Tuesday 26 March 2013

தமிழ் மாணவர்களின் எழுச்சியும் இந்திய வெளியுறவுக் கொள்கையும்

பிரித்தானியா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இலங்கை தொடர்பாக தமது வெளியுறவுக் கொள்கைகளில் அடிப்படை மாற்றங்களைச் செய்யாவிடினும் தமது அணுகு முறையை பெரிதும் மாற்றியுள்ளன. இந்த நாடுகளில் சரியான பரப்புரைகளை மேற்கொண்டு அவற்றின் இலங்கை தொடர்பான கொள்கையில் அடிப்படை மாற்றங்களை  செய்ய வாய்ப்புக்கள் நிறைய உண்டு. ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவது சாத்தியமா?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரிலும் 22வது கூட்டத் தொடரிலும் அமெரிக்கா இலங்கை தொடர்பாகக் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானங்களிற்கு இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது அதன் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. அது ஒரு தற்காலிக இராசதந்திர நழுவியக்கம் (diplomatic maneuver) மட்டுமே. 

தமிழ்நாட்டில் மாணவர்கள் ஈழ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்காக கொதித்து எழுந்ததைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் காங்கிரசுக் கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பின்னர் இந்திய தேசிய ஊடகங்களில் இந்தியாவின் தேசியக் கொள்கை பற்றிய விவாதங்கள் பல நடந்தன. இவற்றில் பல அரசியல்வாதிகள், முன்னாள் இராசதந்திரிகள், முன்னாள் அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பட்டனரும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு தவிர்ந்த இந்தியாவின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை அறிந்து கொள்ள இந்த விவாதங்கள் உதவின. இந்த விவாதங்களில் எல்லோரும் திமுக இதுவரை காங்கிரசு அரசுடன் ஒட்டிக் கொண்டு இருந்துவிட்டு இப்போது விலகியதை கடுமையாக விமர்சித்தனர். இந்த விவாதங்களில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை நாம அலசிப்பார்க்கலாம்.

1. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது தேசியநலனைக் கருத்தில் கொள்ள வேண்டும் ஒரு மாநில மக்களின் உணர்விற்காக அதை மாற்ற முடியாது.

இந்தியா என்பது ஒரு அரசுகளின் ஒன்றியம். பல மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற வகையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எல்லா மாநிலங்களின் விருப்பு வெறுப்புக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாவிடின் இந்தியா என்பது ஒரு பேரினவாதிகளின் அரசு மட்டுமே எனப் பொருள் படும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் பாதிக்கப் பட்ட மாநிலம் தனக்கு என்று ஒரு வெளியுறவுக் கொள்கையை ஏற்படுத்துவதற்காக பிரிவினையை கையில் எடுக்கலாம்.

2. வெளியுறவுக் கொள்கை நிபுணர்களால் தீர்மானிக்கப்படவேண்டும்.
இந்தியாவைச் சூழவுள்ள நாடுகள் எதுவும் இந்தியாவிற்கு சார்பாக இல்லை. இந்தியாவின் ஒரே ஒரு செய்மதி நாடான பூட்டானும் இந்தியாவின் பிடியில் இருந்து விலகி விடுமா என்ற நிலை உருவாகிவிட்டது. ராஜீவ் காந்திக்குப் பின்னர் இலங்கை, பங்களாதேசம், மாலை தீவு, நேப்பாளம் ஆகிய நாடுகள் இந்தியாவின் பிடியில் இருந்து வெகுதூரம் விலகிவிட்டன. இவையாவும் இந்த நிபுணர்களின் தவறுகள். இலங்கையில் 1983-ம் ஆண்டு இனக்கலவரம் நடந்து இலங்கையில் படைத்துறை கட்டுக்கடங்காமல் போன போது அப்போதைய இலங்கை அதிபர் ஜே ஆர் ஜயவர்த்தன பிரித்தானியா, சீனா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை தனக்கு உதவியாகப் படையினரை அனுப்பும் படி வேண்டினார். எல்லா நாடுகளும் இந்தியாவைக் கேள் எனச் சொல்லி விட்டன. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக இஸ்ரேல், பாக்கிஸ்த்தான் உட்படப் பல நாட்டுப் படைகள் இலங்கையில் நேரடியாக போரில் பங்கு பெற்றிருந்தன. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் நிபுணர்களின் தவறு இது. இவற்றை அரசியல்வாதிகள் திருத்தவில்லை. இப்போது மக்கள் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

3. இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்துவிடும்.

இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்திய வெளியுறவுத் துறை எடுத்தால் அது இலங்கையை சீனாவின் பக்கம் சாய்த்து விடும். இலங்கை ஏற்கனவே சீனாவின் பக்கம் சாய்ந்து விட்டது என்பதுதான் உண்மை. இதனால்தான் 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மனித உரிமைக்கழகத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது நடுநிலை வகித்த அமெரிக்கா பின்னர் தானே தீர்மானங்களைக் கொண்டுவந்து இலங்கையை சீனாவிடமிருந்து மீட்கப்பார்க்கிறது.

4. இந்தியா இலங்கைக்கு உதவாவிடில் சீனா உதவி செய்யும்.
இலங்கைக்கு இந்தியா உதவி செய்யாவிடில் சீனா உதவி செய்யும் என்ற பூச்சாண்டியைப் பலரும் முன்வைக்கின்றனர். ஆனால் இந்தப் போட்டிக்கு உதவும் நிலை எங்கு போய் முடியும் என்ற கேள்விக்கு என்ன பதில்? இந்தப் போட்டியில் வெல்லும் தகமை இந்தியாவிற்கு இருக்கிறதா? பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடப்பதற்கு இந்தியா எல்லா முயற்ச்சிகளையும் செய்கிறது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் சீனா இல்லை. அங்கு இந்தியா செய்யாவிட்டால் சீனாவால் செய்ய முடியாது. அங்கு யாருக்குப்  போட்டியாக இந்தியா இலங்கைக்கு வக்காலத்து வாங்குகிறது? இலங்கைக்கான இந்தியாவின் உதவி 2007இல் இருந்து 2011வரை $298.1மில்லியன் அதேவேளை சீனாவின் உதவி  $2.126பில்லியன். எந்த உதவியாளர் பக்கம் இலங்கை இருக்கும்? இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள்:
Chinese engineers are building roads, railway lines, telecommunication links, dams, hospitals, expressways like the one between Colombo and Katunayake, stadiums, schools, hotels and power plants. Last year, Sri Lanka launched its first communications satellite with the help of China Great Wall Industry Corp, China's state-owned space technology firm. It has since signed a string of satellite deals with Sri Lanka. It's also helping build a space academy. Deals are being struck between the two countries to build telecommunication and information technology networks. The two have also pledged to improve their defence ties.

2012இல் இந்தியாவிற்கு விற்பனை செய்யவிருந்த நிலத்தை இலங்கை நிறுத்தி அதை சீனாவிற்கு விற்றுவிட்டது.

5. வெறும் உணர்வுகளை வெளிநாட்டுக் கொள்கை கணக்கில் எடுக்கக் கூடாது.
இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் தற்போது தமிழ்நாடும் மேற்கு வங்கமும் தாக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றன. மேற்கு வங்கம் பங்களாதேசத்துடனான நீர்ப்பங்கீட்டை எதிர்க்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரினாமூல் காங்கிரசுக் கட்சியின் சௌகத்தா ரோய் (Saugata Roy) என்பவர் தமிழாடு வெறும் உணர்ச்சிக்காக வெளிநாட்டுக் கொள்கையை மாற்ற முயல்கிறது. மேற்கு வங்கம் பொருளாதாரக் காரணங்களுக்காக இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை மாற்ற முயல்கிறது என்றார். அவர் அத்துடன் நிற்கவில்லை. ஒரு 13 வயதுச் சிறுவன் பதுங்கு குழியில் இருக்கும் ஒரு படத்தையும் சுடுபட்டு இறந்து கிடக்கும் ஒரு படத்தையும் வைத்துக் கொண்டு இந்திய வெளியுறவுக் கொள்கையை மாற்ற முடியாது என்றார். இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் கடந்த 25 ஆண்டுகளாக மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது வெறும் உணர்ச்சியோடு சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. இந்தியா தொடர்ந்து உதவிக் கொண்டிருந்தால் இன்னும் எத்தனை இலட்சம் பேர் கொல்லப்படுவார்கள்? வெளிநாட்டு கொள்கை என்பது இனக்கொலைக்கு உதவி செய்வதா?

6. இலங்கையில் நடந்தது ஒரு இனக்கொலை அல்ல.

சில இந்தியர்கள் ஒரு இனத்தை முழுமையாக அழித்தால்தான் அது இனக்கொலை என்றனர். பன்னாட்டுச் சட்டத்தின் படி இனக்கொலைக்கான வரைவிலக்கணம் என்ன எனபதை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இனக்கொலைக்கான வரைவிலக்கணம்: ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ , மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது இவைகள் இனக்கொலைகளாகக் கருதப்படும்.

