Saturday 7 January 2012

உச்சிதனை முகர்ந்தால் - ஒரு கண்ணோட்டம்

பாக்கியராஜின் சுந்தரகாண்டத்தில் இருந்து இலங்கைப் பிரச்சனையையும் சம்பந்தப் படுத்தி பல திரைப்படங்கள் தென் இந்தியாவில் இருந்து உருவாக்கப்பட்டன. சுந்தரகாண்டம் இலங்கையில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்று மட்டும் காட்டியது. நள தமயந்தி ஈழப் பெண்களைக் கேவலப்படுத்தியது கன்னத்தில் முத்தமிட்டால் ஈழப்பிரச்சனையை வைத்துப் பிழைப்புத் தேடியது. உச்சிதனை முகர்ந்தால் தணிக்கைக் குழுவிற்கு மிகவும் பயந்து போய் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கதை ஈழப்பிரச்சனையை மற்றப் படங்களிலும் பார்க்க மிக ஆழமாகத் தொட்டிருக்கிறது. மற்றப் படங்களிலும் பார்க்க இது அதிகம் கண்கலங்க வைக்கிறது.

உச்சிதனை முகர்ந்தால் படத்தில் ஒரு இடத்திலும் புலிகள் என்ற வார்த்தை பாவிக்கப்படவில்லை.  ஒரு இடத்தில் தமிழ்ச்செல்வன் என்ற வார்த்தை வருகிறது அதில் தமிழ் என்னும் ஓசை தணிக்கை செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் அவர்களுடன் புனிதவதி நெருங்கிப் பழகுவதும் அவர்களுக்கு வற்புறுத்தி பிட்டு சாப்பிடக் கொடுப்பதும் காட்டப்படுகிறது. பின்னணியில் எந்த இடத்திலும் கண்ணீர் அஞ்சலி என்றோ அல்லது வீர மரணம் என்றோ சுவரொட்டிகள் காணப்படாதது யாதார்தத்திற்குப் புறம்பானதே. தணிக்கைக்குப் பயந்திருந்தால் பாதி கிழிக்கப்பட்ட சுவரொட்டியையாவது காட்டியிருக்கலாம். இடம் பெயர்ந்து செல்லும் மக்கள் மத்தியில் காலிழந்த ஒரு பெண் விரைவாகச் செல்வதாகக் காட்டியது சிறப்பாக இருக்கிறது.கருபுலித் தாக்குதல் பற்றி 13 வயதுப் புனிதவதிக்குத் தெரியாதது நம்பமுடியாததாக இருக்கிறது.

படம் சொல்லும் சேதிகளில் முக்கியமானவை 1. விடுதலைப் புலிகள் மக்களுடன் நெருங்கிப்பழகினார்கள். 2. விடுதலைப்புலிகளுக்கு மக்கள் வலியச் சென்று உதவினார்கள். 3. தமிழ்நாட்டில் மருத்துவர்கள், காவல் துறையினர், மூன்று சில்லு வாகன ஓட்டுனர், திருநங்கைகள் உட்பட சகலரும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உதவுகின்றனர். ( அது உண்மையாய் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி). மருத்துவர்கள் மிகவும் மனிதாபிமானத்துடன் நடக்கிறார்கள் என்றால் மூன்று சில்லு வாகன ஓட்டுனர் புனிதவதிக்கு திருநங்கைகள் இல்லத்தைக் கண்டுபிடிக்க அலையோ அலை என்று அலைந்து பின்னர் புனிதவதியை மருத்துவ மனையில் திருநங்கைகளுடன் சேர்ந்து கொண்டு போய்ச் சேர்த்துவிட்டு இறுதியில் பின்னால் நின்று புனிதவதிக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கே வேண்டும் என்று கையெடுத்துக் கும்பிடும் போது கண்ணீர் வரவைக்கிறார்.

நிர்மலாவின் தாய் பேராசிரியர் நடேசனுக்கு மகளைத் திருமணம் செய்ய மறுத்தது சாதிப் பிரச்சனைதான் என்று சொல்லியிருந்திருக்கலாம். நிர்மலாவின் தாய்க்கு புனிதவதியில் வெறுப்பு வரக்காரணம் வர்க்க பேதமா? சரியான விளக்கம் கொடுத்திருந்திருக்கலாம்.

காசி ஆனந்தனுக்கு தமிழிற்குள் ஆங்கிலம் கலந்து பேசுவதில் உள்ள வெறுப்பு சில இடங்களில் காட்டப்பட்டுள்ளது. புனிதவதி நாயின் பெயரைத் தமிழ்ப்பெயராக மாற்றுகிறாள். காவல் நிலையத்தில் இது தேத்தண்ணீர் இல்லை ரீ என்று சொல்லப்படுகிறது. எல்லாப் பிள்ளைகளும் பிறந்த நாள் வாழ்த்தை ஆங்கிலத்தில் பாடும் போது புனிதவதி தமிழில் பாடுகிறாள்.

படத்தின் கதாநாயகி புனிதவதி என்றால் கதாநாயகன் நாய்தான். புனிதவதி விட்டை விட்டுப் போகும் போது அதுவும் அவளுடன் போகிறது. அவள் சாப்பிடாத போது அதுவும் சாப்பிடாமல் இருக்கிறது. படத்தின் கடைசியில் அந்த நாய்க்கு இருக்கும் உணர்வு  ..............இல்லையே என்று கூறப்படுகிறது. தணிக்கை செய்யப்பட்ட வார்த்தை தமிழனா? இந்தியனா? கதை அமைப்பில் நாயைப் புகுத்தி படத்தின் செய்தியை அதன் மூலம் தெரிவித்த தமிழருவி மணியனின் திறமை பாராட்டப்பட வேண்டியது

ஈழப்பிரச்சனை பற்றிய எந்த ஆக்கத்திலும் ஈழப்பிரச்சனை பற்றிய பூணூல்களின் கண்ணோட்டம், கதர் வேட்டிகளின் பாராமுகம், ராஜீவை கொன்றவர்கள் நீங்கள் என்ற வார்த்தை பிரயோகம் போன்றவை இல்லாமல் இருந்தால் அது ஒரு சரியான ஆக்கம் ஆகாது.

