Saturday 5 November 2011

சீனாவும் இரசியாவும் இணைய ஊடுருவிகள்(Hackers) மூலம் தகவல்கள் திருடுகின்றன - அமெரிக்கா குற்றச் சாட்டு.

சீன இரசிய அரசுகளின் ஆதரவுகளுடன் செயற்படும் இணைய ஊடுருவிகள்(Hackers)  தனது நாட்டின் பொருளாதார தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடுகின்றன என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவைக்கு (காங்கிரஸ்) சமர்ப்பிக்கை பட்ட "Foreign Spies Stealing US Economic Secrets in Cyberspace" என்னும் தலைப்பிலான அறிக்கையிலேயே இக்குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. ஏற்கனவே பல நாடுகளிலுமிருந்து பல ஊடுருவிகள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் கணனிகளை ஊடுருவுவதாகக் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது.

2009இல் சீனாவிலிருந்தும் இரசியாவில் இருந்தும் இணைய ஊடுருவிகள்(Hackers) அமெரிக்க மின்சார வழங்கல் கட்டமைப்பின் இணையங்களை ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஊடுருவிகள் அமெரிக்காவுடன் ஒரு போர் நடக்குமிடத்து அமெரிக்காவின் மின் விநியோகத்தை எப்படிச் சிதைப்பது என்பது பற்றியே அறிய முற்பட்டனர்.

இணையவெளி ஊடுருவல்கள்
கணனித் துறையில் ஆர்வம் மிக்க இளைஞர்கள் இணையவெளியூடாக மற்றவர்களின் கணனிகளை ஊடுருவது வழக்கம். இது ஒரு திருட்டுத் தொழிலாகவும் மாறியது. சிலர் மற்ற நாட்டுப் படைத் துறையினரின் கணனிகளை ஊடுருவதும் உண்டு. உலகெங்கும் நடக்கும் கணனி ஊடுருவல்களில் காற்பங்கு சீனாவில் இருந்து மேற் கொள்ளப் படுகின்றன என்கிறார்கள் இணையவெளி வல்லுனர்கள். இவற்றில் பெரும் பகுதி சீனப் படைத்துறையுடன் சம்பந்தப்பட்டவை. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் திகதி அமெரிக்கப் படைத்துறைத் தலைமையகமான பெண்டகனின் கணனிகளை சீனாவில் இருந்து ஊடுருவியமை கண்டறியப்பட்டது. ஆனால் இவை சீனப் படைத்துறையில் இருந்து மேற் கொள்ளப்பட்டதா என்பதை பெண்டகனால் உறுதி செய்ய முடியவில்லை.

இணையவெளிப் போராளிகள்
சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. இவை "இரவு யாளி" என்னும் பெயரில் பிரித்தானியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது.

இப்போது அமெரிகாவின் பொருளாதார மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான தகவல்களை சீனாவும் இரசியாவும் இணைய ஊடுருவிகள்(Hackers)  திருடுகின்றன என்ற குற்றச் சாட்டு இப்போது பகிரங்கமாக முன்வைக்கப்பட்டுள்ளது. "Foreign Spies Stealing US Economic Secrets in Cyberspace" என்னும் தலைப்பிலான அறிக்கையில் இனி வரும் காலங்களில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான தகவல்களை திருடுவது இன்னும் அதிகரிக்கும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கடாஃபிக்கு எதிரான் போரில் ஊடுருவலைக் கைவிட்ட அமெரிக்கா
கடாஃபிக்கு எதிரான தாக்குதல்களை நேட்டோப் படையினர் ஆரம்பிக்கும் போது அமெரிக்கா லிபியாவின் இணையக் கட்டமைப்புக்களுக்குள் ஊடுருவி லிபியாவின் விமான எதிர்ப்புக் கட்டமைப்பைச் சிதைக்கும் திட்டத்தை இறுதியில் கைவிட்டது. தான் அப்படிச் செய்தால் சீனாவும் இரசியாவும் எதிர்காலத்தில் இந்த முறையைக் கூசாமல் பின்பற்றும் என அஞ்சியே அமெரிக்கா இத் திட்டத்தைக் கைவிட்டது.

