Saturday 3 November 2012

விகடனே முன்னாள் போராளி பாலியல் தொழிலாளியாக மாறியமைக்கு யார் பொறுப்பு?

அக்ரஹாரத்தில் அடைபட்டுக் கிடக்கும் எழுத வாசிக்கத் தெரிந்த பெண்களைக் குறி வைத்து ஆரம்பிக்கப்பட்ட ஆனந்தவிகடன் சஞ்சிகை இன்று வளர்ந்து பரந்துவிட்டது பல சஞ்சிகைகள் தொலைக் காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு என்று அதன் வியாபாரம் விரிவடைந்துவிட்டது. தமிழ்நாடு தமிழர்களுக்கே என்ற குரலை எலிவளை எலிகளுக்கே என்று கிண்டலடித்த "தேசிய"  தமிழ் விரோத சஞ்சிகை விகடன்.

விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை2009இற்கு முன்னர் விகடன் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ஈழத்தைப் பற்றியும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தியது. அதன் முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. முடிவுகள் புலிகளுக்கும் ஈழத்திற்கும் பலத்த ஆதரவு இருப்பதை எடுத்துக் காட்டியது. அதன் பிறகு விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளிவிட்டது. இதில் விடுதலிப் புலிகள் மிகப் பலமுள்ளவர்களாகப் பொய்யாகப் பல தகவல்கள் வெளியிடப் பட்டது. கட்டுரை ஏதோ ஈழ ஆதரவாகத்தான் இருக்கும். வியாபாரம்!!!ஆனால் விகடனின் “அரசவை” பின்னுட்டக் காரர்களான பாலா, தமிழ் யூகே, வெங்கி, ஹரிஹரன், பார்த்த சாரதி ஆகியோர் மூலமாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக பற்பல நஞ்சுகள் கக்கப்படும். பின்னூட்டத்தில் ராஜபக்சே தமிழ் நன்கு படித்தவர் என்று கூடப் பொய் சொல்லப் பட்டது. இவர்கள் புலிகளுக்கு எதிராக எந்த விதமான பொய்க் கருத்துக்கள் கூறப்பட்டாலும் அவை பிரசுரிக்கப் படும். நானும் எனது நண்பர்களும் இதற்கு எதிராக தெரிவித்த பல கருத்துக்கள் அங்கு பிரசுரிக்கப் படவில்லை. நாம் விகடனைப் பரிசோதிப்பதற்காக சில பார்ப்பனியர்களை தாக்கி பின்னூட்டம் எழுதுவோம். அவை பிரசுரிக்கப் படுவதில்லை. விகடனின் நிலைப்பாடு நஞ்சுத்தனமான நடுநிலை.

மெய்யும் நச்சுப் பொய்யும்
ஐந்து உண்மைகளை நீ சொல்லிவிட்டு ஆறாவது பெரும் பொய்யைச் சொன்னால் அதை பலரும் நம்ப வாய்ப்புண்டு. இந்த தந்திரத்தைத்தான் விகடன் குழும சஞ்சிகைகள் கையாள்கின்றன. ஈழ விடுதலைக்கு ஆதரவு போல் சில கட்டுரைகளை வெளியிட்டு விட்டு பின்னர் ஈழ விடுதலையில் நஞ்சை அள்ளிக் கொட்டும் கட்டுரையை விகடன் வெளிவிடும் அந்த வகையில் "நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி." என்ற கட்டுரையை ஆனந்தவிகடனின் நவம்பர் முதல் மாத இதழில் வெளியிட்டுள்ளது  அதில் ஒரு முன்னாள் பெண் போராளி போரின் பின்னர் சிங்களப் படையினராலும் அரசியல்வாதிகளாலும் கற்பழிக்கப்பட்டு பின்னர் விடுதலையானபின் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இப்போது பாலியல் தொழில் புரிவதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய உளவுத் துறை முன்னாள் பெண் போராளிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக தனது கைக்கூலிகள் மூலமாக பரப்புரை செய்வதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் விகடனும் இணைந்து கொண்டதா? 

