Monday 25 February 2013

பாலச்சந்திரனின் படுகொலைப்படம் ஜெனீவாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

சனல் - 4 வெளியிட்ட பாலச்சந்திரனின் இறந்த படம் தமிழ் ஊடகங்களில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அது பல நாட்டினரையும் உலுக்கியுள்ளது என்றெல்லாம் எழுதுகின்றனர். இந்தப் படம் பன்னாட்டு மட்டத்தில் ஒரு தந்திரோபாய மாற்றத்தை ஏற்படுத்துமா?

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவின் அத்திவாரம் இனக்கொலையிலும் நில அபகரிப்பிலும் உருவாக்கப்பட்டது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்த பின்னர் அங்கு குடியேறிய ஐரோப்பியர் அதற்கு அமெரிக்கா எனப் பெயரிட்டு அங்கு வாழ்பவரை இந்தியர் என்றனர். தம்மை அமெரிக்கர் என்றனர். முப்பது கோடிக்கு மேற்பட்ட இந்தியர் எனபடும் உள்நாட்டவர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் நிலங்கள் அபகரிக்கப்பட்டன.  இந்த அமெரிக்கா தமிழர்களின் நலன் கருதிச் செயற்படுகிறதா? இதன் செயற்பட்டுகளுக்குப் பின்னால் உலகத் தமிழர் பேரவையும் தமிழர் கூட்டமைப்பும் செல்கின்றன. முன்பு இணைத் தலைமை நாடுகள் என்னும் பெயரில் வந்து தமிழர்களின் பலத்தை அழித்தவர்கள் இன்று புலம் பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைக்க தென் ஆபிரிக்காவையும் சுவிற்சலாந்தையும் பாவிக்கின்றனர். முன்பு பகிரங்கமாக தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய நகர்களுக்கு அழைத்துப் பேச்சு வார்த்தை என அழைத்து ஏமாற்றியவர்கள் இப்போது திரை மறைவில் உலகத் தமிழர் பேரவையையும் தென் அமெரிக்காவிற்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

சிலர் பாலச்சந்திரனின் படத்தைப் பார்த்து உலகநாடுகளின் மனம் இரங்கும், மனம் மாறும் என்கின்றனர். சிலர் அந்தப் படத்தைக் காட்டி நீதி கேட்கிறார்கள். சிலர் அந்தப்படம் போர்க்குற்ற ஆதாரம் என்கின்றார்கள். இலங்கை அரசு அந்தப்படம் போலியானது என்றது. இந்திய வெளிநாட்டமைச்சர் இலங்கை தமது நட்பு நாடு அதனால் படத்தின் உண்மைத் தன்மையை தன்னால் உறுதி செய்ய முடியாது என்றார். பாலச்சந்திரனின் படத்தைப்பார்த்து இந்தியா தனது இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. சனல் - 4 தனது முதலாவது காணொளியில் தமிழர்கள் நிர்வாணமாக்கி கைகள் கட்டுப்பட்ட நிலையில் கொல்லப்படும் காணொளியை வெளிவிட்டவுடன் இந்திய வெளிநாட்டமைச்சர் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையின் முடிவு இதுவரை வெளிவிடப்படவில்லை. அந்த விசாரணை போரில் இந்தியாவின் பங்களிப்புத் தொடர்பான காணொளிப்பதிவுகள் ஏதாவது இருக்கிறதா என்பதைப் பற்றியதா என்ற கேள்வி அப்போது எழுப்பப்பட்டது. பாலச்சந்திரனின் படத்திலும் பார்க்க மோசமான படங்கள், கைக்குழந்தைகள் உடல் சிதறுண்டு கிடக்கும் படங்கள் கர்ப்பிணிப் பெண்கள் குண்டு வீச்சால் உடல் சிதைவுண்டு உள்ளிருக்கும் குழந்தையின் கால் வெளியில் தெரிந்தபடி இறந்து கிடக்கும் படங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. அவற்றால் மாறாத வெளிநாட்டுக் கொள்கைகள் பாலச்சந்திரனின் படத்தால் மாறுமா?

2009-ம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன என்று இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானம் வந்த போது இந்தியா அதை மாற்றி இலங்கையை பாராட்டும் தீர்மானமாக மாற்றியது. அதற்கு தென் ஆபிரிக்காவும் ஒத்துழைத்தது. தென் ஆபிரிக்காவின் ஆளும் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் ஒரு அமைப்பு. தென் ஆபிரிக்க அரசு ஈழ விடுதலைக்கு உதவிகள் பல செய்துள்ளது. இருந்தும் தென் ஆபிரிக்கா ஏன் அப்படி வாக்களித்தது. தற்போதைய முன்னணி நாடுகளில் அதன் வெளிநாட்டுக் கொள்கை, நிதிக் கொள்கை, பாதுகாப்புக் கொள்கை போன்றவற்றை Think Tank எனப்படும் நிபுணர்கள் குழுவே பெரும்பாலும் நிர்ணயம் செய்கின்றன. பன்னாட்டு அரங்கிலும் மற்றும் பிரிக்ஸ் அமைப்பிலும் தென் ஆபிரிக்காவிற்கு இந்தியாவைத் தேவைப்படுகிறது. இந்தியா சொல்வதின் படி தென் ஆபிர்க்கா வாக்களித்தால் இன்னொரு நிலைமையில் தென் ஆபிரிக்கா சொல்வதின் படி இந்தியா வாக்களிக்கும்.

பன்னாட்டு அரங்கில் நாடுகள் செயற்படுவது அதன் கேந்திரோபாய நலன்கள் பொருளாதார நலன்கள் சார்ந்தவையாக அமையும். பல கட்டங்களில் அவை எடுக்கும் தீர்மானங்கள் வாக்களிப்புக்கள் நீதி நியாயத்திற்கு அப்பாற்பட்டவையாகவும் இருக்கும். ஒரு போது உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டதாக இருக்க மாட்டாது.

இலங்கயில் தமிழர்களுக்கு இழைக்கபப்ட்ட அநீதிகள் கொடுமைகள், அட்டூழியங்கள், இன அழிப்புக் கொலைகள் பற்றி நன்கு அறிவிக்கப்பட்ட நாடும் நன்கு உணர்த்தப்பட்ட நாடும் பிரித்தானியா ஆகும். ஆனால் இலங்கை தொடர்பாக பிரித்தானியா தனது வெளிநாட்டுக் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் இதுவரை ஏற்படுத்தவில்லை. தமிழரின் தாயக்கோட்பாடு, சுயநிர்ணய உரிமை போன்றவற்றை பிரித்தானியா அங்கீகரிக்கவில்லை. அமெரிக்காவைப்போலவும் இந்தியாவைப் போலவும் பிரித்தானியாவும் சிங்களவர்களைப் பகைக்க விரும்பவில்லை. அத்துடன் இலங்கை தொடர்பாக இந்தியாவின் சொல்லுக்கு மதிப்பளிக்கும் நிலையீல் உள்ளது. அதனால்தான் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு நடக்கக் கூடாது என பிரித்தானியா இதுவரை தெரிவிக்கவில்லை.

பாலச்சந்திரனின் படம் எந்த ஒரு நாட்டின் வெளிநாடுக்குக் கொள்கையையும் தமிழர்க்குச் சார்பாக மாற்றாது. சனல் - 4 இன் காணொளியும் அப்படியே.

பாலச்சந்திரனின் படத்திலும் பார்க்க இலங்கைப் பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தென் சீனக் கடலில் சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள முறுகலில் சீனாவிற்கு ஆதரவாகத் தெரிவித்த க்ருத்து ஜெனிவாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...