Saturday 26 March 2011

புரட்சிக்குப் பின் முரண்பட்டு நிற்கும் எகிப்தியர்.


எகிப்திய மக்களுக்கு ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட மூன்று அடையாளங்கள் உண்டு. 1. எகிப்தியர், 2. அரபு நாட்டவர், 3. இஸ்லாமியர்.

தம்மை எகிப்தியர்கள் என்று பெருமைப்படுபவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு அப்பால் நின்று சிந்திக்கின்றனர். தம்மை அரபியர்கள் என்று நினைக்கிறவர்கள் எகிப்து அரபுநாடுகளுக்கு தலமைதாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். காலம் சென்ற எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் அரபு-எகிப்து அடையாளத்தில் சிந்தித்தார். 1928இல் ஹசன் அல் பன்னாவால் ஆரம்பிக்கப்பட்ட முசுலிம் சகோதரத்துவ அமைப்பு எகிப்தை ஒரு இசுலாமிய நாடாகப் பார்க்கிறது. ஹஸ்னி முபராக்கை பெரிய மக்கள் எழுச்சி மூலம் பதவியில் இருந்து விலக்கியபின் இந்த எழுச்சியில் பெரும் பங்கு வகித்த இளையோர் அமைப்புக்கள் எகிப்தின் எதிர்காலம் பற்றி வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பு. இது தற்போது எகிப்தில் உள்ள ஒழுங்கு படுத்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் அமைப்புமாகும். இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வருகிறது. முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது தடை செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல் வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக் கொள்கையுடைய அமைப்பாக மறி வருவதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எகிப்திய படையினர்
உச்ச படைத்துறைச் சபை இப்போது 75வயதான பாதுகாப்புத் துறை அமைச்சரும் முபராக்கின் நீண்டநாள் ஆதரவாளருமான முஹமட் தந்தாவியின் தலைமையில் செயற்படுகிறது. இப்போதைய எகிப்தின் அதிபர் அவர்தான். முபராக்கின் படை அப்படியே இருக்கிறது. எகிப்தியப்படையின் உயர் அதிகாரிகளில் பெரும்பாலோனோர் அமெரிக்காவில் உயர் பயிற்ச்சி பெற்றவர்கள். முபராக்கிற்கு எதிரான புரட்சியில் அவரது படையினர் சிறந்த தொழில்சார் பணிவன்பை மக்கள் மீது காட்டியது பலரையும் வியக்க வைத்தது.



ஏப்ரல்-6 இயக்கம்(April 6 Movement)
அல் மஹால்லா அல் குப்ரா என்னும் எகிப்திய நகரில் 2008 ஏப்ரில் 6-ம் திகதி அங்குள்ள தொழிற்சாலை ஊழியர்களால் வேலை நிறுத்தத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது பேஸ்புக் குழு ஏப்ரல் 6 இயக்கம். ஏப்ரல் 6-ம் திகதி சகல ஊழியர்களும் கறுப்புப் பட்டி அணிந்து வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த இயக்கம். இதன் ஆரம்ப கர்த்தாக்கள் அஹ்மட் மஹேர், அஸ்மா மஹ்ஃபவுஸ், இஸ்ரா அப்துல் பட்டா ஆகியோர்கள். அஹ்மட் மஹேர் 2009இல் வேறு பதினாறு பேருடன் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவு இணையத் தளங்கள் முடக்கப்பட்டன. இந்த இயக்கத்திற்கு ஆதரவு பல்கிப் பெருகி இலட்சக்கணக்கன இளைஞர்கள் இதில் இணைந்து கொண்டனர். பெரும்பாலானோர் 20இற்கும் 30இற்கும் இடைப்பட்ட வயதுடைய படித்தவர்களே. மதசார்பற்ற இந்த இயக்கத்தினரே ஹஸ்னி முபராக்கை பதவியில் இருந்து விலக்கும் மக்கள் எழுச்சியை ஆரம்பித்தனர்.

பல இயக்கங்கள்
ஏப்ரல் 6 இயக்கத்தைப் போலவே பல இயக்கங்கள் முபராக்கிற்கு எதிரான புரட்சியில் ஈடுபட்டிருந்தன. பல அமைப்புக்களின் கூட்டணியே முபராக்கை விரட்டியது.

புரட்சியைப் பாதுகாக்கும் இயக்கம்
புரட்சிக்குப் பின்னர் எகிப்து போகும் பாதை திருப்திகரமாக இல்லாததால் புரட்சியைப் பாதுகாக்கும் இயக்கம் என்று பல இயக்கங்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளன.

அரசியலமைப்புத் திருத்தம்
எகிப்திய அரசமைப்புக்கு ஒன்பது திருத்தங்கள் செய்து அது மார்ச் 19-ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்களின் அங்கீகாரம் பெறப்பட்டது. இந்தத் திருத்தங்கள் அவசரப்பட்டு மக்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுக்காமல் இடைக்கால படைத்துறை அரசால் கொண்டுவரப்பட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திருத்தத்தில் முக்கிய அம்சங்கள்: அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள்( ஒருவர் இருதடவை மட்டுமே) , தெரிவு செய்யப்படும் அதிபர் 30நாட்களுக்குள் துணை அதிபரை நியமிக்க வேண்டும், அதிபர் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், எகிப்தியரல்லாதவரை திருமணம் செய்தவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது. திருத்தப்பட்ட அரசியலமைப்பின்படி புதிய அரசு தெரிவு செய்யப்பட்டு அது ஆறு மாதங்களில் புதிய அரசியலமைப்பை வரையும் என்றும் சொல்லப்படுகிறது.