இனிவரும் காலங்களில் இணையவெளிகளி ஊடுருவுவதும் அதைத் தடுப்பாதும் பெரும் போட்டியாக பல நாடுகளிடை அமையப் போகிறது.

Friday 4 November 2011

நெருக்கும் ஐரோப்பிய ஒன்றியமும் கிறுக்குப் பிடித்த கிரேக்கமும்


கிரேக்க நாடு ஒரு பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடு. ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவும் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாடுகள். ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூரோ நாணய வலயத்திலும் கிரேக்கம் உறுப்புரிமை பெற்றுள்ளது. ஐரோப்பாவிலேயே ஊழல் குறைந்த நாடு கிரேக்கம். ஐரோப்பாவிலேயே கிரேக்கர்கள்தான் அதிக நேரம் வேலை செய்பவர்கள். 2009-ம் ஆண்டில் இருந்து கிரேக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 2010/11இல் அது 8% வீழ்ச்சியைக் கண்டது. கட்டிட நிர்மாணத்துறை 73% வீழ்ச்சியைக் கண்டது. 2008இல் 7% மாக இருந்த வேலையற்றோர் தொகை 2011இல் 16%ஐத் தாண்டியது.

ஒரு நாட்டில் மக்கள் வேலையை இழக்கும் போது அந்நாட்டின் அரச நிதியத்திற்கு இரு முனைப் பாதிப்பு ஏற்படுகிறது. ஒன்று வேலையை இழக்கும் நபர் செலுத்தும் வருமான வரி இழப்பு மற்றது வேலையை இழந்தவர்க்கான பராமரிப்புச் செலவு அரசுக்கு அதிகரிக்கும். யூரோ நாணயத்தில் கிரேக்கம் இணைந்த பின்னர் கிரேக்க அரசு தனது செலவீனங்களைக் கன்னா பின்னா என்று அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அத்துடன் பல கிரேக்கச் செல்வந்தர்கள் பரவலாக வரி ஏய்ப்புச் செய்யத் தொடங்கிவிட்டனர். இவை யாவும் கிரேக்க அரசின் கடன் பளுவை கடுமையாக அதிகரிக்கச் செய்தது. கிரேக்க அரச கடன் 340பில்லியன் யூரோக்களாக அதிகரித்தது. பதினொரு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட  ஒரு நாட்டுக்கு இது பெரும் கடன் சுமையாகும். எரிபொருள் விலை அதிகரிப்பு உலகப் பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றை எதிர் கொள்ளும் நிலையில் கிரேக்கம் இருந்திருக்கவில்லை.

பெரியண்ணன் வைச்சதுதான் சட்டம்
ஒரு நாட்டுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அந்நாடு தனது நாணய மாற்று வீதத்தையும் வங்கிக் கடன் வட்டி வீதத்தையும் பொருளாதார சூழ் நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும். கிரேக்கம் 17 நாடுகளைக் கொண்ட யூரோ  கட்டமைப்பில் இருப்பதனால் அப்படிப்பட்ட நடவடிக்கைகளைச் செய்ய முடியாது. யூரோ நாணயத்தின் பெறுமதியும் அதன் வட்டி வீதமும் அதில் உள்ள 17 நாடுகளில் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனியின் பொருளாதார நிலைமைக்கு ஏற்பவே நிர்ணயிக்கப் படுவதாக குற்றச் சாட்டு உண்டு. யூரோ நாணயக் கட்டமைப்பில் இருக்கும் நாடு தனது கடன் பளு பண வீக்கம் போன்றவற்றை சில வரையறைகளுக்குள் வைத்திருக்க வேண்டும். இதனால் கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. கிரேக்கம் அப்படி விலக்கப்படுமிடத்து அது பலத்த நெருக்கடியைச் சந்திக்கும். அந்த நெருக்கடி மற்ற நாடுகளுக்கும் பரவும்.


