Tuesday 4 May 2010

பிரித்தானியாவில் நாடுகடந்த அரசுத் தேர்தல் குளறுபடிப் பின்னணி.


பிரித்தானியாவில் பிரித்தானியத் தமிழர் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு அத்துடன் "அமைப்பு" தம்மை அழைத்துக் கொள்ளும் ஒரு அமைப்பு ஆகிய மூன்று தமிழர் அமைப்புக்கள் தமிழ்த்தேசிய வாதத்தை அடிப்படையாக வைத்து செயற்பட்டு செயற்பட்டுவருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் பிரித்தானியாவில் தடை செய்யப் பட்ட பின்னர் அவர்கள் தம்மை "அமைப்பு" என்று சொல்லிக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பலத்த ஆதரவுத்தளம் உண்டு. பாரிய அளவில் நிகழ்ச்சிகள் ஊர்வலங்கள் போன்றவற்றை கனகச்சிதமாக நாடாத்தும் திறன் ஆளணி வளம் இந்த அமைப்பிடம் இருக்கிறது. பிரித்தானியாவில் இவர்கள் ஒழுங்கு செய்த பல நிகழ்ச்சிகள் சரித்திர சாதனைகள் படைத்தன. மற்ற இரு அமைப்புக்களும் "அமைப்பிற்கு" இசைவாகவே செயற்பட்டு வருகின்றன.

முள்ளி வாய்க்கால் பின்னடைவிற்கு பின்னர் மேற்படி அமைப்பினர் பலத்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பது உண்மை. இவர்களிற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தவர்களில் சிலர் இந்த "அமைப்பு" சார்ந்தவர்கள் முள்ளி வாய்க்கால் பின்னடைவிற்கு பின்னர் தம்மிடம் விளக்கமளிக்காததையிட்டு பலத்த அதிருப்தியடைந்திருந்தனர். (இவர்களைப் அதிருப்திக் குழு என்று அழைப்போம். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீதான அதிருப்தி கொண்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே இவர்கள்).

அமெரிக்காவில் இருந்து தமிழத் தேசியவாதிகள் நாடுகடந்த அரசிற்கான திட்டத்தை முன்மொழிந்த போது பிரித்தானியத் தமிழர் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தம்மை அமைப்பு என்று கூறிக் கொள்ளும் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் அதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தமது சகல நடவடிக்கைகளுக்கும் வன்னியில் வரும் அறிவுறுத்தல்களின் படி நடந்து வந்தவர்களுக்கு உடனடித் தீர்மானம் நாடு கடந்த அரசு தொடர்பாக எடுக்க முடியவில்லை. நாடுகடந்த அரசில் உடனடி அக்கறையை "அமைப்பு" காட்டவில்லை. இதனால் இந்திய இலங்கை அரசுகளின் உளவாளிகளான தமிழர்கள் சிலர் தாம் நாடுகடந்த அரசாங்கத்தில் அக்கறையுள்ளவர்களாக காட்டிக் கொண்டு அதிருப்திக் குழுவையும் தம்மிடம் இணைத்துக் கொண்டு நாடு கடந்த அரசின் பிரித்தானியப் பிரிவிற்குள் நுழைந்து விட்டனர். ஆனால் பிரித்தானியத் தமிழர்கள் மத்தியில் "அமைப்பு" வின் ஆதரவின்றி எதையும் சாதிக்க முடியாது. இந்த இந்திய இலங்கை உளவாளிகளை ஊடுருவிகள் என்று அழைப்போம். இதற்கிடையில் உலகத் தமிழர் பேரவையை "அமைப்பு" பிரித்தானியாவில் வெற்றிகரமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து இலங்கை இந்திய உளவு அமைப்புக்களை அதிர வைத்தது. ஊடுருவிகளும் தடுமாறினர்.

