Saturday 9 July 2011

எகிப்தில் மீண்டும் எழுச்சி

எகிப்திய மக்கள் 18நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது. ஆட்சியாளருடன் ஆட்சி முறைமையும் மாற்றப்படவேண்டும். பெப்ரவரி 11-ம் திகதிக்குப் பின்னர் எகிப்தில் பல ஆர்பாட்டங்கள் அவ்வப் போது ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்தவண்ணமே இருக்கின்றன. ஆனால் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆர்ப்பாட்டம் இதுவரை நடந்தவற்றிலும் பெரியதாக இருக்கிறது.

"Friday of Accountability," - வகைசொல்லும் வெள்ளி
"Friday of Accountability," என்னும் பெயருடன் எகிப்தியமக்கள் தங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை 9-ம் திகதி வெள்ளிக் கிழமை தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பித்துள்ளனர். புரட்சிக்குப் பின்னர் தாங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் இடம்பெறவில்லை; எல்லாம் இழுத்தடிப்பாக இருக்கிறது என்கின்றனர் எழுச்சியாளர்கள்.

எகிப்திய அதிகார மையம்
எகிப்தின் இப்போதைய அதிகார மையம் அதன் உச்ச படைத்துறையாகும்.
உச்ச படைத்துறைச் சபை இப்போது 75வயதான பாதுகாப்புத் துறை அமைச்சரும் முபராக்கின் நீண்டநாள் ஆதரவாளருமான முஹமட் தந்தாவியின் தலைமையில் செயற்படுகிறது. இப்போதைய எகிப்தின் அதிபர் அவர்தான். முபராக்கின் படை அப்படியே இருக்கிறது. எகிப்தியப்படையின் உயர் அதிகாரிகளில் பெரும்பாலோனோர் அமெரிக்காவில் உயர் பயிற்ச்சி பெற்றவர்கள். முபராக்கிற்கு எதிரான புரட்சியில் அவரது படையினர் சிறந்த தொழில்சார் பணிவன்பை (professional courtesy)  மக்கள் மீது காட்டியது பலரையும் வியக்க வைத்தது.

அரசியலமைப்புத் திருத்தம்
எகிப்திய அரசமைப்புக்கு ஒன்பது திருத்தங்கள் செய்து அது மார்ச் 19-ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்களின் அங்கீகாரம் பெறப்பட்டது. இந்தத் திருத்தங்கள் அவசரப்பட்டு மக்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுக்காமல் இடைக்கால படைத்துறை அரசால் கொண்டுவரப்பட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திருத்தத்தில் முக்கிய அம்சங்கள்: அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள்( ஒருவர் இருதடவை மட்டுமே) , தெரிவு செய்யப்படும் அதிபர் 30நாட்களுக்குள் துணை அதிபரை நியமிக்க வேண்டும், அதிபர் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், எகிப்தியரல்லாதவரை திருமணம் செய்தவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது. திருத்தப்பட்ட அரசியலமைப்பின்படி புதிய அரசு தெரிவு செய்யப்பட்டு அது ஆறு மாதங்களில் புதிய அரசியலமைப்பை வரையும் என்றும் சொல்லப்படுகிறது.

அரசியலமைப்புத் திருத்ததில் முரண்பாடு தொடங்கிவிட்டது. முபாரக் ஆதரவாளர்களும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பும் அரசமைப்புத் திருத்ததிற்கு ஆதரவு வழங்கினர். இளைஞர்கள் அமைப்புக்கள் பலதரப்பினர்களையும் கொண்ட ஒரு சபையால் அரசமைப்பு முற்றாக புதிதாக எழுதப்பட்டு அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப் படவேண்டும் என்று விரும்புகிறது. 40வயதிற்கு மேற்பட்டவர்தான் அதிபர் பதவிக்கு போட்டியிடலாம் என்பது இளைஞர்களை ஒதுக்கவா? 2005இல் நோபல் பரிசு பெற்ற முஹமத் அல்பராடி இந்த அரமைப்புத்திருத்தம் எகிப்தியர்களுக்கு இப்போது தேவையானதில் ஒருமிகச் சிறிய பகுதியே என்றார். முஹமத் அல்பராடி எகிப்தின் அதிபராக வரலாம் என்ற சாத்தியம் உண்டு. முஹமத் அல்பராடிக்கும் பன்னாட்டு நெருக்கடிக்குழுவிற்கும் தொடர்புண்டு. பன்னாட்டு நெருக்கடிக் குழுவிற்கும் நாணய வர்த்தக முதலையான ஜோர்ஜ் ஸொரஸிற்கும் தொடர்பு உண்டு. இதனால் முகமத் அல் பராடி ஒரு வெளிநாட்டுக் கைக்கூலி என்று குற்றம் சுமத்துபவர்களும் உண்டு. முபாரக் ஆதரவாளர்கள், எகிப்தியப் படைத் துறையினர், இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆகியவை கைகோர்த்து நின்றால் அது ஒரு அமெரிக்க சார்பு அணியா என்ற சந்தேகத்தைப் பலருக்கும் ஏற்படுத்தும்.

