Saturday 2 January 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு: தமது அரசியல் இருப்பை தக்க வைக்க முயல்கிறது


ஜோசேப் பரராஜசிங்கம், அரியநாயகம் சந்திரநேரு, குமார் பொன்னம்பலம் இப்படி தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பாராளமன்ற உறுப்பினர்கள் கொல்லப் பட்டனர். சிலர் பாராளமன்றத்துக்குள்ளேயே தாக்கப் பட்டனர். பல தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழ்வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அவர்கள் தொடர்ந்தும் அரசியல் ரீதியில் மக்களோடு சுதந்திரமாக நடமாடுவது உயிராபத்தானதே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இப்போதைய பெரிய பிரச்சனை தாம் "ஜனநாயக" அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதை எப்படி உறுதி செய்வது என்பதே. அரசிலில் அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற சம்பந்தன் ஐயா அவர்கள் அண்மைக் காலமாக விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிப்பது அவரால் எடுக்கப் பட்ட முடிவாக இருக்காது. அவர் மீது வெளிநாட்டுச் சக்திகளால் திணிக்கப் பட்ட ஒன்றே. அதற்குப் பதிலாக அவர்கள் பெற்றது அவர்கள் இலங்கையில் சுதந்திரமான நடமாட்டம். அதன் பிறகே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளமன்ற உறுப்பினர்கள் கொழும்பிலாவது நடமாடும் சுதந்திரம் பெற்றனர்.

பல இலட்சம் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குடியரசுத் தலைவர் தேர்தலில் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர் பார்த்திருக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சம்பந்தன் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இப்போது முக்கியமாக முன்னின்று ஒன்று பட்டுச் செயற்படுகின்றனர். சிவாஜிலிங்கம் என்வழி தனிவழி என்று நிற்கின்றார். சம்பந்தன்-மாவை-சுரேஸ் ஆகியோர் சரத் பொன்சேக்கா மஹிந்த ராஜபக்சே ஆகியோருடன் மாறி மாறி சந்திப்பில் ஈடுபட்டனர். அவர்கள் சந்திப்பில் அவர்களுக்கு எதிரான ஆயுதக்குழுக்கள் சம்பந்தமாகவே அதிகமாகப் பேசப் பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலிலும் பார்க்க அவர்கள் அடுத்த பாராளமன்றத் தேர்தலில் தமது பாதுகாப்பான போட்டியிடுதலிலேயே அவர்கள் கவனம் அதிகம் செலுத்துகின்றனர். ஆயுதக் குழுக்களான கருணா, பிள்ளையான், டக்ளஸ் ஆகியோரிடம் இருந்து தம்மைப் பாதுகாப்பதே அவர்கள் நோக்கம். ஆனால் தமிழ் மக்கள் சிங்கள மக்களைப் போல் தங்கள் அரசியல் தீர்மானத்தை விலைப்பட்டியலை அடிப்படையாகக் கொண்டோ அல்லது வேலை வாய்ப்புக்களை கருத்தில் கொண்டோ தீர்மானிப்பதில்லை. அவர்கள் அரசியலால் படுமோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். இது கடந்த 40 வருடங்களாக நடந்து வருகிறது. இந்த 40 வருட அனுபவத்தை வைத்துக் கொண்டு அவர்களால் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க முடியும் என்பதை அண்மையில் நடந்த வவுனியா மற்றும் யாழ் உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் நடந்து கொண்ட முறையில் இருந்து அறியலாம்.

கடுகடுப்புடன் நடந்த மஹிந்தவுடனான சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மஹிந்த ராஜபக்சவுடனான சந்திப்பு காரசாரமானதாகவே அமைந்தது. மஹிந்த தன்னுடன் கருணா, பிள்ளையான், டக்ளஸ் ஆகியோரைத் தன்னுடன் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உதாசீனம் செய்ததை அவர்கள் மஹிந்தவிடம் கடும் விசனத்துடன் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இனப் பிரச்சனைக்கான "தீர்வு" காணும் சர்வகட்சி குழுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மஹிந்த அரசு அழைக்கவில்லை. மக்களால் தேர்தேடுக்கப் பட்டிருந்தாலும் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசிய்ற் பிரிவாகவே கருதப்பட்டனர்.