விகடனின் கட்டுரையின் நோக்கம் வேறு
விகடன் பாதிக்கப்பட்ட பெண் போராளியின் அவலத்தை அம்பலப்படுத்தியது. ஆனால் அப் போராளிக்கும் அவரைப் போன்ற மற்றவர்களுக்கும் எப்படி விமோசனம் அளிக்க முடியும் அதற்கு தமிழ்நாடு அரசோ அல்லது இந்திய மைய அரசோ என்ன செய்ய வேண்டும் என்று விகடன் கூறவில்லை. அதற்கு ஏற்ப இந்த நிலைமைகளை விகடன் இந்திய வெளியுறவுத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயலவில்லை. அல்லது பன்னாட்டு தொண்டர் நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயலவில்லை. அல்லது தானே ஒரு தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்தது போல் ஒரு நிதி திரட்டும் திட்டத்தை ஆரம்பிக்கவில்லை. அல்லது இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு விமோசனம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்க வில்லை. மாறாக கட்டுரை சொல்வது இதுதான்:
1. இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் சிங்களப் பேரினவாதிகளின் முகவர்கள் அல்லது விகடனின் தமிழில் "ஏஜெண்டுகள்".
2. தமிழர்கள் தோற்றுவிட்டார்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
3. பிரபாகரன் இறந்து விட்டார்.
4, இனி ஒரு போராட்டம் வேண்டாம்.
5. இந்தியத் தலைவர்கள் ஈழத் தமிழர்களை வைத்து வியாபாரம் செய்வதை நிறுத்த வேண்டும்.
6. தமிழின உணர்வாளர்கள் ஆன்மாவை விற்கிறார்கள்.
7. ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா? கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல் களைக்கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப் பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா? கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!''

இந்த எட்டுக் கருத்துக்களையும் பார்க்கும் போது இவை இந்திய  மைய அரசின் இலங்கைத் தமிழர் தொடர்பான நிலைப்பாடு என்று புரிகிறது. இனி தமிழர்கள் போராடாமல் சிங்களவர்களுக்கு அடங்கிப் போகவேண்டும் என்ற இந்திய மைய அரசின் கருத்தை விகடன் நன்கு பரப்புரை செய்கிறது.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழப்பிரச்சனையை கையில் எடுக்கும் போது அதனால் பெரிதும் பாதிக்கப்படுவது ஆளும் காங்கிரசுக் கட்சி. அதற்கு எதிரான பரப்புரையை விகடன் நன்கு செய்கிறது.

ஈழப்பிரச்சனைக்கு இந்தியா காரணம் என்ற உண்மையை தமிழ்நாட்டு மக்கள் யாவரும் புரிந்து கொண்டால் அது இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்கு அச்சம் என்பதால் அதற்கு எதிரான பரப்புரையை விகடன் நன்கு செய்கிறது.

இந்தியாவில் சிறுபானமை இனங்களுக்கு எதிரான அடக்குமுறை நடந்தால் அதைப் பார்த்துக் கொண்டு தமிழர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்கிறது விகடன். உலகின் எந்த மூலையிலும் அடைக்கு முறை நடந்தால் தமிழர்கள் வாயை மூடிக் கொண்டு உணர்ச்சியற்ற பிண்டங்களாக இருக்க வேண்டும்  என்கிறது விகடன்.

வீறு கொண்ட இந்தியக் கைக்கூலிகள்
விகடனின் கட்டுரையை பார்த்து வெளிநாடுகளில் இருக்கும் பல இந்தியக் கைக்கூலிகள் வீறு கொண்டு எழுந்து விட்டனர். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு எந்த ஆதரவும் கொடுப்பதில்லை என்ற பரப்புரையை தொடங்கி விட்டனர்.  விரைவில் வரவிருக்கும் 27/11 ஐ குழப்புவதை மையப் படுத்தி இவர்கள் பரப்புரை ஆரம்பித்துள்ளது இந்திய உளவுத்துறை நன்கு செயற்படுகிறது.