கடன் கொடுத்தவர்கள் கலங்கும் காலம் இது
கிரேக்கம் தனது கடன் நிலுவைகளைச் செலுத்த முடியாமற் போனால் அதில் பாதிப்படுபவை கடன் கொடுத்த மற்ற நாட்டு வங்கிகளே. கடன் கொடுத்த வங்கிகள் இழுத்து மூடப் பட வேண்டிய நிலை ஏற்பட்டும் அச்சம் மற்ற நாடுகளை பற்றிக் கொண்டது. இதில் அதிக அக்கறை காட்டியவை  பிரான்சும் ஜேர்மனியும். கிரேக்க அரசுக்கு கடன் கொடுத்தவை பெரும்பாலும் பிரெஞ்சு ஜேர்மனி வங்கிகளே. ஜேர்மனியும் பிரான்சும் கிரேக்கத்தின் பொருளாதார வீழ்ச்சி தமது நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என பெரும் அச்சம் கொண்டன. கிரேக்கப் பொருளாதார நெருக்கடியும் ஸ்பெயின், அயர்லாந்து, இத்தாலி, போர்த்துக்கல் போன்ற நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளும் சேர்ந்து ஐரோப்பியப் பொருளாதாரத்தையும் உலகப் பொருளாதாரத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதைத் தவிர்க்க ஐரோப்பிய ஒன்றியமும் பன்னாட்டு நாணய நிதியமைப்பும் இணைந்து கிரேக்கத்துக்கு கைகொடுக்க முன் வந்தன. 2010 மே மாதத்தில் 110 பில்லியன் யூரோக்களும் ஜூலையில் 109பில்லியன் யூரோக்களும் கிரேக்கத்திற்கு வழங்கப்பட்டன.

கிரேக்கத்திற்கு கடன் கொடுத்துக் கலங்கும் நாடுகள்
ஐரோப்பிய நிதி நிலைப்பாட்டு வசதியகம்
கிரேக்கம், அயர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் 440பில்லியன் யூரோக்களுடன் ஐரோப்பிய நிதி நிலைப்பாட்டு வசதியகம் என்ற ஒரு நிதியத்தை ஆரம்பித்தது. இந்தத் தொகை போதாமற் போக அது ஒரு ரில்லியன் யூரோக்களாக அதிகரிக்கப் பட்டது.

யூரோ நாணய வலய நாடுகளும் பன்னாட்டு நாணய நிதியமும் கிரேக்கத்திற்கு கடன் கொடுத்த வங்கிகளும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கூடி கிரேக்கத்தை அதன் அரச செலவுகளைக் குறைக்க நிபந்தனை விதித்து அதனைக் கடன் நெருக்கடியில் இருந்து மீட்க நிதி உதவி செய்தன. கிரேக்கத்தின் அரச கடனில் 50%ஐ கடன் கொடுத்தோர் வெட்டி எறிவதாகவும் உடன்பாடு செய்யப்பட்டது. இந்த கடனில் 50%ஐ விட்டுக் கொடுப்பதை உலகெங்கும் உள்ள ஊடகங்கள் "hair cut" என விமர்சித்தன. பல ஐரோப்பிய நகரங்களில் கிரேக்கர்கள் முடி வெட்டும் தொழில் புரிவதால் இந்தக் கிண்டல்.
ஐரோப்பிய ஒன்றியமும் பன்னாட்டு நாணய நிதியமும் மேற்கொண்ட கிரேக்க நிதி நெருக்கடி மீட்பு நடவடிக்கை உலகெங்கும் பங்குச் சந்தைகளில் வரவேற்பைப் பெற்றது.

கிரேக்கம் தனது அரச செலவீனங்களைக் குறைக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போட்ட நெருக்குதல் கிரேக்க ஆளும் கட்சியைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. அரச செலவீனங்கள் குறைக்கப்படுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள் அது தனது இருப்பை கேள்விக்குறியாக்கும் என கிரேக்கப் பிரதமர் பப்பண்டோஸ் அஞ்சுகிறார். இதற்காக அவர் ஐரோப்பிய ஒன்றியமும் பன்னாட்டு நாணய நிதியமும் கொடுக்கும் உதவியும் நிபந்தனைகளும் நாட்டு மக்களுக்கு ஏற்புடையாதா என்று அறிய ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என திடீரென அறிவித்தார். இது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்தது. பங்குச் சந்தகள் விலை வீழ்ச்சி கண்டன. ஐரோப்பிய நகரங்களில் இருந்து கிரேக்கப் பிரதமரை முட்டாள் எனக் கண்டிக்கும் கூச்சல்கள் எழுந்தன. கிரேக்கத்திலும் எதிர்ப்புகள் எழுந்தன. எதிர்ப்புக்களையடுத்து கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக் கைவிடம்ப்பட்டது. பிரதம மந்திரிக்கு எதிராக ஆளும் கட்சியிலும் பலர் கிளர்ந்தெழுந்தனர். விளைவு பிரதமர் பப்பண்டோஸ் இப்போது பாராளமன்றில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொள்கிறார்.