 பேராசிரியர் நடேசனினும் மனைவியும்  மருத்துவர்களும் நடத்தும் பத்திரிகையாளர் மாநாட்டில் ஒரு நாமம் போட்டவரோ அல்லது தினமலர் நிருபரோ இருந்து  ஈழப்பிரச்சனைக்கு விரோதமான கேள்வி கேட்பது போல் காட்டியிருக்க வேண்டும் என்பது கதர்களுடனும் பூணூல்களினடனும் நெருங்கி இருந்த தமிழருவி மணியனுக்கு எப்படித் தெரியாமல் போனது?

ஈழத் துயரைச் சொல்ல இரண்டரை மணித்தியாலம் போதாது.


கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை கடைசியாக திரைப்படக் கொட்டகைக்குச்(Theatre - Kasi anna excuse me) சென்று பார்த்த பின்னர் உச்சிதனை முகர்ந்தால் படத்தை திரைப்படக் கொட்டகைக்குச் சென்று பார்த்தேன். அடுத்த படம் "முதுகில் குத்தினால்" வரும் நாளிற்காகக் காத்திருக்கிறேன்.

Friday 6 January 2012

இலங்கையில் சீனா இந்தியாவிற்கு வைக்கும் அடுத்த ஆப்பு


2011 ஐ சிசில் நாட்டில் தனது தளம் அமைக்கப்படும் என்ற அதிரடியுடன் முடித்த சீனா 2012ஐ  இலங்கையில் இரண்டு அதிரடிகளுடன் ஆரம்பித்துள்ளது. ஒன்று இலங்கைக் கடற்பரப்புக்குள் மூழ்கியதாகக் கருதப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் தொடர்பில் ஆய்வு நடத்துவதற்கு கொழும்பிடம் சீனா கோரிக்கை விடுத்தமை. மற்றது சீனாவின் நிதி உதவியுடன் ஆசியாவில் மிகவும் உயரமான தொலைத் தொடர்புக் கோபுரம் ஒன்று கொழும்பில் அமைக்கப்பட இருப்பதாகவும், அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் ஆரம்பமாகின்றது என செய்திகள் வெளிவந்தமை.

புதையல் வேட்டையா? இந்தியாவிற்குப் புதைகுழியா?
இலங்கைக் கடற்பரப்புக்குள் மூழ்கியிருக்கும் கப்பல்களுக்குள் பெறுமதி வாய்ந்த பொருட்கள் இருப்பதாகவும் அவற்றை இலங்கையும் சீனாவும் ஆளுக்கு அரைவாசியாகப் பங்கிட்டுக் கொள்ளும். இலங்கைக் கடலுக்க்குள் பெறுமதி வாய்ந்த பொருட்களுடன் கப்பல்கள் மூழ்கி இருக்கின்றன என்பது இதுவரை கேள்விப்படாத ஒரு செய்தி. இலங்கைக் கடலுக்குள் சீனா உண்மையில் பழைய கப்பல்களைத் தேடத்தான் வருகிறதா? அண்மையில் ஒரு சீன கடற்படைக்கப்பல் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வைத் தொடர்ந்தே சீனாவின் இந்த புதையல் வேட்டை அறிவிப்பு வெளிவந்துள்ளது. சீனா அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுகத்தை அமைத்தைத் தொடர்ந்து முல்லைத் தீவில் ஒரு பெரிய மீன்பிடித் துறை முகத்தை அமைக்கவிருக்கிறது. இந்தியாவிற்கு மிக அண்மையில் பலாலிக்கும் காங்கேசன் துறைக்கும் இடையில் ஒரு பாதை அமைப்புப் பணியிலும் ஈடுபடவிருக்கிறது. சுண்ணாகத்தில் மின்பிறப்பாக்கி அமைக்க வந்த சீனர்கள் அங்கு பராமரிப்புப் பணிக்கு என்று சொல்லித் தங்கிவிட்டனர். இப்படி பல திட்டங்களுக்கு என வந்த சீனர்கள் ஒரு இலட்சம் பேர் இலங்கையில் இருக்கின்றனர். அநுராதபுரத்திற்கும் கிளிநொச்சிக்கும் இடையில் பாரிய வர்தக வலயத்தையும் சீனா அமைக்க விருக்கிறது 2009-ம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு அதிக கடனுதவி செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. வீதி அபிவிருத்திக்கு 1.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வழங்கியது. உதவித் தொகையாக 2.2பில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா இலங்கைக்கு வழங்கியது. இலங்கையில் சீனா செய்யப் போகும் கடல் ஆய்வு அப்பகுதியில் பயணிக்கக் கூடிய வகையில் தனது நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைக்கவும் ஒரு நீமூழ்கித் தளத்தை உருவாக்கவுமே என்று நாம் முடிவு செய்ய முடியும்.

தொ(ல்)லை நோக்குடன் தொலைத் தொடர்புக் கோபுரம்
இலங்கையில் சீனா அமைக்க விருக்கும் தொலைத் தொடர்புக் கோபுரம் தொடர்பான திட்டங்கள் யாவும் இதுவரை மறைத்து வைக்கப்பட்டு திடீரென்று இன்று வேலைகள் இன்று ஆரம்பமாகின்றது என்று அறிவித்தது ஏன்? இலங்கைக்கு ஒரு தொலைத் தொடர்புக் கோபுரம் தேவை. ஒரு சிறிய நாட்டுக்கு ஆசியாவிலேயே மிக உயரமான, உலகத்திலேயே 19வது கோபுரம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நோக்கத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்க முதலில் நினைவிற்கு வருவது 1970களின் பிற்பகுதியில் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் நிர்மாணித்த தொலைத் தொடர்புக் கோபுரமே. அக்கோபுரத்தின் உயரத்தைப் பார்த்த சோவியத் யூனியனிற்கு சந்தேகம் தொட்டுவிட்டது. உளவுத் துறையை ஆப்கானிஸ்த்தானில் களமிறக்கியது. அதற்குக் கிடைத்த தகவல். அமெரிக்கா சோவியத் யூனியானை உளவு பார்க்க அந்தக் கோபுரம் அமைகிறது என்பதே. விளைவு 1979இல் சோவியத் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தது. ஆப்கானிஸ்தானிற்கு அன்று தொடங்கிய தொல்லை இன்றுவரை தீரவில்லை. ஒரு சிறிய நாடான இலங்கையில் இத்தனை உயரக் கோபுரம் எதற்கு? 50 ஒளிபரப்புச் சேவைகள், 50 ஒலிபரப்புச் சேவைகள், 10 தொலைபேசிச் சேவைகள், தொலைத் தொடர்பு அருங்காட்சியகம், உணவகம், பணிமனைகள், மாநாட்டு மண்டபங்கள், பொருட்காட்சி நிலையங்கள், ஆடம்பரத் தங்ககங்கள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய 350 மீட்டர் உயரமான கட்டிடத்தை சீனா 104 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இலங்கையில் அமைக்க விருக்கிறது. கோபுரத்தின் பெயர் தமரைக் கோபுரம். இக் கோபுரம் இந்தியாவிற்குச் சீனா இலங்கையில் வைக்கும் இன்னொரு ஆப்பு.