போராளிகளுக்கு உதவ முடியாத நிலை
2009இல் போர் முடிந்த பின்னர் வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் விடுதலையான போராளிகளுக்குப் பணம் அனுப்பினர். அவர்களுக்கு வெளிநாட்டுப் புலிகளிடம்  இருந்து பணம் வருகிறது என்று சொல்லி அவர்கள் கைது செய்து காணமல் போகத் தொடங்கியதுடன். பணம் அனுப்புவது நிறுத்தப்பட்டது. 

பொய்யாக உருவாக்கிய பாத்திரம்?
போரின் பின்னர் கைதாகிய படையணித் தலைவர்கள் யாவரும் "காணமல் போய்விட்டன்ர". கீழ் நிலையில் இருந்த போராளிகள் மட்டுமே விடுதலை என்ற பெயரில் வெளியில் விடப்பட்டு அவர்களது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. சோதியா படையணியின் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என விகடனிற்குப் பேட்டி கொடுத்தவர் கூறுகிறார். ஒரு படையணிக்கு ஒருவர்தான் தளபதி.  இந்தச் சோதியா படையணியின் தளபதியான முன்னாள் போராளி இந்நாள் பாலியல் தொழிலாளி ஒரு கற்பனைப்பாத்திரமா என்ற கேள்வி எழுகிறது.

எல்லாவற்றிற்கும் இந்தியாவே பொறுப்பு
இலங்கையில் கைத்துப்பாக்கிகளுடன் போராடிக் கொண்டிருந்தவர்களைப் பிடித்து பயிற்ச்சி கொடுத்து படைக்கலன்கள் கொடுத்து சிங்கள தமிழ் மோதலைத் தீவிரப்படுத்தியது யார்?  தமிழர்கள் படைப்பலன் அடைந்தபோது ஆயுதத்தை ஒப்படையுங்கள் நாம் உமக்குப் பாது காப்புத் தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றியது யார்? உமா மகேஸ்வரனுக்கு வந்த ஒரு கப்பல் நிறைந்த படைக்கலன்களைப் பறித்தது யார்? தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்களவர்களு முழு உதவியையும் செய்தது யார்? 25 ஆண்டுகளாக 13வது திருத்தம் என்னும் கிலுகிலுப்பையை வைத்து ஏமாற்றுவது யார்? போரில் சிங்களவர்கள் வெல்ல வேண்டும் என்று தமிழ்நாட்டுக் கோவில்களில் யாகங்கள் செய்தது யார்?  இறுதிப் போரின்போது இலங்கைக்கு கள்ளத்தனமாக இருபதினாயிரம் படை வீரர்களை அனுப்பி சிங்களவர்களைப் போரில் வெல்ல வைத்தது யார்?
என்ற கேள்விகளிற்கு விடை கண்டுபிடித்தால் சோதியா படையணியின் முக்கிய தளபதியின் பாலியல் தொழிலாளியாக மாறியமைக்கு யார் காரணம் என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மட்டும் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை முன்வைத்துப் பிழைப்பு நடத்தவில்லை விகடன் போன்ற ஊடகங்களும்தான் பிழைப்பு நடத்துகின்றன.

Thursday 1 November 2012

தனியான ஒரு தீவில் இரு ஆண்களும் ஒரு பெண்ணும்

ஒரு தனியான அழகிய சிறு  தீவில் இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் விட்டால் என்ன நடக்கும் என்பதை அறியும் முயற்ச்சி ஒன்று நடந்தது. இதற்காக பல தீவுகள் தெரிந்தெடுக்கப்பட்டு அங்கு வேறு வேறு நாட்டைச் சேர்ந்த ஒரு ஆணையும் இரு பெண்களையும் தனியாக வாழும் படி சொல்லி விட்டு ஒரு மாதம் கழித்து அங்கு சென்று பார்த்தனர். அவர்கள் கண்டவை:

1. இத்தாலியர்கள் இருந்த தீவில் ஒரு ஆண் மற்ற ஆணைக் கொன்று விட்டு பெண்ணுடன் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

2. பிரெஞ்சு நாட்டவர்கள் இருந்த தீவில் Ménage à trois மூவர் குடித்தன உடன்பாட்டின் படி குடும்பம் நடத்திக் கொண்டிருந்தனர்.