எகிப்தில் கொல்லப்பட்ட 1,000இற்கு மேலானவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதே "Friday of Accountability," எழுச்சியின் முக்கிய நோக்கம்.பெப்ரவரியில் நடந்த எழுச்சியின் போது எழுச்சியாளர்களுக்கு எதிராகச் செயல்பட்ட காவல் துறையைச் சேர்ந்த ஏழு காவல்துறையினருக்கு பிணை வழங்கப்பட்டது எகிப்தில் பலரை ஆத்திரமூட்டியுள்ளது. எகிப்து இப்போது பிழையான திசையில் செல்கின்றது என்கின்றனர் எழுச்சியாளர்கள். எகிப்திய ஆட்சியாளர்கள் செப்டம்பரில் தேர்தல் நடக்கும் என்கின்றனர். ஆனால் செப்டம்பர் தேர்தலுக்கு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு மட்டுமே தயாராக உள்ளது. மற்றயவை தயாராக இல்லை. மற்ற அமைப்புக்கள் தேர்தலைத் தள்ளிப் போடும்படி கோரிக்கை விடுக்கின்றன. எகிப்தின் உச்ச படைத்துறைச் சபை தேர்தலைத் தள்ளிப் போட மறுக்கிறது. ஆனால் இதுவரை தேர்தலுக்கான திடமான ஒரு திகதியை அறிவிக்கவில்லை. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு விரைவில் தேர்தல் நடாத்த விரும்புகிறது. எழுச்சியாளர்கள் இப்படி முரண்பட்டு நின்றாலும் அரச இயந்திரத்தில் இருந்த இருக்கின்ற எழுச்சிக்கு எதிராக குற்றம் இழைத்தோர் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரும் "Friday of Accountability,"யில் அவர்கள் ஒன்று பட்டு நிற்கிறார்கள்.

Friday 8 July 2011

இந்தியாவில் அழைப்பு நிலையங்களை(Call Centres) மூடும் பிரித்தானிய வங்கி

பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய வைப்பகமான சன்ரெண்டர்(Santender, the third largest bank in Britain) இந்தியாவில் உள்ள தனது அழைப்பு நிலையங்களை மூடி அவற்றை பிரித்தானியாவில் மீள் ஆரம்பிக்கவிருக்கிறது. தனது வாடிக்கையாளர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்கவே தாம் இந்த முடிவை எடுத்ததாக அந்த வைப்பகம் அறிவித்துள்ளது. தாம் எடுத்த முடிவிற்கும் இந்தியாவில் அதிகரிக்கும் வேலயாட்கள் சம்பளத்திற்கும் சம்பந்தம் இல்லை எனவும் சன்ரெண்டர் வைப்பகம் அறிவித்துள்ளது.

சன்ரெண்டர் வைப்பகம் பிரித்தானியவிலேயே அதிக வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு உள்ளான வைப்பகமாக இருந்தது. சென்ற ஆணடு அது இரண்டாம் இடத்திற்கு இறங்கியது. சன்ரெண்டர் வைப்பகம் தனது பல வாடிக்கையாளர்களின் ஆட்சேபனைகளைத் தொடர்ந்தே இந்தியாவில் உள்ள தனது  அழைப்பு நிலையங்களை(Call Centers)  மூடும் முடிவை எடுத்தது.

இந்தியாவில் அதிகரிக்கும் செலவீனம்.
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் வெளிநாடுகளில் அழைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட பின்னர் பல நிறுவங்களின் வாடிக்கையாளர்களுக்கான சேவைகளின் தரம் பெரிதும் குற்ந்துள்ளதாக தெரிவித்தன.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அங்குள்ள பணவீக்கமும் இந்தியத் தொழிலாளர்களின் ஊதியத்தை பிரித்தானியத் தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பிலும் பார்க்க அதிக அளவில் அதிகரிக்கச் செய்தது. இதன் விளைவாக பிரித்தானியாவின் சில பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரதேசங்களில் அழைப்பு நிலையங்களை(Call Centers) ஏற்படுத்தி அங்கு வேலை வாங்குவது மும்பாயில் வேலை வாங்குவதிலும் மலிவான நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் ஆங்காங்கு நடந்த தகவல் திருட்டுக்கள் பண மோசடிகள் போன்றவையும் பல பிரித்தானிய நிறுவனங்களைச் சிந்திக்க வைத்துள்ளன.

ஹைக்கூ: எனக்குள் நீ உனக்குள் நான்


புதிரான மொழி
இதயத்தில் வலி
அவள் பார்வை

கண்கள் உதடானது
இதயம் செவியானது
காதல்

காதலித்துச் செய்தால் தற்கொலை
பெற்றோர் பார்த்துச் செய்தால் கொலை
திருமணம்

நீ இங்கு நான் அங்கு
எனக்குள் நீ உனக்குள் நான்
காதல்

அவள் தேவதையானாள்
உதடு உண்மைகளை உரைத்தது
போதையில் நான்

Thursday 7 July 2011

பின் லாடனின் குடும்பம் பாக்கிஸ்த்தானில் இருந்து வெளியேறுவதை தடுக்க உத்தரவு..