G-20 நாடுகளின் அதிருப்தி
பிரான்ஸில் தற்போது கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும் G-20 நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது நிதி நெருக்கடியை இதுவரை தீர்க்காததியிட்டு தமது ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தின. கிரேக்கக் கடன் முறிகளின் இலாப வீதங்கள்( bond yield) 100ஆக அதிகரித்துள்ளன

Thursday 3 November 2011

ஆளில்லாப் போர் விமானங்கள்: மார் தட்டிய அமெரிக்க தலையைச் சொறிகிறது

அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏயும் அமெரிக்க சார்புப் படைத்துறை விமர்சகர்களும் அமெரிக்கா தனது ஆளில்லாத விமானங்கள் மூலம் அண்மைக்காலங்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் ஈட்டிவரும் வெற்றிகள் பற்றி மார்தட்டிப் பேசி வந்தனர். இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் பல முக்கிய தலைவர்கள் உட்படப் பலரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. நவம்பர் 2-ம் திகதி சோமாலியாவில் 20 பேரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் கொன்றன. கடாஃபி இறுதியாக 70இற்கு மேற்பட்ட வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயன்றபோது அதன் மீதான முதல் தாக்குதல் அமெரிக்க ஆளில்லா விமானங்களாற்தான் மேற் கொள்ளப்பட்டன.

பாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பல இசுலாமியத் தீவிரவாதிகளையும் அவர்களின் முக்கிய தலைவர்களையும் கொன்றுள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் சொந்தமாக ஆளில்லா விமானத் தளங்களை உலகின் பலபாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா விமானங்கள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை களமிறக்கியுள்ளது.

ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்பான முந்தைய பதிவுகள் பற்றி அறிய கீழுள்ள இணைப்புக்களில் சொடுக்கவும்:
ஆளில்லாப் போர்விமானங்கள் -1
ஆளில்லாப் போர்விமானங்கள் -2
அமெரிக்க ஆ.இ.வி களில் வைரஸ்

 அப்பாவிகள் கொலை
அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் பல அப்பாவி மக்களையும் கொன்று குவித்துள்ளன என்று இப்போது பாக்கிஸ்தானில் மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பாக்கிஸ்த்தானின் ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பிரதேச நகரான வாரிஸ்தானில் பல அப்பாவிகளை அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் கொன்றுள்ளன. ஆளில்லாப் போர் விமானங்களில் இருந்து பார்க்கும் போது ஒரு இசுலாமியத்தீவிரவாதிக்கும் ஒரு சாதாரண இசுலாமியக் குடி மகனுக்கும் வித்தியாசம் காணமுடியாது என்கிறார் மிஸ்ரா ஷாசாத் அக்பர் என்னும் பாக்கிஸ்தானியச் சட்டவாளர்.

ஊர்ப் பிணக்கைத் தீர்க்கக் கூடியவர்கள் கொலை
வாரிஸ்த்தானில் ஒரு பகுதியில் குரோமைட் சுரங்கம் தொடர்பாக இரு குழுக்களிடை நடந்த மோதலைத் தவிர்க்க அவர்கள் பேச்சு வார்த்தைக்காக ஒரு இடத்தில் ஒன்று கூடினர். அவர்கள் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. அங்கு சென்ற  அமெரிக்க ஆளில்லா விமானம் அவர்கள் தலிபான்கள் எனக் கருதி அவர்கள் மீது மூன்று ஏவுகணைகளை வீசியது. நாற்பது அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

 அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பற்றிய காணொளிப்பதிவு:


பாக்கிஸ்த்தானின் இரட்டை வேடம்
பாக்கிஸ்தானிய படைத்துறை உயர் அதிகாரியான அஷ்ஃபக் கயானி தமது நாட்டுக்குள் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடாத்தும் தாக்குதல்கள் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதலுக்கு எதிராக பாக்கிஸ்த்தான் தெரிவிக்கும் எதிர்ப்பு ஒரு இரட்டை வேடமே என்றும் கருதப்படுகிறது. திரைமறைவில் பாக் அரசு அமெரிக்க விமானங்கள் தமது நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்துவதை அனுமதித்துள்ளன என்றே கூறப்படுகிறது.