3. பிரித்தானியர்கள் இருந்த தீவில் யாரை யாருக்கு யார் அறிமுகம் செய்வது என்ற தயக்கத்தில் மூவரும் தனியாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

4. கிரேக்கர்கள் இருந்த தீவில் இரு ஆண்களும் ஒன்றாக "குடித்தனம்" நடத்தினார்கள். பெண் அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.

5. ஜேர்மனியர்கள் தங்களுக்குள் ஒரு கால அட்டவணையைத் தயாரித்து அதன்படி பெண்ணுடன் மாறி மாறி "வாழ்ந்து" கொண்டிருந்தனர்.

6. அரபு நாட்டு ஆண்களில் ஒருவன்மற்றவனுக்குப் பெரும் பணம் கொடுத்து பெண்ணைத் தனதாக்கி "வாழ்ந்து" கொண்டிருந்தான்.

7. அமெரிக்கர்கள் மூவரும் அந்தத் தீவில் என்ன என்ன கனிம வளங்கள் இருக்கின்றன அதை எங்கு எப்படி ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அவ்வப்போது யாரு "மூட்" வருகிறதோ அவர்கள் "அனுபவித்தனர்".

8. இந்தியர்கள் தமது பெற்றோர்கள் வந்து வரதட்சணை மற்றும் சாதி பற்றி பேசி முடிவு செய்ய வேண்டும் என்று காத்திருந்தனர்.

9. இலங்கைத் தமிழன் தனது தங்கையின் திருமணத்திற்கு எப்படி காசு சேர்ப்பது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

Wednesday 31 October 2012

பாலியல் லீலைகளால் கப்பலேறும் பிபிசியின் மானம்

பிபிசியிற்கு என்று ஒரு பெரு மதிப்பு ஒரு காலத்தில் எல்லா நாட்டிலும் இருந்தது. பிபிசி சொல்வது உண்மை என உலகெங்கும் பலர் நம்புவதுண்டு. கொக்கட்டிச் சோலையில் நடக்கும் படை நடவடிக்கை பற்றி படுவான கரை மக்கள் பிபிசி செய்தியைக் கேட்டு அறிந்து கொள்வர். இலங்கை இனக்கொலைப் போரைப் பற்றி பிபிசி தனது செய்திகளில் சொல்வதை வைத்துக் கொண்டு தமிழர்கள் பலர் பிபிசியின் நம்பகத் தன்மையில் சந்தேகம் கொள்ளத் தொடங்கினர். பிபிசி பல செய்திகளை இருட்டடிப்புச் செய்வதாக இலண்டனில் பிபிசி பணிமனையின் முன்னர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் பல தடவை செய்ததுண்டு.

2009இன் ஆரம்பப் பகுதியில் பிரித்தானியப் பாரளமன்றத்தின் முன்னர் தமிழர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் நடாத்திய போது பிபிசி செய்தியாளர் காவல் துறை அதிகாரியிடம் கவலையுடன் கேட்டது: "இடது சாரிகள் செய்யும் ஆர்ப்பாட்டங்களை அடக்க கடுமையாக நடந்து கொள்ளும் நீங்கள் தமிழர்களின் போராட்டத்தை அடக்க ஏன் கடுமையாக நடந்து கொள்ளவில்லை?"

பாலஸ்த்தீனியப் பிரச்சனையை பிபிசி மூலமாக அறிந்து கொள்வது சியோனிஸ்ட் கண்ணாடி போட்டுக்கொண்டு பாலஸ்த்தீனத்தைப் பார்ப்பது போன்று என்று பலர் சொல்வதுண்டு. இக்கருத்து வலுப்பெற அல் ஜசீரா உருவானது.