7. ராஜபக்சவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க முடியாது.
ராஜபக்சவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க முடியாது என இந்தியாவில் பலரும் சொல்கின்றனர். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு இலங்கையில் போர்க்குற்றம் மட்டுமல்ல மாநிடத்திற்கு எதிரான குற்றமும் இழைக்கப்பட்டமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் இருப்பதாகச் அறிக்கை வெளியிட்டது. சனல் - 4 வெளியிட்ட காணொளிகளைப்பார்த்த பன்னாட்டுச் சட்ட அறிஞர்கள் சனல் - 4 இன் காணொளிகளும் காட்சிப்படங்களும் போர்க்குற்றத்திற்கான போதுமான ஆதாரங்கள் என்றனர்.

8. இலங்கை மனித உரிமைப் பிரச்சனையை இந்தியா தூக்கிப் பிடித்தால். காஷ்மீர் மனித உரிமைப்பிரச்சனை தூக்கிப் பிடிக்கப்படும்.

இந்த விவாதத்தை முன்வைப்பவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இந்தியா காஷ்மீரில் செய்யும் கொடுமைகளை ஒப்பிடுகிறார்கள். இந்தியாவின் மனித உரிமை மீறல்கள் அத்துணை கொடியது என்றால் அதுவும் தண்டிக்கப்பட வேண்டியதே.

இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு என்ன காரணம்?

இந்தியா இலங்கைக்கு தொடர்ந்த் உதவி செய்வோம் என அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உதிரிக்கட்சி என்ற வேறுபாடு இல்லை. இவற்றிற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

1. தமிழர்கள் தலை நிமிரக்கூடாது.
இலங்கையில் தமிழர்கள் தலை நிமிர்ந்தால் அதைத் தொடர்ந்து இந்தியாவில் வாழும் தமிழர்களும் தலை நிமிர்ந்து நிற்பார்கள். இதை தமிழரல்லாத இந்தியர்கள் விரும்பவில்லை. இந்தியாவில் இருக்கும் அதிகாரப்பரவலாக்கத்திற்கு அதிகமான பரவலாக்கம் இலங்கையில் வரக்கூடாது எனப் பல இந்தியர்கள் கருதுகின்றனர். இது அப்பட்டமான பேரினவாதம். மாணவர்களின் எழுச்சி இதற்கான பதிலடியைக் கொடுக்க வேண்டும்.

2. இந்தியப் பண முதலைகள் இலங்கையில் முதலீட்டிற்கு ஆபத்து வரக்கூடாது.
இலங்கையில் பல இந்திய முதலாளிகள் பெரும் முதலீட்டைச் செய்துள்ளனர். இந்த முதலீட்டிற்கு இந்தியாவின் தமிழர்கள் சார்பான கொள்கை பெரும் அச்சுறுத்தலாக அமையும். இந்திய முதலாளிகள் ஆளும் காங்கிரசுக் கட்சி, இந்திய ஊடகங்கள் ஆகியவற்றிடை நெருங்கிய தொடர்பு உண்டு. திமுக காங்கிரசுடன் தனது உறவை முறித்தவுடன் சில ஊடகங்கள் இந்திய வெளியுறவுக் கொள்கையை ஒரு கட்சி தன் ஆட்சி கலையாமல் இருக்க மாற்றக் கூடாது எனக் கூவத் தொடங்கிவிட்டன. திமுக இலங்கையை மேலும் சீனாவின் பக்கம் தள்ளுகிறது என்றது ஒரு ஊடகம்.

3. இலங்கைப்போர்க்குற்றத்தில் இந்தியாவிற்கும் பங்குண்டு.
இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான ஒரு பன்னாட்டு விசாரணை வந்தால் அந்த விசாரணை புதுடில்லியில் போய் முடியும் எனச் சில அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாக எழுதத் தொடங்கிவிட்டனர்.

4. தட்சணை செய்யும் வேலை
இலங்கை அரசு பல இந்தியர்களைத் தனது கைக்குள் போட்டு வைத்திருக்கிறது. இது 1987இல் இருந்து நடந்து வருகிறது. சுஸ்மா சுவராஜ் இலங்கை சென்று ராஜ்பக்சவைச் சந்தித்த பின்னர் பாரதிய ஜனதாக் கட்சி ராஜபக்சேவைக் காப்பாற்ற முயல்கிறது. சுப்பிரமணிய சுவாமி போன்ற பூனூல் கும்பலகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு வட இந்தியர்கள் செவி சாய்க்க மாட்டார்கள். அதை அடக்கும் திட்டத்தை அவர்கள் ஏற்கனவே வகுத்தும் இருக்கலாம். வட இந்தியர்களின் வன்முறை இனி தமிழ்நாட்டு மாணவர்கள் மீது பாயும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...