Saturday 31 December 2011

2011 ஒரு மீள் பார்வை

2011 அரபு வசந்தம், பணக்கார நாடுகளில் பொருளாதார நெருக்கடி, இசுலாமியத் தீவிரவாத இயக்கங்களின் பின்னடைவு, பின் லாடன் கொலை, ஆளில்லா விமானங்களின் ஆதிக்கம், ஜப்பானிய ஆழிப்பேரலை, இணையங்களில் ஊடுருவல், கைப்பேசிகள், சமூகவலைத்தளங்கள் பற்றிய செய்திகள் அதிகம் இடம்பெற்றன. சவுதி அரேபியா பாரேய்ன் போன்ற நாட்களின் மேற்குலகு சார்பு சர்வாதிகரிகளுக்கு எதிரான மக்கள் எழுச்சி பிசு பிசுத்து விட்டன.

ஜனவரி - முள்ளும் நானே மலர் நானே

Googleஐ Facebook முந்தியது என்ற சமூக வலைத்தள் பற்றிய செய்தியுடன் தொடங்கிய  2011 சமூக வலைத் தளங்களூடாக சமூகப் புரட்சியும் செய்யலாம் என்பதை நிரூபித்தது. ஜனவரி 2011இல் ஒரு மில்லியன் மக்கள் எகிப்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக திரளச் செய்வதில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகித்தன. அதே வேளை அதிகரிக்கும் விவாகரத்துக்களுக்கு ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மீது பழியும் சுமத்தப்பட்டது. அது மட்டுமல்ல சிவப்பு ரோசாப்பூ, பரிசுப் பொருள்கள், சுவையான உணவகத்தில் சாப்பாடு போன்றவற்றை விட நல்ல கைப்பேசி அல்லது சமூக வலைத்தளங்களூடாக அனுப்பும் குறுந்தகவல்கள் பெண்களை அதிகம் கவர்கின்றன என்று ஆய்வுகள் தெரிவித்தன. பழவியாபாரி முகமது பவுவாசிசி தற்கொலை செய்து இறந்தது துனிசியாவில் மக்களை ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ந்தெழ வைத்தது. இவரை ஒரு பட்டதாரி என பல ஊடகங்கள் பொய்த் தகவல் வெளியிட்டன. துனிசியாவிலும் எகிப்திலும் மக்கள் எழுச்சி கொண்டதைத் தொடர்ந்து அல்ஜீரியாவிலும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.

பெப்ரவரி - தொடுதிரைக் காலம். கப்பலேறிய இந்திய மானம்

2011இல் தொடுதிரைத் தொழில்நுட்பத்தைக் கொண்ட கைப்பேசிகளும் கணனிகளும் பிரபலமடைந்தன. ஐ-பாட் போன்றவை பிரபலமடைந்தன. இத்தாலியப் பாராளமன்ற அமர்வின் போது அதன் 66வயதான உறுப்பினர் ஒருவர் பெண் துணைகளை வாடகைக்கு ஒழுங்கு செய்யும் நிறுவனத்தின் வலைத் தளத்தில் உள்ள பெண்களின் பலான படங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை ஊடகங்கள் அம்பலப் படுத்தின. வத்திக்கான் ஐ-போன் மூலம் பாவமன்னிப்புக் கேட்க முடியாது என்று அறிவித்தது. அரபு வசந்தம் லிபியாவிலும் தொடங்கியது. லிபியத் தலைவர் கடாஃபிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணா உரையாற்றும் போது ஏற்கனவே போர்த்துக்கீசியப் பிரதிநிது ஏற்கனவே ஆற்றிய உரையின் பிரதியை அதுதான் தனது உரை என எண்ணி எடுத்து வாசித்தார்.

மார்ச் - அதிகரித்த எரி பொருள் விலைகள்

அரபு வசந்தமும் லிபிய மக்கள் புரட்சியும் ஏற்கனவே அதிகரித்த எரி பொருள் விலைகளை மேலும் அதிகரிக்கச் செய்ததன. உலகின் முதற்பத்துச் செல்வந்தர்களில் இருவர் இந்தியர்கள் என்று அறிவிக்கப்பட்டது. பாரெய்ன், ஏமன் சிரியா ஆகிய நாடுகளிலும் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். லிபியாவில் விமானப் பறப்பற்ற வலயத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அங்கீகரித்தது. ஜப்பனிலும் மியன்மாரில்லும் பெரும் பூகம்பம் ஏற்பட்டது.

ஏப்ரல் - துடுப்பாட்டத்தில் உலகப் கோப்பையை இந்தியா வென்றது
ஏப்ரல் மாதம் இந்தியா துடுப்பாட்டத்தில் உலகக் கோப்பையை வென்றதுடன் ஆரம்பமாகியது. இந்தியாவிடம் தோற்ற இலங்கை நாணயச் சுழற்ச்சியில் குளறுபடி நடந்தது எனக் குற்றம் சாட்டியது. இலங்கையில் நடந்ததாக நம்பப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கை பொதுச் செயலர் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையை வெளிவிடுவதில் இந்தியாவின் விஜய் நம்பியார் தாமதத்தை ஏற்படுத்தினார். பிரித்தானிய இளவரசர் திருமணம் செய்து கொண்டார்.

