Sunday 6 January 2013

எதையாவது செய்து தொலைக்கும் ஆளும் வர்க்கங்களும் தமிழர்களும்.

ஒருவன் பிரச்சனைகளால் சூழப்பட்டிருக்கும் போது எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படுவதுண்டு. அப்போது அவன் எதையாவது செய்து தொலைப்பான். அது பிரச்சனையை மேலும் மோசமாக்கும். இது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். இப்போது உலகெங்கும் பல ஆட்சியாளர்கள் இதையே செய்கின்றனர்,

உலகப் பொருளாதாரப் பிரச்சனை
கடந்த ஐந்து ஆண்டுகளாக உலகில் பல நாடுகளில் பொருளாதரப் பிரச்சனை மோசமாகிக் கொண்டு போகின்றது. இதை எப்படித்தீர்ப்பது என்று தெரியாமல் தவிக்கும் அதிகார வர்க்கங்கள் எதையாவது செய்து தொலைக்கின்றன. கடன் பிரச்சனையைத் தீர்க்க மேலும் கடன்படுகின்றன.

இலங்கைப் பிரச்சனையில் மேற்கு நாடுகள்.
இலங்கையைப் பொருளாதார ரீதியில் சுரண்டுவதில் சீனா முன்னேறி வருகிறது. இலங்கையில் பல திட்டங்களைச் செயற்படுத்தும் பணிகள் முறையான ஒப்பந்தக் கோரல்கள் இன்றி(bypassing tender procedures) சீன நிறுவனங்களின் கைகளுக்குப் போகின்றன. இலங்கைப் பிரச்சனையில் மேற்கு நாடுகளின் தற்போதைய முக்கிய கொள்கை இலங்கையில் வளரும் சீன ஆதிக்கத்தை தடுப்பதே. இதற்கு தமிழர்களின் பிரச்சனையும் மனித உரிமைப் பிரச்சனையையும் கையிலெடுத்துள்ளன. மேற்கு நாடுகள் அதிலும் முக்கியமாக அமெரிக்கா சிங்களவர்களை ஆத்திரப்படுத்தக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது. சீனாவை அகற்ற வேண்டும் அத்துடன் சிங்களவர்களை ஆத்திரப்படுத்தக் கூடாது. அது மட்டுமல்ல ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களை பன்னாட்டு அரங்குகளில் தட்டிக் கேட்பது போல் நடிக்க வேண்டும். மேலும் தமிழர் பிரச்சனை ஒரு பிரச்சனை அல்ல என்ற நிலையை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒன்றுக்கு ஒன்று முரணான செயற்பாடுகளை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியாமல் தவிக்கும் மேற்குலக அதிகாரவர்க்கம் "தமிழ்த் தலைமைகளை" தமிழ்த் தேசிய எழுச்சியைக் கொச்சைப்படுத்தும் படி கட்டளையிட்டது. தமிழ்த்தலமை எனத் தம்மை நினைப்பவர்களும் இலங்கைப் பாராளமன்றத்தில் உளறிக் கொட்டுகின்றனர். சிங்களக் கொடியை அம்மனின் கொடி என்கின்றனர்.

இலங்கைப் பிரச்சனையில் இந்திய ஆளும் வர்க்கம்
இலங்கையில் தமிழர்கள் முற்றாக அடக்கி ஒடுக்கப்பட வேண்டும், இலங்கையில் தமிழர்கள் மீண்டும் ஒரு போராட்டம் ஆரம்பிக்கக் கூடாது என்பதை தனது தலையாய கொள்கையாக கொண்டது இந்திய ஆளும் வர்க்கம். புது டில்லியைப் பொறுத்தவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கை. இந்தியாவிற்கு இலங்கையில் சீன ஆதிக்கம் பற்றிய கரிசனை உண்டு. ஆனால் அது எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்குச் சகுனப் பிழையாகட்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறது. தமிழர்கள் பிரச்சனையில் தெளிவாக இருக்கும் இந்தியா தனது பிராந்திய அரசியல் பிரச்சனையில் குழம்பிப் போயிருக்கிறது. மேற்குலகுடன் சேர்ந்து இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமைமீறல்களை கண்டிப்பது போல் தானும் நடிப்பதா அல்லது இலங்கை அரசிற்கு பன்னாட்டு அரங்கில் உதவி செய்வதா என்பது பற்றி இந்திய ஆளும் வர்க்கம் குழம்பிப் போய் இருக்கிறது.
2012 நவம்பர் 1-ம் திகதி ஜெனிவா நகரில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தின் இலங்கை தொடர்பான காலாந்தர மாநாட்டில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி இலங்கையில் அதன் அரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் நிறைவேற்றப்படவேண்டும், வடக்கு மாகாண சபைக்கான  தேர்தல் நடாத்தப்பட வேண்டும் மனித உரிமை மீறல்களுக்கான நம்பகரமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று முழங்கினார். பின்னர் நவம்பர் 5 - ம் திகதி ஒரு குத்துக் கரணம் அடித்து அந்தப் பரிந்துரைகளை இறுதி அறிக்கையில் இருந்து இந்தியா நீக்கி விட்டது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா கடந்த பல ஆண்டுகளாக செய்துவரும் திருகுதாளங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இது ஆச்சரியமளிக்கவில்லை. ஆனால் பல மேற்கு நாட்டு ராசதந்திரிகள் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். அங்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில்ஒரு பெரிய டீல் நடந்திருக்கிறது என்று பலரும் கருதினர். இந்தியா பன்னாட்டு அரங்கில் இலங்கையில் இராசதந்திரக் கைக்கூலியாகவே செயற்படுகிறது.

இலங்கை ஆளும் வர்க்கம்
இலங்கை அரசின் 19 படையணிகளுள் 14 படையணிகள் தமிழர் தாயகப் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ளன. தமிழர் பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை 84,000 இற்கும் 90,000 ஆயிரத்திற்கும் இடையில் இருக்கலாம் எனப்படுகிறது. இந்தப்படையின் எண்ணிக்கை தேவைக்கும் அதிகமானது என இலங்கை ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இவர்களை சிங்களப் பகுதிக்கு நகர்த்தினால் அவர்கள் அங்கும் தமது அடக்கு முறையைக் காட்டுவார்கள் என்பதால் இலங்கை அரசிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தமிழர் பகுதியில் நிலை கொண்டிருக்கும் படையினருக்கு முறையான பொழுது போக்கு நடவடிக்கைகளையும் இலங்கை அரசால் செய்ய முடியவில்லை. அதற்கும் நிறையச் செலவிட வேண்டிவரும். எதையாவது செய்து தொலைப்பதற்காக அவர்களை தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் போதிக்க வைக்கிறது இலங்கை ஆளும் வர்க்கம். இதனால் தமிழர் பிரதேசத்தை சிங்கள மயமாக்கும் இலங்கை இந்தியக் கொள்கையையும் நிறைவேற்றலாம் என நினைக்கின்றனர் இலங்கை இந்திய ஆட்சியாளர்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...