Monday 31 December 2012

2012இல் நடக்காதவையும் நடந்தவையும்

"நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும்" என்ற வாசகம் 2012இற்க்கு மிகவும் பொருந்தக் கூடியதாக இருந்தது. 2012இல் நடந்தவையை விட நடக்காதவையே பிரபலமானதாக இருந்தது.

2012இல் நடக்காதவை

மாயன் கலண்டர்
2012இல் முக்கியத்துவம் பெற்றிருந்தது மாயன் கலண்டரே. உலகம் அழியும் என்று சிலர் கூவிக் கொண்டே இருந்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒன்றும் நடக்கது என்று சொன்ன அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சும்மா இருக்கவில்லை. உலகையும் வான்வெளியையும் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தது. மாயன் கலண்டர் முடியும் நேரத்தில் சூரியன் வழமைக்கு மாறாக மின்னியதை நாசா அவதானித்தது.

கவிழாத சிரிய அதிபர் அசாத்தின் ஆட்சி
சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி 2012இல் கவிழும் என்று பலர் 2011இல் எதிர்வு கூறினர். இன்று வரை அசாத் ஆட்சியில் இருக்கிறார். சிரியாவில் இதுவரை 44,000பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் பெரும் மோதல் வெடித்து 2013இல் 100,000பேர் கொல்லப்படலாம் என சிரியாவிற்கான சமாதானத் தூதுவர் சொல்கிறார்.

ஈரான் மீது தாக்குதல்
2012இல் இஸ்ரேல் தனித்தோ அல்லது ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தோ ஈரானில் அணு ஆராய்ச்சி நிலையங்கள் மீது பெரும் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டத்து ஆனால் நடக்கவில்லை.

இரசியாவில் புட்டீன் ஆட்சி கவிழும்
அரபு வசந்தம் போல் 2012இல் இரசியாவில் ஒரு மக்கள் எழுச்சி நிகழ்ந்து அங்கு விளாடிமீர் புட்டீனின் ஆட்சி கவிழும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நிகழவில்லை.

பிரித்தானியாவில் ஒலிம்பிக் ஊத்திக்கும்
பிரித்தானியாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஒழுங்காக நடக்காது என்று பலர் எதிர்வு கூறினர். ஆனால் பிரித்தானியா தனக்கே உரிய தனித்துவத்துடன் வெற்றிகரமாக ஒலிப்ம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடாத்தியது.

2012இல் முக்கிய நிகழ்வுகள்

மியன்மாரில் (பர்மா) தேர்தல்.
பர்மாவில் பல ஆண்டுகளின் பின்னர் மக்களாட்சி முறைமையின் கீழ் தேர்தல் நடந்தது.  ஆங் சான் சூகி தேர்தலில் வெற்றி பெற்றார். சீனாவின் பிடியில் இருந்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பர்மாவை அமெரிக்கா விடுவிக்கும் முயற்ச்சியில் முதல் வெற்றி பெற்றுள்ளது எனப்பட்டது.

சீன அமெரிக்க இழுபறி
கண்பார்வையற்றவரும் தானாகவே சட்டம் படித்தவரும் சீனாவில் மனித உரிமைகளிற்கு எதிராக குரல் கொடுத்துவருமான சேன் குவான்சேன் சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதுவர்கத்தில் தஞ்சம் புகுந்தார். இது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு இராசதந்திர முறுகலை உருவாக்கியது. இறுதியில் சேன் குவான்சேன் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் தற்காலிக உறைவிடம் வழங்கப்பட்டது.