1979இல் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தான் மீது படையெடுத்தது. இதன் பின்னணியில் ஆப்கானிஸ்த்தானிற்கு தொலைத்தொடர்பு கோபுரம் அமைத்து கொடுத்த அமெரிக்கா அதில் சோவியத்தை உளவு பார்க்கும் கருவிகளையும் பொருத்தியமையே. சோவியத்தை விரட்ட இலகுவான வழி பொதுவுடமை என்பது இசுலாமிய மார்க்கத்திற்கு எதிரானது என்று ஆப்கானிஸ்தானில் இசுலாமியத் தீவிரவாதம் வளர்க்கப்பட்டது. சவுதி அரேபியாவில் பிறந்த ஒசாமா பின் லாடன் இசுலாமியச் சட்டமான ஷரியாப்படியே இசுலாமிய நாடுகள் ஆளப்படவேண்டும் என்ற நம்பிக்கையுடையவர். கம்யூனிசம், சோசலிசம், மக்களாட்சி போன்ற ஆட்சி முறைகள் இசுலாமிற்கு எதிரானவை என்ற கொள்கை கொண்டவர். ஆப்கானிஸ்த்தானில் சோவியத் படைகளின் அட்டூழியங்களைப் பொறுக்காத பின் லாடன் அங்கு சென்று ஆப்கானிஸ்தானிற்காக முஜாகிதீன் போராளிகளுடன் இணைந்து போரிட்டார்.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்காவில் முதலாம் எதிரியாகக் கருதப்பட்ட பின் லாடனை அமெரிக்கக் கடறபடையின் சீல் பிரிவினர் பல மில்லியன் டாலர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக செலவு செய்து பக்கிஸ்த்தானில் வைத்து மே மாதம் 2-ம் திகதி  கொன்றனர்.

பின் லாடனுக்கு ஜெரேனிமோ என்னும் குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டது. அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், நிலம் ஆகிய மூன்று முனைகளிலும் சண்டையிடக்கூடிய சீல்(SEAL) பிரிவினர் ஒசாமா பின் லாடனைக் கொல்லும் சண்டையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். கடல் Sea, வான் Air, தரை Land ஆகிய சொற்களின் முதல் எழுத்துக்களில் இருந்து SEAL என்ற சொல் உருவாக்கப் பட்டிருந்தது. SEAL படைப்பிரிவில் மிக நேர்த்தியாகத் தெரிந்து எடுக்கப்பட்டவர்கள் இந்தப் படை நடவைக்கையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். இவர்களை TEAM - 6 என அழைப்பர். ஆப்கானிஸ்த்தான் எல்லையில் உள்ள ஜலலாபாத்தில் இருந்து ஹெலிக்கொப்டர்கள் மாளிகையில் வீரர்களை இறக்கியது. அவர்கள் சுவர்களைக் குண்டுகளால் தாக்கினர். அங்கு பாதுகாப்பிற்கு இருந்த ஆணைக் காப்பாற்ற ஒரு பெண் குறுக்கே பாய்ந்தார். அவர் சுடப்பட்டார். அவர் மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் மனைவி. ஒரு ஹெலிக்கொப்டர் பின் லாடனின் பாதுகாவலரின் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் எவரும் கொல்லப்படவில்லையாம். பின் லாடன் இருந்த அறையின் சுவர்களைத் தகர்த்தே தாக்குதல் அணியினர் உள்புகுந்தனர். அங்கு இருந்த பின்லாடனின் மனைவியும் இரு மகன்களும் பயத்தில் ஓடிப்போய் தந்தையைக் கட்டிக் கொள்ளுதல் இயல்பு. அதை அமெரிக்கர் பின் லாடன் மனைவியைக் கேடயமாகப் பாவித்தார் என்கின்றனர்.

 பாக்கிஸ்த்தானில் அமெரிக்கப்படைகள் அத்து மீறி உட் புகுந்து பின் லாடனைக் கொன்றது அங்கு பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனால் அங்கு இது தொடர்பாக விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை பாக் அரசு அமைத்தது. இந்த ஆணைக்குழு பாக்கிஸ்த்தானில் தங்கியுள்ள பின் லாடனின் மூன்று மனைவியரையும் பல பிள்ளைகளையும் பாக்கிஸ்த்தானை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று பாக் அரசிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகைச்சுவை: விநோதமான அரசியல் படங்கள்

காய்ந்த மாடு!!! முன்னாள் அமெரிக்க உப அதிபர்
 அரசியல்வாதிகளின் செயல்களையும் அசைவுகளும் அதில் உள்ள விநோதங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எங்கிட்ட மோதாதே!!!

தட்டினால் திறப்பதில்லை!!!!




இது என்ன இது!!!!




பிரான்சில் இது சாதரணமப்பா!!!


என்னப்பார்வை உந்தன் பார்வை!!!!




இதையும் மனிசன் சாப்பிடுவானா? அமெரிக்கர்தான் சாப்பிடுவார்கள்.

Wednesday 6 July 2011

போர் முனைகளில் பெருகி வரும் ஆளில்லாப் போர் விமானங்கள் .

சீன ஆளில்லா விமானங்கள்
அமெரிக்க ஆளில்லா விமானங்கள்
லிபியாவில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள்
US Predator ஆளில்லா விமானங்கள்

உலக நாடுகளிடையே ஆளில்லாப் போர் விமானங்களின் உற்பத்தியும் பாவனையும் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வேவு பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வந்த ஆளில்லாப் போர் விமானங்கள்  இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன. பாக்கிஸ்த்தானில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்த்தான் அமெரிக்காவிடம் பலதடவை திரை மறைவில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களின் பாவனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. பாக்கிஸ்தானிடமும் பல ஆளில்லாப் போர் விமானங்கள் இருக்கின்றன. இப்போதுள்ள அதன் இரு ஆளில்லாப் போர் விமானங்கள் அணிகளை பாக்கிஸ்த்தான் ஆறு அணிகளாக உயர்த்த எண்ணியுள்ளது.

