Sunday 12 February 2012

இலங்கையில் அமெரிக்க இந்தியக் கூட்டுச் சதி

இலங்கை இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்கு உள்பட்டது என்பதை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிடினும் இலங்கையில் இந்தியாவின் சில இணக்கப்பாட்டுடன் காய்களை நகர்த்துவது வழக்கம். இலங்கையை தனது "வழிக்குக் கொண்டுவரும்" அமெரிக்க முயற்ச்சியில் அமெரிக்கா இந்தியாவுடன் அண்மைக் காலங்களாக இணைந்து செயற்படத் தொடங்கியுள்ளது. இலங்கையை தனது "வழிக்குக் கொண்டுவரும்" அமெரிக்க முயற்ச்சியில் முக்கிய அம்சம் இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான போர்க் குற்றச் சாட்டும் இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகக் கூட்டமும் ஆகும். இலங்கை ஆட்சியாளர்கள் இழைத்த போர்க்குற்றம் பற்றி ஆர்ஜெண்டீனாவில் இருந்து பாக்கிஸ்த்தான் வரை பல பத்திரிகைகள் இப்போது பத்தி பத்திகளாக எழுதுகின்றன. இலங்கைப் போர்க்குற்றம் இப்போது தண்டிக்கப்படவேண்டிய ஒன்று என்ற கருத்துருவாக்கம் பன்னாட்டு அரங்கில் வலுப்பெற்று வருகிறது.

இலங்கை போர்க்குற்றம் வலுப்பெற்றமைக்கு முக்கிய காரணம் பன்னாட்டு நெருக்கடிக் குழு, பன்னாட்டு மன்னிப்புச் சபை போன்றவை இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தண்டிக்கப்படாவிட்டால் அது மேலும் பல ஆட்சியாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்து விடும் என்று வலியுறுத்துவதே. இலங்கையின் போருக்கு உதவிய பல நாடுகள் தமிழர்களுக்கு எதுரான போரில் சில ஆயிரம் அப்பாவிகள் கொல்லப்படலாம் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டமையும் சரணடைய வந்தவர்களைக் கொன்றமையும் போருக்கும் பின்னரும் தமிழர்களுக்கு எதிரான மோசமானவன்முறைகள் தொடர்வதும் இனப்பிரச்சனை தீர்வு ஏதும் இன்றி இழுபடுவதும் அந்த நாடுகளில் சிலவற்றிற்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. அந்நாடுகள் ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற உணர்வைக் கொண்டுள்ளன.

விசயமில்லாமல் போன "கிருஷ்ண விஜயம்".
இலங்கையை வழிக்குக் கொண்டுவரும் அமெரிக்க இந்தியக் கூட்டு முயற்ச்சியின் ஒரு அம்சமாக இலங்கைக்குச் சென்ற இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் இலங்கையில் காதில் பூச்சுற்றி அனுப்பிவிட்டார்கள். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தனது பயணத்தின் முடிவில் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது இலங்கை அதிபர் ராஜபக்ச தன்னிடம் 13-ம் திருத்தத்தின் மேல் சென்று தீர்வு வழங்குவதாக உறுதியளித்தார் என்றார். அதற்குப் பின்னர் ராஜபக்ச தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தான் அப்படி ஒரு வாக்குறுதி இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவிற்கு வழங்கவில்லை என்றார். அப்படியென்றால் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் தான் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் செய்தது போல் யாரோ யாருக்கோ எழுதிய வைத்ததை கொழும்புப் பத்திரிகையாளர் மாநாட்டில் வாசித்தாரா? அல்லது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பொய் சொன்னாரா? அல்லது மஹிந்த பொய் சொல்கிறாரா? இதுவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா மௌனமாக இருப்பது ஏன்?

அமெரிக்காவின் அதிரடிக் காய் நகர்த்தல்கள்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் பரிதாபகரமான இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் இந்திய அதிகாரிகளுடன் திடீர்ப் பேச்சு வார்த்தை ஒன்றை மேற்க் கொண்டார்.  அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர்(The US ambassador at large for war crimes) Stephen Rapp இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அத்துடன் நிற்காமல் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி அரசத் துறைச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கை அனுப்பப்பட்டார். 

அமெரிக்கச் சதி.
அமெரிக்காவிடம் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பான ஆதாரங்கள் நிறைய உண்டு. அமெரிக்கா அதை தனது தேவைக்குப் பாவிக்கும் என்று இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது இங்கு அதைப்பற்றி எழுதப்பட்டது அதைக் காண இங்கு சொடுக்கவும்: எல்லாவற்றையும் மேலுக்கு இருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அமெரிக்கா தன்னிடம் உள்ள போர்க்குற்ற ஆதாரங்களை முன்வைத்து இலங்கையை மிரட்டி தன் வழிக்குக் கொண்டுவந்துவிட்டதாக லங்காஇநியூஸ் இணையத் தளம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவுடன் செய்யவிருக்கும் இரகசிய உடன்பாட்டில் அதில் மூன்று முக்கிய அம்சங்கள் பகிரங்கப்படுத்தப் பட்டுள்ளன:
1. முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மன்னிப்புக் கொடுத்து விடுதலை செய்தல்.
2. இலங்கை அமைத்த நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற கால அட்டவணையுடன் கூடிய ஒரு செயற்திட்டத்தை உருவாக்குதல்.
3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஒரு உடன்படு ஒப்பந்தம் செய்தல்.

