Thursday 29 March 2012

ராஜபக்சவின் எதிர்காலம்

உலகத்திலேயே அதிக அதிகாரம் கொண்ட மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச. தனது மக்களிடம் அசைக்க முடியாத செல்வாக்குப் பெற்றிருந்தார். இவரது செல்வாக்கு நேர்மை நியாயத்தின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டதல்ல. சந்திரிக்கா பண்டாரநாயக்க இலங்கைக் குடியரசுத் தலைவராக இருந்த போது பிரதம மந்திரியாக யாரை நியமிப்பது என்ற கேள்வி வந்த போது அவரின் அரசியல் செல்வாக்கிற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த சிங்கள தீவிரவாதக் கட்சியான ஜனதா விமுக்திப் பெரமுனையைத் திருப்திப்படுத்த அவர்களிடை செல்வாக்குப் பெற்றிருந்த மஹிந்த ராஜபக்ச பிரதம மந்திரியாக்கப்பட்டார். அதில் இருந்து அவர் தனது செல்வாக்கைக் கட்டி எழுப்பி தொடர்ந்து வந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று சந்திரிக்கா பண்டார நாயக்காவை ஓரம் கட்டி தனது கட்சியான் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைத் தன் குடும்பவசமாக்கினார். பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மஹிந்தவிற்கு பல நாடுகள் உதவின. முக்கய உதவிகள் இந்தியாவிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் கிடைத்தன. இதில் இந்தியாவிற்கு விடுதலைப்புலிகளை ஒழிக்க வேண்டும் என்ற தேவை இருந்தது. மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்தார் இந்தியாவின் போரை தான் நடத்தி முடித்ததாக.


சமாதானப் பங்கிலாபம்(Peace dividends) சரியாகப் பங்கிடப்படவில்லை.
போருக்கு பின்னரான் "அபிவிருத்திப் பணி" எனப்படும் பொருளாதாரச் சுரண்டலில்  இலங்கை சீனாவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தது. போருக்குப் பின்னர் நடந்த இலங்கைக் குடியரசுத் தேர்தலில் அமெரிக்கா சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாகச் செயற்பட்டமை மஹிந்த ராஜபக்சவை அதிகம் சீனாபக்கம் நகர்த்தியது.

இந்தியாவின் கையாலாகத் தனம் அமெரிக்காவைக் களமிறக்கியது.
இலங்கையில் தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழிப்பதே தனது பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்பட்ட இந்திய ஆட்சியாளர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கோட்டை விட்டனர்.  இந்தனால் இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகரித்தது. இலங்கை இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்துக்குள் உட்பட்ட நாடு என்று இந்தியாவின் போக்குற்கு விட்டால் இலங்கை இன்னொரு கியூபா ஆகிவிடும் என்று உணர்ந்த அமெரிக்கா இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டது. இலங்கைக்கு எதிராக செயற்படத் தொடங்கிய அமெரிக்கா பல தடைகளை இந்தியாவிடமிருந்து எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இந்தியா பல வைக்களிலும் செயற்பட்டது. பல சிரமங்களுக்கு மத்தியில் இந்தியாவின் ஆதரவை அமெரிக்கா பெற்றுக் கொண்டது. தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்த பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்சவிற்கு ஒரு கடிதம் எழுதினார். இலங்கையை இந்தியா அக்கடிதத்தில் மன்றாடியிருந்தது என்று இலங்கை அரசியல்வாதிகள் தெரிவித்தனர். இந்திய அரசறிவியலாளர் சூரியநாராயணன் அப்படி ஒரு கடிதம் இந்தியா எழுதியிருந்திருக்கத் தேவையில்லை என்றார். இலங்கையின் கையில் இந்தியா தொடர்பான ஒரு பிடி இருந்த படியால்தான் அப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அது இலங்கையில் நடந்த போர்க்குற்றதில் இந்தியாவின் பங்களிப்பைத் தவிர வேறு என்ன?

ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னர் ராஜபக்ச
ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைகு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்னர் ராஜபக்ச தனது அரசியல் சகாக்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை. கொழும்பில் உரையாற்ற விருந்த அமெரிக்கர்களை தடை செய்தார். இந்தியா கஷ்மீரில் செய்யும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தப் போவதாகச் சொன்னார். அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை அரங்கேற்றினார். தனது சகாவான விமல் வீரவனசவை அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்க அறைகூவல் விடுக்கச் செய்தார். தான் என்ன செய்ய வேண்டும் என்று தனக்கு யாரும் சொல்லத் தேவையில்லை என்றார். அவரது அடியால் மேர்வின் சில்வா ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கருத்துத் தெரிவித்த ஊடகவியலாளர்களின் கை கால்களை முறிப்பேன் என்றார். ஆக மொத்தத்தில் ராஜபக்ச ஜெனீவாத் தீர்மானத்தை ஏற்கும் நிலையில் இல்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாயின் இலங்கைப் படையினரின் போர்க்கால அத்து மீறல்களை விசாரித்துத் தண்டிக்க வேண்டும். இது "மஹிந்த சிந்தனைக்கு" முற்றிலும் முரணானது.

இரு தலைக் கொள்ளி எறும்பாக மஹிந்த
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றினால் உள்ளூரில் பலத்த எதிர்ப்பை மஹிந்த சந்திக்க வேண்டும். நிறைவேற்றாவிட்டால் பன்னாட்டு மட்டத்தில் பெரும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும். 1983இல் தமிழர்களின் நண்பனாகக் களமிறங்கிய இந்தியா பின்னர் 1987இல் தமிழர்களின் மோசமான எதிரியாக மாறியது. அது போலவே இதுவரை சிங்களவர்களின் சில்லறைக் கைக்கூலி போல் செயற்பட்டு அவர்களுக்கு சகல உதவிகளையும் செய்து வந்த இந்தியா இனி அவர்களின் காலை வாரிவிட்டு அவர்களுக்கு எதிராக செயற்படலாம். சீனா மட்டுமே இப்போது மஹிந்தவின் நண்பன். அந்த நட்பு அவருக்கு பல எதிரிகளை உருவாக்கும்.


மூன்று மாதங்களின் பின்னர் அமெரிக்கா மேலும் தீவிரமாகும்
இலங்கையின் அடுத்த நகர்வுகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனிக்கும். மூன்று மாதங்களின் பின்னர் அமெரிக்கா தனது காய்களை தீவிரமக நகர்த்தும். கியூபா போன்ற இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்ட நாடுகளுக்கு  இலங்கையின் உண்மையான அடைகுமுறை பற்றி உணர்த்தப்படும். அதற்குரிய வேலைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. பன்னாட்டு அறிஞர்கள் குழு ஜெனீவாத் தீர்மானம் வெளிவந்தவுடன் இலங்கை இன்னும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை விட்டது. இது அமெரிக்காவின் வேண்டுதலின் பேரில் நடந்திருக்கலாம். ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை அது அமெரிக்காவின் தீர்மானம். அது நிறைவேற்றப்பட்ட பின்னர் அது ஐநா மனித உரிமைக் கழகத்தின் தீர்மானம். இனி அந்த தீர்மானம் தொடர்பாக இலங்கை என்ன செய்கிறது என்பதை மனித உரிமைக் கழகம் அவதானிக்கும். இலங்கைக்கு ஆலோசனைகள் வழங்க முன்வரும். அவற்றை மஹிந்த நிராகரிப்பார். ஜெனீவாத் தீர்மானத்தின் முக்கிய அம்சம் இலங்கை மனித உரிமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதும் மனித உரிமைக் கழகம் அது தொடர்பாக 2014 செப்டம்பரில் நடக்க விருக்கும் மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் அறிக்கை சமர்ப்பிக்கப் படவேண்டும் என்பதே.