ரணில்-சரத் கூட்டணியினரின் மந்திரிப் பதவி தூண்டில்
தமிழத் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு மந்திரிப் பதவி வழங்கும் தூண்டிலைப்போட்டுள்ளார். அதை இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மறுக்கவுமில்லை.

காணமற்போன அதிகாரப் பரவலாக்கல்
இந்தத் தேர்தலில் அதிகாரப் பரவலாக்கல் என்ற சொல் காணமரற் போய்விட்டது. அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மறந்து விட்டதா?

Friday 1 January 2010

2010: தமிழின விரோதிகளுக்கு பல அதிர்ச்சிகள் தரும்.


இன்று மலர்ந்த 2010 பல அதிர்ச்சிகளை தமிழின விரோதிகளுகுத் தரவிருக்கிறது.

ஆரியப் பேய்கள்
இலங்கையில் தமிழின ஒழிப்புப் போருக்கு உதவிய ஆரியப் பேய்களின் கள்ளத்தனம் 2010இல் அம்பலமாகும். சிங்களவர்களுக்கு பலவிதத்திலும் உதவிய ஆரியப் பேய்கள் தமது கள்ளத் தனம் தமிழர்களுக்கு தெரியாது என்று எண்ணியுள்ளனர். தமிழர்கள் இந்தியாவையே தமது முதல்தர துரோகியாக எண்ணத் தொடங்கிவிட்டனர். எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்க முடியாது.

இரசாயன ஆயுதப் பாவனை.
தமிழ்த்தேசிய போராட்டத்தை தடை செய்யப் பட்ட ஆயுதப் பாவனை மூலமாவே சிங்களவர்கள் தோற்கடித்தனர். தடை செய்யப் பட்ட ஆயுதம் பாவித்தமையும் அதை வழங்கிய நாடுகளின் குட்டும் 2010 இல் அம்பலமாகும்.

முடிந்தது என்று நினைத்தது தொடங்கும்
தமிழர்களின் தேசியப் போராட்டம் முடிந்து விட்டது என்று மார்தட்டிக் கொண்டிருக்கும் சிங்களவர்களுக்கும் துரோகிகளுக்கும் அதிர்ச்சி தரும் வகையில் தமிழர்களின் தேசியப் போராட்டம் வீறு கொண்டு 2010இல் எழும்.

போர் குற்றவாளிகள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பர்
2010இல் முக்கிய திருப்பமாக அமையவிருப்பது போர் குற்றவாளிகள் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதே.

இந்தியா திணறும்
தமிழர்களின் விரோதியான இந்தியா இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது என்ற போர்வையில் இத்தாலிச் சனியனின் உத்தரவில் தமிழின இனக் கொலைக்குத் துணை போனது. 2010இல் இந்தியா தனது தேசிய ஒருமைப் பாட்டை பாதுகாக்க முடியாமல் திணறும். இந்தியா துண்டாடப் படுவதற்கான அடிப்படை 2010இல் உருவாகும்.

"ரவுண்டு கட்டித்" தாக்கிய ரவுடிக் கும்பல்
தமிழர்களை பல நாடுகள் ஒன்று கூடித் தாக்கி அவர்களின் உரிமைப் போராட்டத்தை பலவீனப் படுத்தின. அவர்கள்களது முகமூடி 2010இல் கிழியும். அவை எந்த் எந்த நாடுகள் என்பது வெளிச்சத்திற்கு வரும்.

தமிழ்த் தேசிய போராட்டம் உலக மயமாகும்.
இலங்கையில் தமிழினப் போராட்டம் ஒடுக்கப் பட்டு விட்டதாகக் கனவு கண்டு கொண்டிருப்போர்க்கு பேரதிர்ச்சியாக தமிழ்த் தேசிய போராட்டம் உலக மயமாகும்.