இலங்கையில் இந்திய தங்கி இருக்கிறதா அல்லது தயவை வேண்டி கை ஏந்துகிறதா?
பாதுகாப்பைப் பொறுத்தவரை இந்தியா இலங்கையில் தங்கி இருக்கிறது என்றார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா. இச் செய்தி இலங்கை ஊடகத்தில் பிரசுரிக்கப்பட்டதும் இலங்கையில் தெரிவிக்கப்படகருத்துக்கள் முக்கியமானவை:

  • இலங்கையின் சீனாவுடனான உறவையிட்டு இந்தியா கவலை கொண்டுள்ளது ஆனால் அது தான் பயப்படவில்லை என்று காட்டிக் கொள்கிறது. இந்தியாவின் மெதுவான நகர்த்தல்களால் சீனாவின் விரைவு நடவடிக்கைகளின் முன் தாக்குப் பிடிக்காமல் போனதால் இலங்கையில் சீனப் பிடி இறுகிவிட்டது.
  • இலங்கை இறுதியில் இந்தியாவை ஏமாற்றி விடும்
பாக்கிஸ்த்தானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முறுகல்கள் வலுக்க பாக்கிஸ்தான் படைத்துறைத் தளபதி சீனா சென்று விட்டார். பாக்கிஸ்தான் முழுக்க முழுக்க சீனாவில் தங்கியிருக்கும் நிலை வர இலங்கையில் சீனப் பிடி அதிகரித்துக் கொண்டு போக இலங்கையின் தயவில் இந்தியப் பாதுகாப்புத் தங்கியிருக்க வேண்டியிருக்கும். இலங்கையிடம் இந்தியா கையேந்த வேண்டி வரும்.

Thursday 5 January 2012

புகைப்படங்கள் - தருணம் பார்த்து தப்பாமல் எடுக்கப்பட்டவை

புகைப்படங்கள் எடுக்கும் போது கணம் தவறாமல் சரியான கோணத்தில் எடுக்கப்படவேண்டும். இங்குள்ள படங்கள் புகைப்படக் கலையில் உச்சத்தைத் தொடுபவை.

Key ring maker


இருப்பவர் எவர் படுத்திருப்பவர் எவர்?

திரைப்படம் வேறு புகைப்படம் வேறு....



விளையாட்டு வீரம் மைதான நடுவில் கை தூக்கு நிற்பவர்கள் பார்வையாளர் அரங்கில்...

அன்பான துனிச்சலான வைத்தியர்....

மேம்பாலம் கட்டிக் கொண்டிருக்கும் போதுஆட்சி கலைக்கப்படவில்லை. தொடரும் தெரு இடையில் முடிந்தது போல் படமெடுக்கப்பட்டுள்ளது.




இது குடித்து விட்டு வண்டியை மிதி வண்டிப் போட்டிக்குள் செலுத்தியதால் வந்த வினை

angle is supper

அம்ம என்றால் அன்பு.......தோழி என்றால் தொலைத்துவிடு....

பாயும் போது நான் முத்தமிடுவேன்....












   










Wednesday 4 January 2012

ஈரான் வில்லங்கத்தை விலைக்கு வாங்குகிறது

பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு கருடனைப் பார்த்து எப்படி மச்சான் சுகம் என்று கேட்கலாம் ஆனால் பரமசிவனின் கழுத்தை நெருக்கவோ சுருக்கவோ முயலக்கூடாது. ஈரானின் பூகோளவியல் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக் மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இந்த நீரிணையை மூடிவிடுவேன் என்று ஈரான் அமெரிக்காவை மிரட்டுகிறது.


ஈரான் ஒருதடவை சொன்னால் நூறுதடவை சொன்ன மாதிரி
அமெரிக்காவின் ஐந்தாவது கடற்பிரிவின் விமானம் தாங்கிக் கப்பல் ஜோன் சி ஸ்ரென்னிஸ்  பாராசீக வளைகுடாவில் உள்ள தளத்தில் இருந்து புறப்பட்டு ஹோமஸ் நீரிணையைத் தாண்டி ஓமான் கடலுக்குள் பிரவேசித்த பின்னர் ஈரானிய படைத் துறைத் தளபதி (மேஜர் ஜெனரல்) அத்துல்லா சாலேஹி அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீண்டும் ஹோமஸ் நீரிணைக்கு வரக்கூடாது என்று அமெரிக்காவிற்கு தான் அறிவுரை, பரிந்துரை, எச்சரிக்கை செய்வதாகவும் கூறினார். அத்துடன் தாம் எச்சரிக்கைகளை ஒரு தடவை மட்டுமே விடுப்போம். அதை மீண்டும் மீண்டும் சொல்வதில்லை என்றும் சொன்னார்.