தீபெத்தியர்களின் தீக்குழிப்பு அதிகரிப்பு
இந்தியாவிலும் சீனாவிலும் தீபெத்திற்கு விடுதலை வேண்டும் எனப் போராடுவோர்கள் தீக்குழித்துக் கொள்வது அதிகரித்து இருந்தது. சீனாவில் பொது நிகழ்வுகளில் சிறப்புக் காவற்துறையினர் கையில் தீயணை கருவிகளுடன அலைய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

பிரித்தானிய அரசியின் வைரவிழாவிற்கு வந்த மஹிந்த விரட்டப்பட்டார்.
பிரித்தானிய அரசி முடி சூட்டி அறுபது ஆண்டுகள் நிறை வேறிய விழாவிற்கு மஹிந்த ராஜபக்ச சென்றார். அவரை அங்கு பொது நலவாய நாடுகளின் பொருளாதார மாநாட்டில் தொடக்கவுரை ஆற்ற பொது நலவாய நாடுகளில் உயர் பதவியில் உள்ள இந்தியர்கள் ஏற்பாடு செய்தனர். மஹிந்தவிற்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் இலண்டனில் நடந்தது. மாநாட்டில் பங்கு பற்றும் நுழைவுச் சீட்டுக்களை ஐம்பது தமிழர்கள் பெற்றிருந்தனர் எனக்கூறப்பட்டது. மாநாட்டில் என்ன நடக்குமோ என்று தெரியாத ஏற்ப்பாட்டாளர்கள் மாநாட்டில் காலை நிகழ்வுகளை இரத்துச் செய்தனர்.

உலக சாதனை படைத்த இந்தியா
உலக வரலாற்றில் மிகப் பெரும் மின்வெட்டு இந்தியாவில் செய்யப்பட்டது. இந்தியாவின் வறுமை நிலைமையையும் மோசமான ஆட்சியையும் உலகம் உணர்ந்து கொண்டது.

முசுலிம்களின் களங்கமின்மை திரைப்பட முன்னோட்டம்
யூடியூப்பில் தரவேற்றப்பட்ட முசுலிம்களின் களங்கமின்மை திரைப்பட முன்னோட்டம் உலகெங்கும் பெரும் கிளர்ச்சிக்கு வித்திட்டது.

இஸ்ரேல் - ஹாமாஸ் மோதல்
இஸ்ரேலும் ஹாமாஸ் இயக்கமும் கடும் மோதலில் ஈடுபட்டன. பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ஏவுகணை எதிர்ப்புக் கூரை போரில் பாவிக்கப்பட்டது.

எகிப்தில் மொஹமட் மோர்சி

எகிப்தில் மொஹமட் மோர்சி தனது அதிகாரத்தைத் திடப்படுத்திக் கொண்டார். அவரது மதசார்ப்புக் கொள்கைக்கு உருவான எதிர்ப்புக்கு மத்தியிலும் அவர் தனது அரசமைப்புயாப்பை நிறைவேற்றும் பணியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய அழைப்பு நிலையங்களின் (call center) வீழ்ச்சி
இந்தியாவில் அதிகரித்து வந்த வெளிநாட்டு நிறுவனங்களின் அழைப்பு நிலையங்கள் 2012இல் பெரும் வீழ்ச்சியைக் கண்டது. பிரேசில், மெக்சிக்கோ, வியட்னாம் மற்றும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் களத்தில் இறங்கியதும் இந்தியாவில் சில முறைகேடுகள் நடந்ததும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாகியது.

சீனாவின் எல்லைப் பிரச்சனை
உலக அமைதிக்கு பெரும் சவாலாக அமைந்தது சீனாவிற்கும் அதல் அயல் நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை. அருணாச்சலப் பிரதேசத்தை தனது நாட்டு வரைபடத்துடன் இணைத்து சீனா தனது கடவுச்சீட்டில் பதிவு செய்து சர்ச்சையைக் கிளப்பியது. தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுகளை தனக்குச் சொந்தமானது என்று அழுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் ஜப்பான், தென் கொரியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்வான் போன்ற நாடுகளுடன் சீனா பெரும் முறுகல் நிலை உருவாக்கியுள்ளது, 2013இல் உலகின் கவனத்தை தென் சீனக் கடல் ஈர்க்கும்.



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...