Wednesday 30 December 2009

தன்னைக் கேவலப் படுத்திய tamilwin.com


யாழ். குடாநாட்டில் கலாசார சீரழிவில் ஈடுபடுபவர்களுக்கு மாணவர் அமைப்பு எச்சரிக்கை என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டது. அச்செய்தியின் மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கல்லூரியின் மீது சேறு பூசப்பட்டுள்ளது. தமிழ்வின் அச்செய்தியை இன்னும் ஒரு இணையத் தளத்தில் இருந்து பெற்று பிரசுரித்துள்ளது.

அனாமதேய இணையத் தளம்.
அந்த இணையத் தளம் ஒரு ஆசிரியரைத் தாக்கி எழுதுவதற்காக மட்டும் உருவாக்கப் பட்டது. அந்த இணையத் தளத்தில் அந்த ஆசிரியரைத் தாக்கி எழுதுவதைத் தவிர வேறு எதுவும் இல்லை. அந்த இணையத் தளத்தின் உரிமையாளர் தொடர்பாக எந்தத் தகவலும் இல்லாமல் மறைக்கப் பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த இணையத் தளம் அந்த ஆசிரியர் மீது குற்றம் சுமத்துவதற்கென்றே உருவாக்கப் பட்டது.

முன்பு ஒரு ஆசிரியர்மீது அவதூறு சுமத்துவதாயின் ஒரு வெண்கட்டி(Chalk) எடுத்து சுவரில் எழுது விடுவார்கள். இப்போது தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. ஒரு வர்ண துண்டுப் பிரசுரத்தையே அச்சிட்டு எவராலும் வெளியிடலாம். ஒரு சில மணித்தியாலங்களுக்குள் ஒரு இணையத் தளத்தையே ஆரம்பித்து அவதூறாக செய்திகள் வெளியிடலாம்.

அதில் குறிப்பிடப் பட்டுள்ள கல்லூரி குடாநாட்டின் முதன்மைக் கலவன் கல்லூரி.
அந்தக்கல்லூரியின் பெருமைக்கு அண்மையில் வெளிவந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளே சான்று. அக்கல்லூரியில் ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கில் மாணவர்கள் சேர விண்ணப்பிகிறார்கள். அந்தக் கல்லூரி ஒரு நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. அது ஒரு கலாச்சாரச் சின்னம். அந்தக் கல்லூரிக்கும் கலாச்சார சீரழிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒரு அனாமதேய இணையத் தளத்தில் வெளிவந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து tamilwin.com தன்னைத் தானே கேவலப் படுத்தியுள்ளது.

Tuesday 29 December 2009

யார் வென்றாலும் போர் குற்றச்சாட்டு தொடரும்.


தேர்தலுக்குப் பின் போர் குற்றச் சாட்டுக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. போர் குற்றம் தொடர்பாக இரு முக்கிய அம்சங்கள் இப்போது நிலுவையில் உள்ளது. ஒன்று அமெரிக்க அரச திணைக்களத்தால் முன்வைக்கப் பட்டது. அடுத்தது ஐக்கிய நாடுகள் சபையால் முன்வைக்கப் பட்டது. இவற்றை வெறுமனே அறிக்கைகளுடன் சமாளித்து விடமுடியாது. மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் இதை தொடர்ந்து வலியுறுத்தும். அது கூறுவது:
  • கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்த இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது இரு தரப்பினாலும், போர் சட்டங்கள் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் பல வந்தாலும், அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலை காரணமாக அவை குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியாது இருந்து வந்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.ஆகவே இரத்தக்களரி மிகுந்த இலங்கை போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து ஆராய சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஆணையம் ஒன்று தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
தேர்தலைத் தொடர்ந்து பதவி ஏற்கும் குடியரசுத் தலைவருக்கு போர் குற்ற சாட்டு ஒரு தலையிடியாகவே அமையும். புதிய குடியரசுத் தலைவர் அதை இரு முனை ஆயுதமாக பயன்படுத்தலாம். ஒன்று பன்னாட்டு அழுத்தங்களைத் தவிர்க்க மற்றது தனது அரசியல் எதிரியைப் பழிவாங்க.

