Friday 12 April 2013

ஒபாமாவிற்குத் தலையிடியாகும் ஆளில்லாப் போர் விமானங்கள்






 

 அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் செல்லப்பிள்ளையான ஆளில்லாப் போர்விமானத்திட்டம் தொடர்ந்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. அண்மைக்காலங்களா அமெரிக்க அதிபராக இருப்பவரின் இரண்டாம் பதவிக் காலம் முடிய முன்னர் அவர் விட்ட தவறுகளை அம்பலப்படுத்தி அவரின் பதவிக்காலம் முடியும் போது அவரை ஒரு செல்லாக்காசு ஆக்கி விடுவார்கள் அமெரிக்க ஊடகர்கள்.

அமெரிக்காவின் பொது மக்களின் அபிப்பிராயத்தின் தனிப்பட்ட ஒருவரின்செல்வாக்கு இருக்கக் கூடாது என்பதும் அவர்களின் அபிப்பிராயங்களை பெரு முதலாளிகளின் ஊடகங்களால் மட்டும் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக அமெரிக்க அதிபாராக இருப்பவர் பதவிக்காலம் முடியுமுன்னர் மக்கள் மத்தியில் அவரின் விம்பத்தை சிதைத்து விடுவார்கள்.

பராக் ஒபாமா பதவி ஏற்றபோது அவருக்குப் பெரும் தலையிடியாக இருந்தது இசுலாமியப் போராளிகளே. அவர்களை அழிக்க அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ வரைந்த ஆளில்லாப் போர் விமானங்களால் தாக்கும் திட்டம் பராக் ஒபாமாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. இத்திட்டம் சிஐஏ ஐ ஒரு படையாணியாக மாற்றிவிட்டது.

படைப்பிரிவான உளவுத் துறை
வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ  9-11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது. அமெரிக்காவின் படைத்துறையினர் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடப்பாடுடையவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

சிஐஏயின் படைப்பிரிவு ஒரு ஒட்டுக் குழுபோல் செயற்படுகிறது.
சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்கள் சிஐஏயின் படைப்பிரிவு எந்தவிதக் சட்டக் கட்டுப்பாடுமின்றி ஒரு ஒட்டுக் குழுபோல் செயற்படுகிறது என்று பகிரங்கமாகக் கூறுகின்றனர். ஆளில்லாப் போர்விமானங்கள் பற்றி மேலும் வாசிக்க:
 1. இங்கு சொடுக்கவும் 2. இங்கு சொடுக்கவும்.

சிஐஏயின் ஆளில்லா விமானங்கள்
சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. இவை உண்மையில் கொல்லும் எந்திரங்கள். ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றியில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது. ஆப்-பாக் எல்லையில் உள்ள அல் கெய்தாவினர் பற்றிய தகவல்களை அறிந்து அதை அமெரிக்கப்படியினருக்கு அறிவித்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னர் அல் கெய்தாவினர் நகர்ந்து விடுவார்கள். தாக்குதலுக்கான பெரிய விமானங்கள் தளத்தில் இருந்து கிளம்பும் தகவல் அல் கெய்தாவினருக்குச் சென்று விடும். சிஐஏ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உடனடித் தாக்குதல்களை மேற் கொள்ளலாம். சிஐஏயின் ஆளில்லாப் போர்விமானங்கள் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான அல் கெய்தா உறுப்பினர்களைக் கொன்றுவிட்டன. அல் கெய்தாவில் இணைபவர்களிலும் பார்க்க அதிகமானவர்களைத் தாம் கொல்கிறோம் என்று சிஐஏ பெருமைப்பட்டுக் கொள்கிறது. கடந்த ஒரு வருடமாக யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாக்கிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைதுகள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர். இதன் உச்சக்கட்டம்தான் பில் லாடன் கொலை.

அமெரிக்க நீதித் துறையும் ஆளில்லாப் போர்விமானங்களும்
அமெரிக்க நீதித் துறையின் வெள்ளை அறிக்கையின்படி: the United States can target a "senior operational leader of al-Qa'ida or an associated force" who "poses an imminent threat of violent attack against the United States." ஐக்கிய அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தலாக்அக் கூடிய அல் கெய்தாவினதோ அல்லது அதன் இணை இயக்கங்களின்  மூத்த இயங்கு தலைவர்களை இலக்கு வைக்க முடியும். ஆனால் உண்மையில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் பல அப்பாவிப் பொதுமக்கள் பாக்கிஸ்த்தான் படை வீரர்கள் எனப் பலரைக் கொன்றுள்ளது. ஜோனாத்தன் லிண்டே என்னும் அமெரிக்க ஊடகர் அமெரிக்க அரசின் மிக இரகசியமான உள்ளகத் தகவல்களைப் பெற்று அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களின் நடவடிக்கைகள் பற்றி ஒரு காத்திரமான அறிக்கையைத் தயார் செய்துள்ளார். அதன் படி அமெரிக்க அதிகாரிகள் தாம் ஐக்கிய அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தலாக்அக் கூடிய அல் கெய்தாவினதோ அல்லது அதன் இணை இயக்கங்களின்  மூத்த இயங்கு தலைவர்களை இலக்கு வைக்கின்றோம் எனச் சொல்வது தவறானது எனத் தெரிய வந்துள்ளது. இதனால் அமெரிக்க சட்டமா அதிபர் பாதுகாப்புத் துறைப் பேச்சாளர் போன்ற பல முக்கியமானவர்கள் ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்பாக விட்ட அறிக்கைகள் கேள்விக்க்குறியாக்கப்பட்டுள்ளது.