அமைப்பின்றி அணுவும் அசையாது!
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் "அமைப்பு" வின் ஆதரவின்றி பிரித்தானியாவில் நிறைவேற்ற முடியாது என்று உணர்ந்த தமிழ்த் தேசிய சபையும் இறுதியில் "அமைப்பு" விடம் சரணடைந்தது.
"அமைப்பு" வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின் பின் தமிழ்த் தேசிய சபை கலைக்கப் படவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆதரவு வழங்கியது. தமிழ்த் தேசிய சபையும் கலைக்கப் பட்டு விட்டது.

பிரித்தானிய நாடுகடந்த அரசின் மதியுரைக் குழு அமைக்கப் பட்டபோது. அமைப்பு, அதிருப்திக் குழு, ஊடுருவிகள் ஆகிய மூன்று வகையானோரும் அதில் இருந்தனர். நாடுகடந்த அரசுக்கான் தேர்தலில் ஊடுருவிகள் தாம் பத்துப் பேரை தேர்தலில் நிறுத்தப் போவதாகவும் அமைப்பை பத்துப் பேரை நிறுத்தும் படியும் பரிந்துரைத்தனர். ஊடுருவிகளுக்கு என்று ஒரு ஆதரவுத் தளம் பிரித்தானியாவில் இருக்கவில்லை. அதை வைத்துக் கொண்டு அவர்களால் ஒருவரைத் தன்னும் வெற்றி பெற வைக்க முடியாது. அமைப்பு இதற்கு உடன்படவில்லை. தமக்கு 15 மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற முடியும் என்று அமைப்பிற்கு தெரியும். இதைத் தொடர்ந்து பிரித்தானிய நாடு கடந்த தமிழீழ அரசிற்குள் பெரும் முரண்பாடுகள் தோன்றின. அமைப்பு சகல இடங்களிலும் தனது வேட்பாளர்களை நிறித்தியது.தேர்தல் ஆணையம் அமைக்கும் போது அது அமைப்பு, ஊடுருவிகள், புலி அதிருப்திக் குழு ஆகிய மூன்றையும் திருப்திப் படுத்தக் கூடியவர்களை உள்ளடக்கியதாகவே இருந்தது. அறிஞர்களான இவர்கள் தமிழ்த்தேசியத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த போதும் சிறந்த நடுநிலையாளர்களாவே இருந்தனர். இதனால் ஊடுருவிகள் யாரும் குழுக்களாகவோ அல்லது சின்னத்தின் கீழோ போட்டி போட முடியாது என்ற நிபந்தனையை தேர்தல் அறிவுறுத்தல்களில் ஒன்றாக உள்ளடக்கினர்.

செண்பகமாகப் பறந்த புலிகள்
அமைப்பைச் சேர்ந்த நாடுகடந்த அரசிற்கான வேட்பாளர்கள் ஒன்றாக கூடி துண்டுப் பிரசுரங்களில் செண்பகத்தின் படத்தை ஒரு மூலையில் உள்ளடக்கி தமது விபரங்களுடன் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். ஊடுருவிகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தபோது பொருட் செலவுகளைத் தவிர்க்கவும் பல முனைப் போட்டிகளைத் தவிர்க்கவும் இப்படி செய்வதாக அமப்பு விளக்கம் கொடுத்தது. வட்டுக் கோட்டைத் தீர்மானத் தேர்தலை தொடக்கிய பிரித்தானிய தமிழ்த் தேசிய சபையைச் சேர்த மூவர் தேர்தலில் போட்டியிட முன்வந்தனர். இவர்கள் ஊடுருவிகளுடன் இணைந்தால் பெரும் பிரச்சனை ஏற்படும் என உணர்ந்த அமைப்பு அவர்களில் இருவரை தம்முடன் இணைத்து அந்த இருவரையும் பிரச்சாரத்திற்குச் சிரமமான இலண்டன் எம்-25 இற்கு வெளிப் பகுதியில் போட்டியிட அனுமத்தித்தது. மூன்றாம் ஆளைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தையும் "அமைப்பு" கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் செண்பகங்களாகப் போட்டியிட்டனர். கலைக்கப் பட்ட தமிழ்த் தேசிய சபையின் மூன்றாம் ஆள் வட கிழக்கு இலண்டனில் போட்டியிட்டார். அதிருப்தியாளர்களில் ஒருவர் வடமேற்கு இலண்டன் பகுதியில் போட்டியிட்டார். இவர் தமிழ்த் தேசியத்திற்கு வழங்கிய பங்களிப்பு செண்பகத்தின் கீழ் எம்-25இல் போட்டியிட்ட இருவரின் பங்களிப்புடன் ஒப்பிடுகையில் பல்லாயிரம் மடங்கானது என்பது கவலைகுரிய ஒரு அம்சமாகும்.