சரத் பொன்சேக்கா வெற்றி பெற்றால் மஹிந்த ராஜபக்சேயையும் கோத்தபாய ராஜபக்சேயையும் குற்றவாளியாக்கிப் பழிவாங்குவார்.

மஹிந்த வெற்றி பெற்றால் சரத் பொன்சேக்கா மீது போர்குற்றம் சுமத்திப் பழிவாங்குவார்.

Monday 28 December 2009

சிவாஜிலிங்கப் புதிர்களும் சந்தேகங்களும்.


புதிர் - 1 சிவாஜிலிங்கம் ஏன் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தமிழ்த் தேசியவாதத்தின் தீவிர ஆதரவாளர் எனக் கருதப்படுவர் சிவாஜிலிங்கம். இலங்கைப் பாராளமன்றத்திற்குள் வைத்தே சிங்கள பாராளமன்ற உறுப்பினர்களால் தாக்கப் பட்டவர். இவர் ஏன் தேர்தலில் போட்டியிருகிறார்?
அவர் கூறும் காரணம்:
தமிழர்களால் பொன்சேகாவையும் ஆதரிக்க முடியாது, ராஜபக்சேவையும் ஆதரிக்க முடியாது. எனவே நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழ் மக்களின் வாக்கு பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக ஒரு பகுதியினரிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தினார்.

புதிர் -2 ரெலோ இயக்கத்தில் இருக்கிறாரா சிவாஜிலிங்கம்.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)விலிருந்து நாடாளுமன்ற உறுப்பபினர்களாக எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.கே.ஸ்ரீகாந்தா ஆகியோர் விலகியுள்ளனர். இதற்கான பதவிவிலகல் கடிதங்களை அவர்கள் இருவரும் சமர்ப்பித்துள்ளனர் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் நடவடிக்கைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் ரெலோவின் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது எனினும் இக்கூட்டத்தில் வைத்து குறித்த இருவரும் தமது பதவிவிலகல் கடிதங்களை கையளித்ததாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். எனினும் இந்த தகவலை சிவாஜிலிங்கம் மறுத்துள்ளார்.

புதிர் - 3 விகிரம்பாகு கருணரட்ணவுடன் சிவாஜி இணைந்துள்ளார்.
புதிய இடதுசாரி முன்னணியின் அரசதலைவர் வேட்பாளர் விக்கிரமபாகு கருணாரட்ணவும், சுயேட்சை வேட்பாளரான எம்.கே. சிவாஜிலிங்கமும் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இருவரும் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து விக்ரமபாகு கருணாரத்னவிடம் வினவியபோது, இருவரும் போரிற்கு எதிரானவர்கள் என்பதுடன் இருவரும் இடதுசாரிகள் என்றும் அத்துடன் தாம் இருவரினதும் அடிப்படைக் கொள்கைகள் இணையானவை எனவும் இருவரும் வடக்கு கிழக்கில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரே தேர்தலில் போட்டியிடும் இரு வேறு வேறு வேட்பாளர்கள் ஒன்றாக செயற்படுவது வேறு எங்காவது நடந்துள்ளதா?

