Saturday 7 August 2010

பறக்கும் தட்டு பற்றிய தகவலை மறைத்த பிரித்தானியப் பிரதமர்


பறக்கும் தட்டுக்கள் பற்றி தாம் அறிந்தவற்றை மறைத்து வைத்திருப்பதாக பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சு மீது ஒரு குற்றச் சாட்டு இருந்து வருகிறது. இது பற்றிய முக்கிய தகவல் ஒன்று இப்போது வெளிவந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியப் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சேர்ச்சில் அவர்கள் ஒரு பறக்கும் தட்டு சம்பவம் பற்றி ஐம்பது வருடங்களுக்கு மறைத்து வைத்திருக்கும்படி பிரித்தானியப் பாது காப்பு அமைச்சுக்கு உத்தரவிட்டதாக அவரது மெய்ப்பாதுகாவலரின் பேரன் இப்போது பகிரங்கப்படுத்தியுள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது ஒரு பிரான்சில் ஜெர்மனியப் படையினருக்கு எதிராக தாக்குதல் நடாத்திவிட்டுத் திரும்பும் போது பிரித்தானிய ஆகாயப்படை விமானி ஒருவர் தனது விமானத்திற்கு அண்மையாக இன்னொரு உலோகப் பொருள் வந்ததையும் தனது வேகத்திற்கு ஏற்ப அந்த மர்மப் பொருளும் தனது வேகத்தை மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்தார். இந்தத் தகவல் வெளிவந்தால் மக்கள் மத்தியில் பலத்த பீதி ஏற்படும் என்று இதை மறைக்கும் படி உத்தரவிட்டார் வின்ஸ்டன் சேர்ச்சில்.

பிரித்தானிய கதுவி(ரடார்)கள் இருநூறுக்கு மேற்பட்ட பறக்கும் மர்மப் பொருள்களைப் பதிவு செய்துள்ளன. பொதுமக்களிடமிருந்து பறக்கும் மர்மப் பொருள்களைக் கண்டதாக 343 கடிதங்கள் பிரித்தானிய அரசிற்கு கிடைத்துள்ளன. 1996-ம் ஆண்டு மட்டும் பிரித்தானிய அரசு 600க்கு மேற்பட்ட அறிக்கைகள் பறக்கும் மர்மப் பொருள்கள் சம்பத்தமாக தயாரிக்கப்பட்டன.

பிரித்தானிய அரசின் தகவல்களின் படி பறக்கும் மர்மப் பொருள்களை அவதானித்தல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் பலத்த வீழ்ச்சியைக் கண்டுள்ளன. பல பறக்கும் மர்மப் பொருள்கள் பிரித்தானிய மீது உளவு பார்க்க சோவியத் ஒன்றியம் அனுப்பிய விமானங்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...