இன்னொரு போர்க்குற்றவாளியான சரத் பொன்சேகாவை அமெரிக்கா தனது கைக்கூலி என்பதற்காகப் பாதுகாக்கிறது.
இலங்கை அமைத்த நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவின் பரிந்துரைகள் ஏற்கனவே தமிழர்களால் நிராகரிக்கப்பட்டவையே. அதில் எந்த அளவிலான அதிகாரப் பரவலாக்கம் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும் என்று சொல்லப்படவில்லை. திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்க்கப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தம் பிரயோகிக்கப்படாமல் தவிர்தது அமெரிக்காவின் சதியே. நல்லிணக்க ஆணைக்குழு போர்க்குற்றம் நிகழ்ந்ததாக தெரிவிக்கவே இல்லை. இங்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளும் அதில் குறிப்பிட்டுள்ள போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றி கருத்தும் புறந்தள்ளப்பட்டுள்ளது. சிங்களவர்களுடன் ஒப்பந்தம் செய்து சலித்துப் போன தமிழர் தரப்பு மீண்டும் ஒரு ஒப்பந்தம் அவர்களுடன் செய்யப் போகிறதா?

1981இல் அமெரிக்கக் கைக்கூலியும் தந்தை செல்வாவின் மருமகனுமான பேராசிரியர் ஏ ஜே வில்சன் (இன்னோரு கைக்கூலியான நீலன் திருச் செல்வமும் அவருடன் இணைந்திருந்தார்) இலங்கையில் தங்கி இருந்து இலங்கை இனப்பிரச்சனைக்கு மாவட்ட சபைதான் ஒரு தீர்வு என்று அவரின் ஆலோசனைகளுடனும் பங்களிப்புக்களுடனும் முன்வைக்கப்பட்ட மாவட்ட சபைத் திட்டத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஏற்க மறுத்த  போது அதை ஏற்றும் கொள்ளும்படி அமெரிக்கா வற்புறுத்தியது. மாவட்ட சபைத் தேர்தலில் கூட்டணியினர் பங்கு பற்றினர். விளைவு யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. தமிழர்கள் மீது மேலும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. மாவட்ட சபைத் திட்டத்தை முன்வைத்த பேராசிரியர் ஏ ஜே வில்சன் அப்போது ஒரு கருத்தையும் கூறியிருந்தார். "இதிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரம் தமிழர்களுக்கு ஒரு அரசு வழங்கினால் அது தற்கொலைக்கு ஒப்பானதாகும்". அப்போது சிங்களவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவும் என்று அஞ்சி இருந்தனர். இப்போது தமிழர்களுக்கு உதவ ஒருவரும் இல்லை என்று சிங்களவர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச தப்பித் தவறி ஒரு அதிகாரப் பரவலாக்கத்தை தமிழர்களுக்கு கொடுக்க முன்வந்தால் அரசியல் வங்குரோத்து நிலையில் இருக்கும் ஜேவிபி எனும் பேரினவாதக் கட்சியும் பௌத்த அடிப்படை வாதிகளான ஜாதிக ஹெல உருமயவும் தமது அரசியல் செல்வாக்கை வளர்க்க தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தை எதிர்க்கும். தங்கள் நாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்க தமது இன்னுயிர் நீத்த சிங்களப் படை வீரர்களின் தியாகத்தை மஹிந்த நாட்டை மீண்டும் நாசமாக்குகிறார். நாடு மீண்டும் பிளவு படப்போகிறது என்ற கருத்தை முன்வைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் இதற்கு ஆதரவான ஒரு கருத்தைக் கொண்டவர்கள் களமிறங்கி ராஜபக்சக்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார்கள் என்று களமிறங்கும். பௌத்த பிக்குக்கள் தெருவில் இறங்கிப் போராடுவார்கள். தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ராஜபக்சவின் ஆட்சி கவிழும் சூழ்நிலை உண்டாகும். இவை மட்டுமல்ல இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படுவதை டில்லியின் தென்மண்டலப் பார்ப்பனர்கள் எப்படியும் சதி செய்து தடுப்பார்கள். பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது போல் அமெரிக்கா முன்வைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு-ராஜபக்ச ஒப்பந்தம் கிழித்தெறியப்படும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...