பிரித்தானியா என்றால் ஷேக்ஸ்பியர், ஐசாக் நியூட்டன், பல்கலைக்கழகங்கள், பிபிசி போன்றவைதான் பலருக்கும் நினைவில் வரும். ஆனால் பிபிசி என்றால் Biased Broadcasting Corporation என்பார்கள்
ஜிம்மி சவைல்

தற்போது பிபிசியின் ஊழியர் ஒருவர் பல சிறுவர்களைப் பாலியல் ரீதியில் தவறாகப் பாவித்த செய்திகள் அம்பலமாகி உள்ளது. தனது 84 வயதில் 2011 அக்டோபர் மாதம் காலம் சென்ற ஜிம்மி சவைல் என்பவர் ஒரு காலத்தில் பிபிசியில் ஒரு பிரபலமான நிகழ்ச்சி வழங்குனர். பொப் பாடல் நிகழ்ச்சி சிறுவர்களுக்கான ஜிம் வில் ஃபிக்ஸ் இற் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். இவர்  disc jockey, television presenter, media personality and charity fundraiser எனப் பல திறமைகளைக் கொண்டிருந்தார். இவருக்கு பிரித்தானிய மகராணியார் கௌரவப் பட்டங்களையும் வழங்கி இருந்தார். இவரால் சிறுமியாக இருந்த போது பாதிக்கப்பட்ட பெண்(இப்போது முதியவர்) தனக்கு நேர்ந்தவற்றை அம்பலப்படுத்தினார். பிபிசி நிகழ்ச்சிகளில் பங்கு பெற வருபவர்களை ஜிம்மி சவைல் பாலியல் ரீதியில் பயன்படுத்தினாராம். இப்படி 12 பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நடந்தவற்றை அம்பலப்படுத்தினர். இது தொடர்பாக பிபிசியில் சிலர் விசாரணை ஆரம்பித்தனர். விசாரணை அம்பலமானால் பிபிசியின் கௌரவத்திற்கு இழுக்கு வரும் என்று அதை மூடி மறைக்க பிபிசியின் உயர்பீடம் முயன்றது. எல்லாம் சேர்ந்து அம்பலத்திற்கு வந்தது. ஜிம்மி சவைல் செய்த லீலைகள் பல தொடர்ந்து அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. முதலில் விசாரணையை மூடி மறைத்தமையை பிபிசி மறுத்தது. பின்னர் விசாரணையை இடையில் நிறுத்தியமைக்கு பிபிசி வருத்தம் தெரிவித்தது.

ஜிம்மி சவைலின் லீலைகளை முதலில் ஐரீவி தொலைக்காட்சி அம்ப்லப்படுத்தியது. தொடர்ந்து ஸ்கொட்லண்ட்யார்ட் விசாரணையைத் தொடங்கியது. ஜிம்மி சவைலால் பாதிக்கப்பட்டவர்கள் 300இற்கு மேல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

லீட்ஸில் உள்ள ஒரு மருத்துவ மனையின் தாதியர் தங்குமிடத்தில் ஜிம்மி சவைலின் லீலைகளுக்கு இடம் கொடுக்கப்பட்டதாம். மாற்றுத் திறன் கொண்ட சிறுவர்களையும் இவர் விட்டு வைத்ததில்லையாம்.

Monday 29 October 2012

நகைச்சுவைக் கதை: ஆதாமும் ஏவாளும் இந்தியர்கள்

அது ஒரு பன்னாட்டு ஆட்சித்தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சி. அங்கிருந்த ஓவியங்களைப் பல தலைவர்களும் பார்த்து பலவிதமாகக் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். கருத்துக்கள் பலதரப்பட்டதாகவும் ஒன்றுக்கு ஒன்று முரண்படுபவையாகவும் இருந்தன. பலரும் தம் நாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றினர்.