மே - பின் லாடன் கொல்லப்பட்டார். சொர்க்கமும் நரகமும் நம் வசமே
பின் லாடன் கொலையுடன் இந்த மாதம் ஆரம்பமானது. இலங்கையில் நடந்ததாக நம்பப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கை பற்றி ஆராயவும் அது பற்றி இலங்கைக்கு ஆலோசனை கூறவும் இலங்கைக்கு இந்திய நிபுணர்கள் குழு ஒன்று பயணம் செய்தது. ராட்கோ மிலாடிக் இனப்படுகொலை குற்றச்சாட்டின் பேரில் செர்பியாவில் கைது செய்யப்பட்டார்.சொர்க்கம் என்பது இருட்டுக்குப் பயந்தவர்களினிதும் இறப்பிற்குப் பயந்தவர்களினதும் கட்டுக்கதை என்றார் Stephen Hawking என்னும் பிரித்தானிய விஞ்ஞானி. கடவுளை நம்புவது இருட்டுக்கான பயத்தையும் இறப்பிற்கான பயத்தையும் நீக்குகிறது என்கிறார் அந்த கேம்பிரிட்ஜ் பேராசிரியர். விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் இந்திய ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்தார். தமிழர்களின் விரோதிகளான காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்ட திமுக தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது. ஆப்பிளின் நிறுவனர் ஸ் ரீவ் ஜாப் காலமானார்.

ஜூன் - அல் கெய்தாவின் கேக் செய்யும் முறை
அல் கெய்தாவின் இணையத்தளத்தை ஊடுருவிய பிரித்தானிய உளவுத் துறை அங்கு குண்டு தாயாரிக்கும் முறை பற்றி அளிக்கப்பட்ட விளக்கங்களை நீக்கி விட்டு கப் கேக் செய்யும் முறைபற்றிய பதிவை இட்டுவைத்தது. பன்னாட்டு நீதி மன்றம் லிபியத் தலைவர் கடாஃபியை கைது செய்யும் ஆணையைப் பிறப்பித்தது. லிபியாவில் கொல்லப்பட்டவர்கள் 4000பேர். ஆனால் இலங்கையில் கொல்லப்பட்ட அப்பாவிகள் மூன்று இலட்சத்திற்கு மேல்.

ஜூலை - புதிய நாடு பிறந்தது. இந்தியாவின் குட்டு அம்பலம்

தென் சூடான் ஒரு புதிய நாடாக உருவெடுத்தது. தனிப்பட்டவர்களின் அந்தரங்கத் தகவல்களைத் திருடியதற்காக பிரித்தானியாவில் ஒரு பத்திரிகை மூடப்பட்டது. நோர்வேயில் தீவிர வலதுசாரி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்து பெரும் சேதம் விளைவித்தார். மும்பாய் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். உலகெங்கும் வேலையில்லாதவர்கள் தொகை அதிகரித்தது. ஆப்கானிஸ்த்தான், லிபியா, யேமன் போன்ற நாடுகளில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டன. ஃபேஸ்புக் மூலம் தனக்கு எதிராக நடக்க இருந்த பெரும் ஆர்ப்பாட்டத்தை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. சாம் ராயப்பா என்னும் பத்திரிகையாளர் ஸ்ரேட்ஸ்மன் பத்திரிகையிலும் எம் ஜீ தேவசகாயம் என்னும் முன்னாள் இந்திய நிர்வாக சேவை(I.A.S) அதிகாரி த வீக்கெண்ட் லீடரிலும் இலங்கையில் நடந்த இனக்கொலையில் இந்தியாவிற்குப் பங்குண்டு என்று எழுதினர். சீனா ஒரு மின்காந்த அதிர்வு{electromagnetic pulse (EMP)} உருவாக்கும் முறையை கண்டறிந்தது இதன் மூலம் அமெரிக்கக் கடற்படையை தம்மால் செயலிழக்கச் செய்ய முடியுமென்று கூறப்பட்டது. அமெரிக்காவில் அரச கடன் நெருக்கடி பெரும் பிரச்சனையாக மாறியது. பிரித்தானிய சனல்-4  தொலைக்காட்சி  இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பாக மேலும் ஒரு காணொளியை வெளிவிட்டது.

ஆகஸ்ட் - ஆட்டம் கண்ட உலகப் பொருளாதாரம்
பல மேற்குலக செல்வந்த நாடுகளின் பொருளாதர நெருக்கடி அம்பலத்திற்கு வந்தது. Motorolaவை Google வாங்குகியது. பிரித்தானியாவின் பெரு நகரங்களில் கலவரம் நடந்தது. அல் கெய்தாவின் இராண்டாம் நிலைத் தலைவரான அதியா அப் அல் ரஹ்மான் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

செப்டம்பர் - வாழ்வில் இன்பத்தைத் தொலைத்தோம்
பல நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி பரவியது. அமெரிக்க ஆளில்லா விமானம் அன்வர் அல் அவ்லாக்க்கி என்னும் ஒரு அல் கெய்தா தலைவரைக் கொன்றது. அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ ஒரு படையணி வைத்திருப்பது அம்பலத்திற்கு வந்தது.