கடாஃபிக்கு எதிராக ஆளில்லாப் போர் விமானங்கள்
ஆளில்லாப் போர் விமானங்கள் பல லிபியத் தலைவர் கடாஃபிக்கு எதிரான போரிலும் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஏப்ரில் 22-ம் திகதி Predator எனப்படும் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் லிபியாவில் தமது முதலாவது தாக்குதல்களைத் தொடுத்தன.  Predator எனப்படும் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள்  தாழப்பறந்து இலக்குகளை துல்லியமாக அறிந்து தாக்கவல்லன. ஜூன் மாத இறுதியில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் சோமாலியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை மேற் கொண்டன. யேமன், ஈராக் ஆகிய நாடுகளிலும் அமெரிக்கா ஆளில்லாப் போர் விமானங்கள் கொண்டு தாக்குதல்கள் நடாத்தியது.


இஸ்ரேலின் நயவஞ்சகம்
கதுவி எதிர்ப்பு ஆளில்லா தாக்குதல் போர் விமானங்களை(anti-radar attack drone) இஸ்ரேல் சீனாவிற்கு விற்றமை அதன் தோழனான அமெரிக்காவை ஆத்திர மூட்டியது இதனால் அமெரிக்கா தனது F-35 Joint Strike Fighter programஇல் இருந்து இஸ்ரேலை விலக்கியது. இஸ்ரேல் இரசியா ஜோர்ஜியா போன்ற நாடுகளுக்கு ஆளில்லாப் போர் விமானங்களை விற்றுள்ளது.


முன்னணியில் சீனா?
2010இல் சீனாவில் நடந்த விமானக் கண்காட்சியில் சீனா தனது சீறும் யாளி என்னும் பெயர் கொண்ட ஆளில்லாப் போர் விமானங்களைக் காட்சிப்படுத்தியது. சீனா தனது ஆளில்லாப் போர் விமானங்கள் எப்படி தாய்வான் கரைகளில் உள்ள அமெரிக்க போர்க்கப்பல்களை இனம் கண்டு தாக்கும் நிலையங்களுக்கு தகவல்களை அனுப்புவதை தெளிவு படுத்தியது. ஆளில்லாப் போர் விமானங்கள் பாவனையில் அமெரிக்கப் படைத்துறை கண்ட வெற்றியை உணர்ந்த சீனா தான் அந்தத் துறையில் மற்றைய நாடுகளை விட முந்திச் செயற்படுகிறது. ஆளில்லாப் போர் விமான உற்பத்தித் துறையில் சீனாவின் பல ஆய்வுகள் அறிய முடியாதனவாய் இருக்கின்றன. அமெரிக்கா ஆளில்லாப் போர் விமானங்களை உலக ஆயுதச் சந்தையில் விற்பனை செய்யாமையால் அதைச் சீனா தானே செய்ய முனைகிறது. பாக்கிஸ்த்தானும் ஈரானும் சீனாவிடமிருந்து ஆளில்லாப் போர் விமானங்களைக் கொள்வனவு செய்யவுள்ளன. அமெரிக்காவின் உயர் தர உணரிகள், செய்மதித் தொடர்பாடல் வசதிகள், திறன் மிக்க ஆயுதங்கள் போன்றவற்றை கொண்ட ஆளில்லாப் போர் விமானங்களுக்கு சீன ஆளில்லாப் போர் விமானங்கள் ஈடாக மாட்டா. இத் துறையில் அமெரிக்கத் தொழில் நுட்ப வளர்ச்சி இலகுவாக முந்தக் கூடியதாக இல்லை. சீன ஆளில்லாப் போர் விமானங்கள் ஏற்றுமதியைத் தடுக்க அமெரிக்கா தனது நட்பு நாடுகளான ஜப்பான், தென்கொரியா, சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு ஆளில்லாப் போர் விமானங்கள் விற்பனை செய்யவுள்ளது.

சீனாவிற்கு சவாலாக அமெரிக்கா.
இதுவரை நிலத்தில் பாவிக்கும் ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்து வந்த அமெரிக்கா இப்போது விமானம் தாங்கிக் கப்பல்களில் பாவிக்கக் கூடிய ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்கிறது. இவை முக்கியமாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு சவாலாக உலவும் அமெரிக்க விமானம் தாங்கிக் போர்க்கப்பல்களில் பாவிக்கப்படவிருக்கின்றன.



