Sunday 28 August 2011

அல் கெய்தாவின் 2-ம் தலைவர் கொலை எந்த அளவு பாதிப்பு?

ஒரு இயக்கத்தின் செயற்பாடுகள் ஒரு சில நிபுணர்களின் திறமையில் தங்கியிருப்பதுண்டு. ஆனால் அந்த நிபுணர்களின் பின்னால் பல நிபுணர்கள் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் தயாராக இருப்பார்கள். அவர்கள் இயக்கத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகளை உறுதி செய்வார்கள்.

லிபியாவின் மிசரட்டா நகரின் பிறந்தவரான  அதியா அப் அல் ரஹ்மான் அல் கெய்தா இயக்கத்தின் பின் லாடன் கொலைக்குப் பின்னர் இரண்டாம் தலைவராகக் கருதப்படுபவர். இவரை அமெரிக்கா கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளது. எந்த நாள் எந்த விதமாகக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்படவில்லை. இவரை அமெரிக்கா ஆளில்லா விமானம் குண்டு வீசிக் கொன்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பாக்கிஸ்தானின் அரச கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் உள்ள வஜிரிஸ்த்தான் என்னும் இடத்தில் இவர் 22-ம் திகதி திங்கட்கிழமை கொல்லப்பட்டார். ஆனல் இது தொடர்பான செய்தி சனிக்கிழமையே வெளிவிடப்பட்டது.

அதியா அப் அல் ரஹ்மான் பற்றிய தகவல்கள்:
  • இவரது இயற்பெயர் ஜமால் இப்ராஹிம் இஸ்தாவி
  • லிபிய மிசரட்டா நகரில் பிறந்தவர். அங்கு பொறியியலில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்
  • 1988இல் ஆப்கானித்தானில் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் இணைந்தவர்.
  • சிறந்த பேச்சாளரும் சிந்தனையாளரும்.
  • சிறந்த அமைப்பாளரும் நிர்வாகியும்
  • அல் கெய்தாவின் உயர் மட்டத்திற்கும் செயல் வீரர்களுக்கும் இடையில் தொடர்பாளராகச் செயற்பட்டவர்.
  • பல நாடுகளின் அல் கெய்தாவின் செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவம் மிக்கவர்.
  • தங்கு தடையின்றி ஈரானுக்குள் நுழையவும் வெளியேறவும் இவரால் முடியும்.
  • அல் கெய்தாவின் பல செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தவர்.
  • அமெரிக்கா பின் லாடனின் மாளிகையில் கைப்பற்றிய கணனிப்பதிவேடுகளின் படி அல் கெய்தா இவரில் நிறையத் தங்கி இருந்தது.
இப்படிப்பட்ட பன்முகத் திறமை கொண்ட ஒருவர் கொல்லப்பட்டது அல் கெய்தாவிற்கு ஒரு பெரிய இழப்பு என்று பல படைத்துறை நிபுணர்கள் நம்புகிறார்கள். இவரது இழப்பு  அல் கெய்தாவின் தலைவர் அய்மன் அல் ஜவகாரிக்கு பெரிய இழப்புத்தான்.  அல் கெய்தாவின் தற்போதைய பெரும் பலவீனம் தனது இரகசியங்களைக் கட்டிக் காப்பதே. அது ஊடுருவிகளுக்கு எதிராக கடும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். அல் கெய்தாவின் பல இரகசியங்கள் பின் லாடனின் மாளிகையில் கைப்பற்றப்பட்டபின்னர் அல் கெய்தா தனது கட்டமைப்பை மீள் அமைப்புச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்கான செயற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிறந்த நிர்வாகியின் இழப்பு கணிசமான பின்னடைவை ஏற்படுத்தும்.
பின் லாடனுடன் அதியா அப் அல் ரஹ்மான்

பின் லாடன் கொலைக்குப் பின்னர் அல் கெய்தா இயக்கம் அதற்கான பழியை இன்னும் தீர்த்துக் கொள்ளவில்லை. பொறுத்திருப்பது நல்லது என்று நினைக்கிறதா அல்லது பெரிய தாக்குதல் எதுவும் செய்ய முடியாது என்று இருக்கிறாதா என்பது தெரியவில்லை.

ஜூலை மாதம் பாக்கிஸ்த்தான் சென்ற அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலரும் பின் லாடன் கொலையின் போது அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ இன் தலைமைப்பதவியில் இருந்தவருமான லியோன் பாணெற் அல் கெய்தாவை ஒழித்துக் கட்டும் வாய்ப்பு இப்போது கைக்கு எட்டிவிட்டது என்றார்.

ஆனால் அதியா அப் அல் ரஹ்மானைப் போல் இன்னும் இருபது அல் கெய்தாத் தலைவர்கள் இருக்கிறார்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...