ஹோமஸ் நீரிணை மூடல் மிரட்டலின் பின்னணி
இஸ்ரேலால் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்ய முடியும். இஸ்ரேல் அணு ஆயுத வெடிப்புச் சோதனை செய்யாமல் அமெரிக்கா தடுத்து வைத்துள்ளது. அந்த இஸ்ரேலுக்கு இன்னொரு அரபு நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வதை பொறுக்க முடியாது. அமெரிக்காவாலும் ஒரு இசுலாமிய நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வதைப் பொறுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதில் அதிக முனைப்புக் காட்டி வருகிறது. ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை அமெரிக்கா தனது செய்மதிகளினூடாகவும் ஆளில்லா வேவு விமானங்களூடாகவும் கண்காணித்து வருகிறது. ஈரானின் அணு ஆயுத உற்பதிக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடையை கொண்டுவரத் திட்டமிட்டது. உடன் வெகுண்டெழுந்தது ஈரான். ஈரானின் துணை அதிபர் முஹம்மது ரெஷா ரஹிமி பொருளாதாரத் தடையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையொப்பமிட்டால் தாம் ஹோமஸ் நீரிணையை மூடி விடுவோம். ஹோமஸ் நீரிணையை மூடுவது எமக்கு காப்பி குடிப்பது போன்றது என்றார். 31-12-2011இலன்று அமெரிக்க அதிபர் பராக ஒபாம ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையில் ஒப்பமிட்டார்.



பிரச்சனைக்குரிய ஹோமஸ் நீரிணை
35மைல் அகலமான ஹோமஸ் நீரிணை உலகின் கப்பல் போக்குவரத்திற்கு மிகச்சிரம்மான கடல் பகுதிகளில் ஒன்றாகும். 2007-ம் ஆண்டு ஜனாரி 1ஒ-ம் திகதி அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலான USS Newport ஒரு ஜப்பானிய நீர் மூழ்கிக் கப்பலுடன் மோதிக் கொண்டது. 2009-ம் ஆண்டு மார்ச் 20-ம் திகதி அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும்(USS New Orleans) நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும்(USS Hartford) மோதிக் கொண்டன. 1988 ஏப்ரில் மாதம் அமெரிக்கப் போர்க்கப்பலான USS Samuel Roberts ஒரு கடற்கண்ணியில் மோதுண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு நாள் கடற்போர் நடந்தது. ஈரான் இதற்கு முன்பும் பலதடவை ஹோமஸ் நீரிணையை மூடிவிடப்போவதாகப் பல தடவை மிரட்டியதுண்டு. அதற்கு அதனை மூடும் படை பலம் இருந்ததில்லை. ஆனால் இம்முறை ஈரான் நீண்ட தூர ஏவுகணைச் சோதனைகளுக்கு மத்தியில் இந்த மிரட்டலை விடுத்துள்ளது. அதுமட்டுமல்ல ஈரான் அண்மையில் ஆயிரக்கணக்கான கடற்கண்ணிகளும் பல சீர்வேக ஏவுகணைகளும் ஆயிரம் விசைப்படகுகளும் வாங்கிக் குவித்துள்ளது.


படைவலிமை
ஈரானிடம் ஒரு விமானம் தாங்கிக்கப்பல் கூட இல்லை. ஈரானினதும் அமெரிக்காவினது படை வலிமை:


அமெரிக்காவின் வல்லமை மிக்க ஐந்தாவது கடற்படைப் பிரிவு வளைகுடாப் பாதுகாப்புக்குப் பொறுப்பானது.


ஈரானுக்கு எதிரான போர் என்று வரும் போது அமெரிகாவுடன் சில நேட்டோ நாடுகளும் போரில் குதிக்கும். ஈரான் ஆட்சியாளர்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இத்தாலி பிரான்ஸ் போன்ற நாடுகள் போரில் ஈடுபடாது என்று ஒரு கணக்குப் போட்டு வைத்திருந்தது. ஆனால் பிரான்ஸ் 03/01/2012இலன்று ஈரானுக்கு எதிரான பொருளாதரத் தடை வேண்டும் என்று வலியுறுத்தியது அதன் கணக்கைப் பிழைக்க வைத்தது. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வரலாம். சீனா ஆபிரிக்கா கண்டத்தில் இருந்து தனக்குக் கிடைக்கும் மூலப் பொருள்களின் வழங்கல் பாதையை பாதுகாப்பாக வைத்திருக்க ஈரானிடம் நட்புப் பாராட்டுகிறது, சிரியாவிற்கு எதிராக மேற்க்கு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் பிரேரணை கொண்டு வந்த போது சீன அதை இரத்து(வீட்டோ) செய்தது. இதற்கான முக்கிய காரணம் சிரியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் அதுஈரானில் இருக்கும் தனக்குச் சாதகமான  ஆட்சியாளர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றே. ஆனால் இப்போது உள்ள சூழலில் ஒரு நேட்டோ - ஈரான் போர் ஏற்பட்டால் சீனா வெறும் அ|றிக்கைகளுடன் நிறுத்திக் கொள்ளும் அல்லது ஈரானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும். மேற் கொண்டு எதையும் செய்யாது.


ஒரு சில நாட்கள் மட்டுமே ஈரானால் தாக்குப் பிடிக்க முடியமாம்



ஈரானால் ஒரு சில நாட்கள் மட்டு மே ஹோமஸ் நீரிணையை மூட முடியும் அதை அமெரிக்கப்படைகளால் சில நாட்களில் மீண்டும் திறக்க முடியும். என அமெரிக்கப் படை வல்லுனர்கள் கூறுகின்றனர். ஈரானின் படை நிலைகள் மீது நேட்டோ விமானப் படைகள் முதலில் தாக்குதல் தொடுத்து அவற்றை நிர்மூலமாக்கும். ஈரானியப் படை நிலைகள் பற்றி ஏற்கனவே அமெரிக்கா தனது ஆளில்லா விமாங்கள் மூலம் தகவல்கள் திரட்டி வைத்துள்ளது. ஈரானைச் சுற்றவர உள்ள பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் அமெரிக்கப் படை நிலைகள் உள்ளது இந்து சமூத்திரத்தில் உள்ள கடற்படைப் பிரிவு பாரசீக வளைகுடாவிற்கு நகர்த்தப்படலாம். மேலும் இஸ்ரேல் ஈரானின் கணனிகளை ஊடுருவி அதன் படைத்துறை கட்டளைப் பணியகத்தைச் செயலிழக்கச் செய்யலாம். பின்னர் கடற்சண்டையும் ஆளில்லா விமானத் தாக்குதலும் தொடரலாம். இதனால் ஈரானால் ஒரு சில நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபி ஒரு சில வாரங்களே தாக்குப் பிடிப்பார் என நேட்டோப் படையினர் முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் ஆறு மாதங்கள் நின்று பிடித்தார்.

