Saturday 28 May 2011

ஹிலரியின் பாக்கிஸ்தான் பயணத்தின் பின்னணி


அமெரிக்க அரசுச் செயலர் ஹிலரி கிளிண்டனின் திடீர் பாக்கிஸ்த்தானியப் பயணம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜீ-8 நாடுகளின் மாநாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில் அவர் பாக்கிஸ்த்தானில் இருப்பது அவரின் பயண்த்தின் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்த்துகிறது. அவர் அங்கு அவர் தலைவர் அஸிஃப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரசா கிலானி, படத்துறைத் தளபதி அஷ்ஃபாக் கயானி ஆகியோரைச் சந்தித்தமை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

பாக்கிஸ்த்தான் தனக்குத் தெரியாமல் பில் லாடன் மீதான படை நடவடிக்கை மேற்கொண்டமை மீதான தனது அதிருப்தியை ஹிலரியிடம் தெரிவித்தது. ஆனால் அதற்க்காக ஹிலரி வருத்தம் தெரிவிக்கவில்லை.

பின் லாடன் பாக்கிஸ்த்தானில் இருந்தமை பாக்கிஸ்தான் அரசுக்கோ உயர் படைத்துறையினருக்கோ தெரிந்திருக்கவில்லை என்றார் ஹிலரி.


பாக்கிஸ்த்தானில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளின் பட்டியல் பாக்கிஸ்தானிடம் கையளிக்கப் பட்டது. பின் லாடனின் உதவியாளர் ஐமன் அல் ஜவகிரி, தலிபான் தலைவர் முல்ல, தலிபான் தளபதி ஒமர் சிராஜ் ஹக்கானி, லிபிய அல் கெய்தாத் தலைவர் அதியா அப்துல் ரஹ்மான் போன்றவர்கள் அப்பட்டியலில் இருக்கின்றனர். இப்பட்டியல் கையளிக்கப் பட்டதன் நோக்கம் இவர்களை நீ பிடிக்கிறாயா அல்லது நான் பிடிக்கட்டுமா என்பதுதான் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் பாக்கிஸ்த்தானுக்கான இரண்டு பில்லியன் டொலர் உதவி இந்த ஒத்துழைப்புடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தாம் தீவிரப்படுத்துவதாக பாக்கிஸ்த்தான் தெரிவித்தது. பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்கா செய்யும் ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகளை தாம் மிதப்படுத்துவதாக ஹிலரி தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளாக உலகின் மோசாமான பயங்கரவாதத் தலைவர்கள் பலர் பாக்கிஸ்த்தானில் வசித்து வருகிறார்கள் என்றார் ஹிலரி. தனது பாக்கிஸ்தானியப் பயணம் ஒரு திருப்பு முனையாக அமையும் என்கிறார் ஹிலரி.

என்ன திருப்பு முனை?

ஹிலரியின் பயணம் சுமூகமானதாகவே இருந்தது. ஒரு நாட்டுக்குள் அத்து மீறிப் புகுந்து அங்குள்ள அப்பாவிகள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தும் இன்னொரு நாட்டு அரசியல் பிரமுகர் சுமூகப் பயணம் மேற் கொள்வதன் சூட்டுமம் என்ன? இரு நாடுகளும் இணைந்து நாடகமாடுகின்றன. ஹிலரியின் பயண முடிவில் கூட்டறிக்கை வெளிவிடப்படவில்லை. பாக்கிஸ்தானிய அரசு ஹிலரியின் பயணத்தின் நோக்கத்தையோ அல்லது என்ன ஒத்துக் கொள்ளப் பட்டது என்பது பற்றியோ ஒன்றும் கூறவில்லை. அமெரிக்க எதிர்ப்பு வாதம் பாக்கிஸ்தானுக்கு எந்த விதத்திலும் உதவாது என்றார் ஹிலரி. இனி அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்த்தானில் இருந்து அத்து மீறிப் பிரவேசிக்கத் தேவையில்ல. உள் இருந்தே இசுலாமியத்தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம். ஹிலரி திருப்பு முனை என்று சொன்னது இனி அமெரிக்கப் படைகள் பாக்கிஸ்த்தானுக்குள் அனுமதிக்கப்பட்டு அவை பாக்கிஸ்த்தானியப் படைகளுடன் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தும் என்பதாகத்தான் இருக்கும். 85 நவீன ஆளில்லா விமானங்களை அமெரிக்கா பாக்கிஸ்த்தானுக்கு வழங்குவதாக ஹிலரியின் பயணத்திற்கு முன்பதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. பாக்கிஸ்த்தானியப் படைகள் அவற்றைப் பாவித்து அல்லது அமெரிக்கப் படைகளே பாக்கிஸ்த்தானுக்குள் இருந்து கொண்டு அவற்றின் மூலம் தாக்குதல்களை நடத்தலாம்.

Thursday 26 May 2011

ராகுல் காந்தி - இந்தியாவின் தலைவனா? தலைவிதியா?


ராகுல் காந்தியின் அம்மா தற்போதைய இந்தியப் பிரதம மந்திரியைப் பெருவிரலின் கீழ் வைத்திருப்பவர். அப்பா இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி. அப்பம்மா இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி. பாட்டன் இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி. இதனால் உலகெங்கும் உள்ள பத்திரிகைகள் ராகுல் காந்தியை "காத்திருக்கும் பிரதம மந்திரி" (Prime minister-in-waiting) என்று சொல்கின்றனர். மொத்ததில் ராகுலை இம்சைப் பிரதமர் ஐந்தாம் நேரு-மூன்றாம் காந்தி என்று சொல்லலாமா?

ராகுல் ஆன ராஉல் - Raul became Rahul
ராஜீவ் காந்தி தனது பெயரை ரொபேர்ட்டோ என்று மாற்றி கத்தோலிக்கரான சனியோ மரினோவைத் திருமணம் செய்து பியங்கா என்னும் மகளையும் ராஉல் என்னும் மகனையும் பெற்றார். அவர் அரசியலுக்கு வந்த போது அவர்கள் பெயர்கள் பிரியாங்கா என்றும் ராகுல் என்றும் இந்திய மயப்படுத்தப்பட்டது.

தங்க மகன்
பிரபல சட்டவாளரும் இந்தியப் பாராளமன்ற உறுப்பினருமான ராம் ஜெத்மாலினி காந்தி குடும்பத்திற்கு சுவிஸ் வங்கியில் பணம் உண்டு என்று தான் நம்புவதாக 22-02-2011இலன்று தெரிவித்தார். 1991 நவம்பரில் சுவிசில் இருந்து வெளிவரும் இலஸ்ரே என்னும் சஞ்சிகை ராஜிவ் காந்தி சுவிஸ் வங்கியில் இரண்டரை பில்லியன் சுவிஸ் பிராங்குகளை வைப்பிலிட்டதாகக் குற்றம் சாட்டியது. இதை காந்தி குடும்ப்பம் இதுவரை மறுக்கவில்லை. அந்தப் பணம் இப்போது இந்திய நாணயப் பெறுமதியில் நாற்பத்தி இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்தைந்து கோடிகளாக வளர்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இலக்கத்தில் போட்டால் 423,450,000,000ரூபாக்கள்

சுப்பிரமணிய சுவாமி இந்தியப் பிரதமருக்கு 29-04-2011இலன்று எழுதிய கடிதத்தில் சோனியா காந்தியின் சகோதரிகள் இந்தியா பிரான்சிடம் இருந்து வாங்க முடிவு செய்திருக்கும் போர் விமானங்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் பிரான்சிடம் இருந்து பெருந்தொகைப்பணம் இலஞ்சமாக வாங்கியமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகச் சொல்லியுள்ளார்.