50இற்கு மேற்பட்ட நாடுகள் ஆளில்லாப் போர் விமானங்களை வாங்கி வைத்துள்ளன இலங்கை உட்படப் பல நாடுகள் இவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. விமான உற்பத்தித் துறை இனி ஆளில்லா விமானங்களின் திசையில்தான் இனி பயணிக்க விருக்கின்றது. படைத் துறையினர் ஆளில்லாப் போர் விமானங்கள் மலிவானதும் செயற்படுதிறனும் மிக்க கண்காணிப்புக் கருவி என்று கருதுகின்றனர். அமெரிக்காவின் மிகச்சிறந்த Predator Bஐத் தாயாரிக்க 10.5மில்லியன் டொலர்கள் செலவாகும் F-22 போர் விமானங்களைத் தாயாரிக்க 150மில்லியன் டொடர்கள் செலவாகும். இந்த ஆண்டு உலக ஆளில்லாப் போர் விமானங்கள் உற்பத்திக்கான செலவீனம் 100பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டலாம். ஆனால் சமாதனம் விரும்பும் பொது அமைப்புக்கள் ஆளில்லாப் போர் விமான உற்பத்தி அதிகரிப்பு robotic warfareஐ அதிகரிக்கும் என்றும் பல நாடுகளைப் போருக்குத் தூண்டும் என்றும் தமது கரிசனையை வெளியிட்டுள்ளனர்.

ஆளில்லாப் போர் விமானங்கள் கொல்லும் ரோபோக்கள்!
ஆளில்லாப் போர் விமானங்கள் என்பவை கொல்லும் ரோபோக்கள். அவற்றின் பாவனை தடை செய்யப்பட வேண்டியவை என்று கருத்துரைப்போரும் உண்டு. இக்கருத்துக்கள் ஆப்-பாக் எல்லையில் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் தாக்குதல்களுக்குப் பயன்படும் ஆளில்லாப் போர் விமானங்கள் பல தொலைவில் இருந்து ஆட்களால் இயக்கப்படுபவையே.

ஆளில்லாப் போர் விமானங்கள் போரை கணனி விளையாட்டுப் போல் ஆக்குமா?
நவீன போர் முறைகள் தொலைவில் இருந்தே மேற் கொள்ளப்படுகின்றன. போர் என்று ஒன்று என்று தொடங்கியதோ அன்றில் இருந்தே தொலைவில் இருந்து எதிரியைக் கொல்லும் முறைபற்றித்தான் ஆய்வுகள் யாவும் மேற் கொள்ளப்படுகின்றன. நவீன போர் முறைகள் போரை ஒரு கணனி விளையாட்டுப் போல் ஆக்கி வருகின்றன.

ஆளில்லாப் போர் விமானங்களின் தாக்குதல்கள் அதிக அப்பாவி உயிர்களைப் பலி கொள்ளுமா?
ஆப்-பாக் எல்லையில் ஆளில்லாப் போர் விமானங்களால் நிகழ்ந்த அப்பாவிகள் உயிரிழப்புக்களை ஆதாரமாக வைத்து ஆளில்லாப் போர் விமானங்கள் போரில் ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் சிலர். ஆனால் சிலர் பாக்கிஸ்தான் கூறும் அப்பாவிகள் உயிரிழப்புக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்கின்றன்ர். பாக் கொல்லப்பட்டவர்களில் 88% அப்பாவிகள் என்கின்றது. இதை மறுப்போர் அப்பாவிகளின் உயிரிழப்பு 20% என்கின்றனர்.

Tuesday 5 July 2011

தாக்கும் நேட்டோவும் தாக்குப் பிடிக்கும் கடாஃபியும்.

அரபு நாடுகளின் மல்லிகைப் புரட்சி லிபியத் தலைவர் கடாஃபிக்கு எதிராக பெப்ரவரி 16-ம் திகதி கிளர்ந்த போது மேற்குலக நாடுகளின் பிரதிபலிப்பு துனிசியா, எகிப்து, பாஹ்ரெய்ன், சிரியா ஆகிய நாடுகளின் மக்கள் கிளர்ச்சிக்கான பிரதிபலிப்பிலும் பார்க்க வேறுபட்டே இருந்தது. கிளர்ச்சிக் காரர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுளின் பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டது. லிபியாமீது நடவடிக்கை எடுக்க தீர்மானம்-1973 நிறைவேற்றப்பட்டது.

2011 மார்ச் 24-ம் திகதி ஃபிரெஞ்சு வெளிநாட்டமைச்சர் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியின் படைபலம் சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் நொருக்கப்பட்டுவிடும் என்றார். ஆனால் கடாஃபி இன்றுவரை தாக்குப் பிடிக்கிறார். பெப்ரவரி 21-ம் திகதி பிரித்தானிய வெளி நாட்டமைச்சர் கடாஃபி வெளி நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார் என்றார். கடாஃபி இன்றும் லிபியாவில்தான் இருக்கிறார்.

68 வயதான மும்மர் கடாஃபிக்கு ஏழு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் சயிஃப் கடாஃபியும் சாதி கடாஃபியும் தீவிரவாதத்தில் நம்பிக்கை குறைந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. மற்றவர்கள் தீவிரப்போக்கு உடையவர்கள் என்றும் நம்பப்படுகிறது. இவர்களுக்கிடையிலான போட்டியை மும்மர் கடாஃபியே உருவாக்கி தனது பதவி பாதுகாப்பாக இருக்கவும் மகன்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தன்னைப்பதவியில் இருந்து விலக்காமல் இருக்கவும் தந்திரமாகச் செயற்பட்டார் என்றும் சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்ததுண்டு.

