Tuesday 15 December 2009

சரத் பொன்சேக்கா பல்டிஅடிக்கக் காரணம் என்ன?


புரட்டு + பொய் = சரத் பொன்சேக்கா.
சரணடைய வந்த நடேசனையும் புலித்தேவனையும் குடும்பத்தினருடன் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது இலங்கைக் குடியரசுத் தலைவரின் சகோதரர் பசில் ராஜபக்சே என்று இலங்கை குடியரசுத் தலைவர் வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேக்கா கூறியதாக முதலில் தகவல் வந்தது. அது உலகம் முழுக்க ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்தது.

திடீரென்று அதை சரத் பொன்சேக்கா மறுத்ததுமல்லாமல் சகல படை நடைவடிக்கைகளுக்கும் தான் பொறுப்பு என்றார். அத்துடன் யாரும் சரணடைய வெள்ளைக் கொடியுடன் வரவில்லை என்றார்.

இக்கட்டான நிலையில் வேட்பாளர்கள்.
இப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர்களான சரத் பொன்சேக்காவிற்கும் மஹிந்த ராஜபக்சவிற்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலை. போரை நான் எப்படி நடாத்தினேன் எப்படி வென்றேன் என்று விளக்கினால் சிங்களமக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும் அதே வேளை தமிழ் மக்களின் வாக்குகளை இழக்க வேண்டிவரும். போர் குற்றம் தொடர்பாக ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்தாலும் காட்டிக் கொடுத்தவர் சிங்கள மக்களின் வாக்குகளை இழப்பர். காட்டிக் கொடுக்கப் பட்டவர் சிங்களவர்களின் வாக்குகளை பெறுவர். தமிழ் மக்கள் விடயத்தில் இது தலை கீழாக இருக்கும்.

சரத் மீது இரு முனை அழுத்தம்.
சரத் பொன்சேக்கா முதலில் தமிழர்களின் வாக்குக்களை மஹிந்தவிற்கு விழாமற் பண்ணவே பசில் சரணடைய வந்தவர்களைச் கொல்ல உத்தரவிட்டார் என்று அறிக்கை விட்டதாகக் கூறப் படுகிறது. பின்னர் அவர் இரு முனைத் தாக்குதலுக்கு உள்ளானார். ஒன்றி ராஜபக்ச சகோதரர்களின் சட்ட நடவடிக்கை மிரட்டல். மற்றது அவரது ஆதரவாளர்களின் ஆட்சேபனை. சரத் பொன்சேக்காதான் போரை வென்றார் என்ற அடிப்படையில் தான் அவரை எதிர் கட்சிகள் தமது பொது வேட்பாளராக அறிவித்தன. புலித்தேவனையும் நடேசனையும் கொன்றது பொன்சேக்கா அல்ல பசில் ராஜபக்ச தான் என்று அறிந்தால் சிங்கள மக்கள் ராஜபக்சவை ஆதரிப்பர்.. இது சரத் பொன்சேக்காவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும். இதனால் சரத் பொன்சேக்கா ஒரு பல்டி அடித்து முழுக் கொலைகளூக்கும் தானே உத்தரவிட்டதாகவும் வேறு எவரும் உத்தரவிடவில்லை என்றும் அறிக்கை விட்டார். அவர் விட்ட அறிக்கை:
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் உயர் இராணுவ அதிகாரிகள் முதல் கடை நிலை சிப்பாய்கள் வரையில் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளுக்குமான பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொள்கிறார் என அவர் தெரிவித்தார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுத்த மரபுகள் மீறப்படவில்லை எனவும், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரணத்தின் காரணம்.
உயர் இராணுவ அதிகாரிகள் முதல் கடை நிலை சிப்பாய்கள் வரையில் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளுக்குமான பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததன் மூலம் முழுவெற்றிக்கான காரணகர்த்தா தானே என சரத் பொன்சேக்கா பறை சாற்றிக் கொண்டார்.

இப்போது மற்றத் தரப்பு என்ன சொல்லப் போகிறது?
==================================================

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...