அக்டோபர் - கடாஃபியின் கொலை
உலகத்தில் மொத்த மக்கள் தொகையானது 7 பில்லியனைத் தொட்டது. அமெரிக்க ஆளில்லா விமானக்களில் வைரஸ் பரவியது. கடாஃபி பன்னாட்டுச் சட்டங்களுக்கு எதிராகக் கொல்லப்பட்டார். ஆப்பிள் தனது புதிய கைப்பேசியை அறிமுகம் செய்தது. அமெரிக்க ஆளில்லா விமானங்கள் அப்பாவிகளைக் கொல்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆப்கானிஸ்த்தான் பாக்கிஸ்தான் எல்லைப் பகுதி மக்கள் பாக் தலைநகரில் அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அமெரிக்காவின் பெரும் பங்குச் சந்தை வர்த்தகர்களுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சம்சங் ஐ-போனை விற்பனையில் முந்தியது.

நவம்பர் - ஈரானிடம் அணு குண்டு?

சீன இரசிய அரசுகளின் ஆதரவுகளுடன் செயற்படும் இணைய ஊடுருவிகள்(Hackers)  தனது நாட்டின் பொருளாதார தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடுகின்றன என அமெரிக்கா குற்றம் சாட்டியது. இத்தாலியப் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குள்ளானது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் நிதி நெருக்கடியைத் தீர்க்க சீனாவின் தயவை நாடின. அமெரிக்காவில் தாய்வானை அமெரிக்காவிற்கு "விற்கும்" திட்டம் முன்வைக்கப்பட்டது. மும்மர் கடாஃபியின் மகன் சயிஃப் கடாஃபி கைது செய்யப்பட்டார். இலங்கைப் பாராளமன்றில் உறுப்பினர்கள் கைகலப்புச் செய்தனர். எகிப்தில் மீண்டும் மக்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யப் போவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கொதித்து எழுந்தன. மலையாளிகள் dam 999 திரைப்படத்தின் மூலம் பெரும் சர்ச்சையைக் கிளப்பினர்.

டிசம்பர் - இரசிய மக்கள் எழுச்சி
தமிழர்களைத் தாக்கியும் தமிழ்ப் பெண்களை ஆடைகளைக் கழற்றி மானபங்கப் படுத்தியும் மலையாளிகள் கோர தாண்டவம் ஆடினர். ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. அமெரிக்க ஆளில்லா விமானத்தை தாம் தரையிறக்கியதாக ஈரான் அறிவித்தது. அதைத் தரையிறக்கும் தொழில் நுட்பம் ஈரானிடம் இல்லை என்று அமெரிக்காவில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்திய நாணயம் மதிப்பிறக்கம் கண்டது. இரசியாவில் புட்டீன் பிழையாக நடத்தப் பட்ட தேர்தலால் தெரிந்து எடுக்கப்பட்டார் என மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஈரான் வளை குடாவை மூடி உலக எரிபொருள் விநியோகத்தை முடக்கப் போவதாக ஈரான் எச்சரித்தது. அமெரிக்கா தனக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களுக்கு புற்று நோய் வரப் பண்ணுகிறது என வெனிசுலேவியத் தலைவர் குற்றம் சாட்டினார்.

முற்றுப் பெறாத எகிப்தியப் புரட்சி, சிரியா, ஈரான், இரசியா போன்ற நாடுகளில் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக செய்யும் கிளர்ச்சி 2012இலும் தொடர்ந்து நடக்கும். அமெரிக்க ஈரானிய முறுகல் தொடரும்.உலகப் பொருளாதார் நெருக்கடி இன்னும் ஐந்து ஆண்டுகள் தொடரும். சீனா தனது ஆதிக்கத்தை குறிப்பாக கடலாதிக்கத்தை விரிவு படுத்த முயலும்

புத்தாண்டுக் கவிதை

கால நதியின் தொடரோட்டத்தில்
அசைந்து செல்லும் ஒரு சிறு புள்ளி
இன்று ஒன்றும் இதில் முடியவில்லை
நாளை ஒன்றும் புதிதாகத் தொடங்கவில்லை
புத்தாண்டு எனப் புதிதாக ஒன்றும் இல்லை
வேதம் ஓதும் தமிழினக் கொலைக் கும்பல்
கூச்சலிடும் குள்ள நரி அரசியல் கூட்டம்
நேற்றும் அப்படியே நாளையும் அப்படியே
புத்தாண்டு எனப் புதிதாக இங்கொன்றும் இல்லை
தமிழன் நிலமெங்கும் சிங்களக் குடிகள்
தமிழன் தெருவெங்கும் சிங்களக் கடைகள்
இன்றும் அப்படியே நாளையும் அப்படியே
புத்தாண்டு எனப் புதிதாக இங்கொன்றும் இல்லை
கண்ணிரண்டில் நீர் வற்றி நிற்பவற்க்கு
பன்னிரண்டில் தன்னும் விடிவுவருமா

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...