கல்விமான் ராகுல்
இந்தியாவின் பிரபல கல்லூரிக்ளில் ஒன்றான சென்ர் ஸ்ரிஃபன் கல்ல்லூரியில் நுழைவுத் தேர்வு கடினமானது. அங்கு ராகுல் காந்திக்கு விளையாட்டுத்துறையில் வல்லவர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் கைத்துப்பாக்கி சுடும் விளையாட்டு. அவர் அந்த விளையாட்டில் வல்லவராக இருந்தாரா என்பதும் கேள்விக்குறி. அங்கு அவரால் ஒரு வருடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பின்னர் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ரொலின்ஸ் கல்லூரியில் ராஉல் வின்சி என்னும் இத்தாலியப் பெயரில் ராகுல் காந்தி கல்வி பயின்றாராம். ராகுலுடன் நெருங்கிப் பழகியவர்கள் அவர் ஒரு மந்தமான சிந்தனையாளர் என்கின்றனர்.

வெரோனிக்காவின் காதலன்
2004-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் திகதி ராகுல் காந்தி தனக்கு வெரோலிக்கா என்ற ஸ்பானியப் பெண் காதலி இருக்கின்றார் என்றார். இப்போது அவர்கள் பிரிந்துவிட்டார்கள். பின்னர் ராகுலுக்குத் திருமணம் செய்ய முயற்ச்சிகள் நடந்தன. இதுவரை திருமணம் நடக்கவில்லை.
அரசியலில் இருந்தும் அனுபவம் இல்லாமல் இருக்கிறார்.
ராகுல் காந்தி அரசியலில் இருந்தும் அவர் இதுவரை இந்தியாவின் தலையாய பிரச்சனைகள் ஒன்றைக்கூடக் கையாண்டதில்லை. அவரை அப்படிக் கையாளவிடுமிடத்து அவரது பலவீனங்கள் வெளிப்பட்டுவிடும் என்று அவரைச் சார்ந்தவர்கள் கருதுகிறார்கள். ஒரு பெரிய பேட்டி கூட அவர் இதுவரை கொடுத்ததில்லை. அவருக்கு மந்திரிப் பதவி கூட வழங்கப்படவில்லை. அவருக்கு தலைமைத்துவப் பண்புகள் எதுவும் இல்லை என்பதை அவரைச் சார்ந்தவர்கள் அறிவர். டிசம்பர் 2010இல் தமிழ்நாட்டுக்கு வந்த ராகுல் காந்தி இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தானே நேரில் தலையிட்டு தீர்வு காண முடிவு செய்துள்ளேன் என்றார். ஆனால் அவரிடம் இதுவரை அந்தப் பிரசனையை கையாளும்படி கையளிக்கப்படவில்லை.

பிஹார் தேர்தலில் காங்கிரசை மண் கவ்வ வைத்த ராகுல்
பிஹார் தேர்தலில் காங்கிரசுக் கட்சியை ராகுல் கையாண்ட திறமையால் காங்கிரசுக் கட்சி 234 இடங்களில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. சில எதிர்க்கட்சியினர் ராகுலுக்குப் பாராட்டும் தெரிவித்தனர் தம்மை வெல்ல வைத்தமைக்கு. இதனால் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் ராகுலை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காங்கிரசுக் கட்சி பயன்படுத்தியது. இருந்தும் அவர் அமைத்த இளைஞர் அணி காங்கிரசுக் கட்சியின் குழுச் சண்டையை மேலும் மோசமாக்கி காங்கிரசின் தோல்விக்கு வழிவகுத்தது.

விக்கிலீக்கும் ராகுலை விட்டு வைக்கவில்லை
ராகுல் காந்தி இந்தியா இசுலாமியத் தீவிரவாதிகளிலும் பார்க்க இந்துத் தீவிரவாதிகளால் அதிக ஆபத்தை நோக்குகிறது என்று தெர்வித்ததைப் பகிரங்கப் படுத்தியது.

ராகுல் காந்தியைப்பற்றி விமர்சகர்கள்
ராகுல் காந்தியில் அரசியல் திறமை அவரை எங்கும் இட்டுச் செல்லாது என்கிறார் காந்தி குடும்பத்தைப்பற்றி புத்தகம் எழுதும் ஆர்த்தி ராமச்சந்திரன். அருண் சர்மா என்பவர் ராகுல் இதுவரை எந்த ஒரு பிரச்சனியிலும் தனது திறமையைக் காட்டவில்லை என்கிறார். காந்தி குடும்பத்தைப் பற்றி ஆய்வு செய்யும் ரஷீட் கிட்வாய் என்பவர் ராகுல் காந்தி தனது பெயருடன் ஏதாவது சாதனைகளை இணைக்க வேண்டும் என்கிறார். ராகுல் இதுவரை எதையும் கிழிக்கவில்லை என்பதை அவர் இப்படிச் சொல்கிறார்.

தனக்கு பெயர் சேர்க்க முயன்ற ராகுல்.
அடுத்த ஆண்டு தேர்தலை எதிர் நோக்கும் உத்தரப் பிரதேசத்தில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் தானும் பங்கு கொண்டு தனக்குப் பெயர் சேர்க்க முயன்றார் ராகுல் காந்தி. அவரும் விவசாயிகளுடன் சேர்ந்து போராடினார். அவர் கைது செய்யப்பட்டு விடுதலையும் செய்யப்பட்டார். அவரை இந்தியாவே ஒரு முறை திரும்பிப் பார்த்து.அத்துடன் வாயை மூடிக்கொண்டிருந்தால் ஒழுங்காக இருந்திருக்கும். பின்னர் டில்லிக்குப் போனவர் மாநிலத்தில் மக்கள் கொல்லப்பட்டுக் கொன்று எரிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எரிக்கப்பட்ட எழுபது அடி சாம்பல் மேட்டை நான் பார்த்தேன் என்றார். உடன் அங்கு விரந்து சென்ற காவல்துறை ராகுல் குறிப்பிட்ட சாம்பல் மேட்டில் பழைய இரும்புப் பொருட்களும் குப்பைகளும் சாணிகளுமே கொழுத்தப்பட்டிருந்தன என்று சாம்பலைப் பரிசோதனை செய்தபின் அறிவித்தனர். இது ராகுலிற்கு ஒரு பலத்த அடியாக அமைந்தது. பின்னர் ராகுல் தன்னிடம் உள்ளூர் மக்கள் கூறியவற்றைத்தான் தானி கூறியதாகச் சொல்லித்தப்பித்துக் கொண்டார்.

முன்னாள் "வருங்காலப் பிரதம மந்திரி"
ராகுலின் தொடர் தவறுகளால் அவரை விமர்சிப்பவர்கள் இப்போது அவரை முன்னாள் வருங்காலப் பிரதம மந்திரி என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். காந்தி குடும்ப ஆலோசகர்கள் சிலர் இவன் வேலைக்கு ஆக மாட்டான் பேசாமல் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வாருங்கள் என்று ஆலொசனை சொல்கின்றனர்.

