Saturday 4 May 2013

சிரியாமீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்

02-05-2013 வியாழன் இரவு இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவிற்குள் புகுந்து தாக்குதல்கள் நடாத்தின. லெபனானில் இருந்து வரும் தகவல்களின் படி இஸ்ரேலிய விமானங்கள் லெபனானிற்கு ஊடாக நான்கு மணித்தியாலங்கள் பறப்பில் ஈடுபட்டிருந்தன.சிரியப் படைக்கலன் கிடங்குகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடாத்தின.

2013ஜனவரி மாதம் இஸ்ரேலியப் விமாங்கள் சிரியாவின் தரையில் இருந்து விண்ணுக்கு ஏவும் விமான எதிர்ப்பு SA-17 ஏவுகணைகள் கொண்ட படைக்கலன் கிடங்குகள் மீது தாக்குதல் நடாத்தி அழித்தன.2007-ம் ஆண்டு இஸ்ரேலிய விமானங்கள் சிரிய அணு ஆராய்ச்சி நிலையத்தின் மீது தாக்குதல்கல் நடாத்தின.

02-05-2013 நடந்த தாக்குதல்கல் பற்றி இஸ்ரேலோ சிரியாவோ இதுவரை எதுவும் சொல்லவில்லை. தாக்குதல்கள் பற்றி சிரியக் கிளர்ச்சிக்கார இயக்கங்களில் ஒன்றான சிரிய விடுதலைப்படையே இத்தாக்குதல் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியக் கிளர்ச்சி தொடங்கியவுடன் நேட்டோப் படையினரின் தாக்குதலில் இருந்து சிரியாவைப் பாதுகாக்க இரசியா தனது சிறந்த விமான எதிர்ப்பு முறைமையை சிரியாவில் இரசியா நிறுவியதுடன் தனது படை நிபுணர்களையும் அங்கு சேவையில் ஈடுபடுத்தி இருந்தது. இவற்றின் மத்தியில் இஸ்ரேலிய விமானப் படையினர் தமது தாக்குதலை எந்த வித இழப்பும் இன்றிச் செய்து முடித்துள்ளனர்.

லெபனானில் ஈரானின் ஆதரவுடன் செயற்படும் விடுதலை இயக்கமான  ஹிஸ்புல்லா சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகளுடன் இணைந்து அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகப் போராட்டுகின்றனர். சிரியப் படையினர் வசம் அமெரிக்கா, இரசியா போன்ற நாடுகளிடம் வாங்கிய புதிய ரக படைக்கலன்கள் பல இருக்கின்றன. அத்துடன் பேரழிவு விளைவிக்கக் கூடிய வேதியியல் படைக்கலங்களும் இருக்கின்றன. இவை எந்த ஓர் இசுலாமியப் போராளி இயக்கத்தின் கைகளுக்கும் போய் விடக் கூடாது என்பதில் இஸ்ரேலும், வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் அதிக கரிசனை கொண்டுள்ளன. லெபனானை இஸ்ரேல் அடக்கி வைத்திருப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது அதன் விமானப்படையின் மேலாதிக்கமே. லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா போராளி இயக்கத்தினரிடம் சிரியாவின் புதிய ரக விமான எதிர்ப்புப் ஏவுகணைகள் போனால் அது இஸ்ரேலுக்குப் பெரும் பாதகமாக அமையும். எந்த ஒரு இசுலாமியப் போராளி இயக்கத்தினரின் கைகளில் வேதியியல் படைக்கலன்கள் போனால் அது இஸ்ரேலுக்கும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

ஹிஸ்புல்லா இயக்கத்திற்கும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் நீண்ட நாள் உறவு உண்டு. சிரியாவின் ஊடாகவே ஈரான் ஹிஸ்புல்லா இயக்கதிற்கு படைக்கலங்களை அனுப்புகிறது. 2011 பெப்ரவரி அசாத்திற்கு எதிராக சிரிய மக்கள் கிளர்ந்து எழுந்த போது ஹிஸ்புல்லா நடுநிலை வகித்தது. பின்னர் இரானின் வற்புறுத்தலின் பேரில் அசாத்துடன் இணைந்து கொண்டது.

இனிவரும் நாட்களில் 70,000 மேல் பட்ட மக்களைப் பலிகொண்ட சிரிய உள்நாட்டுப் போரில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலங்கள் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்கிறது. சிரியா வேதியியல் படைக்கலங்கள் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டுவது போலாகும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஏற்கனவே தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் சக் கஜெல் பிரித்தானியப் பாதுகாப்புத் துறையினருடன் சிரியா தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளார். ஆனால் நேட்டோ கூட்டமைப்பு நாட்டு மக்கள் மத்தியில் சிரியப் போரில் நேரடியான ஈடுபாட்டிற்கு எதிர்ப்பு நிலவுகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...