ஈரானைச் சுற்ற உள்ள அமெரிக்கப்படைத் தளங்கள்

ஈரானுக்குப் பாதகமான சூழல் உருவாகலாம்
ஹோமஸ் நீரிணை மூடப்பட்டால் ஜப்பான், கொரியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கான எண்ணை விநியோகம் பெரிதும் பாதிக்கப்படும். இது ஈரானுக்கு ஒரு பாதகமான நிலையை ஏற்படுத்தும். ஈரான் ஹோமஸ் நீரிணை முடப்படும் என்ற எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து ஈரானிய நாணயத்தின் பெறுமதி பெரும் வீழ்ச்சியைக் கண்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஈரானில் பாராளமன்றத் தேர்தலும் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலும் நடக்க இருக்கிறது. பாராளமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஈரானின் சீர்திருத்தவாதிகள் அறிவித்திருக்கின்றனர். ஈரானில் மக்கள் கிளர்ந்து எழாமல் திசை திருப்பவே இந்த ஹோமஸ் நீரிணை நாடகம் ஆடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஹோமஸ் நீரிணையில் ஒரு போர் மூளுமானால் உலகெங்கும் எரிபொருள் விலை 200 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கலாம். இப்போது இருக்கும் பொருளாதார சூழலில் இதனை எந்த ஒரு நாடும் விரும்பாது. இது ஈரானுக்கு ஆதரவாக ஒரு நாடுகளும் செயற்படாமல் போகச் செய்யலாம். ஈரானைத் தனிமைப்படுத்தலாம். பாம்பு பரமசிவனின் கழுத்துக்கு சுருக்குப் போட்ட நிலைதான் ஏற்படும்.

Tuesday 3 January 2012

நகைச்சுவைக் கதை: காயத்திரி மதிரத்திரமும் விபசாரிகளும்

அந்தக் கோவிலில் கவலை தோய்ந்த முகத்தோடு நின்றிருந்த சாவித்திரியைப் பார்த்து பட்டாபி ஐயர் மிகவும் அக்கறையோடு ஏன் அம்மா கவலையுடன் இருக்கிறாய் என்று விசாரித்தார். அதற்கு சாவித்திரி "ஐயரே ஆசையுடன் இரண்டு பேசும் பெண் கிளிகள் நிறையப் பணம் கொடுத்து வாங்கினேன். அவற்றிற்கு சரஸ் என்றும் லக்ஸ்மி என்றும் பெயரும் வைத்தேன். ஆனால் அவை இரண்டும் நாள் முழுவதும் பேசுவது "நாங்கள் விபசாரிகள்...உங்களைச் சந்தோசப்படுத்தவா???" என்ற வசனம் மட்டுமே. " என்று கவலையுடன் சொல்லி முடித்தாள்.

பட்டாபி ஐயர் "இதெல்லாம் பழக்க தோஷம் தான். என்னிடம் நரேஸ், சுரேஸ் என இரண்டு ஆண்கிளிகள் இருக்கின்றன. அவை காலையில் சுப்ரபாதம் பாடும். மதியம் திருவாசகம் பாடும். மாலையில் பஜகோவிந்தம் பாடும். மற்றும்படி தினமும் ஆயிரத்தெட்டுத் தடவை காயத்திரி மந்திரம் உச்சரிக்கும். உனது இரு பெண்கிளிகளையும் கொண்டு வந்து எனது வீட்டில் விடு. அவை ஒன்றாகப் பழகட்டும். எனது ஆண்கிளிகளின் நல்ல பழக்கத்தை உனது கிளிகளும் பழகிக்கொள்ளும். அவையும் தோத்திரங்கள் மந்திரங்களைச் சொல்லும்" என்றார்.

அதற்கு சாவித்திரி சரி ஐயரே ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்கள். கொண்டு வருகிறேன் என்றாள்.

பட்டாபி ஐயர் வருகின்ற புதன்கிழமை ஏகாதசி அன்றே கொண்டு வாடியம்மா என்றார்.

சாவித்திரி பட்டாபி ஐயர் சொன்னபடியே புதன் கிழமை குரு ஹோரையின் போது தனது கிளிகளை பட்டாபி ஐயர் வீட்டிற்கு கொண்டு போனாள். ஐயர் சாவித்திரியின் கிளிகளான சரஸையும் லக்ஸ்மியையும் தனது காயத்திரி மந்திரத்தை கண்மூடி உச்சாடனம் செய்து கொண்டிருந்த ஆண்கிளிகளான நரேஸ், சுரேஸ் இருக்கும் கூட்டைத் திறந்து உள்விட்டுக் கதவை மூடினார். உள்ளே சென்ற சரஸும் லக்ஸ்மியும் "நாங்கள் விபசாரிகள்...உங்களைச் சந்தோசப்படுத்தவா???" என்றன.

கண்ணைத் திறந்து பார்த்த நரேஸும் சுரேஸும் உடனே ஆகாயத்தை நோக்கி நாம் இவ்வளவு காலமும் பாடிய பாடல்களுக்கும் உச்சாடனம் செய்த காயத்திரி மந்திரமும் எதற்காகச் செய்தோமோ அதற்கான பலன் இன்று கைகூடியிருக்கிறது" என்றன.