 இந்தியாவின் போர்க்குற்றம் அம்பலத்துக்கு வரும்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் இந்தியாவின் பங்களிப்பு அம்பலத்திற்கு வரும். எத்தனை இந்தியப் படையினர் நேரடியாக ஈடுபட்டிருந்தனர் என்பதும் உண்மையிலேயே மூவாயிரத்திற்கு மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப்பட்டனரா என்பதும் சிவ சங்கர மேனனின் திருவிளையாடல்கள் நாராயணின் லீலைகள் கருணாநிதியும் சிதம்பரமும் சேர்ந்து ஆடிய நாடகங்கள் கனிமொழி, ஜகத் கஸ்பர் போன்றோரின் இறுதிக் கட்டச் சதிகள் போன்றவை அம்பலமாகும்.

செய்மதிப் படங்கள்
அமெரிக்காவிடமும் இந்தியாவிடமும் இலங்கையின் இறுதிப் போரின்போது நடந்த கொடூரங்களுக்கான ஆதார செய்மதிப் படப் பதிவுகள் எப்படியாவது இனி அம்பலத்திற்கு வரும். அது பெரிய போர்க்குற்ற சாட்சியாக அமையும்.

ஜீ எல் பீரிஸ் மீண்டும் தாவுவார்.
ஜெனீவாவில் நடந்த 19வது மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் பெரும் சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளானவர் மஹிந்தவின் வெளிநாட்டு அமைச்சர் ஜீ எல் பீரிஸ். இவர் மஹிந்தவால் ஜெனீவாவில் வைத்துக் கடுமையாகத் கண்டிக்கப் பட்டுள்ளார். மஹிந்த தனது வெளிநாட்டமைச்சர் பீரிஸை கடுமையான தூஷண வார்த்தைகளால் திட்டியதாகவும் அதனால் அவர் அமர்ந்திருந்த ஆசனத்தயே  ஈரமாக்கி விட்டதாகவும் கொழும்பில் கதைகள் அடிபடுகின்றனவாம். பீரிஸ் கட்சி தாவுவதில் பிரபலமானவர்.  விரைவில் ஜீ எல் பீரிஸ் மஹிந்தவை விட்டு விலகலாம்.  ஜீ எல் பீரிஸ் உள் இருந்து கொண்டே அமெரிக்காவின் உளவாளியாகச் செயற்படலாம். அதனால் அவரை மஹிந்த பதிவியில் இருந்து தூக்கி எறியலாம. இந்த இரணு முறையில் எந்த முறையில் பீரிஸ் பதவி விலகினாலும்  அப்போது மஹிந்தவின் முடிவு ஆரம்பமாகிவிட்டது என உறுதியாகக் கூறலாம்.


2014 செப்டம்பர் ராஜபக்சவிற்கு பெரும் திருப்பு முனையாக அமையும்
2014 செப்டம்பரில் நடக்க இருக்கும் மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் ராஜபக்சதான் முக்கியத்துவம் பெறுவார். அதில் அல்லது 2015 மார்ச்சில் ராஜபக்சவிற்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அப்போது அவர் மும்மர் கடாஃபி போல் பன்னாட்டு அரங்கில் தனிமைப் படுத்த்தப் பட்டு விடுவார். அவரும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்சவும் மேலும் பல இலங்கைப் படைத் துறையினரும் பன்னாட்டு நீதி விசாரணைக்கு உடபடுத்தப் படுவர். 2016இற்கும் 2017இற்கும் இடையில் அவர்கள் தண்டிக்கப்படலாம். அப்போது பான் கீ மூனோ இந்தியாவின் விஜய் நம்பியாரோ ஐக்கிய நாடுகள் சபையில் இருக்க மாட்டார்கள். இந்தியாவில் நிலைமை தலை கீழாக மாறியிருக்கும். நேரு-கான் குடுமபம் இத்தாலியில் குடியேறி இருக்கும். திருப்பதிக் கோவிலில் பரிகாரம் தேட முடியாமல் இருக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...