Wednesday 10 February 2010

சரத் பொன்சேக்காவிற்கு நடக்கவிருப்பவை.

இலங்கைப் பாராளமன்றம் கலைக்கப்பட்டமை சரத் பொன்சேக்கா மீது எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை மூடி மறைக்க ஏதுவாக அமையும். இலங்கைப் பத்திரிகைகள் மீது உள்ள கெடுபிடிகள் எந்த விதத்திலும் குறைவதற்கான அடையாளங்கள் இல்லை. பாராளமன்றம் செயற்படாத நிலையில் எதிர்க் கட்சிகள் உண்மைகளை வெளிக் கொண்டு வருவது கடினம். இதனால் சரத் பொன்சேக்காவிற்கு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வது கடினம்.

பதவி இறக்கப்பட்டு மானபங்கப் படுத்தப்படவுள்ள சரத்.
ஒரு ஓய்வு பெற்ற ஜெனரலுக்குரிய கௌரவத்துடன் சரத் பொன்சேக்கா மீதான விசாரணை நடக்காமல் இருக்க அவர் விரைவில் சாதாரண படை வீரனாக பதவி இறக்கப் படலாம். இது தமிழர்களுக்கு எதிரான கொடுமையான போரை நடத்திய சரத் பொன்சேக்காவை மானபங்கப் படுத்த தமிழ் இனக்கொலை புரிந்த ராஜபக்சக்கள் எடுக்கும் நடவடிக்கை. தமிழர்கள் இதை ஒரு தொடர் நாடகம் போல் பார்த்து இரசிக்கலாம்.

சரத் பொன்சேக்கா இனி தேர்தலில் போட்டியிட முடியாது!
சரத் பொன்சேக்கா இனி தேர்தலில் போட்டியிட முடியாதபடி அவரது இலங்கைக் குடியுரிமை பறிக்கும் எண்ணம் கோத்தபாய ராஜபக்சவிடம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. முன்பு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை இப்படிப் பறிக்கப் பட்டு இலங்கையின் முதலாவது குடியரசுத் தலைவர் தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பாக சிறிமாவோ போட்டியிடாமல் ஹெக்டர் கொப்பேகடுவ ஜே ஆர் ஜயவர்த்தனவிற்கு எதிராகப் போட்டியிட்டார்.

குற்றச் சாட்டுகளுக்கானவிரிவான விளக்கங்கள் இல்லை
  • இராணுவத்தில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டமை.
  • பதவியில் இருக்கும்போது ஆயுதப் படைத் தலைவருக்கு( மஹிந்த ராஜபக்ச) எதிராக சதிசெய்தமை.
  • படையிலிருந்து தப்பி ஓடிய 1500இற்கு மேற்பட்டோரை தனனுடன் வைத்திருந்தமை.
  • படைத்துறை கொள்வனவுகளில் முறைகேடாக நடந்தமை.
ஆகிய குற்றச் சாட்டுக்கள் சரத் பொன்சேக்காவிற்கு எதிராக முன்வைக்கப் பட்டிருந்தாலும் அதற்கான் பூரண விளக்கங்கள் இதுவரை வெளியிடப் படவில்லை. இராணுவ நீதிமன்றில் முறைப்படி குற்றப் பத்திரிகை சமர்ப்பிக்கும்வரை அவருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்று இப்போது கூற முடியாது என்று சட்டவல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப் பட்ட கொழும்பு பங்குச் சுட்டெண்
தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அரசியல் திடத் தன்மை ஏற்பட்டுள்ளது என்று முதலீட்டாளர்கள் கருதியதால் கொழும்பு பங்குச் சுட்டெண் தொடர்ந்துஉயர்ந்து வந்து சாதனைகள் படைத்தது. சரத் பொன்சேக்கா திங்கள் இரவு கைது செய்ததைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை(நேற்று) வீழ்ச்சியைக் கண்டது. இன்றும் ஒரு தளும்பல் நிலையிலேயே காணப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைப் பங்குகளை விற்பதிலேயே அக்கறை காட்டுகின்றனர். இது வரும் காலங்களில் மேற்கு நாடுகளின் நடவடிக்கை இலங்கைப் பொருளாதார்த்திற்கு சாதகமாக இருக்காது என்று நம்பப்படுகிறது.

குட்டிமணி தங்கத்துரை ஜெகன் போன்றேருக்கு நடந்தது
சரத் பொன்சேக்காவிற்கு நடக்குமா?
தமிழ்ப் போராளிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையில் திருப்தி அடையாத சிங்களப் பேரினவாதிகள் 1983இல் வெலிகடைச் சிறைச் சாலையில் அவர்களைக் கொடூரமான முறையில் கொன்றனர். சரத் பொன்சேக்காவிற்கு எதிராக இன்று உயர் நீதிமன்றத்தில் சரத் கைது செய்யப் பட்டமைக்கும் இராணுவ நீதிமன்றில் விசாரிக்கப் படுவதற்கும் எதிராக மனு சமர்ப்பிக்கப்படும். சரத் பொன்சேக்காவிற்கு இராணுவ நீதி மன்றம் வழங்கும் தண்டனையில் அவரது எதிரிகள் திருப்தியடையாவிட்டால் தமிழ்ப் போராளிகளுக்கு நடந்தது சிங்களப் போராளிக்கு நடக்குமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...