 பன்னாட்டுச் மனித உரிமைச் சட்டவாளர் கிளைவ் ஸ்ரஃபோர்ட் அமெரிக்காவின் போர் ஆப்கானிஸ்தானில் மட்டுமே. அதற்கும் பாக்கிஸ்த்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தும் உரிமை கிடையாது என்கிறார். பாக்கிஸ்த்தானுக்குள் அமெரிக்கா செய்பவை அப்பட்டமான கொலைகள் என்கிறார் அவர். New America Foundation என்னும் அமெரிக்க சிந்தனைப் பெட்டக (think-tank) நிறுவனம் இந்த ஆண்டு ஜூலைவரை அமெரிக்க ஆளில்லா விமானங்கள் 2551பேர்களைக் கொன்றதாகவும் அவற்றில் 80% மானவர்கள் போராளிகள் என்கிறது.

அமெரிக்காவிற்குத் தலையிடி
உலகின் பல பகுதிகளில் தமது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் மூலம் தாம் பெரு வெற்றியீட்டி வந்ததாக மார்தட்டிய அமெரிக்காவிற்கு இப்போது இரு முனைப் பிரச்சனை தலை தூக்கியுள்ளது. ஒன்று பன்னாட்டுச் சட்டப் பிரச்சனை.  மற்றது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தாக்குதல்கள் நடாத்தும் இடங்களில் பாதிக்கப் பட்ட மக்கள் மத்தியில் அதிக அமெரிக்க எதிர்ப்புத் தீவிரவாதிகள் உருவாக்கப்படுகிறார்கள். தலிபான் பாக்கிஸ்த்தான் எல்லை நகர்களில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தமக்கு ஆட்களைச் சேர்க்கும் கருவிகளாகச் செயற்படுகின்றன என்கின்றது. இதன் விளைவாக இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களால் பல தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday 2 November 2011

முள்ளி வாய்க்கால் உன் முடிவல்லத் தமிழா

சிந்து நதிக்கரை உருவானது
தென் பொதிகையில் தவழ்ந்தது
குமரி முனையையும் கடந்தது
கதிர மலையிலும் கமழ்ந்தது
தமிழா உன் குடும்பம் பெருமைக்குரியது
முள்ளி வாய்க்காலுடன் முடங்காது
தமிழா உன் குடும்பம்

கங்கையும் கொண்டது
கடாரமும் வென்றது
கலிங்கத்தைக் கலங்கடித்தது
சிங்களத்தைச் சிதறடித்தது
தமிழா உன் குடும்பம் வீரம் விளைத்தது

முள்ளி வாய்க்காலுடன் முடங்காது
தமிழா உன் குடும்பம்

கலைகள் அறுபத்து  மூன்று கொண்டது
ஏற்றம் மிகு இலக்கணம் கொண்டது
பொது மறையை வையகத்திற்குத் தந்தது

தமிழா உன் குடும்பம் அறிவு நிறைந்தது
முள்ளி வாய்க்காலுடன் முடங்காது
தமிழா உன் குடும்பம்


 

வேற்றுமையை வேரோடு அறுத்திடு
புல்லுருவிகளைப் புறக்கணித்திடு
ஒன்று பட்டு பலத்தை வளர்த்திடு
தமிழா உன் குடும்பம் மேன்மை பெற்றிடும்
முள்ளி வாய்க்கால் உன் குடும்பத்தின்
முடிவல்லத் தமிழா