களமிறங்கிய புகழ் தேடிகள்(Glory hunters)

எந்தத் தேர்தலிலும் புகழ் தேடிகள் களமிறங்குவது தவிர்க்க முடியாதது. இவர்களில் சிறந்த தொண்டர்களும் இருப்பார்கள். துரோகிகளும் இருப்பார்கள். சமயத்திற்கு ஏற்ப மாறும் பச்சோந்திகளும் இருப்பார்கள்.
இலண்டன் வடமேற்குப் பிரதேசத்தில் ஒரு இளம் ஆசிரியை களத்தில் இறங்கினார். இவரது தாயாரும் இப்பிரதேச சமூகதில் மிகுந்த பிரபலமான ஒரு நல்ல பண்புமிக்க பெண்மணி. இவர் ஊடுருவிகளுடன் இணையாமல் இருக்க அமைப்பு தாம் இவருக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. அமைப்பு ஏற்கனவே ஐந்து பேரை செண்பகத்தின் கீழ் களம் இறக்கிவிட்டது. இதனால் இவரை செண்பகத்தின் கீழும் போட்டியிட வைக்க முடியவில்லை. செண்பக வேடபாளர்கள் இவருக்கும் சேர்த்துப் பிரச்சாரம் செய்தனர்.

எம்-25 இற்கு வெளியிலான பிரதேசத்தில் ஊடுருவிகள் இருவரைக் களமிறக்கி இருந்தனர். மூவர் தெரிவு செய்யப்படக்கூடிய இப்பிரதேசத்தில் இவர்களால் இருவரை மட்டுமே களமிறக்க முடிந்தது. இந்த இருவரும் தமிழ்த் தேசியத்தின் ஆதரவாளர்களே. அவர்கள் ஊடுருவிகளைப்பற்றி அறியாமலே தேர்தலில் இறங்கினர். பின் நிலைமையைப் புரிந்து கொண்டு அவர்கள் தேர்தலில் இருந்து விலகத் தயாராகினர். ஆனால் ஊடுருவிகள் இவர்களை மீண்டும் வற்புறுத்தி தேர்தலில் இருந்து விலகுவதைத் தடுத்தனர்.

செண்பகக் குழுக்கள் தேர்தலில் வெற்றி பெறும் என்பதை அறிந்த ஊடுருவிகள் தேர்தலைக் குழப்பத் திட்டமிட்டனர். செண்பகக் குழுக்கள் தேர்தலில் பெரும் முனப்புடன் ஈடுபட்ட பகுதிகளில் இவர்களால் வாலாட்ட முடியவில்லை. இலண்டனின் ஒருமூலையில் அமைந்திருந்த ஸ்ரொன்லி அம்மன் கோவிலில் அமைந்திருந்த வாக்குச் சாவடியில் தமது கைவரிசையைக் காட்டினர். எம்-25 இற்கு வெளியில் உள்ள மூன்று வாக்குச் சாவடிகளிலும் இவர்கள் தமது கைவரிசையைக் காட்டினர். ஸ்ரொன்லி அம்மன் கோவிலில் 326 வாக்குகள் பதியப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிக்கை சமர்பித்திருந்தார். ஆனால் வாக்குச் பெட்டியைத் திறந்த போது 60 வாக்குக்கள் அதிகமாக இருந்தன.