அங்கு ஆதாமும் ஏவாளும் ஆடையின்றி ஒரு இலையால் மட்டும் தமது உடலில் சிறு பகுதியை மட்டும் மூடிக் கொண்டு கையில் ஒரு சிறிய கடித்த ஆப்பிளுடன் நின்று கொண்டிருந்த ஓவியம் பலரையும் கவர்ந்தது. அதைப் பார்த்த பிரித்தானியப் பிரதமர் அவர்கள் இருவரும் அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பதாக அவர்கள் முகம் பிரதி பலிக்கிறது. அதனால் அவர்கள் பிரித்தானியர்கள் என்றார்.

ஆனால் பிரெஞ்சு அதிபர் அதை ஒத்துக் கொள்ளவில்லை. ஆதாமும் ஏவாளும் ஆடையின்றி இருக்கின்றனர். மிகவும் கவர்ச்சிகரமாகத் தோற்றமளிக்கின்றனர். அவர்கள் முகத்தில் காதலும் காமமும் வடிகிறது. அதனால் அவர்கள் பிரெஞ்சு நாட்டினர் என்றார்.

அவர்கள் இருவரையும் பார்த்து ஏளனமாக நகைத்தார் இந்தியப் பிரதமர். நன்றாக பாருங்கள் அந்த ஓவியத்தை அவர்கள் இருவருக்கும் உடுக்க உடையில்லை. இருக்க வீடில்லை. உண்பதற்கு ஒரு சிறுபழத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு நச்சுப் பாம்பு அவர்களை வழி நடத்துகிறது. ஆனாலும் அவர்கள் வாழுமிடம் புனித பூமி எனப்படுகிறது. ஆகையால் அவர்கள் நிச்சயம் இந்தியர்களே என்றார்.

Sunday 28 October 2012

இந்திய அமைச்சரவை மாற்றியமைப்பு - ஒரு பார்வை

பெரிசுகளை கட்சிப்பணிக்கு அனுப்பிவிட்டு இளசுகளிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதாகச் சொல்லி இந்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அலைக்கற்றை ஊழலைத் தொடர்ந்து அ. இராசாவும் தயாநிதி மாறனும் தமது அமைச்சுப் பதவியில் இருந்து வெளியேறி இருந்தனர். பின்னர் திரினாமூம் காங்கிரசுக் கட்சி ஆளும் கூட்டணியில் இருந்து விலகியதால் அதன் ஆறு அமைச்சர்கள் பதவி விலகி இருந்தனர். குடியரசுத் தலைவராகிய பிரணாப் முஹர்ஜீயும் அமைச்சரவையில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

ராகுல் காந்திக்கு ஏற்ற அமைச்சரவை
புதிய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது இந்தியாவின் முடிக்குரிய மொக்கை இளவரசர்  ராகுல் காந்திக்கு வால் பிடிப்பவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ராகுல் காந்திக்கு முக்கிய பதவி அமைச்சரவையில் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருந்தது. ஆனால் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கவில்லை. ஆனால் இந்தியாவின் முக்கிய அதிகார மையமான சோனியா காந்தியின் அதிகாரங்கள் ராகுல் காந்தியிடம் மாற்றப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை அமைச்சராக்கினால் அவரது மொக்கைத் தனம் அம்பலமாகிவிடும் என்பதில் சோனியா குடும்பம் மிகக் கவனமாக இருக்கிறது. ராகுல் பத்திரிகைக்களுக்குக் கொடுப்பதுமில்லை.ராகுல் காந்திக்கும் அரசியலில் பெரிதாக அக்கறையும் இல்லை. ஆனாலும் காங்கிரசுக் கட்சியிலும் ராகுலுக்கு ஏற்றபடி அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்படும். கட்சியின் செயற்படு தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படவுள்ளார். சோனியா காந்திக்கு பிடித்தவரான முக்கிய தகவல் துறை அமச்சராக இருந்த அம்பிகா சோனி அமைச்சரவையில் இருந்து எடுக்கப்பட்டு கட்சி நிர்வாகத்தில் பங்காற்ற வைக்கப்படவுள்ளார்.