Tuesday 1 November 2011

சிரியக் கிளர்ச்சியும் ஹிஸ்புல்லா இயக்கமும்

1970-ம் ஆண்டு சிரியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹஃபீஸ் அல் அசாத் படைத்துறைப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி அங்கு தனது படைத்துறைச் சர்வாதிகார் ஆட்சியை நிறுவினார். 1963 இல் இருந்து சிரியா அவசர காலச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவரது ஆட்சிக்கு எதிராக சிரியாவின் ஹமா நகரத்தில் 1982-ம் ஆண்டு மக்கள் கிளர்ந்தெழுந்த போது ஹஃபீஸ் அல் அசாத் தனது இரும்புக்கரத்தால் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைக் கொன்று கிளர்ச்சியை அடக்கினார். 2000இல் ஹஃபீஸ் அல் அசாத் இறந்த பின்னர் அவரது மகன் பஸார் அல் அசாத் பதவிக்கு வந்தார்.

சிரிய மக்களின் எழுச்சி
அரபு நாடுகளில் இந்த ஆண்டின் ஆரம்பப்பகுதிகளில் மல்லிகைப் புரட்சி அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த போது அது சிரியாவையும் விட்டு வைக்கவில்லை. மார்ச் 15-ம் திகதியை சிரிய மக்கள் முகவேட்டின் மூலமாக (Facebook) தன்மான நாளாகப் பிரகடனப்படுத்தி தலைநகர் டமஸ்கஸில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். சிரியாவின் தென்பிராந்திய நகரான டராவில் நூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சி லதாக்கியா போன்ற மற்ற பிரதான நகரங்களுக்கும் பரவ மார்ச் 29-ம் திகதி அதிபர் பஸார் அல் அசாத் பதவியில் இருக்க அவரது மந்திரிகள் பதவிவிலகினர். மறுநாள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பஸார் அல் அசாத் கிளர்ச்சி ஒரு இசுலாமியச் சதி என்று குற்றம்சாட்டினார். பின்னர் முன்னாள் விவசாய அமைச்சர் அதேல் சஃபாரை புதிய ஆட்சியை அமைக்கும்படி பணித்தார். புதிய அரசு கிளர்ச்சிக்காரர்களை திருப்திப்படுத்தவில்லை. கிளர்ச்சி மேலும் வலுப்பெறுகிறது. மாணவர்கள் உட்படப் பலர் கிளர்ச்சியில் இணைந்து கொள்கின்றனர். கிளர்ச்சிய் பரவுவதையும் தீவிரமடைவதையும் உணர்ந்த பஸார் அல் அசாத் 1963இல் இருந்து நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டத்தை ஏப்ரல் 19-ம் திகதி இரத்துச் செய்தார். கிளர்ச்சிகள் தொடர்ந்ததால் பலர் மேலும் கொல்லப்படுகின்றனர். ஏப்ரில் 29-திகதி அமெரிக்காவும் மே-15ம் திகதி ஐரோப்பிய ஒன்றியமும் சிரியாமீது பொருளாதாரத் தடையை கொண்டு வந்தன. கிளர்ச்சிகள் மேலும் தீவிரமடைய ஜூனில் பல அரச படையினர் கொல்லப்படுகின்றனர்.