தீவிர தமிழ்த் தேசிய ஆதரவாளர்களைக் கொண்ட Milton Keynes இல் மலை நேரம் வாக்காளிக்கச் சென்றவர்களுக்கு அங்கு வாக்குச் சீட்டுகள் முடிந்து விட்டதாக அறிவிக்கப் பட்டது. இதனால் வாக்களிக்க முடியாமல் போன அவர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். இனி வாக்களிக்க யாரும் வரமாட்டார்கள் என்று எதிர்பார்த்து ஊடுருவிகளின் கைக்கூலிகள் வாக்குச் சீட்டுக்களை ஏற்கனவே திணித்து விட்டனர். இதே போன்ற நிகழ்வுகள் Liverpool, Coventry ஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் நடந்தன.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
தேர்தலில் முறை கேடுகள் நடக்காமல் இருக்கப் பல சிறந்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. தேர்தல் ஆணையகதில் பல தமிழர் அல்லாதோர் பங்கேற்றிருந்தனர். அவற்றின் சிறப்புத்தன்மைகள் பற்றி பக்கம் பக்கமாக வியந்து எழுதலாம். இப்படி இருந்தும் தேர்தலில் முறை கேடுகள் நடந்து எம்-25இற்கு வெளிப் பிரதேச தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது. இதில் எண்ணிய இரு வாக்குப் பெட்டிகளிலும் செண்பகத்தின் கீழ் போட்டியிட்டவர்கள் பெரும் எண்ணிக்கை வாக்குப் பெற்றிருந்தனர். தென் மேற்கு இலண்டன் பகுதித்தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியிடப் படவில்லை. இப்பகுதியில் செண்பகத்தின் கீழ் போட்டியிட்ட முன்னாள் கிழக்கிலங்கை பாராளமன்ற உறுப்பினர் பரராஜசிங்கத்தின் மகன் மருத்துவர் மூர்த்தி ஆகியோர் முன்னணியில் இருந்தனர்.

வட மேற்கு இலங்கையில் அமைப்பு செண்பகத்தின் கீழ் ஐவரையும் தமது ஆதரவுடன் வாணி அச்சுதன் என்பவரையும் களத்தி இறக்கியிருந்தது. இதில் செண்பகத்தில் போட்டியிட்ட சுகிர்தகலா கோபிரத்தினத்தை விட சில வாக்குகள் அதிகமாக வாணி அச்சுதன் பெற்று வெற்றி ஈட்டினார். எஸ் ஜெயானந்தமூர்த்தி பெரு வெற்றியீட்டினார். அமைப்பின் சார்பில் போட்டியிட்ட மற்றவர்களும் வென்றனர்.

வட கிழக்கு இலங்கையில் இந்தியக் கைக்கூலியாக சந்தேகிக்கப் படும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு என்று தமிழர்கள் மத்தியில் தோன்றிய ஏ கே மனோகரன் தோற்கடிக்கப்பட்டார்.

4 comments:

Anonymous said...

"அமைப்பு" பல சவால்களைத் தொடர்ந்தும் எதிர் நோக்க வேண்டிவரும்...

Anonymous said...

நல்ல தகவல்கள் அடங்கிய பதிவு...

Anonymous said...

வட்டுக்கோட்டைத் தீர்மானம்,நாடுகடந்த அரசு,தேர்தல்,அமைப்பு,அதிருப்திக் குழு,உடுருவிகள்,புகழ் தேடிகள் .... தலை சுத்துகிறது சாமி.
"புலம்பெயர் தேசசம்" பற்றி சாமானிய ஈழத் தமிழனால் எதுவும் புரிந்துகொள்ள முடியவில்லை. தகவல்களுக்கு நன்றி.

Anonymous said...

aiyooooooooooo so many gangs to liberate Tamils??????

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...