Monday 2 January 2012

இலங்கையின் போர்க்குற்றமும் இந்தியாவும்

2009 மே மாதம்இலங்கையில் போர் முடிந்த பின் சில இந்திய நடு நிலை ஆய்வாளர்கள் இலங்கைப் போர்க் குற்றத்தில் இந்தியாவிற்கும் பங்குண்டு அது வெளிவராமல் மறைக்கப்படலாம என்று எழுதினர். ஒருவர் போர் முடிந்த பின்னர் இலங்கையை இனி நாம் சொல்லும் படி நீங்கள் கேட்கவேண்டும் அல்லாவிடில் நீங்கள்  தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவித்தமைக்கான செய்மதி ஒளிப்பதிவு ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன அவற்றைப் பகிரங்கப்படுத்துவோம் என இந்திய வெளியுறவுத் துறை இலங்கையை மிரட்டியது. பதிலுக்கு இலங்கை நீங்கள் எம்முடன் நடாத்திய உரையாடல்களின் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் எம்மிடம் உள்ளன என்று மிரட்டியது என்று எழுதினார். அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன் மொழியப்பட்டபோது இந்தியா அதை இலங்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. 2010 அக்டோபரில் வி. எஸ் சுப்பிரமணியம் எழுதியது:

In a subtle master stroke Gothabhaya Rajapakse more than anyone else was the principal architect of the defeat of the Tamils in Sri Lanka in May 2009. A greater achievement was his diplomatic coup that bought Delhi’s ‘stilled silence’ on SL war crimes that included the locking away of incriminating RAW evidence on the Mullivaykkal war crimes. Though details relating to the South Block Delhi’s involvement in the Mullivaykkal massacres  is  in the open now, the ‘personal caprice (Bellamy)  of the Sonia Delhi’s ‘in the loop’ proxies that stalled the international community’s war crimes initiatives  against SL began to collapse when other (non RAW) incriminating evidence began to unravel. These pointed to SL acting as South Block Delhi’s proxy in the killings of Tamils in Mullivaykkal. Gothabhaya had reasons to be angry over Delhi’s subtle blackmail using RAW aerial pictures of the massacres when in fact SL acted in good faith on ‘in the loop’ Narayanan-Menon’s instructions during that stage of the war.  Though RAW pinpointed the presence of the core LTTE leadership in the midst of heavy civilian concentrations in Mullivaykkal,  Narayanan-Menon gave Gothabhaya the go-ahead to launch the massive final assault in the ‘no fire zone’ in Mullivaykkal. The ‘no fire zone’ itself isolated and away from prying witnesses is the brain child of Narayanan.. The final assault according to Fonseka was originally planned for August to avoid heavy civilian casualties but the revengeful Narayanan-Menon (Sonia-proxies) keen on eliminating the LTTE leadership totally acted recklessly to abort the US rescue plans to save the lives of the LTTE leadership and civilians. The result was the massacres that was a precedent setting Delhi-Colombo trade off model for wiping off the entire Tamil militancy/resistance and treating the massive civilians casualties as acceptable ‘collateral’ damage.  Accordingly, morally the blame for the massacre was not Gothabhaya’s alone. He acted indirectly as the Sonia Delhi’s proxy then.

A Delhi stunned by an angry Gothabhaya Rajapakse took his ‘loop’ signals as lethal enough to implicate Delhi’s South Block  in the war crimes should SL ever be forced to face such charges. A harried and alarmed Delhi reacted speedily to appease Colombo launching  a swift diplomatic offensive to save the murderous SL regime by killing off the international community’s war crimes initiatives in the UN specifically supporting the infamous May 2009 UNHRC resolution. Colombo was now in possession of a dreaded leverage that Delhi has to live with for the longer term.

போர் முடிந்தவுடன் சில பார்ப்பன ஆய்வாளர்கள் தமிழர்கள் இனிப் பிச்சைக்காரர்கள் மாதிரி அவர்கள் இனி தெரிவு செய்யும் தகமையை இழந்து விட்டனர் என்றும் தமிழர்களுக்கு உள்ளது Hobson Choice மட்டுமே என எழுதினர். ஆனால் தமிழர் தேசியக் கூட்டமைப்பு இப்போது அரசுடன் நடாத்தும் பேச்சு வார்த்தை ஒரு பிச்சைக்காரன் நிலையில் இருந்து பேசுவது போல் இல்லை என்பது உண்மை.

சனல்-4 இன் முதற் காணொளி - பதறிய இந்தியா
2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரித்தானிய சனல்-4 தொலைகாட்சி கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக தமிழர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டதாக செய்தி வந்தவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். சனல்-4 தொலைகாட்சியின் படுகொலைகள் சம்பந்தமாக தாம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவித்தார். இன்று வரை அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அந்த காணொளியை கண்ட இந்தியத் தரப்பு ஏன் அதிர்ச்சியடந்தது? இலங்கை படையுடன் இந்தியப் படைகளும் இணைந்து செயற்பட்டதாலா? அதற்கான காணொளி ஆதாரங்கள் இருக்கலாம் என்று இந்தியா அதிர்ச்சியடைந்ததா?

 ஐநா நிபுணர் குழு அறிக்கை - கலங்கிய இந்தியா
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த 2008/09 நடந்த இலங்கைப் போரின் இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் மனித உரிமைகள் மீதான வகைசொல்லல் தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கை இலங்கைக்குக் கிடைத்தவுடன் இலங்கை தொடர்பு கொண்ட முதல் வெளிநாடு இந்தியா. அறிக்கை வெளிவந்தவுடன் தமிழின விரோதிகளான வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ், தேசிய பதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், பதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் இப்போது இலங்கைக்கு விரைந்தோடிச் சென்றனர்.


இந்தியாவின் இரு பெரும் பொய்கள்
1. இலங்கையில் தமிழர்கள் தனி நாடு அமைத்தால் அது இந்தியாவின் தேசிய ஒருமப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் 2. தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உதவாவிடில் இலங்கையில் சீன ஆதிக்கம் வலுவடையும் என்ற இரு பெரும் பொய்களைச் சொல்லியே இந்தியா இலங்கைக்கு உதவி வந்தது. ஆனால் 02-01-2012இலன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியா என்ன செய்ய வேண்டும் என உத்தரவிட்ட முடியாது என்று  தெரிவித்ததாகக் கூறியது.  தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா இலங்கையின் ஒரு கைக்கூலி போலவே செயற்பட்டது. சீனாவின் திட்டங்கள் இலங்கையில் விரைந்து நிறைவேற்றப் படுகின்றன ஆனால் இந்தியாவின் திட்டங்களோ இழுத்தடிக்கப் படுகின்றன.