தமிழர்கள் எவரும் இல்லை
இரு தமிழர்கள் அமைச்சரவையில் இருந்து விலகிய போதிலும் புதிதாக இணைக்கப்பட்ட அமைச்சர்களில் தமிழர்கள் எவருமில்லை. பிரணாப் முஹர்ஜீன் நிதித் துறையைப் பெற்ற ப சிதம்பரம் தனக்கு மேலும் வணிகத்துறை பெற விரும்பினார். அந்நிய முதலீடுகள் வணிகத்துறையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது மிகவும் "வசதியான" துறை. பாவம் சிதம்பரம். யாழ்ப்பாணம் சென்று சனீஸ்வரன் எனப் பெயர் பெற்றிருந்த டி. ஆர் பாலு தனக்கு ஒரு அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக ஸ்டாலினின் பின்னால் அண்மைக்காலமாக அலைந்து ஏமாறியுள்ளார்.

ஆனந்தமடையாத சர்மா
 அமைச்சரவையின் முக்கிய பதவியில் ஒன்றான வெளியுறவுத் துறையில் இருந்து எஸ் எம் கிருஷ்ணா வெளியேற்றப்பட்டுள்ளார். கர்நாடகாவிற்குப் போய் கட்சி அலுவலைப் பார் என அவர் அனுப்பப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு சட்டத் துறையைத் தன்னிடம் வைத்திருந்த சல்மன் குர்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சராக ஆனந்த சர்மா வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

முக்கிய துறைகள்
ஏற்கனவே இரு முக்கிய துறைகளைத் தம்மிடம் வைத்திருந்த வீரப்ப மொய்லி தற்போது முக்கியத்துவம் வாய்ந்த பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.கே ரஹ்மான் கான் சிறுபான்மை விவகாரத்துறைக்கும், டின்ஷா பட்டேல் சுரங்கத் துறைக்கும், அஜய் மக்கேன் வீடமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கும், பல்லம் ராஜு மனித வளத்துறைக்கும், அஷ்வானி குமார் நீதி மற்றும் சட்டத்துறைக்கும் ஹரிஷ் ரவாத் நீர் வளத்துறைக்கும், சந்திரேஷ் குமாரி கட்டோக் கலாச்சாரத் துறைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிரஞ்சீவி
உல்லாசப் பயணத் துறைக்கு சுதந்திரமான பொறுப்புடைய இணை அமைச்சராக (minister of state - independent charge) நடிகர் சிரஞ்சீவி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆந்திராவில் காங்கிரசு கட்சி கவிழாமல் தனது 18 சட்ட சபை உறுப்பினர்களைக் கொண்டு காப்பாற்றியமைக்காக இந்த பரிசளிப்பு.

கையொப்பம் போட மறந்த அமைச்சர்
பதவி கிடைத்த பெரு மகிழ்ச்சியில் தன்னை மறந்த அமைச்சர் பொரிக்க நாயக பால்ராம் பதவி ஏற்ற பின்னர் கையிப்பம் இடாமல் சென்று விட்டார்.

தொடரும் குடும்ப ஆதிக்கம்
பல புதிய அமைச்சர்கள் தங்கள் குடும்பச் செல்வாக்கை வைத்து  வந்தவர்களே. முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் அலாம் கானின் மகன் இப்போது புதிய வெளியுறவுத் துறை அமைச்சர்.  சல்மன் குர்ஷிட் முன்பு சட்ட அமைச்சராகவும் சிறுபானமைத் துறை அமைச்சராகவும் இருந்தவர். அப்போது பல அரசு சார்பற்ற நிறுவங்கள் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உண்டு. தந்தை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டமைக்காக மகள் அகதா சங்மாவின் பதவி பறிக்கப்பட்டது.







Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...