Friday 1 February 2013

அல் கெய்தா வட ஆபிரிக்காவில் அமெரிக்கர் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்துமா?

AQIM எனப்படும் முகரெப் பிராந்திய அல்கெய்தா இயக்கம் அண்மைக்காலமாக தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. மாலி நாட்டைத் தன் வசமாக்கும் அல் கெய்தாவின் திட்டம் பாதி நிறைவேறிய நிலையில் பிரான்ஸ் அங்கு தலையிட்டு மாலியில் உள்ள புனிதப் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடாத்தி வருகிறது.

மாற்றப்பட்ட தந்திரோபாயங்கள்
அல் கெய்தாவிற்குத் தெரியாமல் அரபு வசந்தத்தம் என்னும் பெயரில் துனிசியா, லிபியா,  எகிப்து ஆகிய நாடுகளில் இசுலாமியர்கள் கிளர்ந்து எழுந்து ஆட்சியாளர்கலை விரட்டினர். இந்தப் புரட்சிகளில் அல் கெய்தா ஓரங்கட்டப்பட்டிருந்தது. பின்னர் அல் கெய்தா விழித்துக் கொண்டு தனது தந்திரோபாயமான வட அமெரிக்க நாடுகளுக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் எதிரான புனிதப்போரோடு மட்டும் நிற்காமல் அடைக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிரான இசுலாமிய மக்களின் எழுச்சியிலும் தன்னை இணைத்துக் கொள்கின்றது. இந்த மாற்றப்பட்ட தந்திரோபாயத்தின் ஒன்றாக சிரியாவில் ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான போராளிகளுக்குள் அல் கெய்தா ஊடுருவிக் கொண்டது. மாலியில் ஆட்சியாளர்களுக்கு எதிராக துவாரெக் என்னும் சிறுபான்மை இனத்தவர் போராடி பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றிய போது தானும் அதற்குள் நுழைந்து கொண்டது. அல் கெய்தாவிற்கு எதிரான போரில் வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தமது தந்திரோபாயங்களையும் மாற்றிக் கொண்டன. தாம் நேரடியாக அல் கெய்தாவிற்கு எதிராக போர் புரிவதைத் தவிர்த்து ஆபிரிக்க நாடுகளில் தமக்கு ஆதரவான நாட்டுப் படைகளுக்கு பயிற்ச்சி அளித்து அவர்களை தமது தலைமையின் கீழ் இசுலாமியப் போராளிகளுடன் போர் புரியும் தந்திரத்தை உருவாக்கின. இந்த இரு மாற்றப்பட்ட தந்திரோபாயங்கள் மாலியில் மோதிக் கொண்டிருக்கின்றன.

மாலியில் பின் வாங்கும் புனிதப் போராளிகள்
பிரெஞ்சுப் படைகளும் மற்றும் சாட் போன்ற பல வட ஆபிரிய்க்க நாட்டுப் படைகளும் மாலியில் ஆட்சியாளர்களுக்கு எதிரான புனிதப் போராளிகளுக்கு எதிராக தமது உயர்தர விமான மற்றும் தரைப்  படைகளால் தாக்கும் போது அல் கெய்தாவினது அன்சர் டைன் எனப்படும் துவாரெக் இன விடுதலைப் போராளிகளும் பின் வாங்கி வருகின்றனர். இவர்கள் பின்னர் ஒன்று திரண்டு பெரும் கரந்தடிப் போரை ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

அல்ஜீரியப் பணயக் கைதிகள்
பிரான்ஸ் மாலியில் தாக்குதல் தொடங்கியவுடன் அல்ஜீரியாவில் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் 16-01-2013இல் 132 வெளிநாட்டவர் உட்பட 600 பேர் பணயக் கைதிகளா மொக்தர் பெல்மொக்தர் தலமையிலான அல் கெய்தா பிரிவினரால் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் ஆச்சரியம் கொடுக்கும் அம்சம் அல் கெய்தாவின் புனித போராளிகள் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்கள் என்பதே. தீவிரவாதிகள் விடயத்தில் கடுமைப் போக்குடைய அல்ஜீரிய அரசு ஒரு மணித்தியாலத்திற்குள் பணயக் கைதிகளில் நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானிய, ஜப்பான் ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்காமல் படை நடவடிக்கையை தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்டது.

மேலும் பல பணயக் கைதிகள் நாடகம் அரங்கேறலாம்
அல்ஜீரியாவில் செய்தது போல் மேலும் பல பணயக் கைதிகள் சிறை பிடிப்பு நாடகங்கள் பல இனி வட ஆபிரிக்காவில் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்ஜீரியாவில் மொக்தர் பெல்மொக்தரின் படையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க உளவுத் துறையினர் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் ஆப்கானிஸ்த்தானிலும் யேமனிலும் அமெரிக்கா தனது முழுக்கவனத்தையும் வளங்களையும் குவித்து விட்டதால் அல் கெய்தாப் போராளிகள் இப்போது தமது நடவடிக்கைகளை இப்போது  வட ஆபிரிக்காவிற்கு நகர்த்தியுள்ளனர். மேலும் உளவுத்தகவல்களின் படி வட் ஆபிரிக்காவில் பரந்ததும் தீர்க்கமானதுமான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அல் கெய்தா திட்டம் தீட்டி வருவதாக அறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகன் நிகர் நாட்டில் தனது ஆளில்லாப் போர் விமானத் தளம் ஒன்றை முதலில் அமைக்கவிருக்கிறது. நிகர் நாடு மாலி மற்றும் அல்ஜீராநாடுகளின் எல்லையில் இருக்கிறது. மேலும் தருணம் வரும் போது மாலியிலும் ஆளில்லாப் போர் விமானத் தளம் அமைக்கப்படும். இனி புனிதப் போர் ஆப்கானிஸ்தானில் இருந்து வட ஆபிரிக்காவிற்கு நகரவிருக்கிறது.

சீனாவை ஓரம் கட்ட முக்தலர் பெல்முக்தர் பாவிக்கப்படுகிறாரா?
முக்தர் பெல்முக்தர் தலைமையிலான புனிதப் போராளிக் குழுக்கள் அல் கெய்தாவில் இருந்து பிளவு பட்டுவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. முக்தரின் பணயக் கைதிகல் நாடகம் மேற்குலகினரின் ஆசியுடனேயே நடத்தப்பட்டதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதைச் சாட்டாக வைத்துக் கொண்டு மேற்கு நாடுகள் தமது படைகளை வட ஆபிரிக்காவிற்கு அனுப்பி அங்கு சீனாவிற்கு சார்பான ஆட்சியாளர்கள் உருவாகாமல் தடுப்ப்தே அவர்களினந்தந்திரமாகும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...