தனக்காக எதையும் செய்யும் கடாஃபி
இப்போது உள்ள அரச தலைவர்களில் மிக நீண்ட காலம் பதவியில் இருப்பவர் லிபியத் தலைவர் மும்மர் கடாபி. 1969-ம் ஆண்டு ஒர் ஆயுதப் புரட்சி மூலம் அப்போது அரசாராக இருந்த இட்றிஸை பதவியில் இருந்து அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியவர் மும்மர் கடாபி. அப்போது அவருக்கு வயது 27. அப்போது அவர் சிறந்த புரட்சியாள்ராகவும், புதிய சேகுவேராவாகவும் மதிக்கப்பட்டார். ஆனல் லிபியாவின் பொருளாதார் முன்னேற்றம் மற்ற எண்ணெய் வள நாடுகடுடன் ஒப்பிடுகையில் பின் தங்கியே இருந்தது.

கடாஃபியின் தவறு
ஒரு சிறந்த எண்ணெய் வளம் மிக்க நாடு லிபியா. ஆபிரிக்காவில் லிபியாதான் அதிக தனி நபர் வருமானம் கொண்ட நாடு. தனி நபர் வருமானம் என்பது தேசத்தின் மொத்த உற்பத்தியை மக்கள் தொகையால் வகுக்க வருவது. ஆனால் லிபிய மக்களின் வாழ்க்கைத் தரம் மற்ற எண்ணெய் வள நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்ததே. அங்கு தேச வருமானம் சரியான முறையில் பங்கிடப்படவுமில்லை; பாவிக்கப்படவுமில்லை. லிபிய மக்களின் கல்வித்தரம் மிகவும் பிந்தங்கியது. மற்ற அரபு நாடுகள் நகர நிர்மாணம் தெரு நிர்மாணம் என்பவற்றில் அதிக ஈடுபாடு காட்டிய போது லிபியா என்ன செய்தது என்ற கேள்வி உண்டு.

லிபியாவில் மக்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியை பெப்ரவரி 2011இல் ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் கிளர்ச்சிக்காரர்களின் கைகள் ஓங்கி இருந்தன. பின்னர் கடாஃபியின் படைகள் தாம் இழந்த பிரதேசங்களை  மீளக் கைப்பற்றத் தொடங்கிய போதே பிரான்ஸ் ஐநா பாது காப்புச் சபைக்குப் பிரச்சனையை எடுத்துச் சென்றது.

முன்னணியில் பிரான்ஸ்
லிபியா மீதான படை நடவடிக்கைக்கு பிரான்ஸ்தான் முன்னின்று செயற்பட்டது. பிரான்ஸில் லிபியாவிற்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கு பலத்த ஆதரவு நிலவுகிறது. எதிர்கட்சியான சோஸ்லிசக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. லிபியாவிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது பற்றி பல நாடுகள் பரிசில்தான் கூடி ஆலோசித்தன. லிபியாவிற்குள் பிரவேசித்து தாக்குதல் நடாத்தியவை பிரெஞ்சு விமானங்களே. சீனா லிபியாமீதான தாக்குதலைக் கடும் வார்த்தைகள் பாவித்துக் கண்டித்தது. சில நாடுகள் இப்போதும் பனிப்போர் மனப்பாங்கில் இருப்பதாக சீனா தெரிவித்தது. இரசியா ஒரு படி மேல் சென்று லிபிய அதிபர் கடாபியின் இருப்பிடம் மீதான தாக்குதல் ஒரு சிலுவைப்போர் போன்றது என்றார். இந்தியா லிபியா மீதான தாக்குதலை எதிர்த்துள்ளது. பாதுகாப்புச் சபையில் லிபியாவிற்கு எதிராக நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் பொருளாதாரத் தடையும் ஒன்று. இரசியாவிற்கு லிபியாவுடன் இரண்டு பில்லியன் பெறுமதியான ஆயுத வர்த்தகம் இருந்தும் இரசியா அத் தீர்மானத்தை எதிர்க்கவில்லை.

தப்புக் கணக்கு
நேட்டோப்படைகள் லிபியாவின் மீது பொருளாதாரத் தடையை விதித்து கடாஃபியின் படை நிலைகளை தமது நவீன விமானங்கள் மூலம் மூர்க்கத்தனமாக தாக்கி வருகின்றன. தனக்கு எதிராக சதி செய்து தன்னைக் கவிழ்த்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கடாஃபி தனது படையினருக்கு போதிய பயிற்ச்சிகளோ ஆயுதங்களோ வழங்கவில்லை. அவரது படை பலமற்றபடை. என்றெல்லாம் ஆரம்பத்தில் கூறப்பட்டன. இன்றும் கடாஃபி தனது படை பலமிழந்து நிற்பது போன்ற சமிக்ஞைகளை வேண்டுமென்றே நேட்டோவைக் குழப்புவதற்காக அனுப்பிக்கொண்டே இருக்கிறார்.அத்துடன் லிபிய அதிபர் தளபதி மும்மர் கடாபி தான் பதவி விலகப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றார். பிரித்தானிய் அரசி எலிசபெத்-2 பதவியில் இருக்கும் வரை தானும் பதவிய்யில் இருப்பேன்; தன்னிலும் அதிக காலம் எலிசபெத்-2 பதிவியில் இருக்கிறார் என்கிறார்.

