Monday 21 January 2013

அல் கெய்தா மீளவும் எழுச்சியடைகிறதா?

தற்போது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைச் செயலாளாராக இருக்கும் லியோன் இ பானெற்றா அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் தலைவராக இருந்த போது அவரது தீவிர செயற்பாட்டல்  பின் லாடன் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு பாதுகாப்புத் துறைச் செயலாளார் பதவி வழங்கப்பட்டது. அவர் பதவியேற்றவுடன் பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் மேற் கொண்டிருந்தார். அதன் போது ( ஜுலை 2011) அவர் "We are within reach of strategically defeating AL-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்துவிட்டோம்" என்றார். அல் கெய்தா தோற்கடிக்கப்படக் கூடியதா?

ஹமாஸ் என்றால் பலஸ்தீன மேற்குக் கரை, ஹிஸ்புல்லா என்றால் லெபனான். தலிபான் என்றால் ஆப்கானிஸ்தான் - பாக்கிஸ்தான். லஷ்கர்-இ-தொய்பா  என்றால் பாக்கிஸ்தான்.  ஆனால் அல் கெய்தா ஒரு குறிப்பிட்ட நாட்டு எல்லைக்குள் அடங்கவில்லை. அது பல நாடுகளில் பரந்து இருக்கிறது. 

தொடர்பாடலுக்கு மாற்றீடு

9-11 இன் பின்னர் அமெரிக்காவின் மிகத்தீவிரமான கண்காணிப்பில் அல் கெய்தா கொண்டுவரப்பட்ட பின்னர் அல் கெய்தாவால் எந்தவித இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகளையும் பாவிக்க முடியாமல் போனது. அவற்றை வைத்து அவர்களின் இருப்பிடங்களை அறியும் தொழில் நுட்பம் அமெரிக்காவிடம் இருந்தது. இதனால் அல் கெய்தாவின் தலைமைக்குத் தொடர்பாடல் பிரச்சனை இருந்தது. எப்போதும் கொரில்லா இயக்கத்தின் முக்கிய பிரச்சனையே தொடர்பாடல்தான். இதனால் அல் கெய்தா ஒரு புதிய உத்தியைக் கையாண்டது.  பின் லாடன் இருக்கும் போதே அவர் தனது இயக்கத்தை ஒரு franchise(தன்னிச்சைக்கிளை) இயக்கமாக மாற்றிவிட்டார்.  அதன் படி அல் கெய்தாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தமது நடவடிக்கைகளை தமது எண்ணப்படி மேலிடத்தின் கட்டளைக்குக் காத்திராமல் செய்ய முடியும்.

தன்னிச்சைக்கிளை (franchise) அல் கெய்தாக்கள்
அல் கெய்தாவின் franchise இயக்கங்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் வட அமெரிக்க நாடுகளுக்கும் எதிரான தமது புனிதப் போரை முக்கிய இலக்காகக் கொண்டு செய்றபடுகின்றன.
1. ஈராக்கில் அல் கெய்தா -Al Qaeda in Iraq (AQI),
2. அல் கெய்தா இன் அரபுக்குடாநாடு -the Yemen-based AL Qaeda in the Arabian Peninsula (AQAP),
3. இசுலாமிய மக்ரெப்பில் அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM)
ஆகியவை தற்போது முக்கியமாகச் செயற்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்புக்களாகும்.
இந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் அல் கெய்தாவின் தலைமைப் பீடம் இருக்கும் ஆப்-பாக் எல்லையில் பயிற்ச்சி பெற்றவர்கள். இங்கு பயிற்ச்சி பெற்றுத் திரும்பும் புனிதப் போராளிகள் போர்த் திறனிலும் உலக அரங்கு தொடர்பான அறிவிலும் மேம்பட்டவர்களாக இருப்பர்.

இவற்றில் 2012இல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக அரபுக்குடாநாட்டு அல் கெய்தா(AQAP) செயற்பட்டது. அமெரிக்க ஆளில்லா விமானங்களும் இவர்களை இல்க்கு வைத்தே அதிக தாக்குதல்களை மேற்கொண்டன. 

2013இன் ஆரம்பத்தை இசுலாமிய மக்ரெப்பில் அல் கெய்தாAL Qaeda in the Islamic Maghreb (AQIM) அல்ஜீரிய பணயக் கைதிகள் மூலம் தனதாக்கிக் கொண்டது. மேற்கு நாடுகளையும் அதன் நண்பர்களையும் அது 2013 ஜனவரி மூன்றாம் வாரம் கலங்கடித்துவிட்டது. Maghreb என்பது வட மேற்கு ஆபிரிக்காக் கண்டத்தைக் குறிக்கும். இதில் எகிப்து, லிபியா, மொரொக்கோ, அல்ஜீரியா துனிசியா, மாலி ஆகியவை அடங்கும். அல்ஜீரியப் பணயக் கைதிகள் விவகாரம் அல் கெய்தா மீளவும் எழுச்சியடைந்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பினாலும் காத்திரமான அல் கெய்தாவின் செயற்பாடு மாலியின் வட பிராந்தியம் முழுவதையும் அல் கெய்தா இயக்கம் துவாரெக் இனக்குழும விடுதலை இயக்கமான அன்சார் டைனுடன் இணைந்து கைப்பற்றியதுடன் வெளிப்பட்டது. மாலியின் வட பிராந்தியம் முழுவதையும் அல் கெய்தா அன்சார் டைன் இயக்கத்துடன் இணைந்து கைப்பற்றியதுடன் மேலும் தெற்கு நோக்கி துரித கதியுடன் முன்னேறத் தொடங்கியது.