ஜுலையில் ஹமா நகரில் பெரிய பேரணி நடந்தது அதில் அமெரிக்கத் தூதுவரும் பிரெஞ்சுத் தூதுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்தனர். மேற்குலக சார்பு அரசுகளைக் கொண்ட சவுதி அரேபியாவும் குவைத்தும் தமது தூதுவர்களை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தன. சிரிய அரசு எதிர்ப்பாளர்களை பேச்சுக்கு அழைத்தது பல எதிர்க்கட்சியினர் பேச்சு வார்த்தையைப் புறக்கணித்தனர். ஹமா நகரில் படையினர் வீடுவீடாகச் சென்று மக்களைக் கைது செய்தும் தாக்கியும் அட்டகாசம் செய்தனர். அதில் 300இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல சிரியர்கள் துருக்கியில் தஞ்சம் புகுந்தனர். துருக்கிய அரசு சிரிய மக்களின் எழுச்சி தொடர்பாக பேச்சு வார்த்தை நடாத்த ஒரு சிறப்புத் தூதுவரை சிரியாவிற்கு அனுப்பியது. ஆகஸ்ட் 17-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் சிரிய அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது கரிசனையை வெளியிட்டார். மறுநாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரிய அதிபர் பஸார் அல் அசாத் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கையை விடுத்து அமெரிக்காவில் உள்ள சிரியச் சொத்துக்களை முடக்கினார். ஆகஸ்ட் 22-ம் திகதி பஸார் அல் அசாத் சிரியாவில் 2012 பெப்ரவரியில் பாராளமன்றத் தேர்தல் நடக்கும் என்றும் அதில் பாத் கட்சியினர் பங்கு பெற முடியாது என்றும் அறிவிக்கிறார். சில அரசியல் சீர் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். அரபு லீக்கின் தலைவர் நபீர் எலரபி சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் சென்று பஸார் அல் அசாத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தினார். செப்டம்பர் 15-ம் திகதி சிரிய எதிர்ப்பாளர்கள் துருக்கிய நகர் இஸ்த்தான்புல்லில் கூடி தமது சிரியத் தேசிய சபை சிரியாவில் மாற்று ஆட்சியை அமைக்கும் என அறிக்கை விட்டனர்.  மேற்குலக பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட வெளிநாட்டு நாட்டு நாணய நெருக்கடியைத் தவிர்க்க சிரிய அரசு பல பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடு விதித்தது. எதிர்க் கட்சிகளின் சிரியத் தேசிய சபை சிரிய மக்களைப் பாதுகாக்கும் படி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தன. ஒக்டோபர் 4-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவிற்கு எதிராக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை சீனாவும் இரசியாவும் இரத்துச் செய்கின்றன.  ஒக்டோபர் 14-ம் திகதி சிரியாவில் 3000இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. ஒக்டோபர் 24-ம் திகதி அமெரிக்க தனது தூதுவரை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தது. அரபு லிக்கிற்கு சிரிய அதிபர் பஸார் அல் அசாத் வழங்கிய உறுதி மொழிகள் பல இன்னும் அவரால் நிறைவேற்றப் படவில்லை.

சிரியாவில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிமீது ஈரானும் லெபனானில் செயற்படும் தீவிர இயக்கமான ஹிஸ்புல்லாவும் அதிக கரிசனை கொண்டுள்ளன. லிபியாவில் கடாஃபியின் ஆட்சி வீழ்ச்சியடந்ததைத் தொடர்ந்து ஈரான் தான் மேற்கு நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறது. கடாஃபியின் வீழ்ச்சிக்குப் பின்னர் அடுத்த இலக்கு பஸார் அல் அசாத்தான் என்று பல மேற்கு நாட்டு அரசியல்வாதிகள் பகிரங்கமாகக் கூறினர். கடாஃபியின் கொலைக்குப் பின்னர் சிரிய கிளர்ச்சியாளர்கள் புதிய உத்வேகம் பெற்றுள்ளனர். சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கு மேற்குலக சார்பு ஆட்சி ஏற்பட்டால் ஆபிரிக்காக் கண்டத்தில் அதிலும் முக்கியமாக அரபு நாடுகளில் ஆதிக்கச் சமநிலை மேற்கு நாடுகளுக்கு பெரும் சாதகமாக அமைந்து விடும் என்று ஈரான், சீனா, இரசியா ஆகிய நாடுகள் உறுதியாக நம்புகின்றன. மேற்கு நாடுகள் லிபியாவில் மக்களைப் பாதுகாக்க விமானப் பறப்பற்ற பிராந்தியத்தை உறுதி செய்கிறோம் என்ற போர்வையில் ஒரு ஆட்சியாளர் மாற்றத்தை வெற்றிகரமாக ஆளணி இழப்பு ஏதுமின்றி நிறைவேற்றி விட்டன. ஹிஸ்புல்லா இயக்கத்திற்கான ஆயுத விநியோகம் ஈரானில் இருந்து சிரியா ஊடாகவே நடைபெறுகிறது. இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரமடையும் போதெல்லாம் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் அவர்களது குடும்பத்தினரும் சிரியாவிலேயே தஞ்சம் புகுவதுண்டு. சிரியாவில் இருந்து ஹிஸ்புல்லா நிதி ஆயுத உதவி பெறுகிறது. ஹிஸ்புல்லா இயக்கம் சிரியப் பிரச்சனையில் அரசுக்கு சார்பாக இருப்பதை அதன் இரண்டாம் மூன்றாம் நிலைத் தலைவர்கள் விரும்பவில்லை. அது ஹிஸ்புல்லாவின் சமூக நீதிக் கொள்கைக்கு எதிரானது என்று அவர்கள் கருதுகின்றனர். அத்துடன் இது மொத்த அரபு மக்களின் எதிர்ப்புக்கு ஹிஸ்புல்லா உள்ளாகலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். அவை மட்ட்டுமல்ல இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு போன்ற மக்களாட்சித் தத்துவத்தில் அதிக நம்பிக்கை உள்ள அமைப்புக்களுடன் ஹிஸ்புல்லா கைகோர்க்க வேண்டும் என்றும் பல ஹிஸ்புல்லா அமைப்பினர் கருதுகின்றனர். மேலும் சில ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தமது இயக்கம் அடக்கு முறை ஆட்சியாளரான அல் அசாத்தை ஆதரிப்பதை விடுத்து சிரிய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இவற்றால் ஹிஸ்புல்லாத் தலைமை தாம் சிரியக் கிளர்ச்சியை ஆதரிப்பது போல் பகிரங்கமாக அறிவித்த போதும் அவர்கள் சிரிய ஆட்சி மாற்றம் தமக்கு ஆபத்தானது என்றே நம்புகின்றனர்.