வேகமாக வளர்ந்து வரும் நாடு, வருங்கால வல்லரசு. வருங்கால பணக்கார நாடு என்றேல்லாம் கூறப்படும் இந்தியா இன்னொரு மொக்கை காந்தியால் ஆளப்படவேண்டியது அதன் தலைவிதி

Wednesday 25 May 2011

கடாபிக்கு எதிரான சதிகள்


ஐக்கிய நாடுகள் சபையில் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியின் ஆட்சிக்கு எதிரான தீர்மானம்-1973 இந்த ஆண்டும் மார்ச் 17-ம் திகதி கொண்டுவரப்பட்ட போது சீனாவும் இரசியாவும் தங்கள் இரத்து அதிகாரத்தைப் பாவிக்காமலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்து கொண்டன. தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டாலும் நேட்டோப் படைகள் ஐநாவிற்கு வெளியில் கூடி முடிவெடுத்து லிபியாவிற்கு எதிராக படை நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று தெரிந்துதான் இரண்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டன. இத்தனைக்கும் கடாபியின் லிபியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் பல பில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத விற்பனை ஒப்பந்தம் நடைமுறையில் உண்டு.


லிபியத் தலைவர் கடாஃபியை ஒரு மேற்கத்திய சார்பாளராக மாற்ற பல சதிகள் திரை மறைவில் நடந்தன. கடாஃபி வித்தியாசமான பேர்வழி தனது படைவீரர்களுக்கு அவர் பயிற்ச்சி அளிப்பது குறைவு. அவர்கள் தன்னையே கவிழ்த்து விடுவார்கள் என்ற அச்சம். இதற்காக அவர் மேற்குலகம் அவரை அணுகிய போது அவர் வேறு விதமாக செயற்பட்டார். தனது மகன் சயிf அல் இஸ்லாமிற்கு London School of Economics கல்வி பயில ஏற்பாடு செய்தார். சயிf கடாஃபி London School of Economicsஇல் "பயின்று" கலாநிதிப்பட்டமும் பெற்றார். சயிf கடாஃபி ஒரு மேற்கத்திய ஆதரவாளராக உருவெடுப்பார் என்று அமெரிக்க பிரித்தானியக் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் நம்பினார்கள். சயிf கடாஃபி லிபியாவில் மேற்குலக அரசு பாணிச் சீர்திருத்தங்களை செய்வார் என்றும் நம்பினர். ஆனால் கடாபி தனது மகனையே நம்பவில்லை. சயிf கடாஃபி தன்னைக் காவிழ்க்கலாம் என்ற அச்சம் அவரிடம் இருந்தது. அதனால் தனது மற்ற மகனாகிய முத்தாசிம் கடாஃபியை ஒரு தீவிர மேற்குலக எதிர்ப்பாளராக உருவாக்கி அவரையே படைத்துறைக்கும் பொறுப்பாக்கினார்.

கடாபியைப் பதவியில் இருந்து விலக்க பல முயற்ச்சிகள் நடக்கின்றன. நேட்டோப் படைகள் 24-05-2011 காலையில் இருந்து லிபியத் தலைநகர் திரிப்போலி மீது நேட்டோப் படைகள் தமது தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ளன. கடாபி ஆதரவுப் படைகள் பாவிக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் கட்டிடம் மீதும் படைத்துறை வழங்கல் பொருட்கள் வைத்திருக்கும் கட்டிடங்கள் மீதும் முப்பது நிமிடங்களுக்குள் இருபது குண்டுகள் வீசித் தரை மட்டமாக்கப் பட்டன. காப்பரண்களை ஊடறுத்து தகர்க்கும் குண்டுகளும் வீசப்பட்டன. நேட்டோப் படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கும் வேளை அமெரிக்கா கடாபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை தமது நாட்டில் ஒரு பணிமனையை அமைக்குமாறு அழைப்பு விடுத்தது.

சிக்கல் மிகுந்த விமானத் தாக்குதல்கள்
லிபியாவிற்கும் குண்டு வீசச் செல்லும் நேட்டோ விமானங்கள் தங்கள் இலக்கு குடிசார் இலக்கல்ல என்று உறுதி செய்த பின்னரே குண்டுகளை வீசவேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே நேட்டோப் படையினர் கடாபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டன. குடிமக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டால் எதிர் மறையான் விளைவுகள் ஏற்படும் என்று நேட்டோ நாடுகள் உணர்ந்துள்ளன.

தேக்க நிலையில் நேட்டோ நடவடிக்கைகள்
கடந்த சில வாரங்களாக கடாபிக்கு எதிரான படை நடவடிக்கை ஒரு தேக்க நிலையை அடைந்திருந்தன. பிரித்தானியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் பத்திரிகையாளர்கள் ஏன் இந்தத் தேக்க நிலை என்று வினவினர். கடாஃபியைப் அகற்றும் பணிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டு விட்ட்ன விரைவில் அவர் அகற்றப்படுவார் என்றார். ஆனால் எப்போது என்று அவர் சொல்லவில்லை.

லிபியாவில் தமது தரைப்படையினரை இறக்க நேட்டோ தயாரில்லை. ஏற்கனவே ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் இருந்து நேட்டோப் படைகள் விலகவேண்டும் என்று அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பிரித்தானிய ஒரு சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளது அதன்படி பிரித்தானியப் படைகளில் ஒரு தொகுதியினர் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்படுவர். அவர்களை ஐக்கிய் அரபு எமிரேட்சும் ஜோர்தானும் "வேலைக்கு அமர்த்தி" அவர்கள் லிபியாவில் கடாஃபிக்கு எதிரான படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிற்கு பயிற்ச்சிகளும் அளிப்பர். அது மட்டுமல்ல ஆப்கானிஸ்த்தானில் இருந்து திரும்பிய பிரித்தானியப் படையினர் 700 பேர் லிபியா செல்லத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடாஃபியின் நகர்வுகள் இனி எப்படி இருக்கும்?

Tuesday 24 May 2011

பத்மநாதனின் பேட்டியின் பின்னணி


பத்மநாதன் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வந்ததில் இருந்து அவரை விசாரிக்க அனுமதி வேண்டும் என்று இந்திய உளவுத்துறை இலங்கையிடம் கோரிக்கை விடுத்து வந்தது இலங்கையும் காலம் கடத்தி வந்தது. இப்போது திடீரென்று பத்மநாதன் ஒரு இந்திய ஊடகவியலாளர் வி. கே சசிக்குமாருக்கு பேட்டியளித்துள்ளார்.

பத்மநாதன் பேட்டி பற்றிய பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகள்:
  • இந்துஸ்த்தான் ரைம்ஸ்: திமுக கொள்கைகள் ராஜீவ் கொலையில் செல்வாக்கு செலுத்தியது.
  • ரைம்ஸ் ஒஃப் இண்டியா: விடுதலைப் புலிகளின் தலைவர் ராஜீவ் கொலைக்கு மன்னிப்புக் கோருகிறார்
  • இந்து: போர் முடிந்துவிட்டது. எமக்கு உள்ள ஒரு வழி, ஒரு சந்தர்ப்பம்- அமைதியான வழி அமைதியான பேச்சு வார்த்தை.
  • லங்கா மகசீன்: ஐநாவும் ஒரு மேற்கு நாடும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெளியேற ஒரு கப்பலை அனுப்பத் தயாராக இருந்தன.
  • சனசா நியூஸ்: ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஒருவருக்கும் உதவாது.
திடீரென பத்மநாதன் இந்திய ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும்படி என்ன நடந்தது? இரண்டு வருடங்களாகச் செய்யாததை இப்போது செய்ய வேண்டிய அவசியம் என்ன? இவற்றைச் அண்மையில் நடந்த இரு சம்பவங்களின் பின்னணியில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒன்று இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் இந்தியாவிற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தியமை. மற்றது தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தமை. டில்லி சென்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸிடம் இந்தியா பத்மநாதனைத் தமது ஆட்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்க வேண்டும். பத்மநாதன் இந்திய உளவுத் துறை சொல்லிக் கொடுத்ததைத்தான் சொல்லியிருக்கிறார் போலும். இந்தப் பேட்டியின் மூலம் இந்தியா ராஜீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகள்தான் என்று தமிழ் மக்களுக்குச் சொல்கிறது. பத்மநாதன் சென்ற ஆண்டில் ஜெயராஜிற்கு வழங்கிய பேட்டியில் விடுதலைப் புலிகள்தான் ராஜிவ் காந்தியைக் கொன்றார்கள் என்று சொல்லவில்லை. அது இலங்கை அரசு அரங்கேற்றிய பேட்டி.


