Friday 13 July 2012

You were born for me & மெல்லிய தென்றலாய் உன் நினைவு

 I don't know whether you know or not
You were born for me
I don't know whether you agree or not
We have met somewhere before
Why my mind become so restless
Whenever I see you
Nights lasts longer without you
Time flies faster when you are near me

Every happiness of mine is from you
Every sadness of mine is without you
Without you I am not what I was
Without you my life not my life



இதய வாசல் தேடி வரும்
நெடிய ஊர்வலங்களாய்
உன் கனவு

திறந்த சாளரத்தூடாக வரும்
மெல்லிய தென்றலாய்
உன் நினைவு

வற்றிய குளம் நிரப்பும் புதிய மழையாய்
என்றும் என் கண்ணில்
உன் பிம்பம்

சுடும் பாலைவனத்தில்
சுரக்கும் பூந்தேனாக
உன் ஓர விழிப்பார்வை

Thursday 12 July 2012

சிரியக் கிளர்ச்சி: பாவம் கோஃபி அனன்

சிரியக் கிளர்ச்சியைத் தீர்ப்பதற்காக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையும் அரபு லீக் நாடுகளும் இணைந்து முன்னாள் ஐநா பொதுச் செயலர் கோஃபி அனன் அவர்களை ஐநா பாது காப்புச் சபையின் தீர்மானம் 2043இன் மூலம் சமாதானத் தூதுவராக நியமித்தன. கோஃபி அனன் தனது முதல் நடவடிக்கையாக ஒரு ஆறு அம்சத் திட்டத்தை முன்வைத்தார். அதன் அம்சங்கள்:
  1. சிரிய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் சிரிய மக்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கை எடுத்தல்
  2. மோதல்களை நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் படைக்கலன்கள் ஏந்தாத 300கண்காணிப்பாளர்களைச் சிரியாவிற்குள் அனுமதித்து மோதல் நிறுத்தத்தை உறுதி செய்தல்.
  3. மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களை சேவை செய்ய அனுமதித்தல். மோதல் நடக்கும் இடங்களில் நாளொன்றிற்கு இரு மணித்தியாலங்கள் தொண்டர் நிறுவனங்களை சேவை செய்ய அனுமதித்தல்.
  4. காரணமின்றி கைது செய்து தடுத்து வைத்திருப்பவர்களை உடன் விடுதலை செய்தல்.
  5. நாடு முழுவதும் ஊடகவியலாளர்களை தடையின்றி பயணங்கள் செல்ல அனுமதித்தல்
  6. சட்ட பூர்வமான அமைதியான ஆர்ப்பாடங்களை அனுமதித்தல்.
இந்த அடிப்படையில் சிரியத் தலைநகர் டமஸ்கஸ் சென்று சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துடன் கோஃபி அனன் பேச்சு வார்த்தை நடாத்தினார்.  கடும் மோதல்கள் நடக்கும் இடங்களில்  நடவடிக்கை எடுக்க தானும் அல் அசாத்தும் உடன்பட்டதாக கோஃபி அனன் ஜெனீவாவில் இருந்து வழங்கிய காணொளிப் பேட்டியில் கூறினார்.ஆனால் அப்படி ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை

ஈரான் குற்றவாளியா தீர்வில் பங்காளியா?
கோஃபி அனன் ஜூலை 10-ம் திகதி ஈரானிய உயர்மட்டத்தினருடன் சிரியப் பிரச்சனை தொடர்ப்பாகக் கலந்துரையாடினார்.  2014 இல் சிரியாவில் நடக்கவிருப்பதாகக் கூறப்படும் தேர்தல் சிரியப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என்று ஈரானிய ஆட்சியாளர்கள் அழுத்தமாகத் தெரிவித்தார்கள். அத்தேர்தல் மூலம் சிரிய மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை மக்களாட்சி முறைப்படி தெரிவு செய்யலாம் என்று ஈரான் கருதுகிறது. சிரியப் பிரச்சனையில் ஈரானையும் ஒரு பங்காளியாக இணைத்து கோஃபி அனன் ஈரானுடன் பேச்சு வார்த்தை நிகழ்த்தியதை ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடுமையாக எதிர்த்தன.  சிரிய அரசுக்கு கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு ஈரான் உதவி செய்வதால் சிரியப் பிரச்சனைக்கு ஈரானும் பங்களிப்புச் செய்கிறது என்பது மேற்கு நாடுகளின் கருத்து.