Monday 31 October 2011

வில்லங்கமான படங்களும் விசித்திரமான படங்களும்

சாவுக் கிராக்கி...வீட்டை சொல்லிப்புட்டு வந்தியா????

அயலவர்க்கு உதவ வேண்டும் இராமருக்கு அணில் உதவியமாதிரி...

Consumerism???

Built-in blue tooth

எப்பொருள் யார் யார் தயாரிப்பினும் அப்பொருளில் இலாபமீட்டல் அறிவு

எவரும் பயங்கரவாத்தில் ஈடுபடலாம்...

எது துவாலை? எது நாய்?

இப்படி இருக்க ஆசையாம்?

அவசரமாகத் தீயணைக்க வேண்டுமென்றால்.......

ஹலோ அவசரை சேவைப் பிரிவா???

பேரழி விளைவிக்கும் ஆயுதம்?????

முன்னேற்பாடு முக்கியம்....திருடர்கள் முட்டாள்களா????

உடுக்கை இழந்தவன் கைபோல.........

கடுமையான தடிமன் தொடர்ந்து மூக்கால் வழிகிறதென்றால் இதுதான் சரியான வழி....

பிள்ளைகள் ஒன்றாய் இருக்க வேண்டும் அவர்கள் பற்றிய சொற்கள் ஒன்றுபடக்கூடாது

இப்படித்தான் பறக்கப் பழக்குவாங்களோ???

மவனே தொலையடா....

காரில் போவது தலிபானா? அல் கெய்தாவா?

புகைப்பதை நிறுத்திவிட்டார்கள் பலர்....

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்.






மனிதத் தொடரூந்து....







Sunday 30 October 2011

புத்தகமும் திருமணம் போலே

கடமையைச் செய்தமைக்காக
வெறுக்கப்படுபவர்கள் பலருண்டு
வெறுக்கப்படுபவற்றில் முதன்மையானது
காலையில் அலாரம் ஒலிக்கும் கடிகாரம் .

கலாச்சார அளவு கோல்
தந்தையர் தினத்தில்
வாழ்த்துவது யாரை
எனத் தடுமாறுவோர்
எண்ணிக்கை.

முன் அனுபவம் பெருமையானது
jobs4u.comஇல்
அதுவே சிறுமையானது
manamahal4u.comஇல்


தேர்விற்காக ஒன்றிணைந்து
தேர்வின் பின் பிரிவதனால்
தோல்வியில் முடிவதனால்
புத்தகமும் திருமணம் போலே.

ஐஸ் கிரீம் கடையில் தொடங்கியது
டஸ்மார்க்கில் முடிந்தது

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...