லிபியாவிலும் கொத்தணிக் குண்டுகள்
2007இல் கொத்தணிக் குண்டுகளுக்கு எதிரான பன்னாட்டு உடன்படிக்கையில் கையொப்பம் இட முன்னர் ஸ்பெயின் தன்னிடம் இருந்த கொத்தணிக் குண்டுகளை லிபியாவிற்கு விற்பனை செய்துவிட்டது என்று கூறப்படுகிறது. மற்-120 எனப்படும் இக் கொத்தணிக் குண்டுகள் லிபியக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடாஃபியால் பயன்படுத்தப்படுகின்றன.

கடாஃபியைக் கைது செய்ய உத்தரவு.
பன்னாட்டு நீதி மன்றம் ஜுன் 27-ம் திகதி போர்க்குற்றம் புரிந்தமைக்காக கைது செய்யும் உத்தரவைப் பிறப்பித்தது. இலங்கைப் போர்க்குற்றம் பற்றி அறிந்தவர்களை பன்னாட்டு சமூகத்தின் இரட்டை வேடம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பன்னாட்டு நீதிமன்ற உத்தரவை லிபியக் கிளர்ச்சியாளர்கள் ஆராவாரித்து வரவேற்றனர்

காடாஃபியின் கடிதங்கள்
ஜூன் 9-ம் திகதி கடாஃபி அமெரிக்க காங்கிரசுக்கும் மூதவைக்கும் போர் நிறுத்தம் வேண்டிக் கடிதம் அனுப்பினார். பின்னர் ஜூன் 23-ம் திகதி லிபியப் பிரதம மந்திரி அல் முகமாடி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு பேச்சுவார்த்தை வேண்டியும் அமெரிக்காவில் முடக்கப்பட்டுள்ள நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான லிபியச் சொத்துக்களை விடுவிக்க வேண்டியும் கடிதம் எழுதினார். இவை எதுவும் எடுபடவில்லை. மேற்குலகம் கடாஃபியினுடனான அமைதிப் பேச்சுவார்த்தியிலும் பார்க்க காடாஃபியை கொன்று அமைதியை உருவாக்குவதையே விரும்புகிறது. அமெரிக்க நிர்வாகம் லிபியாவில் இருந்து கடிதங்கள் வந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. லிபியாவில் இருந்து தான் தப்பிச் செல்வதற்கான ஒரு ஏற்பாட்டைச் செய்து தரும்படியும் தன்மீது போர்குற்றம் சுமத்துவதற்கு எதிரான பாதுகாப்பு வழங்கும் படியும் கடாஃபி திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளைச் செய்து பார்த்தார் சரிவரவில்லை. தன்னைக் கொல்வதுதான மேற்குலகின் நோக்கம் என்றுணர்ந்த கடாஃபி இப்பொது சீறத் தொடங்கிவிட்டார். தனது விசுவாசிகள் மேற்குலகின் வீடுகளையும் பணிமனைகளையும் இலக்க்கு வைத்து குழவிகள் போலவும் வெட்டுக்கிளிகள் போலவும் தாக்குதல் நடத்துவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
கடாஃபியின் கௌரவம் சதுரங்க நடுவிலே
கடாஃபிக்கும் இரசியாவிற்கும் இடையிலான தொடர்பாளராக பன்னாட்டு சதுரங்க ஒன்றியத்தின் தலைவர் கிர்சான் இலுயும்சினோவ் செயற்படுகிறார். அவர் கடாஃபிக்கு ஒரு கௌரவ மான முடிவை ஏற்படுத்த முனைகிறார். அவர் இரண்டு தடவை திரிப்போலி சென்று கடாஃபியைச் சந்தித்துப் பேசினார். அவர் கடாஃபியுடன் சதுரங்கம் ஆடிய படியே கடாஃபி பதவியில் இருந்து விலகி வேறு நாடு ஒன்றுக்கு செல்வது பற்றி உரையாடிப்பார்த்தார். ஆனால் கடாஃபி மசியவில்லை. பதவி விலகி வேறு நாட்டிற்கு செல்வதிலும் தான் தனது சொந்த மண்ணில் இறப்பதையே விரும்புகிறேன் என்றார் கடாஃபி சதுரங்க ஆட்டத்தில் கடாஃபியை செக் மேற் ஆக்காமல் ஆட்டத்தை வெற்றி தோல்வி இன்றி முடித்துக் கொண்டார்  கிர்சான் இலுயும்சினோவ். காடாஃபியின் ஆட்சி ஏற்கெனவே செக் மேற்றில் உள்ளது. ஜூலை 4-ம்திகதி இரசியா தனது நேட்டோவுடனான உரையாடலில் காடாஃபிக்கு ஒரு கௌரவ முடிவை ஏற்படுத்தும் தனது விருப்பத்தைத் தெரிவித்தது. ஆபிரிக்க ஒன்றியத் தலைவர் ஜேக்கப் ஜூமோ தனது ஒன்றிய நாடுகளுக்கு கடாஃபியின் மீதான பன்னாட்டு நீதிமன்றப் பிடியாணையை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று அறிவித்துள்ளார். கடாஃபி ஆபிரிக்க நாடொன்றில் தஞ்சம் புக அது வசதியாக இருக்கும் என்றே இந்த ஏற்பாடு. ஆபிரிக்க ஒன்றியம் லிபியாவில் ஒரு இடைக்கால அரசை அமைக்க விரும்புகிறது.