மாறி மாறிக் குற்றச் சாட்டு.
கோஃபி அனன் அரபு நாட்டு மக்களினதும் ஊடகங்களினதும் கருத்துக்குப் பயப்படுகிறார் என்று சில அரசதந்திரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். கோஃபி அனன் ஆபிரிக்க ஊடகங்களைத் தவிர்க்கிறார் மேற்குலக ஊடகங்களுக்கு மட்டுமே பேட்டிகள் கருத்துக்கள் தெரிவிக்கிறார் என்று ஆபிரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அமசத் திட்டம் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு மிகவும் தேவையான கால அவகாசத்தை வழங்கி அவரைப் பாதுகாக்க உதவும் என்கின்றனர் அமெரிக்க அரசதந்திரிகள். நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அம்சத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு பொறியாகும் என்கிறது. மேலும் அது தெரிவிக்கையில் கோஃபி அனனின் திட்டம் சுதந்திர சிரியப் படையினருக்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்கும் என்கிறது. அதனால் சிரியக் கிளர்ச்சியாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்திப்பினர் என்கிறது. இஸ்ரேலிய ஊடகம் ஒன்று பதினேழாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் அதனால் கோஃபி அனன் படுதோல்வியைச் சந்தித்தார் என்கிறது. ரைம்ஸ் ஒஃப் இந்தியா கோஃபி அனன் தனது சிரிய சமாதான முயற்ச்சி தோல்வியடைந்தது என்கிறார் என்கிறது.

லிபியப் பாணியில் சிரியா
சிரியாவின் அரச சேவையில் இருந்து படைத்துறையினரும் அரச தந்திரிகளும் ஒவ்வொருவராக வெளியேறிவருகின்றனர். மேற்குலக நாடுகளின் தூண்டுதல்களால் இப்படி நடக்கலாம். ஏற்கனவே லிபியாவிலிருந்து மும்மர் கடாஃபியை பதவியில் இருந்து விரட்ட இந்த வெளியேற்றங்கள் நடந்தன. கடைசியாக சிரியாவின் ஆதரவு நாடான ஈராக்கிற்கான சிரியத் தூதுவர் விலகியுள்ளார். ஐக்கிய அமெரிக்கா சமாதான முயற்ச்சி தோல்வியடைந்து கிளர்ச்சி தீவிரமடைந்து பஷர் அல் அசாத்தை பதவியில் இருந்து விரட்டுவதை விரும்பலாம். அதை சீனாவும் இரசியாவும் எதிர்க்கலாம். இது சிரியாவில் பெரும் இரத்தக் களரியியை ஏற்படுத்தும்.

கடைசியாக கோஃபி அனன் தெரிவித்தவற்றில் முக்கியமான ஒரு அம்சம்: "ஐநா பாதுகாப்புச் சபை ஒரு மனதாக சிரிய ஆட்சியாளர்களையும் கிளர்ச்சியாளர்களையும்  தனது சமாதானத் திட்டத்தை ஏற்காவிடில் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என எச்சரிக்க வேண்டும்"

கோஃபி அனனின் இந்த வேண்டுகோளில் இருந்து அவரது சமாதானத் திட்டத்தை இரு தரப்பும் ஏற்கவில்லை எனத் தெரிகிறது.

Wednesday 11 July 2012

இந்தியாவிடம் கடும்தொனியில் நடந்து கொண்ட இலங்கை

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் கொழும்பு செல்கிறார் என்றவுடன் இந்தியாவின் வால் பிடிப் பத்திரிகைகள் இந்தியா இலங்கை இனப்பிரச்சனைக்கு  தீர்வு காண்பது தொடர்ப்பாக காட்டிவரும் அசமந்தப் போக்கிற்கு தனது அதிருப்தியை கடும் தொனியில் தெரிவிக்கப் போகிறது என்று ஊளையிட்டன. ஆனால் உண்மையில் நடந்தது வேறு.


