Tuesday 14 February 2012

ஐநா மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு என்ன நடக்கும்?

நாற்பத்தேழு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தின் 19வது கூட்டத் தொடர் 27-02-2012இல் இருந்து 23-03-2012 வரை 26 நாட்கள் சுவிட்சலாந்தின் ஜெனிவா நகரில் நடக்கவிருக்கிறது. இதில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் வருமா என்பது இப்போது பெரிதாக அடிபடுகிறது. இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக உரத்துக் குரல் கொடுத்துவரும் கனடாவும் ஒஸ்ரேலியாவும் இந்த 47 நாடுகளில் அடங்கவில்லை. இவை இரண்டிற்கும் அடுத்தபடியாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரித்தானியாவும் உறுப்புரிமையுள்ள 47 நாடுகளில் இல்லை. இந்தியா, சீனா, இரசியா போன்ற இலங்கையைப் போர்க்குற்றத்தில் இருந்து பாதுகாக்கக்கூடிய நாடுகளும் இலங்கைக்குப் பொறுப்பற்ற விதத்தில் ஆதரவு தெரிவிக்கக் கூடிய மலேசியா, பங்களாதேசம் போன்ற நாடுகள் உறுப்புரிமையுடன் உள்ளன.


இலங்கையை இந்தியாவை விட 19 நாடுகள் ஆதரிக்கும்.
47 நாடுகளில் இந்தியாவை விட வேறு 19 நாடுகள் ஆதரவு வழங்கும் சாத்தியம் உள்ளன. அண்மைய நிகழ்வுகளின் பின்னர் மாலைதீவு இலங்கைக்கு சாதகமான நிலையை எடுக்காமல் போகலாம். லிபியாவும் அப்படியே. இவ்விரண்டு நாடுகளும் தற்போது உறுப்புரிமை பெற்றுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சில ஆபிரிக்க நாடுகளும் சில தென் அமெரிக்க நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு நிலையை எடுக்கலாம்.

இம்முறை இந்தியா எப்படிச் சதி செய்யும்?

2009-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை ஐநா மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவந்த போது அதை இந்தியா பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றி ஈழத்தமிழர்களுக்கு எதிரான பெரும் துரோகத்தைப் புரிந்தது. இந்தியாவின் வற்புறுத்தலின் பேரில் தென் ஆபிரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. இம்முறை 47 நாடுகளில் இலங்கைக்கு 19 நாடுகள் ஆதரவு தரக்கூடிய நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதைக்கணக்கிட்ட ஐக்கிய அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவுடன் இதுபற்றிப் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளது. இந்தியா பாரதப் போரில் கண்ணன் எடுத்த நிலைப்பாட்டை எடுக்கலாம். கண்ணன் பாண்டவர்களுடன் ஆயுதம் ஏந்தாமல் நிற்க கண்ணனின்யாதவப் படைகள் துரியோதனாதியருடன் சேர்ந்து நின்றன. இது போல இந்தியா அமெரிக்காவுடன் சேர்ந்து நின்று கொண்டு சில நாடுகளை இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கச் சதி செய்யலாம். இலங்கைப் போர்க்குற்றத்தில் இந்தியாவைச் சிக்கவைக்கக்கூடிய ஆதாரங்கள் இலங்கையிடம் உண்டு என்று ஒரு இந்தியப் அரசியல் ஆய்வாளர் தெரிவித்திருந்தமையை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்.

காணமற்போன ஐநா நிபுணர் குழு அறிக்கை
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அறிக்கையைப் பற்றி இப்போது ஐக்கிய அமெரிக்கா அதிகம் பேசுவதாகத் தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக இந்த அறிக்கை காணமற்போய் இருந்தது.  ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இந்த நிபுணர்குழு அறிக்கைபற்றி வலியுறுத்தியது. இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் பரிந்துரைகளை ஐ.நா நடைமுறைபடுத்த வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், ஐ.நா பாதுகாப்புச் சபை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய அமைப்புகளுக்கு அனுப்பப்படவுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் அமைப்புக்கள்
1983-ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் என்ற போர்வையில் இனக்கொலை நடைபெற்றமையைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகக் கூட்டங்களில் இலங்கைத் தமிழர் தரப்பும் பங்கு கொள்கின்றன. ஆனால் இலங்கையில் இந்தியாவும் அவர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தியும் சிலரைத் தங்கள் கைக்கூலிகளாக்கியும் உள்ளன. அதில் ஒருவர் இப்போது மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவதை விடுத்து தமிழர்கள் இந்தியாவிற்கு வால் பிடிப்பதே மிக முக்கியம் என்று கூறுவதையே தனது தலையான கடமையாகக் கொண்டுள்ளார்.
 
தண்டனையும் இருக்காது கண்டனமும் இருக்காது வேண்டுகோள்கள் மட்டுமே இருக்கும்.
27-02-2012இல் ஆரம்பமாக விருக்கும் ஐநா மனித உரிமைக் கழகத் கூட்டத் தொடரில் இலங்கைக்கு தண்டனை கொடுக்கக் கூடியதாகவோ அல்லது கண்டனம் தெரிவிக்கக் கூடியதாகவோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது. இலங்கைக்கு சிலவேண்டுதல்களை விடுவிக்கும் தீர்மானமே நிறைவேற்றப்படும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுதல், போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுதல், மனித உரிமைகளை மேம்படுத்துதல், தமிழர்களுடன் இணக்கப்பாடு ஏற்படுத்தக் கூடிய வகையில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணுதல், சிறையில் விசாரணையின்றி இருப்போரை விடுதலை செய்தல் போன்றவை ஒரு வேண்டுகோளாக விடுக்கப்படும். திரை மறைவில் சரத் பொன்சேக்காவை விடுவிக்க நிர்ப்பந்திக்கப்படும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...