அரசியலமைப்புத் திருத்ததில் முரண்பாடு தொடங்கிவிட்டது. முபாரக் ஆதரவாளர்களும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பும் அரசமைப்புத் திருத்ததிற்கு ஆதரவு வழங்கினர். இளைஞர்கள் அமைப்புக்கள் பலதரப்பினர்களையும் கொண்ட ஒரு சபையால் அரசமைப்பு முற்றாக புதிதாக எழுதப்பட்டு அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப் படவேண்டும் என்று விரும்புகிறது. 40வயதிற்கு மேற்பட்டவர்தான் அதிபர் பதவிக்கு போட்டியிடலாம் என்பது இளைஞர்களை ஒதுக்கவா? 2005இல் நோபல் பரிசு பெற்ற முஹமத் அல்பராடி இந்த அரமைப்புத்திருத்தம் எகிப்தியர்களுக்கு இப்போது தேவையானதில் ஒருமிகச் சிறிய பகுதியே என்றார். முஹமத் அல்பராடி எகிப்தின் அதிபராக வரலாம் என்ற சாத்தியம் உண்டு. முஹமத் அல்பராடிக்கும் பன்னாட்டு நெருக்கடிக்குழுவிற்கும் தொடர்புண்டு. பன்னாட்டு நெருக்கடிக் குழுவிற்கும் நாணய வர்த்தக முதலையான ஜோர்ஜ் ஸொரஸிற்கும் தொடர்பு உண்டு. இதனால் முகமத் அல் பராடி ஒரு வெளிநாட்டுக் கைக்கூலி என்று குற்றம் சுமத்துபவர்களும் உண்டு. முபாரக் ஆதரவாளர்கள், எகிப்தியப் படைத் துறையினர், இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆகியவை கைகோர்த்து நின்றால் அது ஒரு அமெரிக்க சார்பு அணியா என்ற சந்தேகத்தைப் பலருக்கும் ஏற்படுத்தும். ஆண்டொன்றுக்கு எகிப்திற்காக இரண்டு பில்லியன் டொலர்களைச் செலவளித்த அமெரிக்கா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாயோரம் தனது நண்பர்களின் வசம் இருப்பதையே அமெரிக்கா பெரிதும் விரும்பும்.

இதயத் தொகுதிக்கு தாக்கல் செய்யும் வேட்பு மனு


என் வாக்கிற்கு
நான் கேட்பது
உதட்டில் ஒரு இலவசம்

இதயத் தொகுதிக்கு
தாக்கல் செய்யும் வேட்பு மனு
உன் கண்ணில் என் பார்வை

உன் உடலெங்கும்
என் உதடு
செய்யத் துடிக்கிறது
பேரணி

உன் உள்ளத்தில்
வேண்டாம் கோஷ்டிச் சண்டை
ஒரு மனதாக் தேர்ந்தெடு என்னை

நீ காங்கிரஸ் என்றால்
நான் மம்தா அல்ல
மானமிழந்து நிற்கும்
கருணாநிதி நான்.

நான் அனுப்பும்
குறுந்தகவல்கள்
உன் உள்ளத் தேர்தலுக்கு
என் தேர்தல் அறிக்கை


உன் இதயத்தில்
நான் கேட்கும் இட ஒதுக்கீடு
அறுபத்து மூன்றல்ல சகலதும்

எம் கூட்டணி வித்தியாசமானது
கல்யாணத் தேர்தலின் பின்
கட்டில் கூட்டணி

என்பெற்றோர் சம்மதிக்கவில்லை
உன் பெற்றொருக்குப் பிடிக்கவில்லை
நாம் அமைப்போம் மூன்றாம் அணி

Friday 25 March 2011

ஆப்கானிஸ்த்தானில் ரம்போபோல் செயற்பட்ட கூர்க்கா படை வீரன்


பிரித்தானியாவின் படையைச் சேர்ந்த டிப்பிரசாத் பன் என்னும்கூர்க்கா படைவீரர் ஆப்கானிஸ்தான் போர் முனையில் தனித்து நின்று 30தலிபானகளுக்கு எதிராகப் போரிட்டுள்ளார். இரவு நேரம் ஒரு கண்காணிப்பகத்தில் (Sentry) இவர் தனித்து காவலுக்கு நின்ற வேளை ஏதோ சத்தம் கேட்பது போல் இருந்தது. முதலில் அது ஒரு மாடாகவோ அல்லது கழுதையாகவோ இருக்கலாம் என்று அவர் நினைத்தார். பின்னர் கூரை மீது ஏறிச் சென்று பார்த்தபோது தீவிரவாதிகள் இருவர் நிலத்தை தோண்டிக் கொண்டிருப்பதை அவதானித்தார். உடனடியாக தன்னிடம் இருந்த ஆயுதங்களைப் பாவித்து அங்கு இருந்த 30 தலிபான் போராளிகள் மீதும் மேலிடத்துக்கு தகவல் கொடுத்தபடியே தாக்குதலைத் தொடுத்தார். 400ரவைகள் 17கைக்குண்டுகள் ஆகியவற்றைப் பாவித்து தாக்குதல் நடாத்தினார். தன்னிடம் இருந்த ஆயுதங்கள் முடிந்த நிலையில் துப்பாக்கியின் முக்காலியால் எஞ்சி இருப்பவர்களைக் காலிசெய்தார்.

