Thursday 4 April 2013

வட கொரியாவின் வீராப்பும் சீனாவின் சங்கடமான நிலையும்

வட - தென் கொரியாக்கள் வட கொரியாவின் கேசோங் நகரின் இணைந்து உருவாக்கிய கைத்தொழிற்பேட்டைக்கு தென் கொரிய ஊழியர்கள் செல்வதை வட கொரியா  தடுத்ததைத் தொடர்ந்து கொரியத் தீபகற்பகத்தில் மீண்டும் பதட்டம் எழுந்தது. சீனா இது தொடர்பாக தனது கடும் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

வட - தென் கொரியாக்களின் முறுகல் நிலை தொடர்பான முந்தைய பதிவைக்காண இங்கு சொடுக்கவும்

சீனாவின் அயல் நாடும் ஒரே ஒரு நட்பு நாடும் வட கொரியாவாகும். ஆனாலும் இரு நாடுகளும் ஒன்றை ஒன்று பலத்த சந்தேகத்துடன்தான் நோக்குகின்றன. சோவியத்தின் நட்பு நாடாக இருந்த வட கொரியா 1991இல் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனித்து இயங்கத் தீர்மானித்தது. ஆனாலும் பல பொருளாதாரப் பிரச்சனைய்களை வட கொரியா எதிர் நோக்க வேண்டி இருந்தது. முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடித்த தென் கொரியா பெரும் பொருளாதார வளர்ச்சியடைந்து ஆசியாவில் இரண்டாவது வளர்ச்சியடைந்த நாடாகியது (Developed Country). வட கொரியப் பொருளாதாரப் பிரச்சனை அங்குள்ள அரசைக் கவிழ்த்து அதுவும் தென் கொரியாவைப்போல் ஒரு அமெரிக்க ஆதரவு நாடாக மாறாமல் இருக்க சீனா வட கொரியாவிற்கு பல பொருளாதார உதவிகளைச் செய்து வருகிறது.

வட கொரிய அணுக்குண்டு வரலாறு
1961இல் சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் வட கொரியா தனது அணுத் தொழில் நுட்பத்தை தொடக்கியது. 1961இல் அணுமின் உலையை வட கொரியா உருவாக்கியது. 1985இல் மேலும் அதை அபிவிருத்தி செய்தது. வட கொரியாவின் அணுத் தொழில் நுட்பத்தை விரும்பாத அமெரிக்காவும் தென் கொரியாவும் 1994இல் வட கொரியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து வட கொரியாவின் அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்தி வட கொரியாவில் இரு மென்னீர் அணு உலைகளை அமைத்துக் கொடுத்தன. பின்னர் 1991இல் வட கொரியா பாக்கிஸ்த்தானிய அணு விஞ்ஞானி A Q கானிடமிருந்து யூரேனியம் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொண்டது. 1998இல் ஏவுகணைத்தொழில் நுட்பத்தையும் விண்வெளிக்கு செய்மதி அனுப்பும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியது. 2002இல் வட கொரியா அமெரிக்காவுடனும் தென் கொரியாவுடனும் 1994இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி அணுக் குண்டுகளை உருவாக்க ஆராய்ச்சிகள் செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.  2003இல் வட கொரியா பன்னாட்டு அணுப்படைக்கலன் பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது. 2006 வட கொரியா தனது முதலாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. இதைத் தொடர்ந்து அறுவர் குழுப் பேச்சுவார்த்தை எனப்படும்  அமெரிக்கா, சீனா, தென் கொரியா, இரசியா யப்பான் ஆகிய நாடுகளுடன் வட கொரியா ஒரு அணுக்குண்டு தொடர்பான பேச்சு வார்த்தையை மேற்கொண்டது. 2007வரை தொடர்ந்த இந்தப் பேச்சு வார்த்தை இறுதியில் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்துவதாகவும் பன்னாட்டு அணுப்படைக்கலன் பரவலாக்கத் தடை ஒப்பந்தத்தில் மீளிணைவதாகவும் அறிவித்தது. பதிலாக வட கொரியாவிற்கு நிதி உதவி செய்வதாகவும் உறுதியளிக்கப்பட்டது. தொடர்ந்து 2008இல் வட கொரிய தனது அணு உலை ஒன்றை மூடியது. 2009இல் நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கிய வட கொரியா அறுவர் குழுப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியது. 2009 ஜூனில் வட கொரியா தனது இரண்டாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. உலகப் பொருளாதார வீழ்ச்சியால் பல வட கொரியர்கள் வறுமையால் வாடினார்கள். இதைத் தொடர்ந்து 2012 பெப்ரவரியில் வட கொரியா தனது அணுக்குண்டு உற்பத்தியை நிறுத்தி அமெரிக்காவில் இருந்து உணவைப் பெற்றுக் கொன்டது. 2012 டிசம்பரில் வட கொரியா தனது பலதட்டு ஏவுகணையை விண்ணில் செலுத்த முயன்றது. அது இரண்டு நிமிடத்தில் வெடித்துச் சிதறியது. 2013 மார்ச்சில் வட கொரியா தனது மூன்றாவது அணுக்குண்டை வெடித்துப் பரிசோதித்தது. இதைத் தொடர்ந்து வட கொரியாவிற்கு எதிரான புதிய தடைகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் நிறைவேற்றப்பட்டது.

