Monday 6 June 2011

இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர்?


இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் நடந்த தமிழர்களுக்கு எதிரான போரில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது ஒரு விடை கிடைக்காத கேள்வியா? பல ஊடகங்கள் நாற்பதினாயிரம் என்கின்றன. எழுபதினாயிரம் என்று பல ஊடகங்கள் கூறுகின்றன. இன்னும் சில இருபத்தையாயிரம் என்கின்றன. வன்னியில் வாழ்ந்தவர்களில் ஒரு இலட்சம் பேருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றார் ஒரு மத போதகர்.

போரில் இறுதியில் ஒரு தினத்தில் மட்டும் 25,000பேர் கொல்லப்பட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. போரின் இறுதி நாட்களில் 40,000 பேர் கொல்லப்பட்டனர். 2009இல் மட்டும் 70,000இற்கு மேல் கொல்லப்பட்டனர். என்கின்றனர் சிலர். இலங்கை அரசு அதைப்பற்றி எந்தவிதமான கணக்கெடுப்பையும் மேற்கொள்ளவில்லை.

போர் விதவைகள்
போர் முடிந்த பின்னர் இலங்கையின் நிதி நிலை மோசமடைந்ததால் இலங்கை அரசு தமிழர்களுக்கான நிவாரண உதவி என்ற போர்வையில் வெளிநாடுகளில் இருந்து பணம் கறக்க முயன்றது. அப்போது இலகுவாக பணம் கறக்க ஒரு வழி போரால் விதவையானவர்களைச் சாட்டாக வைத்து மற்ற நாடுகளிடமிருந்தும் தொண்டர் அமைப்புக்களிடமிருந்தும் பணம் கறப்பதற்காக வடக்குக் கிழக்கில் உள்ள போர் விதைவைகளைக் கணக்கெடுத்தது. அதன்படி இலங்கையின் தமிழர்களின் பிரதேசமான வடக்கிலும் கிழக்கிலும் 90,000 போர் விதவைகள் இருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது.

இலங்கை அரசு கணக்கெடுக்கும் போது இலங்கையில் 90,000 விதவைகள் இருந்தனர். இலங்கைப் போர் 1977இல் இருந்து நடந்து வருகிறது. அதன் பிறகு கணவனை இழந்த விதவைகள் பலர் நாட்டை விட்டு வெளியேறி இருக்கலாம். நாட்டை விட்டு மூன்றில் ஒரு பங்கு தமிழர்கள் வெளியேறிவிட்டனர். அந்த வகையில் நாலில் ஒரு பங்கு விதவைகள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள் என்று வைத்தாலும் 22,500விதவைகள் நாட்டை விட்டு வெளியேறினர் என்று சொல்லலாம். மொத்தமாக 112,500 போர் விதவைகள். பல பெண்கள் கணவன்மாருடன் இறந்திருக்கிறார்கள். அவர்கள் தொகை 12,500ஆக இருக்கலாம். மொத்தமாக 125,000ஆண்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். 125,000ஆண்கள் கொல்லப்பட்ட இடத்தில் 100,000பெண்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும். இதை வைத்துக் கொண்டு 25 இற்கும் 75வயதிற்கும் உட்பட்ட 225,000 ஆண்பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கணிப்பிடலாம். இலங்கையில் மக்கள் தொகையில் 25வயதிற்கு உட்பட்டவர்கள்தான் அதிகம். இதனால் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் 100,000பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கணிப்பிடலாம். முதியவர்கள் 15,000கொல்லப்பட்டிருக்கலாம். மொத்தத்தில் 340,000 பேர் இலங்கையில் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.

இதை வேறு விதமாக உறுதி செய்ய முடியுமா?
வாஷிங்டன் மற்றும் ஹவார்ட் மருத்துவ கல்லூரிகள் மேற்கொண்ட ஆய்வின்படி இலங்கையில் 1983 இருந்து 2002ம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் குறைந்தது 2இலட்சத்து 15ஆயிரம் பேர் யுத்தத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்ததொகை சுமார் 3இலட்சத்து 38ஆயிரமாக இருக்கலாம் என்று அந்த ஆய்வு மேலும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் மீது 2002-ம் ஆண்டின் பின்புதான இலங்கைப் படையினர் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கினார்கள். உக்கிரமான போர் 2008இல் தான் ஆரம்பித்தது.

இவற்றை வைத்துக் கொண்டு அடித்துச் சொல்லலாம் இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இலங்கையும் இந்தியாவும் இணைந்து கொன்றன என்று.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...