கூர்க்கா வீரன் டிப்பிரசாத் பன் இன் குடும்பம் மூன்று தலைமுறையாக பிரித்தானியப்படையில் பணியாற்றி வருகிறது. இந்தியா பிரித்தானியாவின் குடியேற்ற ஆட்சி (காலனி) நாடாக இருந்த போது பிரித்தானியாவிடம் கூர்க்கா படைப்பிரிவு இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் அவர்களை அவர்களின் வீரத்திற்காக பிரித்தானியா தன்னுடனேயே வைத்துக் கொண்டது நீண்டகாலமாக பிரித்தானியப் படையில் பணியாற்றிய கூர்க்கா படை வீரர்கள் பலத்த போராட்டத்தின் பின்னரே 2004இல் பிரித்தானியக் குடியுரிமை பெற்றனர்.

Thursday 24 March 2011

நகைச்சுவைக்கதை: பல மில்லியன் செலவழித்து இறக்குமதி செய்த சனியாள் உடல்.


இத்தாலிச் சனியாளுக்கு ஜெருசேலம் போய் தொழுகை செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதற்கான ஏற்பாடுகளை படு இரகசியமாக வெளியுறவுத்துறையும் உளவுத் துறையும் ஏற்பாடு செய்தன. ஒரு சிறப்பு விமானத்தில் பர்தா ஆடையுடன் ஒரு இசுலாமியப் பெண் போல வேடமிட்டு இஸ்ரேல் சென்ற சனியாள் ஜெருசேலம் போய்ச் சேர்ந்தாள். யார் செய்த புண்ணியமோ அங்கு நடந்த ஒரு தற்கொலை(கொடை)த்தாக்குதலில் அவள் கொல்லப்பட்டாள். இஸ்ரேலிய அதிகாரிகள் மோகன்மன் ஷிற்(Mohanman Shit) உடன் தொடர்பு கொண்டு நடந்ததை மனவருத்தத்துடன் தெரிவிப்பதாக சிரித்துக் கொண்டே கூறினர். இது எமது நாட்டுக்கு பெரிய இழப்பு என்று மோகன்மன் ஷிற் துள்ளிக் குதித்தார். இஸ்ரேலிய அதிகாரிகள் சம்பவம் நடந்த இடம் மிக மோசமான இடம். இறந்த உடலை கொண்டு வந்து சேர்பதென்றால பல மில்லியன் டொலர்கள் செலவாகும். அதிலும் பார்க்க இந்தப் புண்ணிய பூமியில் புதைக்கலாம் என்று தெரிவித்தனர். அதற்கு மோகன்மன் ஷிற் இல்லை இல்லை எப்படியாவது இங்கு கொண்டுவந்தே ஆகவேண்டும் என்றார். அதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் வீணாகச் செலவளிக்கும் பெருந்தொகைப்பணத்தை உங்கள் நாட்டில் உள்ள ஏழை மக்களின் நல்வாழ்விற்காகச் செலவழிக்கலாமே என்று தெரிவித்தனர். "ஐயோ சாமி வேண்டவே வேண்டாம். இப்படித்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவரை உங்கு புதைத்தார்கள். அந்த ஆள் மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்து விட்டார். அந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் வேண்டாம். என்ன செலவானாலும் பரவாயில்லை. இங்கு அனுப்பிவிடுங்கள்" என்றார்.

கைப்பேசித் திருடனை GPS தொழில்நுட்பம் மூலம் பிடித்த மாணவர்கள்


GPS என்ப்படும் (Global Positioning System) உலகளாவிய இடம் அறியும் முறைமை கணனியையும் செய்மதியையும் இணைத்து ஒரு பொருளின் இடமறியும் முறையாகும். இந்த முறை பல வழிகளில் மக்களுக்குப் பயன்படுகிறது. வாகனங்களில் பொருத்தப் பட்டிருக்கும் Satellite Navigators வாகன ஓட்டி ஒர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குச் செல்வதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் அனைவற்றையும் வழங்கும்.

மன்செஸ்டர் பல்கலைக்கழக மாணவனின் ஐ-போன் திருட்டுப் போய்விட்டது. இதைக் கண்டு பிடிப்பதற்கான ஒரு செயலியை( application) அந்த மாணவன் உருவாக்கினான். அவனும் நண்பர்களும் தங்கள் கணனியை அமெரிக்க செய்மதியுடன் தொடர்புபடுத்தி பின்னர் செய்மதி மூலமாக திருட்டுப் போன ஐ-போனுடன் தொடர்பு கொண்டு அது இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனர். ஒருவர் கணனியில் தொடர்பில் இருக்க மற்ற மாணவர்கள் குறித்த இடத்திற்குச் சென்றனர். கணனியில் இருக்கும் மாணவன் தனது கைப்பேசி மூலம் தேடிச் சென்ற மாணவர்களின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டு கைப்பேசித் திருடன் எங்கு இருக்கிறான் எங்கு செல்கிறான் என்ற தகவல்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தான். இவர்களைக் கண்டவுடன் கைப்பேசித் திருடன் அவர்கள் பார்வையில் இருந்து ஓடி மறைந்தான். ஆனாலும் தொழில்நுட்பக் கண்கள் அவனின் இருப்பிடத்தை அறிந்து வழங்கிக் கொண்டே இருந்தது. கண்ணாம் மூச்சி விளையாட்டு இறுதியில் ஒரு பேருந்தில் முடிந்தது. பேருந்தில் அவன் பிடிபட பின்னால் காவற்துறை வாகனம் வந்து அவனைக் கைது செய்து திருட்டுப் போன ஐபோனையும் மீட்டது.

