Monday 15 August 2011

பொருளாதாரம்: பிழையாகிப் போன மேற்குலக வட்டிக்கடைகள்.

சுதந்திரப் பொருளாதார அல்லது முதலாளித்துவப் பொருளாதாரத் தத்துவங்கள் முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் மற்றும் முன்னாள் பிரித்தானியப் பிரதமர் மார்கரட் தட்சர் காலத்தில் புதுவடிவங்கள் பெற்றன. பொருளாதார நடவடிக்கைகளில் மேற்கத்திய அரசுகள் தலையீடுகளைக் குறைத்துக் கொண்டன. தனியார் நிறுவனங்களுக்கு அதிக சுதந்திரங்கள் வழங்கப்பட்டன.

அரசின் பணிகளில் முக்கியமானது தனது மத்திய வங்கிகளினூடாக வட்டி வீதத்தையும் பணப்புழக்கத்தையும் தனியார் பொருளாதர நடவடிக்கைகளுக்கு வசதியாக கட்டுப்படுத்துவது.

தற்போது பெரும் நிதி நெருக்கடியில் இருக்கும் மேற்கு நாட்டு அரசுகள் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான கருவிகள் பற்றாக்குறையால் திண்டாடுகின்றன. தொடர்ச்சியான பாதிட்டுப் பற்றாக் குறைகளால் கட்டுக்கு மிஞ்சி கடன் பளுக்கள் மேற்கு நாடுகளின் அதிகரித்துவிட்டன.

உலகெங்கும் எரிபொருள் விலை அதிகரித்தபோது அது பணவீக்கத்தைக் கொண்டுவரும் என்று அஞ்சி மேற்கு நாடுகள் வட்டி வீதங்களைக் குறைக்கத் தயங்கின. எரி பொருள் விலையால் அதிகரித்த உற்பத்திச் செலவு உற்பத்திகளையும் குறைத்தன. வேலைவாய்ப்புக்கள் குறைக்கப்பட்டன.

வலது சாரி அரசியல்வாதிகள் தங்கள் நாடுகளில் வரி அதிகரிப்பை எதிர்த்தனர். இதற்காக அரச செலவீனங்களைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதுவும் வேலை வாய்ப்புக்களை குறைத்தன.

இப்போது பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் மேற்கு நாடுகள் பல தமது வட்டி வீதத்தை குறைத்துவிட்டன. சில நாடுகளில் அவை பூச்சியத்தை அண்மித்து விட்டன. வட்டி வீதத்தைக் குறைத்தால் ஏற்கனவே கடன்பட்ட பொது மக்களும் தனியார் நிறுவனங்களும் குறைந்த வட்டியை செலுத்தலாம். இதனால் அவர்கள் கைகளில் அதிக அளவு பணம் புழங்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. பணப்புழக்கம் அதிகரித்தால் மக்களின் கொள்வனவு அதிகரிக்கும். மக்களின் கொள்வனவு அதிகரிக்கும் போது நாட்டின் உறப்த்தி அதிகரிக்கும். மக்கள் கடன் பட்டு கொள்வனவு செய்வர். நிறுவங்கள் கடன்பட்டு அதிக முதலீடு செய்யும். இப்படி எல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே நிறையக் கடன் பட்டிருந்த பொதுமக்களும் தனியார்  நிறுவனங்களும் தங்கள் கடன் பளுவைக் குறைக்கவே முயல்கின்றனர். கடன் வழங்கு நிறுவனங்களும் ஏற்கனவே கொடுத்த கடனை எப்படி அறவிடுவது என்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன.

அமெரிக்காவில் ஆகஸ்ட் 2008இல் பொதுமக்கள் கடன்12.41ரில்லியன் டொலர்களாக இருந்தது. இப்போது அது 12.21ரில்லியன்களாகக் குறைந்துள்ளது. இது மக்கள் தங்கள் கடன்களை அடைப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று சுட்டிக்காட்டுகிறது.

 பிரித்தானியாவில் பணவீக்கம்  5% இற்கு உயர்ந்துள்ளது. ஐரோப்பியாவின் வலிமைமிக்க பொருளாதரமான ஜெர்மனியப் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில்  0.1% மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்டதிலும் குறைவான அளவே. அண்மையில் அயர்லாந்து, கிரேக்கம், இத்தாலி ஆகிய நாடுகள் கடன் பளுவால் சிரமப்பட்ட போது ஜேர்மனியே முன்னின்று உதவியது.

வீட்டுக் கடன்கள்
பல மேற்கு நாடுகளில் இப்போது வீட்டுக் கடன்கள் பெறுவோர் தொகை என்றுமில்லாத அளவு குறைந்துள்ளது. வீடுகளுக்கு தளபாடங்கள் வாங்குவதும் மிகக் குறைந்துள்ளது. மேற்கு நாடுகளில் வீட்டுக்கடன் பெறுவோர் தொகை குறையும் போது பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். அமெரிக்காவில் புதிதாக வீட்டுக் கடன் பெறுவது 19% விழுக்காட்டை அடைந்துள்ளது. ஏற்கனவே கடன் கொடுத்து கைகளைச் சுட்டுக் கொண்ட வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள் இப்போது கடன் வழங்குவதில் மிகக் கவனமாகவே செயற்படுகின்றன.

கடன் அட்டைகள்
மத்திய வங்கிகள் வட்டி வீதத்தைக் குறைத்த போதும் கடன் அட்டை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வட்டி வீத்ததை குறைக்கவில்லை. மத்திய வங்கியின் வட்டி வீதம் இரண்டிற்கும் குறைவாக இருக்கையில் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதங்கள் 15ஆக இருக்கின்றன.

கார் வாங்குவோர்
மேற்கு நாடுகளின் பொருளாதர வளர்ச்சிக்கான ஒரு சரியான சுட்டியாக கார் விற்பனை இருக்கிறது. பொதுமக்கள் கார் வாங்குவது இனிக் குறையுன் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகிறார்கள்.

வரப்பு பதிய நீர் பதியும். நீர் பதிய நெல் பதியும்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைவது என்பது ஒரு தனி நிகழ்வு அல்ல. பொருளாதார நடவடிக்கைகள் குறைய வேலையில்லாதோர் அதிகரிப்பர். வேலையில்லாதோர் அதிகரிக்க மொத்தக் கொள்வனவு குறையும். கொள்வனவு குறைய உற்பத்தி குறையும். உற்பத்தி குறைய வேலையில்லாதோர் மேலும் அதிகரிப்பர். இதனால் மேலும் பொருளாதாரம் வீழ்ச்சி காணும். இது தொடர் சுற்றாக நடக்கும்.

அரசு தலையீடு அவசியம்.
இனி வரும் காலங்களில் தனியார் துறைகளில் மட்டும் நம்பிக்கை வைத்திராம மேற்குலக அரசுகள் பொருளாதர நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடவேண்டி வரும். அப்படிச் செய்யாவிடில் சமூக அரசியல் பிரச்சனைகள் தலைதூக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...