பத்மநாதன் வி. கே சசிக்குமாருக்கு வழங்கிய பேட்டியை இந்திய உளவுத்துறை தமக்கும் ஆளும் கட்சிக்கும் சாதகமாக மாற்ற முயன்று தோல்வி கண்டுள்ளது. ஈழப் பிரச்சனையை வைத்து சீமான் போன்றோர் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தமை ஜெயலலிதாவை தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் வெற்றி கொள்ள வைத்தது. இது தமிழீழ ஆதரவாளர்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையில் ஒரு நிரந்தர உறவை ஏற்படுத்தி விடுமா என்று இந்திய உளவுத்துறையும் காங்கிரசுக் கட்சியும் பயப்படுகின்றன. இந்தப் பயத்தை பத்மநாதனைக் கொண்டு புலிகள் ஜெயலலிதாவைக் கொன்றிருப்பர் என்று சொல்ல வைத்து போக்கிக் கொள்ளப் பார்க்கிறது. பத்மநாதன் இலங்கையில் தமிழ் மக்கள் இருக்கும் இழி நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளார். தமிழர்களை குறைந்தது மனிதர்களாக ஆவது வாழவிடுங்கள் என்று அவர் இந்தியாவிடம் கெஞ்சுகிறார். தமிழர்களை இந்தியா மனிதர்களாக வாழவிடுகிறதில்லை என்பதை உணர்த்துகிறார் பத்மநாதன். விவாதத்திற்கு ராஜீவ் காந்தியை கொல்லப் பிரபாகரன் உத்தரவிட்டார் என வைத்துக் கொண்டாலும், இந்தியா ஏன் அமெரிக்கா பின் லாடனைக் கொன்றது போல் பிரபாகரனைக் கொல்லவில்லை அல்லது கொல்ல முயற்ச்சிக்கவில்லை. ஏன் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்? ஏன் இத்தனை அழிவும் அவலமும் தமிழ் மக்கள் மீது திணிக்கப் பட்டது? தமிழ் மக்களின் அவலம் இன்றும் தொடர்வது ஏன்? இந்தியாவின் இலக்கு பிரபாகரனாபிரச்சனையை சரியான முறையில் சரியான பரிமாணத்தில் பார்க்காமல் அதற்குடிய தீர்வைக் காணமுடியாது. அடுத்த முறைத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசு இன்னும் மோசமான தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

பதமநாதன் திடீரென்று சொல்கிறார் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆயிரம் ஆண்டுகள் நல்ல உறவு இருந்ததாம். இப்படிச் அவரைச் சொல்லச் சொன்னவர்கள் இலங்கையின் பிரச்சனைகளையோ வரலாற்றுப் பின்னணியையோ சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள். சிலர் சொல்லுவர் இந்திய உளவுத்துறையினர் இலங்கைப் பிரச்சனைய சரியாகப் புரிந்து கொள்ளாத அறிவு கெட்ட முண்டங்கள் என்று.

போருக்குப் பின்னர் இந்திய உளவுத்துறை இலங்கைக் தமிழர்களுக்கு "இந்தியாவை விட்டால் வேறு ஒருவரும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள்" என்ற செய்தியை உணர்த்த விரும்புகிறது. இதைபலர் மூலம் தெரிவிக்கிறது. இலண்டன் வந்த தமிழருவி மணியனும் திருமாவளவனும் இதையே தெரிவித்தனர். இருவரும் தமிழர்களைப் பார்த்துக் கேட்டனர். உங்களுக்கு உதவ "நார்வே" வந்ததா அமெரிக்கா வந்ததா என்று? பத்மநாதனின் பேட்டி மூலமும் இந்தியா மீண்டும் இதையே சொல்கிறது. ஐநாவும் இன்னொரு ஐரோப்பிய நாடும் கப்பல் அனுப்பி விடுதலைப்புலிகளின் தலைவர்களை காப்பாற்ற முயன்றதாம். அதைத் தடுத்தது இந்தியா என்பது எமக்கெல்லாம் தெரியும். இந்தியா தன்னை விட்டால் எமக்கு உதவ யாரும் இல்லை என்று எமக்கு உணர்த்த முயல்கிறது. ஆனால் நாம் உணர்ந்து கொள்வது இதுதான்: "இந்தியாதான் எல்லாவற்றையும் கெடுத்தது. இந்தியாவே தமிழரின் முதலாம் எதிரி".

Monday 23 May 2011

அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து ஆடும் இரட்டை நாடகம்


பாக்கிஸ்தானைப் பற்றி பிரபல வட இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு நகைச்சுவை: அயத்துல்லா கொமெய்னி கடவுளிடம் போய்க் கேட்டார், "எனது நாட்டில் இசுலாமிய முறைப்படி ஆள்கிறேன் ஆனால் நாட்டிற்கு ஒரு விமோசனம் இல்லை. எப்போது எனது ஈரான் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்?" கடவுள் சொன்னார் உனது வாழ் நாளில் அது நடக்காது என்று. அப்போதைய பாக்கிஸ்தானிய அதிபர் சியா உல் ஹக் அதே கேள்வியை கேட்டார். கடவுள் சொன்னார் "எனது வாழ் நாளில் அப்படி ஒன்று நடக்காது" என்று. பாக்கிஸ்த்தான் ஒரு நாளும் உருப்படாது என்பதையே அவர் இப்படி நகைச்சுவையாக எழுதினார். பாக்கிஸ்தான் உருப்படாதா அல்லது பாக்கிஸ்த்தானை அமெரிக்கா உருப்பட விடுகிறதில்லையா?

அமெரிக்க பாக்கிஸ்தான் உறவு
அமெரிக்காவும் பாக்கிஸ்தானும் நீண்டகால உறவை கொண்டுள்ளன. 1950களில் கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பை ஜவர்லால் நேரு போன்ற பல வளரும் நாடுகளின் தலைவர்கள் உருவாக்கியபோது அமெரிக்கா அதில் பாக்கிஸ்த்தானைச் சேரவிடாமல் தன்னுடன் உறவு வைத்திருக்கும்படி வேண்டியது. நேரு தனது நாட்டு முதலாளிகளை இரு முனையில் பாதுகாக்கும் பணியை மேற் கொண்டிருந்தார். ஒன்று தனது நாட்டு முதலாளிகளை மேற்கு நாட்டு முதலாளிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். மற்றது தனது நாட்டில் பொதுவுடமை வாதம்(கம்யூனிசம்) பரவாமல் பாதுகாக்க வேண்டும். இதற்காகவே அவர் கூட்டுச் சேரா நாடுகளின் அணியை உருவாக்கினார். வெளியில் கூட்டுச் சேரா நாடுகள் மேற்குலகுடனோ அல்லது சோவியத் ஒன்றியத்துடனோ கூட்டுச் சேர்வதில்லை என்ற கொள்கையுடையது என்று கூறப்பட்டது. இந்திய முதலாளிகளுக்கு மேற்கத்திய முதாலாளிகளால் பொதுவுடமை வாதத்திலும் பார்க்க அதிக பயமுறுத்தல் இருந்தது. இதனால் கூட்டுச் சேரா நாடுகள் அணி சோவியத் ஒன்றியதிற்கு நெருக்கமாகவே இருந்தது. இதனால் சோவியத் இந்திய உறவு நல்ல முறையில் இருந்தது. இதைப் பயன்படுத்தி பாக்கிஸ்த்தானை அமெரிக்கா தன் பக்கம் இழுத்துக் கொண்டது.