சிவ் சங்கர மேனன் வழமை போல் இலங்கையின் ஒரு கைக்கூலி போல்தான் கொழும்பில் பேச்சு வார்த்தை நடாத்தினார். ஆனால் மஹிந்த ராஜப்க்சவோ இலங்கையின் அனைத்துக் கட்சிகளும் ஒத்துக் கொண்டால் மாத்திரமே இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று மேனனின் முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார் என கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வே இல்லை என்பது அதன் பொருளாகும். ஏனெனில் ஜாதிக ஹெல உருமய போன்ற சிங்கள் பௌத்த பேரினவாதக் கட்சிகள் இந்திய அரசு தமிழர்களை 25 ஆண்டுகளாக ஏமாற்றும் கிலுகிலுப்பையான 13வது திருத்தத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாக ஏதாவது காலவரையறையை மேனன் இலங்கைக்கு வழங்கினாரா என்ற கேள்விக்கு பதிலளித்த மேனன் அப்படி இலங்கையை நிர்ப்பந்திப்பது சரியான முறையல்ல என்றார். அது மட்டுமல்ல ராஜ்பக்ச சகோதரர்கள் தமது எந்த ஒரு நடவடிக்கைக்கும் எந்த ஒரு கால வரையறையையும் தெரிவிக்கவில்லை. அத்துடன் அவர்கள் எந்த ஒரு உறுதி மொழியையும் மேனனிற்கு வழங்கவில்லை.


சிவ் சங்கர் மேனனும் அவரது சகாக்களும் ஏற்கனவே இந்திய எதிர்க்கட்சியை சேர்ந்த சுஸ்மா சுவராஜை இலங்கைக்கு அனுப்பி 2014 நடக்க விருக்கும் பாராளமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தாலும் இந்தியா தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறைக்கு உதவி செய்யும் என்பதை உறுதிப்படுத்தினர்.


பாலக்காட்டு மலையாளி சிவ் சங்கர மேனனின் கையாலாகாத் தனத்தை ஒரு இந்திய ஊடகம் இப்படி நாகரீகமாகச் சுட்டிக் காட்டுகிறது:


  • India, it appears, adopted the role of the big brother rather than big bully during national security advisor (NSA) Shivshankar Menon’s recent visit to Sri Lanka to discuss the reconciliation process involving Sri Lankan Tamils.
  • While it was widely expected that there would be some tough talking by the NSA during the visit with regard to the reconciliation process, it’s learnt that the Indian approach was guarded. Yet, Mr Menon did convey to the Sri Lankan leadership, including President Mahinda Rajapakse, New Delhi’s “concern” over the “slow progress” in devolution of powers to the Sri Lankan Tamils which would lead to their permanent reconciliation.


இந்தியாவின் சில்லறைக் கைக்கூலியாகக் கருதப்படும் சிவ் சங்கர் மேனன் இனி வரும் காலங்களில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பன்னாட்டு அரங்குகளில் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக பல ஆலோசனைகளையும் வழங்கியுள்ளாராம். ஆனால் இலங்கை ஆட்சியாளர்களான ராஜபக்ச சகோதரர்கள் தமக்குப் பின்னால் மக்கள் இருக்கும்வரை தம்மை எந்த பன்னாட்டு அமைப்புக்களாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கருதுகின்றனர். வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தல்களை அதற்கான களமாகப் பயன்படுத்தவிருக்கின்றனர்.


மஹிந்த ராஜபக்ச தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அதிகரித்து வரும் செயற்பாடுக்களை உடன் நிறுத்தும் படி மேனனிடம் கட்டளையிட்டதாகவும் கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத உறுதி செய்யும் முகமாக மேனன் இந்தியா திரும்பிய சில நாட்களுள் இந்திய மத்திய அரசிடம் இருந்து தமிழினச் செயற்ப்பாட்டாளர்களை அடக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை இப்படி எல்லாம் நடந்து கொண்டும் இலங்கைப் படையினருக்கு இந்தியா தொடர்ந்து பயிற்ச்சி அளித்து வருகிறது. அது மட்டுமல்ல இலங்கைக்கு நிதி உதவி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெறுகிறது. இலங்கையில் தமிழர் போராட்டம் மீள் எழுச்சி பெறாமல் இருக்க இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கிக் கொண்டே இருக்கும். இந்திய விமானப் படையினருக்கு தாம்பரத்தில் பயிற்ச்சி வழங்கியமையை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போட்டி போட்டுக் கொண்டே எதிர்த்தனர். ஆனால் இலங்கையில் தமிழின அழிப்புப் போர் 2008-09 காலப் பகுதியில் நடந்த போது இலங்கைப் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்பவும் பொறியியல் சேவைகள் செய்யவும் தாம்பரம் விமான நிலையம் பயன்படுத்தப் பட்டது. அப்போது இந்த அரசியல்வாதிகள் எங்கிருந்தனர்?