அல் கெய்தாவிற்குள் பதவிப் போட்டி
பல தன்னிச்சைக்கிளைகளாகச் செயற்படும் அல் கெய்தாவிற்குள் தான் முக்கியத்துவம் பெறுவதற்காகவே மொக்தர் பெல்மொக்தர் அல்ஜீரியப் பணயக் கைதிகள் நாடகத்தை அவசரப்பட்டு அரங்கேற்றினார் என அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளதாகச் சில தகவல்கல் தெரிவிக்கின்றன.  பெல்முக்தருக்கும் அபு முசாம் அப்துல் வடௌட்டிற்கும் (Abu Musab Abdel Wadoud) ஒரு தலைமைப் போட்டி நிலவுகிறதாம். பெல்முக்தர் இரத்தத்தில் ஒப்பமிடுவோர் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளாராம்.

மாலிக்குள் பாய்ந்த பிரான்ஸ்
வட ஆபிர்க்காவில் அல் கெய்தா தனக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கி விடுமா என்ற அச்சம் பிரான்ஸை அங்கு படைரீதியாகத் தலையிட வைத்தது. மற்ற நேட்டோ நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரான்ஸ் தீர்மானங்களை விரைவாக எடுக்கும் திறனுடையது என்பதை மாலிக்குத் தனது படையை விரைவாக அனுப்பியதன் மூலம் நிரூபித்தது. பிரெஞ்சு விமானங்கள் துவாரெக் இனக்குழுமத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுதியது. பல புனிதப் போராளிகளும் அப்பாவிப் பொதுமக்களும் பிரெஞ்சு விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

பிரான்ஸிற்கு அல் கெய்தாவின் பதிலடி
பிரான்ஸ் மாலியில் தாக்கி பின்னர் அல்ஜீரியாவில் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் 132 வெளிநாட்டவர் உட்பட 600 பேர் பணயக் கைதிகளா அல் கெய்தாவினால் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் ஆச்சரியம் கொடுக்கும் அம்சம் அல் கெய்தாவின் புனித போராளிகள் இயற்கை வாயுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்கள் என்பதே. தீவிரவாதிகள் விடயத்தில் கடுமைப் போக்குடைய அல்ஜீரிய அரசு ஒரு மணித்தியாலத்திற்குள் பணயக் கைதிகளில் நாடுகளான அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானிய, ஜப்பான் ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்காமல் படை நடவடிக்கையை தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்டது.
 
சிரிய உள்நாட்டுப் போரில் அல் கெய்தா
ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாதத் தாக்குதலை நடாத்திய அல் கெய்தா இயக்கத்தின் ஒரு அங்கமான ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் ஈராக்கில் இருந்து சிரியா சென்று அங்குள்ள கிளர்ச்சிக் காரர்களுடன் இணைந்து போராடுகின்றனர். இவர்கள் பல தற்கொலைத் தாக்குதல்களையும் நடாத்தியுள்ளனர் எனப்படுகிறது. மேலும் ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர் பல கிருத்தவர்களைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர் என்றும் கிருத்தவத் தேவாலயங்களை இடித்துத் தள்ளியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தந்திரோபாய மாற்றம்
சிரியாவிலும் மாலியிலும் அல்ஜீரியாவிலும் அல் கெய்தா வேறு வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டுள்ளது. சிரியாவில் போராளிகளோடு போராளிகளாக இணைந்தது. மாலியில் ஒரு நாட்டு உருவாக்கம் செய்ய முயல்கிறது. அல்ஜீரியாவில் மேற்கு ஐரோப்பியாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் எதிரான தமது தாக்குதலுக்கு ஒரு புது வடிவம் கொடுத்தது. மாலியில் பிரெஞ்சுப் படைகள் முன்னேறினாலும் அங்கு புனிதப் போராளிகளை பிரெஞ்சுப் படைகளால் முற்றாக அழிக்க முடியாது. வட ஆபிரிக்காவில் எந்த அரசினதும் கட்டுப்பாடுகளில் இல்லாத பிரதேசங்கள் பல இருக்கின்றன.  அவற்றுக்குள் பின்வாங்கிக் கொண்டு அவர்கள் தமது கரந்தடித் தாக்குதல்களை மேற்கொள்ளலாம்.

அழிக்க முடியாத புனிதப் போராளிகள்
அல்ஜீரியப் பணயக் கைதிகள் விவகாரத்தை சாட்டாக வைத்துக் கொண்டு இனி அமெரிக்கா வட ஆபிரிக்காவில் தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களை அதிகரித்து மேலும் பல அல் கெய்தாப் போராளிகளையும் தலைவர்களையும் கொல்லலாம். ஆனால் புனிதப் போராளிகள் முற்றாக அழிக்கப்பட முடியாதவர்களாகவே இருப்பார்கள். என் வீட்டுப் பின்புறத்தில் அழுக்கு நீர் இருக்கும் வரை நுளம்புத் தொல்லை இருக்கும்.

பிந்திக் கிடைத்த செய்தி:
ஆப்கானிஸ்த்தான் தலைநகர் காபூலில் உள்ள போக்குவரத்துக் காவற்துறையின் தலைமையகத்தில் தலிபான் இயக்கத்தினர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டனர். தொடர்ந்து ஏழு மணித்தியாலங்கள் அங்கு சண்டை நடந்தது. ஆப் படையினர் தாமாகவே நேட்டோப்  படையினரின் துணையின்றி  நிலைமையைக் கையாண்டதாகத் தெரிவித்தனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...