பாக்கிஸ்த்தானியப் பிரதமர் அயூப் கான் அமெரிக்காவுடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையையும் செய்து கொண்டார். எழுபதுகளில் பங்களாதேச விடுதலைப் போரில் பாக்கிஸ்த்தானின் இனக்கொலைக்கு அமெரிக்கா உதவி செய்தது. சுல்பிகார் அலி பூட்டோ இந்தியாவுடன் சிம்லா உடன்படிக்கை செய்து இந்தியாவுடன் முரண்பாடுகளைக் களைந்து தனது நாட்டின் பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைத்து பாக்கிஸ்த்தானை முன்னேற்ற முயற்ச்சி செய்தார். அவரது ஆட்சி கவிழ்க்கப் பட்டு அவர் தூக்கிலிடப்பட்டார். பாக்கிஸ்த்தான் பாதுகாப்புச் செலவீனங்களைக் குறைத்தால் பாதிக்கப்படுவது அமெரிக்க ஆயுத விற்பனையாளர்களே. 1980களில் ஆப்கானிஸ்த்தானில் இருந்து சோவியத் படைகளை விரட்ட அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானும் இணைந்து செயற்பட்டன. பல பில்லியன் டொலர்கள் செலவழித்து ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகளை விரட்டப் போராடும் முஜாகிதீன் ஆயுதக் குழுக்களுக்கு பாக்கிஸ்த்தானில் பயிற்ச்சிகள் அமெரிக்க உளவுத்துறையால வழங்கப்பட்டன. சோவியத் படைகள் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறியபின் அங்கு ஒரு இஸ்லாமியத் அடிப்படைவாதக் கொள்கையும் அமெரிக்க விரோதமும் கொண்ட தலிபான் அரசு அமைந்தது. சோவியத்தை ஆப்கானிஸ்த்தானில் இருந்து விரட்டும் நோக்கத்துடன் உருவான நெருங்கிய உறவைப் பாவித்து பாக்கிஸ்த்தான் அணு ஆயுத நாடாகியது. அமெரிக்கப் பாராளமன்றம் ஆத்திரம் கொண்டு ஜோர்ஜ் புஷ் ஆட்சியில் (1989) பாக்கிஸ்த்தானிற்கான நிதி உதவிகள் நிறுத்தப்பட்டன. 1997இல் பாக்கிஸ்த்தான் தலிபான்களை ஆப்கானிஸ்த்தானின் சட்டபூர்வ ஆட்சியாளர்களாக அங்கீகரித்தது. ஆனால் அமெரிக்க தனது தூதுவரகங்களில் குண்டு வைத்தமைக்காக தலிபான் ஆட்சியாளர்கள் பின் லாடனைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. 1998இல் பாக்கிஸ்த்தான் ஐந்து அணுஆயுதப் பரிசோதனைகளை மேற் கொண்டது. இதனால் அமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கான உதவிகளை நிறுத்தியதுடன் ஆயுத விற்பனைகளையும் தடை செய்தது. 2009 செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு பாக்கிஸ்தானை மிகவும் தேவைப்பட்டது. ஆப்கானிஸ்த்தானில் உள்ள அமெரிக்க எதிர்ப்புத் தீவிரவாத இயக்கங்களான தலிபானையும் அல் கெய்தாவையும் வேட்டையாட பாக்கிஸ்த்தனுடனான நட்பை அமெரிக்கா புதுப்பித்தது. அமெரிக்கக் கொள்கையில் ஆப்-பாக் கொள்கை என்ற புதிய பதம் உருவானது. வெளியுறவுக் கொள்கையும் புதிய உருப்பெற்றது.

நாடகம் ஆரம்பம்
2009-09-11 தாக்குதலின் பின் பாக்கிஸ்த்தானில் அமெரிக்க ஆதரவு ஆட்சியாளர் இருக்கக் கூடாது என்பதே ஆப்-பாக் தீவிரவாதிகளின் நோக்கம். இதற்கு அமெரிக்க பாக் அரசுகள் ஒரு இரட்டை வேட நாடகத்தை ஆடத் தொடங்கின. பாக்கிஸ்த்தனிய ஆட்சியாளர்கள் அல் கெய்தாவிற்கும் தலிபான்களுக்கும் ஆதரவு போல ஒரு வேடம் தாங்கிக்கொண்டு அமெரிக்காவிற்கு இந்தத் தீவிரவாத இயக்கங்களை ஒழிக்க எல்லா உதவிகளையும் வசதிகளையும் செய்து வருகின்றனர். அமெரிக்காவும் அடிக்கடி பாக்கிஸ்த்தான் தீவிரவாதிகளுக்கு உதவுகிறது என்று கூச்சலிட்டுக் கொண்டே இருக்கும்.

2010இல் இருந்து அமெரிக்க ஆளில்லா நவீன விமானங்கள் பாக்கிஸ்த்தானிற்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாதிகள் நிலைகள் மீது தாக்குதல்கள் நடாத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களில் பல அப்பாவி பொதுமக்கள் அடிக்கடி கொல்லப்படுகின்றனர். பாக்கிஸ்த்தான் இதைக் கண்டிப்பது போல் பாசாங்கு செய்து வருகிறது. தனது நாட்டுக்குள் நுழையும் அமெரிக்க விமானங்களுக்கு எதிராக எதுவும் செய்வதில்லை.

பாக்கிஸ்த்தனிய படைத்துறையின் முகத்தில் கரி
பாக்கிஸ்த்தானிய மக்களை பொறுத்தவரை பாக்கிஸ்த்தானியப் படையினர் அவர்களது செல்லப் பிள்ளைகள். இந்தியாவிடம் இருந்து பாக்கிஸ்த்தானைப் பாதுகாப்பவர்கள். ஆனால் அமெரிக்க சீல் படைப்பிரிவின் வான்கலங்கள் பாக்கிஸ்த்தானுக்குள் நுழைந்து பாக்கிஸ்த்தானியப் படையினரின் தளங்களுக்கு அண்மையில் உள்ள பின் லாடனின் மாளிகைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியமை பாக்கிஸ்த்தானிய மக்களுக்கு படையினர் மேல் இருந்த மதிப்பைத் தகர்தது. நாளை இந்தியாவும் இதையே செய்யுமா என்ற கேள்வியையும் அவர்களிடையே எழுப்பியது. அது மட்டுமல்ல பாக்கிஸ்த்தனின் மிகப் பெரிய நகரான கராச்சியில் ஆறு தலிபான் போராளிகள் கடற்படை முகாமை 18 மணித்தியாலங்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமை அவர்களை அதிர வைத்துள்ளது. நாற்பது நிமிடங்கள் நடந்த பின் லாடனுக்கு எதிரான படை நடவடிக்கை பற்றி அது தொடங்கி பதினைந்து நிமிடங்களுக்குப் பின்னர் தனக்கு அமெரிக்கா அறிவித்ததாக பாக்கிஸ்த்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலிக் தெரிவித்திருந்தார்.