ஆறு நாட்களில் பெருந்தெருவைத் திருத்திய ஜப்பானியர்கள்


பூகம்பத்தால் சிதைந்த ஒரு பெருந்தெருவை ஆறு நாட்களில் ஜப்பானியர்கள் மீளக் கட்டமைத்துள்ளனர். மார்ச் 11-ம் திகதி பூகம்பம் நடந்தது. அதில் சிதைந்த கந்ரோ பெருந்தெருவை திருத்தும் வேலைகள் 17-ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அது 6 நாட்களில் திருத்தி முடிக்கப்பட்டது. பூகம்பம் நடந்த மற்ற நாளே பெரும்பாலான மக்கள் வேலைக்குத் திரும்பிவிட்டனர். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பல கடைகள் இப்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சாதனைகள் பல வெளிநாட்டவர்களை வியக்க வைத்துள்ளது. பல நாடுகளையும் சேர்ந்த வர்த்தகர்கள் ஜப்பானில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்கொடை நடவடிக்கை
ஜப்பானின் அணு உலைகளுக்கு பிரச்சனைக்கு உரிய நேரங்களில் மின்சாரம் வழங்கும் டீசல் மின்பிறப்பாக்கிகளை அதன் ஊழியர்கள் தங்கள் உயிர்களையும் பொருட்படுத்தாமல் அதிக கதிர்வீச்சுக்கள் உள்ள இடம் சென்று திருத்தினர். இதைப் பல வெளிநாட்டுப் பத்திரிகைகள் இது ஒரு தற்கொலை நடவடிக்கை(Suicide mission) என்று விமர்சித்தன. இப்போது அணு உலைகளில் புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. நீர் வெப்பமடைந்து கொதிக்க அணு உலைகளில் உப்பு உருவாகி உள்ளது. இது அணு உலைகளை மேலும் வெப்பமடையச் செய்யலாம்.

நீரில் அயோடின்
ஜப்பானில் பூகம்பத்தால் இறந்தவர்கள் அல்லது காணாமற் போனோர்கள் தொகை 23,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. பூகம்பம் நடந்த பிரதேசங்களில் இப்போது ஜப்பானியர்கள் எதிர் கொள்ளும் பெரிய பிரச்சனை குடி நீர்ப்பிரச்சனையாகும். அணு உலைக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட நீரைக் குழந்தைகள் குடிக்கக் கூடாது என்றும் பெரியவர்கள் குடிக்கலாம் என்றும் ஜப்பானிய அரசு அறிவித்தது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள நீரில் அயோடின் 131 அளவில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. 100இற்கு வ் மேல் அயோடின் உள்ள நீரை குழந்தைகள் அருந்தக்கூடாது. பெரியவர்கள் 300வரை உள்ள நீரை அருந்தலாம். குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை அரசு இலவசமாக வழங்கியது. ஆனால் பெரியவர்களும் நீரை அருந்த மறுக்கின்றனர். இன்று வியாழக் கிழமை நீரில் உள்ள அயோடின் அளவு 76இற்கு குறைந்துள்ளது. அதிக அளவு அயோடின் உள்ள நீரை அருந்தினால் தொண்டையில் பாதிப்பு வரும். புற்று நோயும் வரலாம். 1986இல் இரசியாவின் சேர்னோபிலில் நடந்த அணு உலை வெடிப்பின் பின்னர் 6,000பேர் வரை தொண்டைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.

Wednesday 23 March 2011

கல்யாணம் செய்தேன் இரண்டும் செய்கிறேன்


போர் செய்யாதே
காதல் செய் என்றாள்
கல்யாணம் செய்தேன்
இரண்டும் செய்கிறேன்


செல்வந்த நாடுகளில்
செல்வந்தர்களிடம்
வரி அறவிட்டு
ஏழை நாடுகளுக்குக்
கொடுக்கின்றனர்
அங்குள்ள செல்வந்தர்களை
நன்றாய் வாழ வைப்பதற்கு



வைக்கோ ஐயா இப்போது இப்படித்தான் பாடுவாரோ?

