Wednesday 12 December 2012

மோசமாகும் எகிப்தும் மோசமான மோர்சியும்

அதிக இரத்தம் சிந்தாமல் ஒரு திடமான சக்தியாக எகிப்திய மக்கள் திரண்டு 18 நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது. ஆட்சியாளருடன் ஆட்சி முறைமையும் மாற்றப்படவேண்டும். புரட்சியை முன்னெடுத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் அரசியல் துறை எகிப்திய ஆட்சியைக் கைப்பற்றியது.

ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறை எகிப்தியப் படையினரை புரட்சியை எதிர்க்காமல் இருப்பதை உறுதி செய்தது. இதனால் எகிப்தியப் படைத்துறைக்கு புரட்சியாளர்களால் எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. எகிப்தியப் படைத்துறையின் உயர்பதவிகளில் இருப்போர் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள்.

இசுலாமிய சகோதரத்துவ் அமைப்பும் மோர்சியும்.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. கடந்த 84 ஆண்டுகள் திரை மறைவு இயக்கமாக இருந்து வந்த இந்த அமைப்பில் பலர் மன்னர்களாலும் படைத்துறைத் தலைவர்களாலும் சிறைவாசம் அனுபவித்தனர். இது தற்போது எகிப்தில் உள்ள ஒழுங்கு படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. புரட்சிக்குப் பின்னர் நடந்த தேர்தலில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவு வெற்றி பெற்று மொகமட் மோர்சி ஆட்சிக்கு வந்தார். மற்றக் கட்சிகள் ஒரு ஒழுங்கான கட்டமைபுடன் இருக்காதமையால் மோர்சி இலகுவாக ஆட்சிக்கு வரக்கூடியதாக இருந்தது. மோர்சியின் கட்சி இசுலாமியவாதக் கட்சியாக இருந்தமையும் இலகுவான் வெற்றிக்கு வழிவகுத்தது. ஆனால் ஹஸ்னி முபாராக்கிற்கு எதிராகப் புரட்சி செய்த இளைஞர்கள் எகிப்தில் ஒரு மத சார்பற்ற ஆட்சியையும் எகிப்தை முற்போக்குப் பாதையில் புதுமைப்படுத்த விரும்பியிருந்தனர்.

 மோர்சியின் பிரகடனம்
மொகமட் மோர்சி  தனக்கு சாதகமான ஒரு அரசமைப்பைப் பிரகடனம் செய்ய பல எதிர்க்கட்சிகள் கிளர்ந்து எழுந்து ஆர்ப்பாட்டம் செய்தன. மோர்சியின் பிரகடனம் அவரை ஒரு சர்வாதிகாரியாக்கும் என்று எதிர்க்கட்சிகள் கண்டித்தன. அவரது பிரகடங்களின்படி மோர்சியை சட்டத்துக் அப்பால் பட்டவராக்கி அவர் எந்த ஒரு நீதி மன்றிலும் தண்டிக்கப்பட முடியாதவராக ஆக்க முயன்றது. நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து மோர்சி டிசம்பர் 7-ம் திகதி தனது பிரகடனத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். ஆனால் இசுலாமிய அடிப்படைவாதிகளைக் கொண்ட அரசமைப்பு யாப்பு எழுதும் குழுவை மோர்சி புதிய அரசமைப்பு யாப்பு வரைவை எழுதப் பண்ணினார். அச்சபை முன் வைத்த புதிய வரைபு தொடர்பான மக்களின் கருத்துக் கணிப்பு அவசரம் அவசரமாக டிசெம்பர் 15-ம் திகதி நடத்தப் படும் என்று மோர்சி அறிவித்தார்.

நீதியாளர்கள் எதிர்ப்பு
மொஹமட் மோர்சியின் புதிய பிரகடனம் தொடர்பான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பை தாம் எதிர்ப்பதாக எகிப்திய நிதித்துறையினரின் அமைப்பு தெரிவித்தது. எகிப்தியச் சட்டப்படி கருதுக்கணிப்பு வாக்கெடுப்பு உட்பட எல்லா தேர்தல்களும் நீதித் துறையால் மேற்பார்வை செய்யப்படவேண்டும். இது மொகமட் மோர்சிக்கு நெருக்கடியைக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து புதிய அரசமைப்பு யாப்பு உருவாகும் வரை படைத்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்டபடி கைது செய்யும் அதிகாரம் வழங்கினார் மொஹமட் மோர்சி. இதைத் தொடர்ந்து மோர்சிக்கு ஆதரவான இசுலாமிய அடிப்படை வாதிகளும் மதசார்பை விரும்ப்பாதவர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்தது.

பல முனைகளில் மோர்சிக்கு எதிர்ப்பு
ஒரு புறம் இசுலாமியத் தீவிரவாதிகள், ஒரு புறம் மிதமான மதவாதக் கொள்கையுடைய இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு, இன்னொரு புறம் மதசார்பற்ற முற்போக்காளர்கள், இன்னொரு புறம் எகிப்தியப் படைத்துறையினர், இன்னொரு புறம் ஐக்கிய அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகள் இப்படிப் பல தரப்பட்டவர்கள் மத்தியில் சிக்கித் தவிக்கிறார் மோர்சி.


மோசமாகும் எகிப்தியப் பொருளாதாரம்
சுற்றுலாத் துறையில் பெரிதும் தங்கியிருந்த எகிப்தியப் பொருளாதாரம் எகிப்தியப் புரட்சியின் பின்னர் பெரும் வீழ்ச்சியைக் கண்டது. பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க எகிப்தி பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் பெற முயன்றது. பன்னாட்டு நாணய நிதியம் எகிப்திற்கு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க முன் வந்தது. உள்ளூர் அரசியல் நெருக்கடியால் மொஹமட் மோர்சியின் அரசு இந்தக் கடன் பெறுவதை ஒத்தி வைத்தது. இதனால் எகிப்தில் பெரும் நிதி நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோர்சி வஞ்சக எண்ணத்துடன் செயற்படுகிறாரா?


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...