ஒபாமா பொய் சொன்னாரா?
2012 செப்டம்பரில் ஐக்கிய அமெரிகாவின் ஆளில்லாப் போர் விமானங்களில் நடவடிக்கைக்கள் விமர்சனத்திற்கு உள்ளான போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா  "Our goal has been to focus on Al Qaeda and to focus narrowly on those who would pose an imminent threat to the United States of America." எமது இலக்குகள் அல் கெய்தாவை மையப்படுத்தியதானதும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடியவர்களை நோக்கிய ஒடுங்கியதானவையுமாகும் என்றார். மைக்கேல் ஜெங்கோ என்னும் இன்னும் ஒரு ஊடகர் ஏற்கனவே குற்றமிழைத்த அல் கெய்தா மற்றும் தலிபான் போரளிகளுக்கு எதிரான நடவடிக்கையாகத் தொடங்கிய அமெரிக்க ஆளில்லாப் போர் விமானத் தாக்குதல் திட்டம் இப்போது பாக்கிஸ்தான் அரசின் பயங்கரவாத ஒழிப்புத் திட்டமாக மாறியுள்ளது என்கிறார். அமெரிக்க உளவுத்துறை தனக்கு சந்தேகமானவர்களையும் கொன்று குவித்துள்ளது. இது அமெரிக்க நீதிக்கும் சட்டத்திற்கும் முரணானது என்கிறார் மைக்கேல் ஜெங்கோ. ஹக்கானி இயக்கம் அமெரிக்காவிற்கு எதிரானது அல்ல அதன் உறுப்பினர்களும் அமெரிக்க உளவுத் துறையால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒபாமாவின் தவறா?
மக்கள் முகவரகமான (civil agency) ஆன சிஐஏ ஒரு படைப்பிரிவாக மாறியது ஒபாமா நிர்வாகத்தின் மாபெரும் தவறாகும். அமெரிக்க நீதித் துறைக்கு அப்பால் நின்று செயற்படுகிறது என்ற குற்றச் சாட்டு அமெரிக்கக் குடிமக்கள் இருவரை சிஐஏ ஜேமனில் வைத்து கொன்றமையை தொடர்ந்து கடுமையாக எழுந்தது. இதில் முக்கியமானவர் அன்வர் அல் அவ்லாக்க ஆகும். இவரின் கொலை பற்றிய பதிவைக் இங்கு காணலாம்: அன்வர் அல் அவ்லாக்கி.  
ஒரு அமெரிக்கக் குடிமகனை அமெரிக்க அரசு விசாரணையின்றிக் கொல்லுதல் அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்திற்கும் அது பேணுவதாகக் கருதப்படும் தனிமனித உரிமைகளுக்கும் பெரிதும் முரணானது என அமெரிக்க சட்ட வல்லுனர்களும் மனித உரிமைவாதிகளும் கருதுகின்றனர்.

அமெரிக்காவிற்கு எதிரான பரப்புரை
அமெரிக்காவிற்கு எதிராக பரப்புரசி செய்வோர் இப்படிக் கூறுகின்றனர்:
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாதக் கரமான சிஐஏ ஒரு படை அணிதான். அது சித்திரவதை, கொலை, ஆட்கடத்தல். சட்டவிரோதமாக சிறைபிடித்துத் தடுத்து வைத்திருத்தல், ஆட்களைக் காணமல் போகச்செய்தல், சொத்தழிவு ஏற்படுத்துதல் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை பரவலாக எந்தவித பொறுப்புக் கூறலுமின்றிச் செய்து வருகிறது. அமெரிக்காவின் அதிகாரபூர்வ படைப்பிரிவுக்ள்
1) The US Navy
2) The US Army
3) The US Marines
4) The US Air force
5) The US Coast Guard. மட்டுமே
இவற்றுக்குள் அடங்காத சிஐஏ எப்படி போர் விமானங்களை வைத்திருந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...