விட்டுப்புட்டாடா மச்சி விட்டுப்புட்டாடா
என்னைத் தானே அவளும் விட்டுப்புட்டாடா
எறிஞ்சிப்புட்டாடா மச்சி எறிஞ்சிப்புட்டாடா
கருவேப்பிலையைப் போல என்னை எறிஞ்சிப்புட்டாடா

என்னைச் செல்லாக் காசு ஆக்கிவிட்டாடா மச்சி
என்னை மாட்டிபுட்டாடா நல்ல மாட்டிப்புட்டாடா
வைச்சிப்புட்டாடா ஆப்பு வைச்சிப்புட்டாடா
கூட்டு வேண்டாம்டா மப்பு ஆப்பு வேண்டாம்டா


உண்மையாய் கூட்டுச் சேரக் கட்சியில்லேடா
நான சிம் இல்லா மொபையில் ஆக்கிப்புட்டேண்டா
என்னத்தைச் செய்வேண்டா மச்சி என்னத்தைச் சொல்வேண்டா
கேள்விக் குறியாச்சுடா மச்சி எதிர்காலம் கேள்விக் குறியாச்சுடா

கடாபி தப்பி ஓட புகலிடம் தேடுகிறார்கள் என்கிறார் ஹிலரி கிளிண்டன். © 2011 Vel Tharma


லிபிய அதிபர் மும்மர் கடாபிக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்தவுடன் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக்கடாபி வெனிசுலேவியாவிற்குத் தப்பி ஓடிக் கொண்டிருக்கிறார் என்றார். ஓரிரு வாரங்களுக்குள் கடாபியின் அரசு கவிழ்ந்துவிடும் என்று அமெரிக்கா நம்பியிருந்தது. நடக்கவில்லை. பல நகரங்களில் இருந்து பின்வாங்கிய கடாபி ஆதரவுப் படைகள் மீள முன்னேற அவசரமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டு லிபியாவை விமானப்பறப்பற்ற வலயம் என பிரகடனம் செய்து பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் கடாபி ஆதரவுப் படைகளின் தளங்களையும் தாங்கிகளையும் இலக்கு வைத்து தமது டொம்ஹோக் போன்ற நவீன ஏவு கணைகள் மூலம் தாக்குதல் நடாத்தின. அதைத் தொடர்ந்து கடாபியின் படைகள் சில இடங்களில் இருந்து பின்வாங்கின. அவை மீண்டும் சுதாகரித்துக் கொண்டு மூர்க்கத்தனமாக இப்போது தாக்குதல்களை நடத்துகின்றன. மிசுராட்டா உட்பட சில முக்கிய நகரங்களையும் மீளக் கைப்பற்றின. செவ்வாய்க் கிழமை 22ம் திகதி கடாபி மீண்டும் மக்கள் முன் தோன்றி நாஜிகளை முறியடிப்போம் என்று சூளுரைத்தார். ஏற்கனவே குண்டுத்தாக்குதல்களுக்கு உள்ளான அவரது மாளிகையின் மாடியில் இருந்தே கடாபி துணிச்சலாக உரையாற்றினார். கூட்டு நாடுகளின் நான்கு நாட்களாக செய்த விமானத் தாக்குதல் கடாபி ஆதரவுப் படைகளின் தாக்கும் திறனை பாதிக்கவில்லை என்றது வாசிங்டன் போஸ்ட்.

இன்று ஏபிசி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஹிலரி கிணிண்டன். அதில் அவர் லிபியத் தலைவர் கேர்ணல் மும்மர் கடாபி தனது நாட்டை விட்டு வெளியேறும் வகைகளை ஆராய்ந்துள்ளார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு ஒரு புகலிடம் தேடுவதாகவும் தெரிவித்தார். இது கடாபியின் ஒரு தந்திரோபாய நகர்வாகவும் இருக்கலாம். இப்படி பிழையான தகவல்களை கடாபி வேண்டுமென்றே பரவ விடலாம் என்பதையும் ஹிலரி மறுக்கவில்லை.
All rights, including copyright, in the content of these veltharma.blogspot.com pages are owned or controlled for these purposes by Vel Tharma. All rights reserved

Tuesday 22 March 2011

நகைச்சுவை: e-bay புரட்சி மூலம் கடாபியின் ஆட்சி கவிழ்ப்பு © 2011 Vel Tharma


பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலம் மக்களைத் திரட்டி துனிசியாவிலும் எகிப்திலும் சர்வாதிகாரிகளை ஆட்சியில் இருந்து மக்கள் விரட்டினர். இதே முறை லிபியாவில் சரி வராததால் அங்கு வேறு முறைப்படி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. e-bay மூலம் தளபதி மும்மர் கடாபியை பதவியில் இருந்து விரட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. e-bayமூலமாக மும்மர் கடாபி எழுதிய பசுமைப்புரட்சி என்ற புத்தகம் வாங்கும் லிபியர்களுக்கு $758 பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எல்லா லிபியர்களும் கடாபியின் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு மவனே தொலையடா என்று கிளர்ந்து எழுந்து கடாபியை விரட்டி விட்டனர்.


களமுனையில் நின்ற கடாபியின் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு விடுத்த எச்சரிக்கை: சரணடையுங்கள் அல்லாவிடில் கடாபியின் உரையைத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவோம்.
All rights, including copyright, in the content of these veltharma.blogspot.com pages are owned or controlled for these purposes by Vel Tharma. All rights reserved

லிபியா மீதான தாக்குதல்: முரண்பாடுகளும் பின்விளைவுகளும்


ஒரு சிறந்த படைத் தளபதி போருக்குப் போக முன் தனக்கு உத்தரவிடும் அரசியல் வாதிகளிடம் கேட்கும் கேள்விகளுள் முக்கியமானவை இரண்டு:
1. போருக்கான நோக்கங்கள் என்ன?
2. எமது நோக்கங்கள் நிறைவேற்றப் படக்கூடியவையா?
இவைக்கான சரியான பதில்களுடன் சென்றால் மட்டுமே போரில் வெற்றியடையலாம். இவற்றுக்கான பதில்கள் சரியாகக் கிடைக்காமல் இலங்கை சென்ற இந்திய அமைதிப்படைக்கு(?) என்ன நடந்தது என்பது சரியான உதாரணம். லிபியா மீது மேற்குலக நாடுகள் மேற் கொண்டுள்ள படை நடவடிக்கைக்கும் மேற்படி கேள்விகளுக்கான பதில் சரியாக கொடுக்கப்பட்டாதா என்பது சந்தேகம்.