அண்மையில் உதயன் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் வெளி விவகார அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இலங்கை மீது எந்தவித அழுத்தங்களும் கொடுக்கும் நிலையில் இந்தியா இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்தியப் பிரமுகரகள் இலங்கை வருவதும் போவதும் தொடர்கதைபோல் நடக்கும் ஆனால் அதனால் எதுவும் நடக்கப் போவதில்லை என்றும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கடந்த காலத்தில் ராஜபக்ஷவின் அரசாங்கத்தை விமர்சித்திருந்த எம்.மனோகரன், எஸ்.இராமகிருஷ்ணன் ஆகிய  இரு எம்.பி.க்களும் இந்தியப் பயணத்தை மேற்கொண்டபின்னர் தங்கள் கருத்துக்களை மாற்றி சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசினால் மட்டுமே தீர்வுகாண முடியும் வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்தனர். அவர்கள் அத்துடன் நிற்கவில்லை தேவையேற்படின் இந்த நோக்கத்திற்காக இலங்கை அதிகாரிகளுடன் நாங்கள் கரம் கோர்க்க விருப்பத்துடன் இருக்கிறோம் என்றும் கூறினர். இலங்கையப் பொறுத்தவரை இந்தியா வெளியில் சொல்வது வேறு திரைமறைவில் செய்வது வேறு.

2011இன் கடைசி வாரத்தில் மீண்டும் இந்தியா இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு அமைய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது. 13வது திருத்தம் 1987-ம் ஆண்டு ராஜிவ்-ஜே.ஆர் ஒப்பந்தத்திற்கு அமைய செய்யப்பட்டது. அதை இலங்கை அரசு கடந்த 24 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை. அந்த ஒப்பந்தத்திற்கு அமைய தமிழ்ப்போராளிகள் தங்கள் ஆயுதங்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்  அப்படி ஒப்படைக்கவில்லை என்பதற்காக இந்தியா தமிழர்களுக்கு எதிராக பெரும் ஆயுத பலத்துடன் பெரும் போரத் தொடுத்து எண்ணாயிர்த்துக்கு மேற்பட்டோரைக் கொன்று குவித்து மூவாயிரத்திற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வன்முறக்கு உள்ளாக்கி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோரை வீடற்றவர்களாக்கியது. ஆனால் 13வது திருத்தத்தை நிறைவேற்றாதமைக்காக இந்தியா இலங்கை அரசுக்கு எதிராக சுண்டு விரலைத்தன்னும் அசைக்கவில்லை. அசைக்கும் நிலையிலும் இந்தியா இல்லை.

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைப் பாராட்டியதில் இந்தியாவைன் பங்களிப்பி எந்த அளவுக்கு இருக்கிறது?

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று இந்தியா கூறியது இதுவரை அதை நிறைவேற்றவில்லை.

இந்தியா இலங்கையைப் பொறுத்தவரை கையறு நிலையிலேயே இருக்கிறது.

Sunday 1 January 2012

புத்தாண்டுப் பலன்கள்

சகல பஞ்சாங்கங்களின் படியும் இந்தப் புத்தாண்டு 01-01-2012இலன்று பிறக்கிறது என்பது மிக மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஆனால் வேறு வேறு நாடுகளில் பிறக்கிறது. நியூசினாந்து ஜப்பான் போன்ற கிழக்கு நாடுகளில் முதலும் பின்னர் இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலும் அதன் பின்னர் மத்திய கிழ்ககு நாடுகளிலும் அதைத் தொடரிந்து ஐரோப்பாவிலும் கடைசியாக அமெரிக்காவிலும் பிறக்கிறது.

2012 இல் சனிபகவான் forward gearஇலும் reverse gearஇலும் மாறி மாறிப் பயணம் செய்வதால் பல நற்பலனும் தீயபலனும் கலந்து நடக்கும். 26-03-2012இல் சனிபகவான் துலாவில் இருந்து இறங்கி கன்னியுடன் வாசம் செய்யவிருக்கிறார்

பிறக்கும் புத்தாண்டு எந்த இலக்கினத்தில் பிறக்கிறது என்று பார்க்கப் போனால் பெரும் குழப்பம் ஏற்படும். அதனால் அதை விட்டுவிடுவோம்.

இங்கு சொல்லப்படும் பலன்கள் உங்கள் இராசியை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்படும் பலன்களே. உங்கள் சரியான பலன்களை உங்கள் ஜாதகத்தின் திசை புத்திகளை அடிப்படையாகக் கொண்டு சரியாக ஒரு நல்ல சோதிடருக்கு பணம் கொடுத்து அறிந்து கொள்ளவும்.


புத்தாண்டுக்கான பலன்கள்

திருவாளர் உலகம் - உங்கள் நிதி நிலை தொடர்ந்து மோசமாகவே இருக்கும். உங்கள் ஓசோன் கூரையின் ஓட்டை தொடர்ந்து பெரிதாகிக் கொண்டே இருக்கும். உடலெங்கும் பல பிரச்சனைகள் தொடர்ந்தும் இருக்கும்.

திருவாளர் தமிழினம்: இளிச்சவாயர் என்னும் உங்கள் இயற்பெயருக்கு ஏற்ப தொடர்ந்து நடந்து கொள்வீர்கள். தமிழனைத் தவிர யாரும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தலாம். ஆளலாம். உங்களிடம் புகழ் பெறலாம். அயலவர்களுடன் உங்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்படும். உங்களுக்கு தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கூடத் தரமாட்டார்கள். ஆனால் அவர்கள் உங்கள் நிலத்தில் தொடர்ந்தும் உங்களைச் சுரண்டிப் பிழைப்பு நடத்துவார்கள்.

 நகைச்சுவை விட்டிட்டு சரியாக சிந்திப்போமானால் 2012 ஒரு மோசமான ஆண்டாகவே இருக்கப் போகிறது.
உலகத்தைப் பொறுத்தவரை பொருளாதார நெருக்கடி தொடர்ந்து கொண்டே இருக்கும். மேலும் பல நாடுகளில் இளைஞர்கள் கிளர்ச்சி தொடரும்.

