Tuesday 30 April 2013

படைத்துறைச் செலவுக் குறைப்பும் ஆளில்லாப் போர் விமானங்களும்

உலக நாடுகளிடையே ஆளில்லாப் போர் விமானங்களின் உற்பத்தியும் பாவனையும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள்  இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன.  தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் செல்லப் பிள்ளைகளாக ஆளில்லாப் போர் விமானங்கள் திகழ்கின்றன. ஆளில்லாப் போர்விமானங்கள் சிறு பூச்சியின் அளவில் இருந்து பெரிய விமானத்தின் அளவு வரை பல தரப்படும். பிரித்தானியவும் தனது ஆளில்லாப் போர் விமானங்களை பெருமளவு அதிகரிக்கின்றது.


பெரிய ஆளில்லா விமானங்கள்
Global Hawk எனப்படும் ஆளில்லா விமானங்கள் அளவின் பெரியவனவையாகும். அமெரிக்காவின் Grumman RQ-4 விமானங்கள் Global Hawk வகையைச் சேர்ந்தவை. இவை 65,000 அடி உயரம் வரை பறக்கக் கூடியவை. அத்துடன் தொடர்ந்து 35 மணித்தியாலங்கள் பறப்பில் ஈடுபடக் கூடியவை. இவற்றின் வேகம் 340 நொட் வரை இருக்கும்.  மிக உயர்ந்த தர உணரிகளை இந்த விமானங்கள் கொண்டுள்ளன. மிகச்சிறிய ஆளில்லா விமானங்கள் காகம் (Raven) எனப்படும். இலங்கை அரசு பாவித்த சிறிய ஆளில்லா விமானத்தை தமிழர்கள் சில் வண்டு என அழைத்தனர்.  லிபியப் போராளிகளுக்கு கடாஃபிக்கு எதிரான போரின் போது Aeryon Scout என்னும் மூன்று இறாத்தல் எடையுள்ள விமானங்களை நேட்டோப் படையினர் வழங்கியிருந்தனர். இவை மூலைகளில் ஒழிந்திருக்கும் எதிரிப்படைகளை கண்டறியப் பாவிக்கப்பட்டன. பல புதிய ஆளில்லா விமானங்கள் எதிரியின் நிலப்பரப்பில் விழுந்தால் தன்னைத் தானே அழித்துக் கொள்ளக் கூடியவை.



பிரித்தானியா வேறு பெயர் சொல்கிறது.
பிரித்தானியா தாக்குதல் ஆளில்லாப் போர் விமானத்தை பாவிப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் 27-04-2013-ம் திகதி வரிங்டனில் இடம்பெற்றது. அமெரிக்கா கண்டனத்துக்குரிய ஆளில்லாப் போர் விமானத் தாக்குதலகளை ஆப்கானிஸ்த்தானிலும் யேமனிலும் மேற் கொண்டது. இதில் அப்பாவிகளும் கொல்லப்பட்டனர். முக்கிய இசுலாமியப் போராளித் தலைவர்களை அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. ஆப்கானிஸ்த்தானில் அல் கெய்தாவிற்கும் தலிபானுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியதுடன் அவர்களின் நடமாட்டத்தை அமெரிக்கா தனது ஆளில்லாப் போர் விமானங்களினூடாக தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு பெருமளவு கட்டுப்படுத்தியது. Drone என்று பொதுவாக அழைக்கப்படும் unmanned aerial vehicle (UAV)களிற்கு பிரித்தானியா "Remotely Piloted Air Systems" (RPAS) என்று பெயர் சூட்ட விரும்புகிறது. இது முதல் தடவை அல்ல பிரித்தானியாவில் பிஸ்கட் என்றால் அமெரிக்காவில் குக்கீஸ் என்பார்கள். பிரித்தானியாவில் சுவீட்ஸ் என்றால் அமெரிக்காவில் கண்டி என்பார்கள். இப்படிப் பல நூற்றுக்கணக்கான சொற்பேதம் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் இருக்கின்றன.