பெரும் தொடர் நாடகம்
தேவை ஏற்படின் பின் லாடனைக் கொல்லச் செய்த படை நடவடிக்கைபோல் இன்னும் பாக்கிஸ்த்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த நான் உத்தரவிடுவேன் என்கிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இனி இப்படி ஒரு தாக்குதல் செய்யக் கூடாது என்று தாம் அமெரிக்காவை எச்சரிப்பதாக பாக்கிஸ்த்தான் சொல்கிறது. இதுவும் ஒரு இரட்டை வேட நாடகம். நீ தேவையான நேரமெல்லாம் அடி நான் உன்னைத் திட்டுவது போல் திட்டுகிறேன்.

இந்திய நப்பாசை
பின் லாடன் மீதான தாக்குதலின் பின் அமெரிக்க பாக்கிஸ்த்தானிய உறவில் விரிசல் ஏற்படுமென்கின்றன இந்தியப் பத்திரிகைகள். இந்தியா இதை வைத்து மனக் கோட்டை கட்ட வேண்டாம் என்கின்றன பாக்கிஸ்த்தனியப் பத்திரிகைகள்.
பின் லாடன் பாக்கிஸ்த்தானில் இருப்பது அதன் அரசுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அது தெரியாதது போல் நாடகமாடியது என்று சில அமெரிக்க மக்களவை உறுப்பினர் கொதித்தனர். பாக்கிஸ்த்தானிற்கு எதிராக நடவடிக்கை வேண்டும் என்று அவர்கள் உறுமினர். பாக்கிஸ்த்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலிக் தமக்கு ஒன்றும் தெரியாது என்றார். அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ரொபேர்ட் கேட்ஸ் பாக்கிஸ்த்தான் அரசினருக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

ஏப்ரல் மாத இறுதியில் பாக்கிஸ்த்தானிய மாவிரர் தினத்தில் பாக்கிஸ்த்தானியப் படைத்தளபதி பர்வஸ் கயானி தாம் தமது நாட்டின் படைத்துறையினர் தியாகம் செய்து காத்த இறைமையை அமெரிக்கத் தலையீட்டிற்கு விற்கமாட்டோம் என்று கண்ணீர் மல்கக் கூறினார். அப்போதே - பின் லாடன் கொலைக்கு முன்னரே- அவர் மீதான கடும் விமர்சனங்கள் எழும்பத் தொடங்கிவிட்டன. அமெரிக்க விமானங்கள் அடிக்கடி பாக்கிஸ்த்தனுக்குள் நுழைந்து அப்பாவிகளைக் கொல்வதை மக்கள் விரும்பவில்லை.

இனி நடக்க விருப்பவை
  1. அமெரிக்கா தொடர்ந்தும் பாக்கிஸ்த்தானிற்குள் புகுந்து தாக்குதல்கள் நடாத்தும்.
  2. அமெரிக்கா தனது தலிபான்களுக்கும் அல் கெய்தாவிற்கும் எதிரான படை நடவடிக்கைகளுக்கு பாக்கிஸ்த்தானை தொடர்ந்து உதவும் படி மிரட்டும்.
  3. பாக்கிஸ்த்தானில் மக்கள் கிளர்ந்து எழுவர். அவர்கள் மீது அடக்கு முறை கட்டவுழ்த்து விடப்படும்.
  4. அமெரிக்காவும் பாக்கிஸ்த்தானும் ஒன்றை ஒன்று தாக்கி அறிக்கைகள் விடும் நாடகம் தொடரும்.

அமெரிக்க பாக்கிஸ்த்தான் உறவு தொடர்ந்து வளரும் பாக்கிஸ்த்தான் வளராது.

மீண்டும் ஒர் ஆயுத ஒப்படைப்பு


இயக்கங்களும் எங்கட பொடியங்களும்
1977இலும் 1983இலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் தமக்கு இனி ஆயுதப் போராட்டம்தான் ஒரே வழி என்று நம்பினர். விளைவாக பல இளைஞர்கள் தம்மை "இயக்கங்களில்" இணைத்துக் கொண்டனர். பெரியோரும் "எங்கடை பெடியங்கள்" என்று அவர்களுக்கு தமது ஆதரவுகளை வழங்கினர்.

இந்த இயக்கங்களால் இலங்கையின் எப்பாகத்திலும் தாக்குதல் நடாத்த முடியும். இலங்கைப் படையினர் தமது முகாம்களை விட்டு வெளியே வர அஞ்சினர். விடுதலைப் புலிகள் விக்டர் தலைமையில் அநுராதபுரத்தில் நாடாத்திய தாக்குதல் முழு இலங்கையையும் படு அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொழும்பில் அவ்வப்போது வெடித்த குண்டுகள் மக்களையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதித்தது. கலங்கி நின்றது சிங்கள் அரசு.

தமிழர்களை ஆயுதங்களை ஒப்படைக்கும் படி நிர்ப்பந்தித்த இந்தியா.
இலங்கைச் சிங்கள அரசு பலவகையிலும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தால் திணறிக் கொண்டிருந்த நிலையில் அரசியல் கற்றுக் குட்டியான ராஜீவ் காந்தி(உண்மைப்பெயர் ராஜீவ் கான்) அப்போதையஇலங்கை இலங்கை குடியரசுத் தலைவர் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் தந்திர வலைக்குள் சிக்குண்டார். ராஜீவ் காந்தி(கான்) இலங்கைத் தமிழ் இயக்கங்கள் அனைத்தும் தங்கள் ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார். ஜே ஆரும் ராஜீவும் ஒர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். அப்போது இலங்கைத் தமிழர்களுக்கும் ராஜீவிற்கும் இடையில் ஒரு கனவான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தமிழ் ஆயுதக் குழுக்கள் தமது ஆயுதங்களை இந்தியப் படையிடம் ஒப்படைக்க வேண்டும். பதிலாக தமிழர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும். ஆனால் இதுவரை ஜே ஆர் - ராஜீவ் ஒப்பந்தம் முறைப்படி நிறைவேற்ற எந்த ஒரு நடவடிக்கையும் இந்தியாவால் மேற் கொள்ளப்படவில்லை. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான வடக்கு-கிழக்கு இணைப்பை இலங்கை அரசு அரசமைப்பில் இருந்து நீக்கிய போது இந்தியா ஒன்றும் கூறாமல் இருந்தது. ஜே ஆர் - ராஜீவ் ஒப்பந்தம் நிறைவேற்றப்படத் தேவையில்லை என்று திரைமறைவில் இந்தியா இலங்கையிடம் கூறியிருந்தது என்று நம்புவோரும் உண்டு. அந்த ஒப்பத்தத்தில் தமிழர்களுக்கு சாதகமான எதுவும் இதுவரை இலங்கை அரசால் நிறைவேற்றப்படாதமையை அவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர். ஆனால் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையின் திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்காவின் படைகளுக்கான எரிபொரும் நிரப்பு வசதிகளும் சிலாபத்தில் அமையவிருந்த அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தொடர்பாடல் வசதிகளும் இரத்துச் செய்யப்பட்டன. இவை இரண்டுக்காகவுமே இந்தியா தமிழர்களில் தனக்குஅக்கறை இருப்பதுபோல் இந்தியா காட்டிக் கொண்டது. ஒப்பந்தப்படி இந்தியா தனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொண்டது. ஆனால் தமிழர்கள் அம்போ எனக் கைவிடப்பட்டனர் இந்தியாவால். விளைவு 1987இற்குப் பின்னர் இலங்கையில் மூன்று இலட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஜே ஆர் - ராஜீவ் ஒப்பந்தத்தின் போது அதை அதிகம் எதிர்த்தவர்கள் சிங்கள மக்களே. இன்றும் அதை எதிர்க்கின்றனர். பல தமிழர்கள் அந்த ஒப்பந்தத்தால் தமக்கு எந்த வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று நம்பினார்கள்.