அமெரிக்கா
அமெரிக்காவிலும் ஆட்சி முறைமை மீதான அதிருப்தி வளர இடமுண்டு. தேர்தலை எதிர் நோக்கும் அமெரிக்காவில் பராக் ஒபாமா தோல்வியடைந்து குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் செய்யப் போகும் பொருளாதாரச் சிக்கன நடவடிக்கை பல எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். பராக் ஒபாமாவிற்கு எதிரான ஒரு சரியான போட்டியாளர் இன்னும் உருவெடுக்கவில்லை. அமெரிக்காவின் பாதீட்டுப் பற்றாக் குறை தொடர்ந்தும் பெரும் தலையிடியாகவே இருக்கும். வேலையில்லாப் பிரச்சனையும் தொடரும்.

ஈரான்
உலகின் பிரச்சனைக்கு உரிய பிராந்தியமாக மத்திய கிழக்கே இருக்கும். சிரியாவில் பெரும் பிரச்சனைகள் தலை தூக்கும். வளைகுடாவை மூடுவேன் என்று அறிவித்து 2011ஐ பெரும் திகிலுடன் முடித்த ஈரான் தொடர்ந்தும்மீசை முறுக்கிக் கொண்டிருக்கும். தன் படை வலிமையை மேலும் பெருக்கி தனது தனித்து இருப்பை அப்பிராந்தியத்தில் உறுதி செய்ய முயலும். இதற்காக அது தனது அணு ஆயுத உற்பத்தி செய்வதை ஒத்தி வைக்கலாம்.

சிரியா
சிரியாவில் ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாததாகவே இருக்கும். ஆனால் இது தொடர்பான கிளர்ச்சி ஆண்டு முழுக்க நீடிக்கலாம். பல இரத்தக் களரிகளை எதிர்பார்க்கலாம்

எகிப்த்து
எகிப்திய மக்கள் தொடர்ந்தும் கிளர்ச்சியில் ஈடுபடுவர். அங்கு ஒரு அமெரிக்க ஆதரவு சக்தி ஆட்சியில் அமர்வதா அல்லது இசுலாமியவாத சக்தி ஆட்சியில் அமர்வதா என்ற கேள்விக்கான விடை தேடலில் பெரும் மோதல் வெடிக்கலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்
உலகிலேயே பெரும் பொருளாதார நெருக்கடியை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே எதிர் கொள்ளும். பிரித்தானியாவில் ஏற்பட்டது போல் சமூகக் கிளர்ச்சி பல நாடுகளில் நடக்கலாம். யூரோ நாணயம் பல நெருக்கடிக்களின் மத்தியில் தப்பிப் பிழைக்கலாம். ஓரிரு நாடுகள் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலகி சொந்த நாணயங்களுக்கு மீண்டும் திரும்பலாம்.

சீனா
சீனாவிலும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றும். அவற்றை ஆட்சியாளர்கள் இலகுவாகச் சமாளிப்பதற்கு அதன் வெளிநாட்டுச் செல்வாணிக்கையிருப்பு பெரிதும் உதவும். சீனா தனது படைத் துறை வலிமையை அபரிமிதமாக அதிகரிக்கும். குறிப்பாக சீனா தனது கடற்படை வலிமையை பெரிதும் அதிகரித்து தனது கடலாதிக்கத்தை விரிவு படுத்தும். இது ஜப்பான், இந்தியா, தென் கொரியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், ஒஸ்ரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை படைத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.


பாக்கிஸ்த்தான்
அரபு நாடுகளில் ஏற்பட்டதிலும் பார்க்க மோசமான சமூக அரசியல் பொருளாதார நெருக்கடி பாக்கிஸ்தானில் ஏற்படும். பாக்கிஸ்த்தான் ஒரு சீனவின் செய்மதி நாடாக மாறும். ஹக்கானி மற்றும் லஸ்கர் ஐ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் பெரும் வளர்ச்சி காணும்.

இந்தியா
நேர்மையற்ற ஆட்சியாளர்களுக்கு எதிராக பல நாடுகளில் இளைஞர்கள் கிளர்ந்து 2011இல் கிளர்ந்து எழுந்த போது இந்தியாவில் மட்டும் ஒரு வயோதிபர் ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தார். அவருக்குப் பின்னராவது இளைஞர்கள் ஆட்சியாளர்களின் ஊழல்களைப் பற்றிச் சிந்திப்பார்களா. ராகுல் காந்தியின் மோக்கைத் தனம் அம்பலமாகும். இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றும்.

தமிழ்நாடு
முதல்வர் ஜெயலலிதா பார்ப்பனர்களின் கைப்பொம்மையாக மாறுவார். சங்கர் மடத்துடன் சமரசம் ஏற்படலாம். 2014 பாராளமன்றத் தேர்தல்வரை தமிழ்த் தேசிய ஆதரவாளர்களை ஜெயலலிதா கவனமாகக் கையாள்வார். தேர்தலின்பின்னர் கைகழுவி விடுவார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளா பணிந்து வரலாம்.

ஈழப்பிரச்சனை
மஹிந்த ராஜபக்ச மீது மேலும் பல போர்க்குற்ற ஆதரவு முன்வைக்கப்படும். சீனாவும் இரசியாவும் அவருக்குக் கை கொடுப்பதை நிறுத்தலாம். அவருக்கு அவரது ஆதரவாளர்களிடமிருந்தே பிரச்சனைகள் வரும். மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்களிடையே  ஊடுருவிய இலங்கை இந்திய ஆதரவு சக்திகளில் பலர் அடையாளம் காணப்படுவர். பலர் கைது செய்யப்படலாம். ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் தமிழத் தேசியத்திற்கு ஆதரவு போல் வேடமிட்டுக் கொண்டிருக்கும் இலங்கை இந்திய ஆதரவு ஊடகங்களின் சதி அம்பலமாகும்.


புத்தாண்டு வாழ்த்து
ஞாயிறுகளெல்லாம் நலன்கள் பெருகட்டும்
திங்கள்கள் தோறும் மங்களங்கள் பொங்கட்டும்
செவ்வாய்களெல்லாம் நல்வாய்ப்பாகட்டும்
புதன்களெல்லாம் பொன்னாகட்டும்
வியாழன்கள் இன்பங்களாகட்டும்
வெள்ளிகளில் மகிழ்ச்சிகள் மிளிரட்டும்
சனிகள் எல்லாம் இனிதாகட்டும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...