Sunday 2 December 2012

கடவுச்சீட்டில் இந்திய சீன எல்லைப் பிரச்சனை

சீன அரசு  தனது புதிய கடவுச்சீட்டின் எட்டாம் பக்கத்தில் தனது தேச வரைபடத்தை நீர்க்குறி (water mark) பின்னணியாக இணைத்துள்ளது. இதில் இந்தியா தனது பிரதேசங்கள் எனச் சொல்லுபவற்றை தனது தேச வரைபடத்தில் உள்ளடக்கியுள்ளது. அது மட்டுமல்ல தென் சீனக் கடலில் பலத்த சர்ச்சைக்குரிய தீவுகளை தனது வரைபடத்தில் சீனா உள்ளடக்கியுள்ளது.

தென்சீனக் கடலில் உள்ள பல குட்டித் தீவுகளில் இருப்பதாகக் கருதப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்றவற்றால் அவை இப்போது முக்கியத்துவம் பெற்று அவற்றிற்கு பல நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. இத்தீவுகளை தனது தேச வரைபடத்தில் சீனா இணைத்தது ஏற்கனவே கொதிநிலையில் உள்ள தென்சின மற்றும் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தாய்வானும் பிலிப்பைன்ஸும் சீனக் கடவுச் சீட்டில் உள்ள சீன வரைபடம் தொடர்பக சீனாவிடம் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளன. வியட்னாம் சீனாவின் புதிய கடவுச்சீட்டுக்களில் நுழைவு அனுமதி(விசா) பதிவு செய்ய மறுக்கிறது.
சீனக் கடவுச் சீட்டில் அதன் வரைபடம்

இந்தியாவின் தீராத பிரச்சனை
இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் தீராத எல்லைப் பிரச்சனை இருக்கிறது. முக்கியமாக அருணாச்சலப் பிரதேசத்தில் இது ஒரு கொதி நிலையில் உள்ளது. அண்மைக்காலங்களில் சீனா இப்பகுதியின் ஊருடுவல்களை மேற் கொண்டது. இந்தியா தனது எல்லை என்று சொல்லப் பட்ட பகுதிகளுக்குள் சீனப் படைகள் ஊடுருவி தமது தளங்களையும் முகாம்களையும் அமைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது 50,000இற்கும் 60,000இற்கும் இடைப்பட்ட துருப்புக்களைக் கொண்ட இரு பெரும் படையணிகளை அருணாச்சலப் பிரதேரத்திற்கு நகர்த்தியது. இதற்கு சீனா தனது எச்சரிக்கையை 2010 ஜூன் மாதம் ஆறாம் திகதி இப்படி வெளியிட்டது: India’s current course can only lead to a rivalry between the two countries. India needs to consider whether or not it can afford the consequences of a potential confrontation with China.” சீனா இரசியாவுடன் தனது எல்லைப் பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்துவிட்டது. சீனா சோவியத் வீழ்ச்சியின் பின்னர் இரசியாவுடன் சுமூக உறவுகளை ஏற்படுத்தி வருகிறது. முன்னர் இரசியாவின் எல்லையில் இருந்த படைகளை இப்போது அதிகம் இந்திய எல்லைகளுக்கு நகர்த்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசம் என்பது சுவிஸ்சலாந்து நாட்டிலும் பார்க்க மூன்று மடங்கு நிலப்பரப்பைக் கொண்டது.

சீனாவின் புதிய கடவுச் சீட்டில் நுழைவு அனுமதி(விசா) பதிவுசெய்யும் போது இந்தியா தனது தேச வரைபட்டத்தை அதில் இணைக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் புதிய வரைபடம் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

பல அரசறிவியல் அறிஞர்கள் சீனாவின் இந்தப் பிராந்திய எல்லை முரண்பாடு நீண்டகால அடிப்படையில் மோதல்களை உருவாக்கக் கூடியது என்கின்றனர்.

சீனாவின் பிராந்திய எல்லை முறுகல் நிலைமையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயலும் ஐக்கிய அமெரிக்கா கடவுச் சீட்டு வரைபடம் தொடர்ப்பாக தனது கரிசனையை சீனாவிடம் தெரிவிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...