வட கொரியாவின் மூன்றாவது அணுக்குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா தென் கொரியாவில் தனது படைபலத்தை அதிகரித்து வருகிறது.  அமெரிக்கா தனது படை நகர்த்தல்கள் எதையும் இரகசியமாகச் செய்யவில்லை. வட தென் கொரிய முறுகல் நிலை ஒரு புறம் கிழக்குச் சீனக் கடலில் சீன ஜப்பான் முறுகல் மறுபுறம் யப்பானியக் கடலும் மஞ்சள் கடலும் கொதி நிலையில் இருக்கையில் ஒரு தவறான படை நடவடிக்கை பெரும் மோதலை உருவாக்காமல் இருக்கவே ஐக்கிய அமெரிக்கா தனது தென் கொரியாவைப் பாதுகாக்கும் படை நகர்த்தல்களைப் பகிரங்கமாகச் செய்து வருகிறது. அமெரிக்காவின் நவீனரக விமானங்கள் தனகு கிழக்குக் கொல்லைப் புறத்தில் நடமாடுவதை சீனா விரும்பவில்லை. ஆனால் வட கொரியா ஒரு அணுக்குண்டு நாடாக மாறுவதை அமெரிக்கா ஒரு போதும் அனுமதிக்காது. வட கொரியாவின் அணுக்குண்டு உற்பத்தியை சீனா தடுக்காமல் இருப்பது பல படைத்துறை வல்லுனர்களை ஆச்சரியதில் ஆழ்த்தியுள்ளது.

வடகொரியாவைத் தடுக்காத சீனா
அமெரிக்கா மீது அணுக்குண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக வட கொரியா விடுத்த மிரட்டல் சீனாவைச் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. வட கொரிய சீன நாடுகளுக்கும் இடையில் நட்பு ஒப்ப்னதமும் செய்யப்பட்டுள்ளது. வட கொரியாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் பலா சீனாவை அதிருப்திக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. வட கொரியாவையும் தனது பகை நாடாக மாற்ற சீனா விரும்பவில்லை. சீனாவை சுற்று பல எதிரி நாடுகள் சீனாவிற்கு இருக்கின்றன. ஜப்பான், வியட்னாம், பிலிப்பைன்ஸ் உடபடப் பல நாடுகளுடன் கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும் கடுமையான முறுகல் நிலையில் சீனா இருக்கிறது. வட கொரியா தென் கொரியாவாலும் அமெரிக்காவாலும் ஆக்கிரமிக்கப்பட்டோ அல்லது ஒரு உள்நாட்டுப் புரட்சியின் மூலமோ வட கொரியா அமெரிக்க சார்பு ஆட்சியாளர்களின் கைகளுக்குப் போவதையும் சீனா விரும்பவில்லை. கடந்த காலங்களில் சீனாவின் பல ஆலோசனைகளை வட கொரியா நிராகரித்திருந்தது. முக்கியமாக தனது நாட்டின் பொருளாதாரக கொள்கைகளை ஒத்த பொருளாதாரக் கொள்கையை வட கொரியாவில் கடைப்பிடிக்கும் படி சீனா வட கொரியாவிற்கு ஆலோசனை வழங்கியது ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. சீனா வட கொரியாவிற்கு வழங்கும் உதவிகளை நிறுத்தினால் வட கொரிய ஆட்சி கவிழ்ந்து விடும். சீனாவால் வட கொரியாவை அடக்க முடியும் என மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் உறுதியாக நம்புகின்றன. ஆனால் சங்கடத்தில் சீனா!!!!

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...