Tuesday 17 April 2012

ஆப்கான் தாக்குதல்கள் உணர்த்துவது என்ன?

ஏப்ரல் 15-ம் திகதி ஆப்கானிஸ்த்தானில் பல நகரங்களில் நன்கு ஒருங்கிணத்து நடாத்திய தாக்குதல்கள் பல செய்திகளைக் கூறுவதுடன் பல சந்தேககங்களையும் கிளப்புகின்றன. 9-11எனப்படும் 2001 செம்படம்பர் 11-ம் திகதி அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயில் பிஏடி(PAD) எனப்படும் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்தான் பிரிவு உருவாக்கப்பட்டது. இதற்கிணங்க அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஆப்-பாக் கொள்கை ஒன்றை வகுத்துக் கொண்டது. அமெரிக்கா பாக்கிஸ்த்தானுடன் தனது உறவையும் புதுப்பித்துக் கொண்டது. சிஐஏயின் பயங்கரவாத எதிர்ப்பு நிலையமும் பிஏடியும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பல அல் கெய்தா எதிர்ப்பு நடவடிக்க்கைகள வெற்றிகரமாகச் செய்து முடித்தன.

வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ  9-11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது. அமெரிக்காவின் படைத்துறையினர் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடப்பாடுடையவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. சிஐஏ உலகின் பல பாகங்களிலும் ஆளில்லாப் விமானத் தளங்களை அமைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகத் தாக்குதல்களில் ஈடுபடுகிறது.

சிஐஏயின் ஆளில்லா விமானங்கள்
சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. இவை உண்மையில் கொல்லும் எந்திரங்கள். ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றியில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது. ஆப்-பாக் எல்லையில் உள்ள அல் கெய்தாவினர் பற்றிய தகவல்களை அறிந்து அதை அமெரிக்கப்படியினருக்கு அறிவித்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னர் அல் கெய்தாவினர் நகர்ந்து விடுவார்கள். தாக்குதலுக்கான பெரிய விமானங்கள் தளத்தில் இருந்து கிளம்பும் தகவல் அல் கெய்தாவினருக்குச் சென்று விடும். சிஐஏ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உடனடித் தாக்குதல்களை மேற் கொள்ளலாம். சிஐஏயின் ஆளில்லாப் போர்விமானங்கள் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான அல் கெய்தா உறுப்பினர்களைக் கொன்றுவிட்டன. அல் கெய்தாவில் இணைபவர்களிலும் பார்க்க அதிகமானவர்களைத் தாம் கொல்கிறோம் என்று சிஐஏ பெருமைப்பட்டுக் கொள்கிறது. கடந்த ஒரு வருடமாக யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாக்கிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைதுகள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர். இதன் உச்சக்கட்டம்தான் பில் லாடன் கொலை. அதைத் தொடர்ந்து இன்னொரு அல் கெய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாக்கியும் கொல்லப்பட்டார். பின்னர் அதியா அப் அல் ரஹ்மான் என்ற ஒரு முக்கிய அல் கெயதா தலைவரும் கொல்லப்பட்டார்.

பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் 2011-ம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா பாக்கிஸ்த்தான் பயணம் மேற் கொண்டிருந்தபோது "We are within reach of strategically defeating al-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல்-கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்து விட்டோம்" என்றார். ஆனால் ஏப்ரல் 15 திகதி பாக்கிஸ்தானில் நடந்த தாக்குதல்கள் அவரது கூற்றை மறுதலிக்கின்றன.