மீண்டும் தமிழர்கள் கையில் ஆயுதம்
அன்று தமிழர்கள் ஆயுத போராட்டத்தால் அன்றைய இலங்கை அரசு திணறியது போல் இன்றுள்ள இலங்கை அரசு போர்க்குற்றச் சாட்டால் திணறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் அதேபோன்ற ஒரு நாடகம் இப்போது அரங்கேறத் தொடங்கி இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு இலங்கை மீது போர்குற்றத்தையும் மானிடத்திற்கு எதிரான குற்றத்தையும் சுமத்தியுள்ளது. இதற்கு ஒரு பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என்ற கோரிக்கையை உலகெங்கும் வாழும் தமிழர்களும் பல மனித நேய அமைப்புக்களும் வலியுறுத்தி உள்ளன. இது இப்போது தமிழர்கள் கையில் சிங்கள அரசிற்கு எதிராக உள்ள ஒர் ஆயுதம்.

மீண்டும் இந்தியாவிடம் சென்ற இலங்கை. மீண்டும் கபடம்
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் இலங்கை தொடர்பு கொண்ட முதல் நாடு இந்தியா. இப்போது இலங்கைக்கும் இதியாவிற்கும் இடையில் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. வெளிவரும் செய்திகள் இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று இந்தியா அழுத்தம் கொடுப்பதாகக் கூறுகின்றன. 2008இலும் 2009இலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகள் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும், படைத்துறைத் தீர்வு சரிவராது, அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படக் கூடாது என்று இந்தியா வலியுறுத்துவதாகத்தான் செய்திகள் கூறின. ஆனால் உண்மையில் இலங்கையை இந்தியா ஒரு படைத்துறை வெற்றிக்கே இட்டுச் சென்றது. போருக்கு இந்தியா நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிகள் பல செய்தது. இலங்கை ஆகஸ்ட் 2009இல் முடிக்க இருந்த போரை பொதுமக்களின் இழப்பைக் கருத்தில் கொள்ளாது 2009-மே மாதத்திற்கு முன்னர் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக இந்தியாவி ஆய்வாளர் வி. எஸ் சுப்பிரமணியம் சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாகஇந்தியா செய்தியாக வெளியில் விடுவது வேறு உண்மையில் நடந்து கொள்ளும் விதம் வேறு.

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது நிச்சம்.
மஹிந்த ராஜபக்ச தண்டிக்கப்படுவது நிச்சயம் என்று அடித்துச் சொல்கிறார் இந்தியாவில் இருந்து வெளிவரும் வீக்கெண்ட் லீடர் சஞ்சிகையின் ஆசிரியர் வினோஜ் குமார். அவர் கூறியவை "நீண்ட காலம் காத்திருந்த நீதி கைக்கு எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு வருடங்கள் அல்லது ஒரு பத்தாண்டுகள், ஏன் அதிலும் மேலும் எடுக்கலாம். ஆனால் நீதியின் கை நீட்டப்பட்டுவிட்டது. பிராந்திய வல்லரசுகளின் சிறகுகளிடை ஒதுங்கினாலும் தேசப்பற்று என்ற மந்திரத்தை உச்சரித்து மக்களைக் கொழும்பு வீதிகளில் திரட்டினாலும் நீதியின் கை குற்றவாளியை வேட்டையாடும்."

மீண்டும் இந்தியா தனது தேவையைத்தான் பூர்த்தி செய்யும்
இலங்கை அரசின் மீது மேற் கொண்டுள்ள போர்க்குற்றங்களை சாட்டாக வைத்து இந்தியா இலங்கயிடம் இருந்து தனக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளும். இனங்கை அரசு காலத்தை இழுத்தடித்து வரும் சம்பூர்த் திட்டம், காங்கேசன் துறைமுகத் திட்டம், இலங்கைக்கு இந்தியாவிற்கும் இடையிலான சீபா எனப்படும் வர்த்தக உடன்படிக்கை போன்றவற்றை நிறைவேற்ற தமிழர்கள் கையில் உள்ள ஆயுதமான போர்க்குற்றத்தை இந்தியா மீண்டும் பயன்படுத்தும்.

பதின்மூன்றிற்கு மேலாடை பகடைக்காயாகும்
தமிழர்கள் இலங்கை அரசின் மீதான போர்க்குற்றத்தைக் கைவிட வேண்டும் அதற்குப் பதிலாக இலங்கை அரசு தமிழர்களுக்கு இலங்கை அரசியல் அமைப்பின் பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேல் சென்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் என்று இந்தியா தமிழர்களை மீண்டும் நிர்ப்பந்திக்கும். இதனோடு சேர்த்து இந்தியா மீண்டும் தனது தேவைகளை இலங்கையில் நிறைவேற்றிக் கொள்ளும் ஆனால் பின்னர் தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை நிறை வேற்றாது.

போர்க்குற்றம் பேச்சு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். மீண்டுக் குற்றம் நடக்காமல் இருக்க வேண்டும். குற்றவாளி தண்டிக்கப்படுவதைப் பார்த்து மற்றவர்கள் குற்றம் புரியாமல் இருக்க வேண்டும். கொல்லப்பட்டவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல இலட்சக் கணக்கானோர். பாதிக்கப்பட்ட மக்கள் கணக்கிலடங்க மாட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை? எப்படிப் பெண்கள் மானபங்கப் படுத்தப் பட்டனர்? எப்படிக் கொல்லப் பட்டனர்? இவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். போர் நடக்கும் போது கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகச் சொன்னார் தமிழர்கள் இனி 20 தலை முறைக்கு ஒர் ஆயுத போராட்டத்தைப் பற்றி சிந்தித்தும் பார்க்கக் கூடாத அளவிற்கு அவர்களைத் தண்டிப்போம் என்று. இப்போதை சிங்கள அரசு தண்டிக்கப் படுவதைப் பார்த்து இனி வரும் சிங்களஅரசுகள் தமிழர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட ஒரு தடவைக்கு இரு தடவை யோசிக்கக் வைக்க வேண்டியது எமது கடமை. சிங்கள அரசு தண்டிக்கப்படுவதைப் பார்த்து இனி உலகின் எந்த ஒரு அரசும் அப்பாவிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது மனித நேயம் மிக்க எல்லோரினது கடமை. போர்க்குற்றம் பேச்சு வார்த்தைகளுக்கு அப்பாற் பட்டது.

Sunday 22 May 2011

ஆதிக்க நாடுகளின் போட்டியில் பன்னாட்டு நாணய நிதியம். ஆட்டம் காணும் பான் கீ முனின் இரண்டாம் ஆட்டம்.