யார் இந்த சிவாஜிலிங்கம்?
தங்கத்துரை-குட்டிமணி காலத்தில் இருந்தே தன்னை தமிழின விடுதலையில் ஈடுபடுத்திக் கொண்டவர் சிவாஜிலிங்கம். தமிழ் காங்கிரசுக் கட்சியில் இருந்த மோதிலால் நேடு என்பவருடைய மருமகன் சிவாஜிலிங்கம். இவருக்கும் மாமனாருக்கும் பலத்த கொள்கை வேறுபாடு ஆரம்பத்திலேயே ஏற்பட்டுவிட்டது.
சிவாஜிலிங்கம் சார்ந்த ரெலோ இயக்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பலத்த முரண்பாடு இருந்த வேளையிலும் பிரபாகரனுக்கும் சிவாஜிலிங்கத்திற்கும் இடையில் நல்ல உறவு இருந்தது. இப்போது இருக்கும் தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்களிடையே உணர்ச்சி மிக்க உரைகளை நிகழ்த்துபவர் சிவாஜிலிங்கம். இலங்கையின் வடக்கிலிருந்து தெற்கிற்கு 40,000 சிங்களப் பிணங்கள் அனுப்பப் படும் என்று பாராளமன்றத்தில் உரைநிகழ்த்தியவர் சிவாஜிலிங்கம். இவர் வெளிநாடுகளில் செய்த பல உரைகளிற்காக இவர் இலங்கை சென்றதும் கைது செய்யப் படுவார் என்று பேசப் பட்டது.

தமிழர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கையில் ஜனவரி 26-ம் திகதி நடக்கவிருக்கும் இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவேண்டும் அல்லது தானே போட்டியிடுவேன் என்று முதலில் சிவாஜி அறிவித்தார். அவரது அந்த நிலைப்பாட்டிற்கு முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் (இவர் இலங்கை திரும்ப முடியாமல் வெளிநாட்டில் தங்கியுள்ளார்) ஆதரவு தெரிவித்தார். பின்னர் விலகிக்கொண்டார். சிவாஜி தனது நிலைப்பட்டை மற்றப் பாராளமன்ற உறுப்பினர்களிடம் எடுத்துச் சொல்லியோ அல்லது கட்சிக் கூட்டத்தில் எடுத்துச் சொல்லாமல் திடீரென ஏன் அறிவித்தார்? இப்படி ஒரு முடிவை எடுத்த பின்னர்தான் அவர் இலங்கை திரும்பினாரா? தேர்தலில் போட்டியிடும் முடிவை சிவாஜிலிங்கம் அறிவித்த பின்னர் அவர் இந்தியாவின் சொற்படியே மஹிந்த ராஜபக்சவை வெல்லவைக்கவே அவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்ற குற்றச் சாட்டு அவர்மீது சுமத்தப் பட்டது. இதற்கு முன்னர் பலதடவை சிவாஜிலிங்கம் இந்தியா சென்று வந்துள்ளார். 2009 - மே மாதம் நடந்த இந்தியத் தேர்தலில் சிவாஜிலிங்கம் மறைமுகமாக பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது சிவாஜிலிங்கத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்தியா இப்போது அவரை இந்தியாவிற்கு நுழையவிடாமல் தடுத்தது ஏன்? இது ஒரு நாடகமா? சிவாஜிலிங்கத்தின் மீது மதிப்புக் கூட்டும் நடவடிக்கையா?

Sunday 27 December 2009

தமிழர்களது வாக்குகள் பாரிய அளவில் மோசடி செய்யப்படலாம்.


இலங்கையில் சென்ற குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தொடர்ந்து நடந்த மாகாணசபைத் தேர்தலிலும் அளிக்கப் பட்ட வாக்குக்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் கட்சிகள் அடிப்படையில் வாக்கு வங்கிக் கணக்கு இப்படி இப்போது இப்போது இருப்பதாகக் கொள்ளலாம்:

சரத் பொன்சேக்காவை ஆதரிக்கும் கட்சிகள்
ஐக்கிய தேசியக் கட்சி.....................2,610,000 வாக்குகள்
ஜனதா விமுக்திப் பெரமுன........ 245,000 வாக்குகள்
மொத்தம் 3,855,000 வாக்குகள்

மஹிந்த கட்சி
மஹிந்த ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4,800,000 வாக்குகள்.