விமானப் பறப்பற்ற வலயத்தில் பறந்து தாக்கும் விமானங்கள்
துனிசியாவில் பென் அலி பதவியில் இருந்து விரட்டப்பட்டமையும். எகிப்த்தில் ஹஸ்னி முபராக் பதவியில் இருந்து விரட்டப்பட்டமையும் பெருமளவு இரத்தம் சிந்தாத புரட்சிகள். இரண்டிலும் சமூக வலைத் தளங்களும் பாரிய மக்கள் எழுச்சியும் பெரும் பங்கு வகித்தன. எகிப்தில் ஹஸ்னி முபராக்கின் படை சிறந்த தொழில்சார் நேர்மையைக் கடைப்பிடித்தது என்று சொல்லலாம். லிபியாவில் மும்மர் கடாபியின் படைகளும் கணிசமான தொகை மக்களும் கடாபிக்குப் பின்னால் நிற்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இலகுவாக பிரதேசங்களைக் கைப்பற்றிய கடாபி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பல நகரங்களில் இருந்து கடாபி ஆதரவுப் படைகளை விரட்டினர். இதைப் பலர் கடாபியின் பலவீனமாக எண்ணினர். ஆனால் கிளர்ச்சிக்காரகள் திரிப்பொலியை அண்மித்தவேளை காடாபியின் தனது நடைமுறையை மாற்றிக் கொண்டார். கடாபி தனது தாக்குதலை மூர்க்கத் தனமாக ஆரம்பித்தபோது ஒரு ஒழுங்கான கட்டுக் கோப்பான படை அமைப்பைக் கொண்டிராத கிளர்ச்சிக்காரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் மேற்கு நாடுகள் அவசரமாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையைக் கூட்டி லிபியாவின் வான் பிரதேசத்தில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றின. தீர்மானத்தில் மேற்கு நாடுகள் தந்திரமாக விமானங்கள் பறப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்ற வாசகத்தை உட்புக்குத்தின. இப்போது மேற்கு நாடுகள் கடாபியின் இருப்பிடம் மீதான தாக்குதலையும் "தேவையான சகல நடவைக்கைகள்" என்பதன் கீழ் அடக்குகின்றன. கடாபியின் இருப்பிடம் படைத்துறைக் கட்டுப்பாட்டகம் என்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறை வேற்றியவுடன் கடாபி ஒருதலைப்பட்டசமான போர் நிறுத்தத்தை அறிவித்தார். அதை கடாபிக்கு எதிரான கிளர்ச்சியாளர்களோ மேற்கு நாடுகளோ ஏற்றுக் கொள்ளவில்லை. கடாபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின்மிக்-23 ரக விமானம் ஒன்று கடாபியின் படையினரால் ஐநா தீர்மானத்தின் பின் சுட்டு வீழ்த்தப்பட்டது.கடாபியின் விமானங்களின் பறப்பைத் தடுக்க விமானங்கள் பறக்கக் கூடாது என்று ஐநா தீர்மானம் குறிப்பிட்ட வான் வலயத்துக்குள் பிரெஞ்சு, பிரித்தானிய, அமெரிக்க விமானங்கள் பறந்து குண்டுகள் வீசுகின்றன.

பிரெஞ்சு நிலைப்பாடு
லிபியா மீதான படை நடவடிக்கைக்கு பிரான்ஸ்தான் முன்னின்று செயற்பட்டது. பிரான்ஸில் லிபியாவிற்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கு பலத்த ஆதரவு நிலவுகிறது. எதிர்கட்சியான சோஸ்லிசக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. லிபியாவிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது பற்றி பல நாடுகள் பரிசில்தான் கூடி ஆலோசித்தன. லிபியாவிற்குள் பிரவேசித்து தாக்குதல் நடாத்தியவை பிரெஞ்சு விமானங்களே. ஐக்கிய நாடுகள் சபையின் பாது காப்புச் சபையின் தீர்மானத்தை நிறை வேற்றுவதில் பிரான்ஸ் முன்னின்று செயற்படுவதை தம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்று துருக்கி தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நிலைப்பாடும் மொக்கை அமைச்சரும்