Tuesday 10 July 2012

நகைச்சுவை: சொர்க்கத்திற்கு அகதிகளை அனுப்பிய ராஜபக்ச

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் திகதி தன் மீது போர்க்குற்றம் சுமத்தப் பட்டு பிடி ஆணை பன்னாட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது என்ற செய்தி கேட்டவுடன் மஹிந்த ராஜபக்ச மாரடைப்பால் இறந்தார். அவர் சொர்க்கத்திற்குச் சென்று அங்கு கதவைத் தட்டிய போது அவருக்கு அங்கு காவலாளியால் அங்கு இடமில்லை என்று சொல்லப்பட்டது. அவரால் நியமிக்கப்பட இலங்கையின் உச்ச நீதிமன்ற நீதிபதியின் சிபாரிசுக் கடிதத்தை மஹிந்த காட்டினார். அக்கடிதத்தை வாங்கி கிழித்து வீசிவிட்டு உடனடியாக நரகத்துக்குப் போகும்படி பணிக்கும் படி சொர்க்கத்தின் காவலாளியின் கைத் தொலைபேசிக்கு கௌதம புத்தரிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. ராஜபக்ச நரகத்திற்கு விரட்டப்பட்டார்.

நரகத்தில் ராஜபக்சவை சோனியா காந்தி, கருணாநிதி, சோ, இந்து ராம், சுப்பிரமணிய சுவாமி, சிவ் சங்கர மேனன், எம் கே நாராயணன் போன்ற அவரது சகாக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அங்கு போனபின்னர்தான் ராஜபக்ச தனது பயணப்பையை சொர்க்கத்தில் மறந்து போய் விட்டுவிட்டு வந்தது நினைவிற்கு வந்தது. தனது பயணப்பையை மறந்து விட்டதை நரகத்து அதிகாரிகளிடம் சொன்னார் ராஜபக்ச. உடனேயே நரகத்து அதிகாரிகள் அங்கிருந்து இருவரை சொர்க்கத்திற்கு சென்று ராஜபக்சவின் பயணப்பையை எடுத்து வரும்படி அனுப்பினார்கள்.

சொர்க்கத்திற்கு ராஜபக்சவின் பயணப்பையை எடுக்கச் சென்ற இருவரும் அங்கு கதவு பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தங்கள் கைப்பேசி மூலம் நரகத்து அதிகாரிகளைத் தொடர்பு கொண்டனர். சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்து பயணப்பையை எடுத்து வரும்படி கோபத்துடன் உத்தரவிடப்பட்டது. பயணப்பை எடுக்கச் சென்ற இருவரும் சுவர்வழியாக ஏறி உள்ளே குதித்தனர். அவர்களைக் கண்ட கௌதம புத்தர் "சற்று முன்னர் தான் ராஜபக்சவை நரகத்திற்கு அனுப்பினேன். அதற்குள் அங்கிருந்து அகதிகள் இங்கு வரத் தொடங்கிவிட்டனர். போன உடனேயே தனது அடக்கு முறையை அங்கு ஆரம்பித்து விட்டான்." என்றார்.

Monday 9 July 2012

தமிழ்நாடும் கர்நாடகாவும் வேறுநாடுகளா?

கரம் கொடுப்போம் தமிழினம் அழிப்போம்
இலங்கைப் படையினருக்கு சகல உதவிகளையும் இந்தியா வழங்கி தமிழர்களைக் கொன்று குவிக்க உதவியது.தமிழர்களுக்கு எதிரான இறுதிப் போரின் போது இலங்கைக்கு இந்தியாவில் இருந்து இருபதினாயிரம் படையினர் அனுப்பப்பட்டனர் என்று கருதப்படுகிறது. இந்தியா இலங்கைக்கு தமிழர்களுக்கு எதிரான போரில் உதவியதற்கு காரணங்களாக இரு பெரும் பொய்கள் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியின் அதிகார மையமான  தென் மண்டலத்தில் இருக்கும் தமிழின விரோதிகளால் சொல்லப்பட்டன. ஒன்று இலங்கை இந்தியாவிற்கு உதவாவிட்டால் சீனா உதவிசெய்யும் என்பது. மற்றது இலங்கையில் தமிழர்கள் தமக்கு என்று ஒரு நாட்டை அமைத்தால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.