தலிபான் / ஹக்கானி கூட்டமைப்பு

ஆப்கானிஸ்த்தானில் ஏப்ரல் 15-ம் திகதி நடந்த தாக்குதல்கள் தலிபான் அமைப்பும் ஹக்கானி அமைப்பும் இணைந்து நடாத்திய தாக்குதல்கள் ஆகும். ஆப்கானிஸ்த்தானில் கட்டத் தொடங்கி பாதியில் நிற்கும் பல மாடிக் கட்டிடங்கள் பல உண்டு. அவற்றை தீவிரவாதிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பெண்கள் போல் பார்தா அணிந்து பல நகரங்களுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவினர். ஆங்காங்கு இருக்கும் சோதனைச் சாவடிகளுக்குள் அவசரமாக போக வேண்டும் என்று ஏதாவது சாட்டுக்களைச் சொல்லி காவலாளியின் கையில் சில பண நோட்டுக்களைத் திணித்துவிட்டு ஆப்கானிஸ்தானுக்குள் எங்கும் செல்லலாம். பாதியில் நிற்கும் பல் மாடிக் கட்டிடங்களில் அவர்கள் நிலை எடுத்துக் கொண்டு உழங்கு வானூர்தித் தாக்குதல்களுக்கும் கனரகத் துப்பாக்கித் தாக்குதல்களுக்கும் எதிராக சுமார் 20 மணித்தியாலங்கள் தாக்குப் பிடித்தனர். மாடிக்கட்டிடத்தின் தூண்களுக்குப் பின்னால் மறைந்திருந்து கொண்டு எறிகணை செலுத்திகள் மூலம் rocket propelled grenades தமது தாக்குதல்களை மேற்கொண்டனர். ஞாயிறு மதியத்திற்கு முன்னர் தொடங்கிய தாக்குதல்கள் திங்கள் காலைவரை தொடர்ந்தது.

ஆப்கான் தாக்குதல்கள் உணர்த்துபவை:
1. இசுலாமியத் தீவிரவாதம் முறியடிக்கப்பட முடியாத ஒன்று. அது பாலஸ்த்தீனம் முதல் பாக்கிஸ்த்தான் வரை பல உலகப் பிரச்சனைகளைத் தன்னுள் கொண்டுள்ளது. அவை சுமூகமாகத் தீர்க்காமல் திவிரவாதம் ஒழியாது.

2. உலகின் மிகப் பெரிய உளவுத் துறையாலும் தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்வு கூறமுடியாது. அல்லது இப்படி ஒரு தாக்குதல் ஆப்கானிஸ்த்தான் அரசை மேலும் மேற்குலகைச் சார்ந்து நிற்கச் செய்யும் என்பதற்காக அமெரிக்கா இத்தாக்குதல்கள் நடப்பதைத் தடுக்காமல் இருந்ததா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

3. இசுலாமியத் தீவிரவாதிகள் தாம் பலமிழந்து விடவில்லை என்பதை தமது ஆதரவாளர்களுக்கு உணர்த்த வேண்டிட அவசியம் ஏற்பட்டுள்ளது

4. பல பின்னடைவுகளுக்கு மத்தியிலும் அல் கெய்தா இனித் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகம் என்று எண்ணத் தோன்றும். ஆனால் அல் கெய்தா தனது உத்திகளை மாற்றிக் கொண்டுள்ளது. அண்மைக் காலமாக அல் கெய்தா இயக்கம் தனது நடவடிக்கைகளை மட்டுப் படுத்திக் கொண்டது. ஒரு தீவிரவாத கரந்தடி இயக்கத்திற்கு எப்போது பதுங்க வேண்டும் என்று தெரியும். அல் கெய்தாவும் தலிபானும் தாம் பதுங்கிக் கொண்டு பாக்கிஸ்தானின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் ஹக்கானி இயக்கத்தை ஆப்க்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தத் இவ்விரு இயக்கங்களும் தூண்டின. ஹக்கானியை இந்தியா ஆப்கானிஸ்த்தானில் காலுன்றுவதைத் தடுக்க பாக்கிஸ்த்தான் பயன்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

5. பல நேட்டோப் படைகளின் நிலைகளிலும் தூதுவரகங்களிலும் தாக்குதல்கள் நடாத்தப்பட்ட போதும் நேட்டோப் படைகளை சேர்ந்த எவரும் கொல்லப்படவில்லை. அத்துடன் பாரிய இழப்புக்கள் எதுவும் நடக்கவில்லை. இதனால் நடந்த தாக்குதல் அல் கெய்தா/ஹக்கானியின் தாக்கும் திறனில் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

6. இனிப் பாகிஸ்த்தானும் அமெரிக்காவும் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக மேலும் நெருங்கிச் செயற்படுவார்கள்

7. ஆப்கானிஸ்த்தானுக்குள் பெருமளவு ஆயுதங்களை தீவிரவாதிகளால் கடத்திச் செல்ல முடியும்.

8. ஹக்கானி அமைப்பு பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது.

9. நேட்டோப் படைகள் விலகிய பின்னர் ஆப்கானிஸ்த்தானை இசுலாமியத் தீவிரவாத்கள் கைப்பற்றலாம்.

தொடர்புடைய பதிவு: மீண்டும் புதிய உத்தியுடன் மீசையை முறுக்கும் அல் கெய்தா/தலிபான் இயக்கங்கள்

5 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...