மும்மர் கடாபியைக் கொல்வது தமது நோக்கம் என பிரித்தானியப் பாதுகாப்புத் துறை அமைச்சரும் சிங்களவர்களின் நெருங்கிய நன்பருமான லியாம் பொக்ஸ் தெரிவித்தார். பிபிசியின் வானொலி-5 இற்கு வழங்கிய செவ்வியில் இதைக் குறிப்பிட்டார். Liam Fox, the Defence Secretary, adopted an even stronger tone in an interview with BBC Radio Five Live, as he said that Britain and its allies could deliberately target Col Gaddafi in their military strikes on Libya. பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்காதவிடத்து பதுங்கு குழிகளை அழிக்கும் குண்டுகளைப் பாவித்து கடாபி மீது தாக்குதல் நடத்த தான் உத்தரவிடலாம் என
லியாம் பொக்ஸ் தெரிவித்தார். என்று டெயிலி மெயில் கூறியது. இவரது இந்தக் கூற்று பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. படை அதிகாரி ஒருவரிடம் கடாபியை கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா எனக் கேட்டபோது அது ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு அப்பால் பட்டது என்றார். அது பற்றிக் கதைக்கவே முடியாது என்றார். ஒரு படை அதிகாரிக்கு தெரிந்த இராசதந்திரம் இந்த மொக்கை அமைச்சர் லியாம் பொக்ஸிற்குத் தெரியாமல் போனது எப்படி? கடாபியின் சகல படைக் கட்டமைப்பை அழிப்பதே தமது நோக்கம் என்கிறது பிரித்தானியா. அங்கு ஒருஆட்சி மாற்றத்தை படை நடவடிக்கை மூலம் பிரித்தானியா ஏற்படுத்த விரும்புகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. ஞாயிறு இரவு பிரித்தானிய விமானங்கள் கடாபியின் மாளிகையை தரை மட்டமாக்கின. பிரித்தானிய உளவுத்துறை கடாபியின் உயர் படைத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கடாபியை விட்டு விலகுங்கள் அல்லது நீங்களும் இறப்பீர்கள் -defect or did- என்று எச்சரித்தது.

ஜேர்மனி பங்கு பற்ற மறுப்பு
கேர்னல் மும்மர் கடாபிக்கு எதிரான போரில் தாம் ஈடுபடப்போவதில்லை என ஜேர்மனி அறிவித்து விட்டது.

அமெரிக்க நிலைப்பாடு
போரைத் தான் விரும்பாதவர் என்று கூறிப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வந்த பராக் ஒபாமா இப்போது மூன்றாவது போரில் அமெரிக்கப் படைகளை ஈடுபடுத்தியுள்ளார். இந்த லிபியாமீதான தாக்குதல் ஒன்றும் பெரிய அலுவல் அல்ல என்று தனது மக்களுக்கு காட்டுவது போல் ஒபாமா நடக்கிறார். தான் திட்டமிட்டபடி தனது தென் அமெரிக்கப் பயணத்தை தொடர்கிறார். அமெரிக்கா தான் தனது படைகளை லிபியாவிற்கு அனுப்பப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. லிபியாவில் ஒரு படை நடவடிக்கையை அமெரிக்கா விரும்பவில்லை. பிரான்சும் பிரித்தானியாவும்தான் அமெரிக்காவை வற்புறுத்தி இதற்குள் இழுத்தன. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான சவுதி அரேபியாவில் ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் அரசுக்கு எதிராக வெடிக்கும்போது அங்கும் சவுதி அரசு கொடூரமாக நடக்கும் போது அங்கும் படை அனுப்புவீர்களா என்ற கேள்வி எழலாம் என்று அமெரிக்கா அஞ்சலாம். அமெரிக்காவில் சில குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் இப்போது கடாபிக்கு எதிராக எடுக்கும் படை நடவடிக்கை காலம் தாழ்த்தியது என்று கருதுகிறார்கள். அமெரிக்க மக்கள் சபையைக் கலந்தாலோசிக்காமல் அமெரிக்க அதிபர் ஒரு படை நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இது வரம்பு மீறிய செயல் என்று எதிர்க்கட்சியினர் கருதுகின்றனர். அமெரிக்க மக்கள் சபையின் படைத்துறைச் சேவைக்கான குழுவின் தலைவர் இப்படிக் கேள்வி எழுப்பினார்: “Are our goals aimed at protecting civilians in Libya, or the removal of Muammar Qaddafi from power? In either case, to what extent and for how long will military resources be utilized?” உங்கள் நோக்கம் மக்களைப்பாதுகாப்பதா? கடாபியை அதிகாரத்தில் இருந்து விலக்குவதா? இரு சந்தர்ப்பங்களிலும் எவ்வளவு வளங்கள் பாவிக்கப்படும்? எவ்வளவு காலம் எடுக்கும்? அமெரிக்கப் படைத்தரப்பு தமது நடவடிக்கைகள் ஒரு மட்டுப்படுத்தப் பட்ட அளவிலேயே இருக்கும் என்று தெரிவிக்கிறது. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்றிபன் ஹட்லி ஒரு மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை தோல்வியில் முடிவடையலாம் என்றார். பராக் ஒபமா கடாபியை அதிகாரத்தில் இருந்து விலக்க வேண்டும்; அப்பாவி மக்கள் பாதுகாக்கப் படவேண்டும்; அதேவேளை அமெரிக்கா அதிக வளங்களைப் பாவிக்கது என்றார். இக்கருத்து அமெரிக்கா பிரெஞ்சு பிரித்தானிய வேண்டுகோளிற்கு இணங்கவும் தயக்கத்துடனும் லிபியாவில் படை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அமெரிக்க நடாத்தும் தாக்குதல்களைப்பார்த்தால் அமெரிக்கப் படைகள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தது போலவே தெரிகிறது. கடாபிக்கு எதிரான நடவடிக்கையின் தலைமப் பொறுப்பை தான் ஐரோப்பிய நாடு ஒன்றிடம் கையளிக்கப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இத்தாலியின் குத்துக் கரணம்
கடாபியின் அரசு ஒரு சட்டபூர்வமானது என்று முதலில் அறிவித்த இத்தாலிய அரசு பின்னர் கடாபி மீது தாக்குதல் நடத்த தனது நாட்டுத் தளங்களை அனுமதித்தது. பின்னர் ஒரு நீண்டகாலத் தாக்குதல் நடத்த தான் ஒத்துழைக்கப் போவதில்லை என்று அறிவித்தது

