Sunday 11 November 2012

நீதி கேட்கும் நீதியில்லாத இலங்கை நீதித் துறை

ஷிரானி பண்டாரநாயக்கவை இலங்கையின் பிரதம நீதியரசராக 2011இல் நியமித்தவர் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச. தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக ஷிரானியின் கணவரான பிரதீப் காரியவாசத்தை தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமித்தது மஹிந்த ராஜபக்ச. மோசடிக்காக பிரதீப் காரியவாசத்தை பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச நீக்கினார். இப்போது ஷிரானியைப் பதவியி இருந்து நீக்க மஹிந்த முயற்ச்சி செய்கிறார். தன் மீது வைக்கும் குற்றச் சாட்டை ஷிரானி மறுத்துள்ளார்.

இலங்கையில் சட்டவாக்க அதிகாரம் பாராளமன்றத்திடமும் சட்ட நிறைவேற்று அதிகாரம் குடியரசுத்தலைவரிடமும், சட்டத்திற்கு வியாக்கியானம் கொடுக்கும் அதிகாரம் நீதித்துறையிடமும் இருக்கிறது.

மன்னார் நீதி மன்றில் ஆரம்பித்த மோதல்
இலங்கையின் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் மன்னாரில் ஆரம்பித்தது. மன்னார் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் மன்னார் நீதிபதியை அச்சுறுத்தியமை தொடர்பாக கோத்தபாய ராஜ்பக்சவிற்கு நெருக்கமானவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனிற்கு மன்னார் நீதிபதி அழைப்பாணை விடுத்தார். இது நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை ஆரம்பித்து வைத்தது. இலங்கை நீதிச் சேவையின் செயலாளர் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டார்.

நீதிபதி நியமனம்
உயர் நீதிமன்றத்திற்கு மஹிந்தவின் செயலாளருக்கு மிகவும் வேண்டியவர் ஒருவரை நியமிக்கும்படி மஹிந்த செய்த பரிந்துரையம் பிரதம் நீதியரசர்  ஏற்றுக் கொள்ளவில்லை.  இது மஹிந்த-ஷிரானி மோதலை மேலும் வளர்த்தது.

திவி நெகும என்னும் சட்டமும் 80 பில்லியன் ரூபாக்களும்
 திவி நெகும சட்டம் நீதித் துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை மேலும் மோசமாக்கியது. திவி நெகும என்பது மாகாணசபையின் அதிகாரங்களை பறித்து மஹிந்தவின் இன்னொரு உடன் பிறப்பான பசின் ராஜபக்சவின் கீழுள்ள பொருளாதாரத் துறை அமைச்சுக்கு கொடுக்கும் சட்டம். இச் சட்ட மூலத்தின் 27 வாசகங்களில் 16 இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணானது என்று இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சில வாசகங்கள் பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஒரு வாசகத்தை நிறைவேற்றுவதற்கு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப் படவேண்டும் என்றும் உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இது ஆட்சியாளர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கியது. விளைவு பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்காவைப் பதவி விலக்கும் பிரேரணை பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எண்பது பில்லியன் ரூபாக்களின் செலவிற்கு பசில் ராஜபக்ச பொறுப்பு என்பது எவ்வளவு சுகமானது?

பொத்திக்கிட்டு போம்மா என்றார் சரத்
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா நீதியரசருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பது இது முதற் தடவை அல்ல என்கிறார். குடியரசுத் தலைவருக்கு எதிராக பிரதம நீதியரசர் ஷிரானி கருத்துத் தெரிவித்திருக்கக் கூடாது என்கிறார் சில்வா. ஷிரானி பேசாமல் பதவியில் இருந்து விலக வேண்டும் என அவருக்கு ஆலோசனை கூறியுள்ளார்

மத உயர்பீடங்களுக்க்குப் பிடிக்கவில்லை
ஷிரானி பண்டாரநாயக்கவைப் பதவிநீக்கம் செய்ய மஹிந்த அரசு எடுக்கும் நடவடிக்கைக்களை பௌத்த சாசன அடிப்படையில் மறுபரிசீலனை செய்யும்படி மல்வத்தை பீடாதிபதியும் அஸ்கிரிய பீடாதிபதியும் வேண்டுகோள் விடுத்தனர். Therefore the essence of Buddhist law is to consider it as the duty to subjugate the unrighteousness and propagate righteousness by controlling behaviour of individuals and ensuring the well being of society என்று அவர்கள் கூறுகின்றனர்.