கைகொடுக்குமா கடாஃபியின் அனுபவம்.
தொடரும் நேட்டோ கூட்டமைப்பின் தாக்குதல்களும் எண்ணெய்த் தாகமெடுத்துத் துடிக்கும் மேற்குலக அரசுகளும் உள்ளூர் கிளர்ச்சிக்காரர்களும் மும்மர் கடாஃபியின் அதிகாரத்திற்கும் உயிருக்கும் பலத்த ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றுக்கு மத்தியில் மும்மர் கடாஃபி தனது காய்களை தந்திரமாக நகர்த்துகிறார். கடாஃபியின் தாக்குப் பிடித்தலின் இரகசியம் அவர் அழுத்தங்களுக்கு மசியாதவர், அழுத்தங்களை எதிர் கொண்ட அனுபவம் நிறைய உடையவர். தன்னை கொல்வதற்கு எதிரான சதியை எப்படிக் கையாள்வது என்ற அனுபவம் நிறைய உள்ளவர்.

Monday 4 July 2011

பிரித்தானியாவிடம் பறி போகும் இந்திய வேலை வாய்ப்புக்கள்

பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளின் வெளி-ஒப்படை வேலைகள் பல மூன்றாம் உலக நாடுகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்பட்டது.

வெளி-ஒப்படை வேலைகள்:
கணனித் துறை - 28%
சந்தைப்படுத்தல் துறை - 15%
நிதித் துறை        - 11%
நிர்வாகத் துறை - 9%
ஏனையவை -    27%    என்று இருந்தது. இவற்றின் வேலை வாய்ப்புப் பெறுமதி 1.2 ரில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தன. 2015இல் அமெரிக்காவின் வேலை வாய்ப்புக்களில் 3.3மில்லியன்கள் ஆசிய ஆபிர்க்க நாடுகளுக்கு மாற்றப்படலாம் என்று 2010இல் எதிர்வு கூறப்பட்டது. அவற்றின் சம்பளப் பெறுமதி 136மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

உதாரணம்:
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் வெளிநாடுகளில் அழைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட பின்னர் பல நிறுவங்களின் வாடிக்கையாளர்களுக்கன சேவைகளின் தரம் பெரிதும் குற்ந்துள்ளதாக தெரிவித்தன.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அங்குள்ள பணவீக்கமும் இந்தியத் தொழிலாளர்களின் ஊதியத்தை பிரித்தானியத் தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பிலும் பார்க்க அதிக அளவில் அதிகரிக்கச் செய்தது. இதன் விளைவாக பிரித்தானியாவின் சில பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரதேசங்களில் அழைப்பு நிலையங்களை(Call Centers) ஏற்படுத்தி அங்கு வேலை வாங்குவது மும்பாயில் வேலை வாங்குவதிலும் மலிவான நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் ஆங்காங்கு நடந்த தகவல் திருட்டுக்கள் பண மோசடிகள் போன்றவையும் பல பிரித்தானிய நிறுவனங்களைச் சிந்திக்க வைத்துள்ளன. இந்த நிலை நீடித்தால் பிரித்தானியாவில் அமெரிக்க அழைப்பு நிலையங்கள் உருவாகலாம்.

Sunday 3 July 2011

நகைச்சுவைக் கதை: இறுதி ஆசையாக ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்


அவர் எண்பது வயதான செல்வந்தர். சிலதினங்களில் இறந்து விடுவீர்கள் உங்கள் இறுதி ஆசைகளை நிறைவேற்றுங்கள் என்று கூறிய அவரது குடும்ப மருத்துவர் உங்கள் கணக்காளரையும் சட்டவாளரையும் அழைத்து ஆக வேண்டியவற்றைப் பாருங்கள் என்றும் வேண்டினார். ஆம் என்று தலையாட்டிய செல்வந்தர் மருத்துவருடன் கணக்காளரையும் சட்டவாளரையும் அழைத்து தனக்கு என்ன விலை கொடுத்தாவது ஒரு மருத்துவர் பட்டம், ஒரு கணக்காளர் பட்டம், ஒரு சட்டவாளர் பட்டம் வேண்டும் என்று வேண்டினார். அவர் விருப்பம் மூவராலும் மிகைப்படுத்தப் பட்ட விலைகளுடன் நிறைவேற்றப்பட்டது.

செல்வந்தரின் வாழ்வின் இறுதிக்கட்டம். மருத்துவப்பட்டம், சட்டவாளர் பட்டம், கணக்காளர் பட்டம் ஆகியவற்றிற்கான சான்றிதழ்கள் மூன்றையும் கையில் வைத்துத் தடவியபடியே முகத்தில் ஒரு திருப்தியுடன் காணப்பட்டார் அந்தச் செல்வந்தர். அதைப் பார்த்த மருத்துவருக்கும் சட்டவாளர்க்கும் கணக்காளருக்கும் ஆச்சரியம். இதில் என்ன அப்படி ஒரு திருப்தி என்று அவர்கள் அச்செல்லவந்தரிடம் ஆச்சரியத்துடன் கேட்டனர். "என்னை வாழ் நாள் முழுவதும் ஏமாற்றியவர்கள் இம்மூன்று வகையினரும். எனது இறப்பில் என்னுடன் சேர்ந்து அவர்களில் மூவர் இறக்கிறார்கள் என்பது எனக்குப் பெரிய திருப்தி" என்றார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...