ஆபிரிக்காவில் ஆதரவு இல்லை
லிபியாவிற்கு எதிரான தாக்குதலை தென் ஆபிரிக்கா ஆதரிக்கவில்லை. அரபு லீக்கும் ஆரம்பத்தில் ஆதரித்துவிட்டு பின்னர் பொது மக்கள் கொல்லப்படக்கூடாது என்கிறது. அரபு லீக் தலைவர் Moussa has told reporters Sunday that "what happened differs from the no-fly zone objectives." He says "what we want is civilians' protection not shelling more civilians."

இரு வல்லரசுகள் ஆதரிக்கவில்லை
சீனா லிபியாமீதான தாக்குதலைக் கடும் வார்த்தைகள் பாவித்துக் கண்டித்தது. சில நாடுகள் இப்போதும் பனிப்போர் மனப்பாங்கில் இருப்பதாக சீனா தெரிவித்தது. இரசியா ஒரு படி மேல் சென்று லிபிய அதிபர் கடாபியின் இருப்பிடம் மீதான தாக்குதல் ஒரு சிலுவைப்போர் போன்றது என்றார். இந்தியா லிபியா மீதான தாக்குதலை எதிர்த்துள்ளது. பாதுகாப்புச் சபையில் லிபியாவிற்கு எதிராக நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் பொருளாதாரத் தடையும் ஒன்று. இரசியாவிற்கு லிபியாவுடன் இரண்டு பில்லியன் பெறுமதியான ஆயுத வர்த்தகம் இருந்தும் இரசியா அத் தீர்மானத்தை எதிர்க்கவில்லை. பாது காப்புச் சபையில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி மன்சீவ் சிங் பூரி ஐநா ஒரு தூதுவரை லிபியாவிற்கு அனுப்ப வேண்டும் என்றார். இலங்கைக்கு விஜய் நம்பியாரை அனுப்பியது போலவா? பாக்கிஸ்தான ஆதரவு தெரிவிக்கவில்லை. அமெரிக்கக் கைப்பொம்மையான ஈராக் ஆதரவு தெரிவித்துள்ளது. பாதுகாப்புச் சபையில் பறப்பற்ற வலயத் தீர்மானம் லிபியாவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்டபோது சீனா, இரசியா, ஜேர்மனி, இந்தியா, பிரேசில் ஆகிய ஐந்து நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

கடாபி ஆதரவு தீவிரவாதிகள்
கடாபிமீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடக்குமிடத்து கடாபி தனக்கு ஆதரவான தீவிர வாதிகளை திரட்டி மேற்கு நாடுகள் மீதும் அதன் குடி மக்கள் மீதும் தாக்குதல் நடத்தலாம். கடாபி பதவி விலகும்போது லிபியாவின் இனக் குழுக்களிடையே ஒரு போரை உருவாக்கிவிட்டு விலகலாம். அதனால் கடாபியின் கீழி இருக்கும் லிபியாவிலும் பார்க்க மோசாமான ஒரு லிபியா உருவாகும்.

மஹிந்தவின் பேஸ்புக்

Click on picture to enlarge
மஹிந்த ராஜபக்ச பேஸ்புக்கில் இருந்தால் இப்படித்தான் இருக்குமா என்று ஒரு கற்பனை. (படத்தில் சொடுக்கினால் படம் பெரிதாகத் தெரியும்)

Sunday 20 March 2011

வைக்கோ ஐயா படும் பாடும் - பாடும் பாட்டும்


அவ என்னை என்னை தேடி வந்த அம்முக்குண்டு
அவ சைசைப் பாத்து வெட்கப்படும் யானைக்குட்டி
அவ திமிரைச் சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ என்னைத் தள்ளிவிட்டா நட்டாத்திலை
அவ கூட இருந்தா செருப்பு தானே காலில


ஒரு மாசம் முன்னா என்னொட கூட்டணின்னு சொன்னா
ஒ கொஞ்சம் கொஞ்சமாக உதைத்து வெளியே தள்ளினா
அந்த முட்டைக் கண்ணன் சொன்னா அவ என்னையே ஒதைஞ்சா
அட என்ன சொல்லி என்னா. எந்நிலை இப்ப என்னா

அடங்கிய பிராணிபோலே அவ பின்னால் நின்றவன் நானே
அவ பதினாறு முள சேலைபோலே மாத்திவிட்ட மனசை
அவ அண்ணா அண்ணா என்னா இப்ப கன்னாபின்னவென்றா
அவ பின்னா நின்ன என்னை என்ன பண்னா பாராய்

ஒ கண்ணாமூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடி பார்த்தோமே
முப்பத்தொண்ணு கேட்டா மூணில் ஒண்ணு தந்தா
கூடவும் யாரும் இல்லே சேரவும் எவரும் இல்லே
தனியாக்கி விட்டாளே என்னைத் தனியாக்கிவிட்டாளே

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...