ஐக்கிய நாடுகள் சபை, பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி ஆகிய முன்றும் உலக அரங்கில் முக்கியத்துவம் நிறைந்த மூன்று அமைப்புக்கள். பன்னாட்டு நாணய நிதியத்தின் உயர் பதவி அதன் நிர்வாக இயக்குனர் பதவியாகும். அப்பதவியில் இருந்த பிரெஞ்சு நாட்டவரான ஸ்ரௌவுஸ் கான் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிக்கியிருப்பதால் தனது பதவியை இழந்துள்ளார். அந்தப் பதவிக்கு யாரைத் தெரிவு செவது என்பது பற்றி பல வாதப் பிரதிவாதங்கள் உலகின் பலமிக்க நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

பன்னாட்டு நாணய நிதியமும் அதன் நாணயமற்ற தேர்தல் முறையும்.
அமெரிக்கத் தலைநக வாஷிங்டனில் தனது தலைமைச் செயலகத்தைக் கொண்ட பன்னாட்டு நாணய நிதியம் அரசுகளிடையிலான நாணய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஒர் அமைப்பு. முக்கியமாக நாணய மாற்று விகிதங்களையும் வெளிநாட்டுச் செலவாணி போன்றவற்றை மேற்பார்வை செய்வது இந்த நிதியத்தின் வேலை. நாடுகளிடை தாராள மயமாக்கப் பட்ட பொருளாதாரக் கொள்கை மூலம் பொருளாதார அபிவிருத்தி செய்வது தனது நோக்கம் எகிறது பன்னாட்டு நாணய நிதியம். இது எடுக்கும் தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு முறை விசித்திரமானது. நாடுகளுக்குள் "ஜனநாயகம்" வேண்டும் என்று போதிப்பவர்கள் பன்னாட்டு அரங்கில் அந்த ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விட்டோ போல பன்னாட்டு நாணய நிதியத்திலும் உண்டு ஆனால் இது சற்று வித்தியாசமானது. பன்னாட்டு நாணய நிதியத்தில் முக்கிய தீர்மானங்கள் மீதான வாக்குரிமை ஒரு நாட்டுக்கு ஒரு வாக்கு என்று இல்லை. ஒவ்வொரு நட்டுக்கும் நியமிக்கப் பட்ட வாக்குப் பங்கு (கோட்டா) முறைமை உண்டு. இதன் படி அமெரிக்கா அதிக வாக்குரிமையைக் கொண்டுள்ளது. அதன் பங்கு 17.09 விழுக்காடு. ஜப்பானுக்கு 6.12 விழுக்காடு என்று உள்ளது. முக்கிய தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் 85% வாக்குகள் கிடைத்தால் மட்டுமே அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியும். இதனால் 17.09% வாக்குரிமையைக் கொண்ட அமெரிக்காவால் எந்தத் தீர்மானத்தையும் நிறுத்த முடியும்.

நாமே தொடர்ந்து இருக்க வேண்டும் என்னும் ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அநேகமாக பன்னாட்டு நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர்களாக இதுவரை இருந்தனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்த வாக்குரிமை 32.07%. இதனால் தமது நாடுகளைச் சேர்ந்த ஒருவரே நிர்வாக இயக்குனராக வேண்டும் என்கிறது ஒன்றியம். மீண்டும் ஒரு பிரெஞ்சு நாட்டவரை அப்பதவியில் அமர்த்த ஜெர்மனி விரும்புகிறது. ( நாணய நிதியத்தில் வேலை செய்யும் பெண்கள் பயப்படத் தேவையில்லை) தற்போது பிரெஞ்சு நிதியமைச்சரான கிரிஸ்டீன் லடார்டேயை ஜேர்மன் பரிந்துரை செய்கிறது. பிரித்தனியாவின் தனது முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுனை அமர்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் இடது சாரிகள் விரும்புகின்றனர். ஆனால் அவரது சொந்த நாட்டில் இருக்கும் பழமைவாதக் கட்சி அரசு அவரை ஆதரிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையகத் தலைவர் ஜோஸே மான்வல் பரசோ பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைமைப் பொறுப்பு ஐரோப்பியரிடமே இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறார். ஜேர்மனியும் பிரான்சும் ஐரோப்பியர் ஒருவரே தொடர்ந்து பன்னாட்டு நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக இருக்க வேண்டும் என்று திடமாக நிற்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைக்கால நிதி நெருக்கடிகளைச் சமாளித்த அனுபவம் தமது வல்லுனர்களுக்கு உண்டு என்கின்றனர் அவர்கள். பன்னாட்டு நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் அனுபவமும் திறமையும் மிக்கவராக இருக்க வேண்டும் என வாதிடுகின்றனர்.

வளர்முக நாட்டவரைச் சீனா விரும்புகிறதாம்
உலகப் பொருளாதாரத்தில் பலமிக்க நாடாக வளர்ந்துள்ள சீனா ஒரு வளர்முக நாட்டைச் சேர்ந்தவரே பன்னாட்டு நாணய நிதியத்தின் இயக்குனராக வரவேண்டும் என்று வெளியில் சொல்கிறது. சீனா பன்னாட்டு நாணய நிதியத்தைப் பொறுத்தவரை மூன்றாவது பெரிய நாடு. பிரேசிலும், இந்தியாவும் பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்பது போல் வளர்முக நாட்டவரே வரவேண்டும் என்கின்றன. இந்தியாவின் வாக்குரிமை - 2.44%. சீனா அதன் மத்திய வங்கி ஆளுனர் ஜூ மின் அவர்களைப் போட்டியில் நிறுத்தலாம் என்றும் கருதப்படுகிறது. இந்தியாவில் மொன்ரேக் சிங் அலுவாலியா சீ இந்தப் பழம் புளிக்கும் என்பது போல் தான் போட்டியிடப்போவதில்லை என்கிறார். இவர் பன்னாட்டு நாணய நிதியத்தில் பணிபுரிந்துள்ளார். இந்தியத் திட்ட ஆணையக்த்தில் பிரதித் தலைவராக இருக்கிறார்.

ஒரு தமிழரும் களத்தில்
சிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என ஆசிய பசுபிக் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவர் பன்னாட்டு நாணய நிதியத்தில் நாணயச் சபையின் தலைவராகவும் இருக்கிறார். இவர் ஒரு திறமை மிக்கவாரகக் கருதப்படுகிறார். பிரேசில் பன்னாட்டு நாணய நிதியத்தின் இயக்குனர் நியமனம் ஒருவரது கடவுச் சீட்டை வைத்துத் தீர்மானிக்காமல் அவரது தகமையை வைத்தே தீர்மானிக்கப் படவேண்டும் என்கிறது.

அமெரிக்காவின் பங்கு போடல் முயற்ச்சி
பன்னாட்டு அரங்கில் ஒரு பிரச்சனை வரும் போது அமெரிக்கா தனது காய்களை தந்திரமாக நகர்த்தும். தனக்கு ஏற்ற விதத்தில் பங்கு போட்டுக் கொள்ளும். தற்போது தனக்கு இருக்கும் பொருளாதர நெருக்கடிக்கு ஏற்ற வகையில் உலகப் பொருளாதார ஒழுங்கமைப்பை தனக்கு சாதகமாக மாற்ற தனது ஆள் பன்னாட்டு நாணய நிதியத்தில் இருப்பதை அமெரிக்கா பெரிதும் விரும்புகிறது. அமெரிக்கா அதற்காக முன்வைக்குக் தீர்வு(ஆப்பு) நாணய நிதியம் எனக்கு உலக வங்கி சீனாவிற்கு, சீனா ஆசிய நாட்டவர்தான் அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக வரவேண்டும் என்று அடம் பிடிக்கக்கூடாது, ஐரோப்பிய ஒன்றியம் தனக்குப் பிடித்த ஒருவரை அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக அமர்த்தலாம். சீனா இந்த "டீல்" எனக்குப் பிடிச்சிருக்கிறது என்று சொன்னால். இதனால் பாதிக்கப் படப் போவது பாவம் பான் கீ மூன் தான். போன வாரம் வரை தானே தான் மீண்டும் ஐநாவின் பொதுச் செயலர் என்று நம்பி இருந்தவருக்கு இந்தவாரம் வேறுவிதமாக அமைந்து விட்டது. பான் கீ மூனின் பதவிக்காலம் 2011 டிசம்பருடன் முடிகிறது. மீண்டும் அவரே தேர்ந்தெடுக்கப் படுவார் என்ற பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தங்களில் ஒருவர் அடுத்த பொதுச் செயலராக வரவேண்டும் என்று விரும்புகின்றன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...