இந்தியாவின் தமிழின விரோதச் செயல்கள் தமிழர்களுக்கு எதிரான போர் முடிவடைந்ததுடன் முடிவடையவில்லை. 2009-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தில் இலங்கையின் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதை இந்தியா இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. 2012 மார்ச் மாதம் நடந்த மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் கடுமையை இந்தியா அமெரிக்காமீது தனது கடும் அழுத்ததைப் பிரயோகித்து குறைத்தது

தொடரும் இந்தியச் சதி

போர் முடிந்து மூன்று இலடசத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபின்னரும் இந்தியாவின் கொலைவெறி அடங்கவில்லை. இலங்கை அரசுக்கும் அதன் படையினருக்கும் தொடர்ந்து உதவி செய்தே வருகிறது. இலங்கை விமானப் படையினருக்கு தாம் உதவி செய்வோம் என இலங்கை விமானப் படையினருக்கு தமிழ்நாட்டில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்திற்கு அழைத்து பயிற்ச்சிகள் கொடுத்தது. இதை தமிழ் அரசியல்வாதிகள் எதிர்க்க அந்த சிங்கள விமானப் படையினரை இந்தியா கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்கு பயிற்ச்சி வழங்குகிறது. இலங்கை விமானப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சியளிப்பது தவறு என்றால் கர்நாடகாவில் அளிப்பது சரியா? இரண்டும் வேறு வேறு நாடுகளா? 

இந்தியா தொடர்பான முந்தைய பதிவுகள்:

http://veltharma.blogspot.co.uk/2010/08/blog-post_5580.html 

http://veltharma.blogspot.co.uk/2010/06/blog-post_4962.html

http://veltharma.blogspot.co.uk/2010/03/blog-post_31.html

 இந்தியாவின் இனக் கொலைத்திட்டமா?                                                           இப்போது இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளில் இந்தியா சீனாவை முந்திவிட்டது. இந்த ஆண்டில் இந்தியா 740.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் 275.1 மில்லியன் டொலர்கள் நன்கொடையாகும். ஜப்பான் 12.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை உள்ளிட்ட 175.3 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து 102.5 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது.கடந்த ஆண்டில் முதலிடத்தில் இருந்த சீனா இம்முறை நான்காவது இடத்துக்கு இறங்கியுள்ளது. சீனா இந்த ஆண்டில் 32.5 மில்லியன் டொலர்களை மட்டுமே இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவை ஏமாற்றும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாமிடம் வகிக்கிறது. இதைப் பல சிங்கள அரசியல்வாதிகளும் ஆய்வாளர்களும் தெளிவுபடக் கூறியுள்ளார்கள். தன்னை ஏமாற்றும் இலங்கைக்கு பண உதவி, படைக்கல உதவி, பயிற்ச்சி உதவி எனப்பல உதவிகளை இந்தியா செய்வதன் நோக்கம் இந்தியாவின் தமினக்கொலைத்திட்டத்தை இலங்கை நிறைவேற்றுகிறது என்பதாலா?

மாநிலத்தில் ஜெயா செய்ததை மத்தியில் கருணா செய்வாரா? தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் செல்வி ஜெயலலிதா தமிழ்நாட்டில் இலங்கை விமானப் படையினருகுப் பயிற்ச்சியளிப்பதை தடுத்துவிட்டார். (தனது அரசியல் இலாபம் கருதிச் செய்திருக்கலாம்). இந்திய மத்திய அரசின் பங்காளியான டெசோ கருணாநிதியால் பெங்களூரில் பயிற்ச்சி அளிப்பதைத் தடுக்க முடியுமா. தமிழ்நாட்டில் உள்ள மானம் கெட்ட கதர் வேட்டிக் கும்பல்களால் இதைத் தடுக்க முடியுமா?

 

மீண்டும் அதே பொய் 

"சிறிலங்கா படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கவில்லை என்றால், அவர்கள் சீனா போன்ற பிற நாடுகளில் பயிற்சி பெறுவர்; இது இந்தியாவுக்கு, பாதகமானதாக மாறிவிடும்"  என்று கர்நாடகா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அசோகா சொல்கிறார். இது இந்தியாவில் தமிழர்களை அழிக்க சொல்லப்படும் பொய். அசோகா அத்துடன் நிற்கவில்லை இலங்கைப் படையினருக்குப் பயிற்சியளிப்பது தேசியப் பிரச்சனை என்கிறார். தமிழர் பிரச்சனை வேறு இந்தியாவின் தேசியப் பிரச்சனை வேறு என்றால் தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? எந்த ஒரு மானமுள்ள தமிழனும் தன்னை இந்தியன் என்று சொல்ல மாட்டான்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...