பிரித்தானிய ஆளில்லாப் போர் விமானங்கள்
பிரித்தானிய ஆளில்லாப் போர் விமானங்களில் MQ-9 REAPER விமானங்கள் முக்கியமானவை. இவை உள(intelligence), கடுங்கண்காணிப்பு (surveillance), reconnaissance (புலங்காணல்),  நெருங்கிய ஆதரவு (close air support), தாக்குதல் (combat) தேடுதலும் விடுவித்தலும் ( search and rescue), துல்லியமாகத் தாக்குதல் (precision strike),உடன் லேசர் (buddy-laser) உட்படப் பலவிதமான சேவைகளைப் புரியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களை கழற்றி மடித்து வேறு விமானங்களில் பொதிகளாக வேறு நாடுகளுக்கு அனுப்பி அங்கு திறந்து பொருத்தித் தாக்குதல் செய்யக் கூடிவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  பிரித்தானியா பல பில்லியன்களைச் செலவழித்து மேலும் புதிய வகையான ஆளில்லா விமானங்களை அடுத்த பத்து ஆண்டுகளில் உருவாக்கவிருக்கிறது.



சட்டத்திற்குப் புறம்பான கொலையாளியா? எல்லை தாண்டிய பயங்கரவாதமா?
யேமனில் ஒரு இசுலாமியத் தீவிரவாதியின் இருப்பிடம் அறிந்தவுடன் அந்த நாட்டுக்குள் அந்த நாட்டின் அனுமதியின்றி அமெரிக்காவினதோ அல்லது பிரித்தானியாவினதோ ஆளில்லா விமானங்கள் புகுந்து அவரைக் கொன்றுவிடும். ஆப்கானிஸ்தானில் ஒரு வீட்டில் ஒரு இசுலாமியப் போராளி தனது வீட்டில் இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் அவரது இருக்கும் இடத்தை கைக்கூலி உளவாளிகள் மூலம் அறிந்த அமெரிக்க படையினர் தமது தளத்தில் இருந்து சிறு பட்டம் போன்ற சில ஆளில்லாப் போர் விமானங்களை அந்த இடத்தை நோக்கி அனுப்புவர். அதில் ஒன்று அவர் இருக்கும் வீட்டின் யன்னலில் மோதி உடைக்க அந்த வழியூடாக அடுத்த விமானம் உள் சென்று அந்தப் போராளியின் மடியில் விழுந்து வெடித்து அவரைக் கொல்லும். இவ்வளவற்றையு ஒரு படைவீரன் கணனி விளையாட்டுப் போலச் செய்து முடிப்பார். இது சட்டபூர்வ விசாரணை இன்றிச் செய்யப்படும் ஒரு கொலை என்கின்றனர் சில மனித உரிமை ஆர்வலர்கள். இன்னும் சிலர் இது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்கின்றனர். பாக்கிஸ்த்தானின் வாஜிரிஸ்த்தான் பகுதியில் இரு இனக் குழுமங்கள் தமக்கிடையே ஏற்பட்ட நிலப்பிணக்கை தீர்க்கக் கூட்டிய கூட்டத்தை உளவாளிகள் அல் கெய்தாவின் கூட்டம் எனத் தகவல் கொடுக்க அங்கு சென்று அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் அந்த அப்பாவிகளைக் கொன்றன.



படைத்துறை செலவுக் குறைப்பும் ஆட் குறைப்பும்

பல மேற்கு நாடுகள் தமது படைத் துறைச் செலவுக் குறைப்பையும் ஆளணிக் குறைப்பையும் தமது பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து செய்து வருகின்றன. இதற்கு ஆளில்லாப் போர்விமானங்கள் பெரிதும் உதவுகின்றன. இனி வரும் ஆளில்லாப் போர் விமானங்கள் உருவத்தில் பல அளவுகள் உடையதாகவும் பல மோசமான தாக்குதல்களைச் செய்யக் கூடியவையாக இருக்கும்.  சீனாவும் பலதரப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உருவாக்கி வருகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...