நீலகண்டனும் காலகண்டனும்
ஷிரானி பண்டாரநாயக்க தன் மீது வைத்துள்ள குற்றச்சாட்டை நீலகண்டனும் நீலகண்டனும் என்ற சட்ட நிறுவனத்தின் மூலம் மறுத்துள்ளார். காலகண்டன் மஹிந்த இதை ஏற்கமாட்டார். அவரது கட்சிக்குப் பெரும்பான்மைப் பலம் பாராளமன்றத்தில் இருக்கிறது. இலங்கைப் பாரளமன்றத்திற்கு விசாரணை செய்து தண்டனை வழங்கும் அதிகாரமுண்டு.  இலங்கையின் பிரதம நீதியரசர் நோய் அல்லது வெளி நாட்டுப் பயணம் போன்றவை காரணமாகச் செயற்பட முடியாமற் போகுமிடத்து ஒரு பதில் பிரதம நீதியரசரை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. ஆனால் அவருக்கு எதிரான விசாரணைக்கு ஒரு பதில்பிரதம நீதியரசரை நியமிக்கும் அதிகாரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே! பாராளமனறம் பிரதம நீதியரசரை விசாரிக்கும் வரை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து செயற்படலாம் என்கின்றனர் சட்ட அறிஞர்கள். முன்னாள் பிரதம நீதிபதி சரத் என் சில்வா தான் மஹிந்தவிற்கு சாதகமாக நடந்து கொண்டதாக பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தெரிவித்தார். அவர் எதிர்பார்த்த பதவியை மஹிந்த ஓய்வு பெற்றபின்னர் கொடுக்காததால் இப்படிச் சொன்னாரா? ஷிரானி பதவியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் என்ன சொல்லப் போகிறார்?

நீதித் துறையில் நிறைவேற்று அதிகாரத் துறையின் தலையீடு
பல சட்டவாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மஹிந்தவின் நிறைவேற்று அதிகாரம் நீதித் துறையில் தலையிடுவதாகக் கருதுகின்றனர். இலங்கை அரசியல் அமைப்பிற்கான 18வது திருத்தம் இலங்கைக் குடியரசுத் தலைவரை ஒரு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியாக மாற்றியுள்ளது. உலகத்திலேயே அதிகாரம் மிக்க தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசத் தலைமை இலங்கையின் குடியரசுத் தலைவரே.

இலங்கையில் எங்கும் முறைகேடு
சிறைச்சாலையில் பெரும் மோதல் நடந்தது. காவற்துறையினர் கையாள வேண்டிய சிறைச்சாலைக் கிளர்ச்சிக்கு இரு நாடுகளுக்கு இடையில் சண்டை நடப்பது போல அதிரடிப்படையினர் கனரக ஊர்திகளில் சிறைச்சாலைக்குள் நுழைந்தனர். காயப்பட்டவர்களை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லவிடாமல் அவர்கள் தடுத்தனராம். இத்தனைக்கும் மோதல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் நடக்கவில்லையாம். சிறைச்சாலையில் தீடீர் சோதனை நடாத்தச் கோத்தபாய ராஜ்பக்சவின் உத்தரவின் பேரில் சென்றவர்களுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில்தான் மோதல் நடந்ததாம். இவர்கள் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ள அங்கு வந்த சிறைக்கைதிகள் அவர்களது துப்பாக்கிகளைப் பறித்து தாக்குதலில் ஈடுபட்டனராம்.  வேண்டப்படாதவர்களைப் போட்டுத் தள்ள நடாத்தப்பட்ட நாடகம் இது என்றும் கூறப்படுகிறது. நீதித்துறை அப்படி காவல்துறை இப்படி என்றால் பிக்கு ஒருவர் பலான படங்களுடன் பிடிபட்டார். காவற்துறை ஒரு படைத்துறை அதிகாரியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 2011இல் தான் நியமித்த ஷிரானியின் மீது இப்போது மஹிந்த ராஜபக்ச பல ஊழல் குற்றச் சாட்டுக்களை முன்வைக்கிறார். 2011 மேமாதம் ஷிரானி நியமித்த போதே அரச வங்கியின் தலைவரான அவரது கணவர் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. மஹிந்தவால் நியமிக்கப்பட்ட ஒருவர் எப்படி உத்தமராக இருக்க முடியும்?


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...