போர் வெற்றியால் மஹிந்த சார்பாக திரும்பிய வாக்கு அலை சரத் பொன்சேக்காவின் வெளியேற்றத்தால் இரண்டாகப் பிளவு பட்டுள்ளது. அது மட்டுமல்ல சென்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் மஹிந்த ஜனதா விமுக்திப் பெரமுனையுடன் இணைந்து போட்டியிட்டார். அத்துடன் இப்போது பிளவு பட்டிருக்கும் முஸ்லிம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவும் மஹிந்தவிற்கு இருந்தது.

ஜனதா விமுக்திப் பெரமுனயின் தீவிர இடது சாரிக் கொள்கையுடையவர்கள் தமது கட்சி வலது சாரிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணந்து செயற்படுவதை விரும்பமாட்டார்கள். ஐக்கிய தேசியக் கட்சி ஜனதா விமுக்திப் பெரமுன இணைவால் ஏற்படும் இணைவு வலு இதனால் செயலிழக்கிறது. இந்த இணைவால் பிரத்தியேக வாக்குக்கள் கிடைக்க வாய்ப்பில்லை.

கட்சி சார்பில்லாத பல மத்திய தர வாக்காளர்கள் அதிகரித்த வாழ்க்கைச் செலவினாலும் ஊழல் நிறைந்த நிர்வாகத்தாலும் விரக்தியடைந்திருப்பதால் அவர்கள் ஆளும் மஹிந்தவிற்கு எதிராக வாக்களிப்பர்.

கண்டிச் சிங்களவர்களின் வாக்குக்களை சரத் அணியில் இருந்து மஹிந்த அணிக்குத்தாவிய எஸ். பி திசாநாயக்கா தனது நாவன்மையால் இம்முறை வென்றெடுப்பாரா என்பது சந்தேகம்.

இதனால் சிங்கள மக்களின் வாக்குக்களில் சரத் பொன்சேக்காவிற்கு 42 இலட்சம் வாக்குக்களும் மஹிந்தவிற்கு 44 இலட்சம் வாக்குக்களும் கிடைக்கலாம். சிங்கள மக்களின் வாக்குகள் இப்படி விழுமாயின் தமிழர்கள் வாக்கு தீர்மானிக்கும் சக்தியாக அமையவிருக்கிறது. இதை இரு தரப்பும் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. இதனால்தான் சரத் பொன்சேக்கா தமிழர்களின் வாக்குகளைப் பெறுதவதில் அதிக அக்கறை காட்டுகிறார். அவர் தனது தமிழ் மக்களிற்கு சில வாக்குறுதிகளை வழங்குவதற்கும் தயாராக இருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறும் முயற்ச்சியில் கவனமாக இறங்கியுள்ளார்.

மஹிந்த தனது காய்களை வேறு விதமாக நகர்த்துகிறார். அவர் மலையக மக்களைத் தன் பின்னே இந்தியா மூலமாக இழுத்துவிட்டார். பிள்ளையான், கருணா, டக்ளஸ், சித்தார்த்தன் போன்றோர் ஆட்சியில் இருக்கும் கட்சியையே என்றும் ஆதரிப்பர். அவர்கள் ஆதரவு மஹிந்தவிற்கே. இப்போது தமிழ்தேசிய உணர்வுள்ள தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பர் என்பதே பெரிய கேள்வி. தமிழத்தேசியக் கூட்டமைப்பின் முடிவு அவரகள் யாருக்கு வாக்கு அளிக்கப் போகிறார்கள் என்று எடுக்க விருக்கும் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
அவர்கள் பாரிய அளவில் தேர்தலைப் புறக்கணிப்பர் என்பது இடம் பெயர்ந்து வாழும் மக்களில் பத்துப் பேரில் ஒருவரே வாக்களிப்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர் என்பதில் இருந்து தெரிய வருகிறது. இப்படி இருக்கையில் ஒன்றில் தமிழர்கள் வாக்களிப்பதில் இருந்து தடுக்கப் படுவர் அல்லது அவர்கள் வாக்குக்கள் மோசடி செய்யப் படும் என்பதை நிச்சயமாகக் கூறலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...