆசியப் பிரதேசத்தில் தனது கேந்திரோபாய பங்காளியாக இந்தியாவை மாற்ற முயற்ச்சி செய்யும் நிலையிலும் இந்தியா அது சினாவுடனா விரோதத்தை மோசமாக்கும் என்று தயங்கும் நிலையிலும் சீனா இப்படி ஓர் ஆத்திர மூட்டும் செயலை ஏன் செய்கிறது?
சீனாவின் பல ஊடுருவல்களுக்கு கிடைக்காத முக்கியத்துவம் இப்போது கொடுக்கப்படுவது ஏன்?

இந்தக் கேள்விகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் சீன ஊடுருவலின்  பின்னால் ஒரு சதிக் கோட்பாடு இருக்கலாம். சீனாவின் அத்துமீறல் நிறைந்த செயற்பாடுகள் ஆளும் கட்சியினருக்கு சுவிஸ் வங்கியில் இருக்கும் பெரும் பணத்திற்கு எந்தவிதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது. சீனா இந்தியாவின் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்தால் அது ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் பெரும் பணக்காரர்களின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால்தான் பெரும் பிரச்சனைக்கு வழிவகுக்கக் கூடிய இந்த ஊடுருவலை இந்திய வெளிநாட்டமைச்சர் சல்மன் குர்ஷித் ஒரு முகத்தில் உள்ள ஒரு சிறு புள்ளியை வைத்துக் கொண்டு முகம் அழகில்லை என்று சொல்ல முடியாது. அதை எதாவது ஒரு பூச்சைப் பூசிச் சரிபடுத்தி விடலாம் என்றார். இது அவரின் மனைவிக்குச் சரியாக இருக்கலாம் ஒன்றை ஒன்று சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் உலகின் இரு பெரும் நாடுகளுக்குச் சரிவராது. இந்தியப் தலைமை அமைச்சர் “It is a localized problem, We do believe it can be solved. We have a plan. We do not want to accentuate the situation.”  ஒரு நாட்டுப் படை இன்னொரு நாட்டுக்குள் புகுந்ததை ஒரு உள்மயமாக்கப்பட்ட பிரச்சனை என்று சொல்லிய முதல் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்தான். இப்படிச் சொல்லும் ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருப்பது சீனாவிற்கு மிகவும் சாதகமான நிலையாகும். இந்தக் காங்கிரசு ஆட்சி விரைவில் வரவிருக்கும் தோல்வியடைந்து சீனாவிற்கு சாதகமற்ற ஓர் ஆட்சி உருவாகுவதை சீனா விரும்புமா? சீனா தேர்தலுக்கு முன்னர் சீனாவை இந்தியா மிரட்டி வெளியேறச் செய்வது போல் ஒரு நாடகத்தை ஆடினால் அது காங்கிரசின் வெற்றிக்கு வழி சமைக்கும். எந்தபுற்றுக்குள் எந்தப் பாம்போ? எந்தப் பாம்பிற்குள் எந்த நஞ்சோ?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...